
பட மூலாதாரம், Getty Images
ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி முக்கியம், அந்த வெற்றியில், நிகர ரன்ரேட் அவசியம் என்பதைப் புரிந்து கொண்டு புதிய உத்திகளைக் கையாண்டு அணிகள் ஒவ்வொரு போட்டியையும் அணுகுகின்றன.
உலகக்கோப்பைப் போட்டிகள் பாதிக் கட்டத்தை கடந்துவிட்ட நிலையில் இன்னும் சில போட்டிகளில் நாக்அவுட் சுற்றுக்குச் செல்ல இருக்கும் 4 அணிகள் எவை என்று தெரிந்துவிடும். முதலிரு அணிகள் குறித்தநிலவரம் ஓரளவு தெரிந்துவிட்ட நிலையில் கடைசி இரு இடங்களைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஒருநாள் போட்டி உலகக் கோப்பைத் தொடர் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற, அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதனால் அடுத்துவரும் ஒவ்வொரு ஆட்டமும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஒவ்வொரு அணிக்கும் அமைந்துள்ளது. சிறிய அணியிடம் சறுக்கி தோல்வி அடைந்தாலும், ஜாம்பவான் அணிகள் நாக்அவுட் சுற்றுக்குச் செல்வதில் தடை ஏற்படும் என்பதால், மிகுந்த கவனத்துடன் போட்டியில் களமிறங்குகின்றன.
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் விளையாடுகின்றன, அரையிறுதி செல்லும் என கணிக்கப்பட்ட அணிகள் தொடரை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆனால், குட்டி அணி என்று நினைத்தவை ஜாம்பவான் அணிகளை சாய்த்து அதிர்ச்சியளித்துள்ளன, தரவரிசையில் முதல் 3 இடங்களில் இருந்த அணிகள், ஒவ்வொரு வெற்றிக்கும் போராடுகின்றன. இதுபோன்று சுவாரஸ்யமான முடிவுகளோடு ஒவ்வொரு போட்டியும் நகர்கிறது.
10 அணிகளில் எந்த 4 அணிக்கு அரையிறுதி வாய்ப்புக் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக அலசி ஆராயலாம்.
இந்திய அணி (மீதமுள்ள போட்டி-3 தென் ஆப்ரிக்கா, நெதர்லாந்து, இலங்கை)

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் மோதி, அனைத்திலும் வென்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது, நிகர ரன்ரேட் 1.405 என்ற அளவில் இருக்கிறது.இன்னும் இந்திய அணிக்கு 3 போட்டிகள் மீதமுள்ளன. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் வெற்றி ஏறக்குறைய அரையிறுதி இடத்தை உறுதி செய்துவிட்டது என்ற போதிலும், பாதுகாப்பாக இருக்க இன்னும் ஒரு வெற்றி தேவை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம் மட்டும் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை, நெதர்லாந்து இடையிலான ஆட்டங்களில் இந்திய அணி வென்றாலே 16 புள்ளிகளுடன் அரையிறுதியில் முதலிடத்தைப் பிடிக்கும்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா இறுதிவரை போராடி கடைசி நேரத்தில் வென்று முன் எப்போதும் இல்லாத அளவு வலிமையாகவும், விடாமுயற்சியுடனும் இருந்து வருகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும்.
இலங்கை, நெதர்லாந்து அணிகளை இந்தியா எளிதாக எடுக்கக் கூடாது என்றாலும், முதலிடத்தைப் பெறுவதற்கு இந்திய அணிக்கு 2 வெற்றிகள் அவசியம். அரையிறுதி வாய்ப்பு உறுதியானபின்புதான் பரிசோதனை முயற்சியில் ஈடுபட வேண்டும்.
தென் ஆப்பிரிக்கா (மீதமுள்ள போட்டி-3 நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான்)

பட மூலாதாரம், Getty Images
உலகக் கோப்பையை எந்த அணி பெறும் என்பது குறித்த ஆர்வம் ரசிகர்களிடையேயும் அதிகரித்துவருகிறது.
தென் ஆப்பிரிக்க அணி இதுவரை 6 போட்டிகளிலும் 5 ஆட்டங்களில் வென்று 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் அனைத்து அணிகளையும்விட வலிமையாக 2.0372 என்று இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி 350 ரன்களுக்கு மேல் குவித்து எதிரணிகளை மிரளவைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு அடுத்துவரும் இந்தியா, நியூசிலாந்து, இடையிலான ஆட்டங்கள் வாழ்வா, சாவா என்றுதான் இருக்கும். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா எளிதாக வெற்றி பெறும் என்றாலும், அந்த வெற்றி நிச்சயம் எளிதாக இருக்காது. தென் ஆப்பிரிக்கா தற்போது 10 புள்ளிகளுடன் வலிமையான ரன் ரேட்டில் இருப்பதால், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு வெற்றி பெற்றாலே நிகர ரன்ரேட்டில் எளிதாக அரையிறுதியை உறுதி செய்துவிடும்.
நெதர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்த தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக எடுக்காது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய ஸ்கோரை அடித்து மிரள வைத்தால்தான் தென் ஆப்பிரிக்க வெற்றி எளிதாகும்.
வலிமையான பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு வைத்துள்ள இந்திய அணியை வெல்வது தென் ஆப்பிரிக்காவுக்கு எளிதானதாக இருக்காது.
அதேபோலத்தான் நியூசிலாந்து, அணிக்கு எதிரான ஆட்டமும் இரு அணிகளுக்கும் முக்கியமானது. இரு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பை எதிர்பார்த்துள்ளதால், வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாகப் போராடும். .
ராட்சதத்தனமான ஃபார்மை வெளிப்படுத்திவரும் தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து அதே பாணியைப் பின்பற்றினால் வெற்றி எளிதாகும் இல்லாவிட்டால் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
நியூசிலாந்து (மீதமுள்ள போட்டி-3 பாகிஸ்தான், தென்ஆப்பிரி்க்கா, இலங்கை)

பட மூலாதாரம், Getty Images
நியூசிலாந்து அணிக்கு அடுத்துவரும் ஒவ்வொரு போட்டியும் அணியின் உண்மையான பலத்தை பரிசோதிக்கும் போட்டியாக அமையப் போகிறது.
நியூசிலாந்து அணி தொடக்கத்தில் எளிய அணிகளை மிதித்து தள்ளி விரைவான வெற்றிகளைப் பெற்றது. தற்போது 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. இதில் 3 வெற்றிகள், நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசத்துக்கு எதிராகக் கிடைத்தவை.
நியூசிலாந்து அணிக்கு அடுத்துவரும் ஒவ்வொரு போட்டியும் தங்களின் உண்மையான பலத்தை பரிசோதிக்கும் போட்டியாக அமையப் போகிறது. ஏற்கெனவே ஆஸ்திரேலியா, இந்திய அணியிடம் நியூசிலாந்து தோல்வி அடைந்துவிட்டது. அடுத்ததாக, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளை எதிர்கொள்ள வேண்டும். இலங்கை அணியைக் கூட நியூசிலாந்து வென்றுவிடலாம். ஆனால், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை வெல்வது எளிதல்ல.
ஏனென்றால் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளும் அரையிறுதிக்குள் செல்ல முயன்று வருவதால், ஒவ்வொரு போட்டியும் கடும் சோதனைக் களமாக நியூசிலாந்துக்கு அமையும். களத்தில் செய்யும் சிறிய தவறுகூட, எதிரணிக்கு சாதகமாக அமைந்து, புள்ளியைப் பெற்றுவிடும்.
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வேண்டுமானால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி கிட்டும் என உறுதியாகக் கூற முடியும். மற்ற 2 ஆட்டங்களிலும் நியூசிலாந்தின் வெற்றி என்பது வானத்தில் ஏறி வைகுண்டம் செல்வதுபோலத்தான். ஆதலால் நியூசிலாந்து அணிக்கு அடுத்து 2 போட்டிகளில் வெற்றி என்பது அவசியமாகும்.
ஒருவேளை நியூசிலாந்து அணி இந்த 2 போட்டிகளில் தோல்வி அடைந்து ஒரு போட்டியில் வென்றால் அரையிறுதி வாய்ப்ப்பு என்பது திரிசங்கு நிலையை எட்டிவிடும். மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியைப் பொறுத்துதான் அமையும்.
ஆஸ்திரேலியா (மீதமுள்ள போட்டி-3 வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து)

பட மூலாதாரம், Getty Images
இன்னும் 3 ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணி 6 போட்டிகளில் 4 வெற்றிகள், 2 தோல்விகளுடன் களத்தில் உள்ளது.
உலகக் கோப்பைத் தொடரில் தோல்வியுடன் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அதன்பின் மீண்டெழுந்து தொடர்ந்து 4வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தரம்ஷாலாவில் நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வென்று 4வது வெற்றியை பதிவு செய்தது.
தற்போது ஆஸ்திரேலிய அணி 6 போட்டிகளில் 4 வெற்றிகள், 2 தோல்விகளுடன் உள்ளது. இன்னும் 3 ஆட்டங்கள் மீதமுள்ளன. இதில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்தான் ஆஸ்திரேலிய அணிக்கு சவாலாக இருக்கும். மற்றவகையில் ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தை எளிதாக ஆஸ்திரேலியா வென்று 4 புள்ளிகளைப் பெற்று 12 புள்ளிகளை எட்டிவிடும்.
இதில் நிகர ரன்ரேட் தற்போது 0.970 ஆக இருக்கிறது, இதை மைனசில் சரியவிடாமல் ஆஸ்திரேலியா உயர்த்திக்கொண்டால், அரையிறுதிக்குள் ஆஸ்திரேலியா பாதுகாப்பாகச் செல்லலாம். ஒருவேளை இங்கிலாந்து அணியையும் வென்றுவிட்டால், 14 புள்ளிகளுடன் முதலிடத்துக்குகூட ஆஸ்திரேலிய அணி போட்டிபோடலாம்.
காயத்திலிருந்து மீண்டு தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அணிக்குத் திரும்பி சதம் அடித்திருப்பது மிகப்பெரிய பலம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் (மீதமுள்ள போட்டி-3 வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து)

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் அணியின் அரையிறுதிக்கான வாய்ப்பு இன்னும் இருக்கின்ற நிலையில், அந்த அணியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற விவாதமும் ரசிகர்களிடையே இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக துரதிர்ஷ்டமாக அடைந்த தோல்வி, அந்த அணிக்கு 4வது தொடர்தோல்வியாக அமைந்துவிட்டது. பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு இன்னும் மருகவில்லை. இன்னும் அந்த அணிக்கு 3 ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில் அனைத்திலும் வென்றால், 10 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் கடைசி இடத்துக்கு போட்டிபோடலாம்.
பாகிஸ்தான் தற்போது 6 போட்டிகளில் 4 தோல்விகள், 2 வெற்றிகள் என 4 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது. அடுத்துவரும் 3 ஆட்டங்களில் பாகிஸ்தான் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பு கிடைக்குமா என்பது மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியில்தான் இருக்கிறது.
அடுத்துவரும் 3 போட்டிகளில் ஒரு போட்டியில் தோற்றால்கூட பாகிஸ்தான் அணி, அரையிறுதி வாய்ப்புக் கனவு கலைந்துவிடும். இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளை வெல்வதும் பாகிஸ்தானுக்கு எளிதானது அல்ல. அதிலும் இங்கிலாந்து கூட மோசமான ஃபார்மில் இருப்பதால், பாகிஸ்தான் வென்றுவிடலாம், ஆனால், நியூசிலாந்தை வெல்வது சாத்தியமல்ல.
அடுத்து இந்த 3 அணிகளுக்கு எதிரான ஆட்டங்களும் பாகிஸ்தானுக்கு பெரிய சோதனையாகத்தான் இருக்கும். அடுத்துவரும் 3 போட்டிகளிலும் வென்று, நிகர ரன்ரேட்டையும் உயர்த்தினால்தான் அரையிறுதிக் கனவு நனவாகும்.
இங்கிலாந்து(மீதமுள்ள போட்டி-3 ஆஸ்திரேலியா,நெதர்லாந்து, பாகிஸ்தான்)

பட மூலாதாரம், Getty Images
இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து ஒரு வெற்றி மட்டுமே பெற்று, 5 தோல்விகளைச் சந்தித்து சோர்வடைந்துள்ளது.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி தோல்விக்கு மேல் தோல்வியைச் சந்தித்து மோசமான நிலையில் இருக்கிறது. இப்போதிருக்கும் நிலையால், உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு கூட இங்கிலாந்து தகுதி பெறுமா என்பது சந்தேகமாக இருக்கிறது.
இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது, 5 தோல்விகளைச் சந்தித்து சோர்வடைந்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக 230 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
ஒரு வெற்றி 2 புள்ளிகளுடன் 10-வது இடத்துக்கு இங்கிலாந்து தள்ளப்பட்டுள்ளது. நிகர ரன்ரேட்டும் படுமோசமாகச் சரிந்துள்ளது. அரையிறுதிக்குள் செல்லும் அணியாக இங்கிலாந்து கணிக்கப்பட்ட நிலையில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இங்கிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்ட நிலையில் கணித ரீதியாக மட்டும் சாத்தியம் இருக்கிறது. இங்கிலாந்து அணி வீறுகொண்டு எழுந்து, அடுத்துவரும் 3 ஆட்டங்களிலும் வென்றால் கூட 8 புள்ளிகள்தான் பெற முடியும். இதை வைத்துக்கொண்டு அரையிறுதிக்குள் செல்வது சாத்தியமல்ல.
இங்கிலாந்து அணி தற்போது இருக்கும் மோசமான ஃபார்மில், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகளை வீழ்த்துவது கடினமான போராட்டமாக அமையும். ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் கடும்போட்டி எப்போதுமே இருக்கும் என்பதால், அந்த ஆட்டத்திலும் வெற்றி கிடைப்பது கடினம். பாகிஸ்தானும் நாக்அவுட் சுற்று செல்ல கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தும். இந்த சவால்களைக் கடந்து இங்கிலாந்து வெல்ல வேண்டும்.நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி தொடரிலிருந்து வெளியேறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
இலங்கை (மீதமுள்ள போட்டி -3, இந்தியா, வங்கதேசம், நியூசிலாந்து)

பட மூலாதாரம், Getty Images
உலகக் கோப்பைத் தொடரில் முதல்வெற்றியைப் பெற்ற கடைசி அணியாக இலங்கை இருக்கிறது.
இலங்கை அணி தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக புனேயில் நடந்துவரும் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் முதல்வெற்றியைப் பெற்ற கடைசி அணியாக இலங்கை இருக்கிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 2வது வெற்றியுடன் துடிப்புடன் இலங்கை இருக்கிறது. இன்று நடக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வென்றுவிட்டால் 6 புள்ளிகளுடன் அரையிறுதி ரேஸில் கடும் போட்டியளிக்கும்.
அடுத்துவரும் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வென்றுவிட்டால் 8 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை நெருங்கும். ஆனால், இந்தியா, நியூசிலாந்து அணிகளை இப்போதுள்ள சூழலில் இலங்கை வெல்வது அந்த அளவு சாத்தியமானது அல்ல.
இதுவரை 5 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று, 3 போட்டிகளில் இலங்கை தோற்று, 4 புள்ளிகளுடன் உள்ளது.
நாக்அவுட் சுற்றுக்குள் இலங்கை அணி செல்ல 5 போட்டிகளிலும் வெல்வது கட்டாயம். ஆனால், இந்தியா, நியூசிலாந்து அணிகளின் ஃபார்மிற்கு முன், நிச்சயமாக இலங்கை அணி தோல்வியைத் தழுவும். இலங்கை அணி இரு அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்தால் 8 புள்ளிகளுடன் காத்திருக்க வேண்டியிருக்கும்.5-வது இடத்தில் இருக்கும் இலங்கை அணி வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளை வென்று 8 புள்ளிகள்வரை பெற முடியும்.
இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பு என்பது மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியில், கடைசிவரை காத்திருந்தால்தான் உறுதியாகும். அதுவரை இளவுகாத்த கிளிதான்.
ஆப்கானிஸ்தான் (மீதமுள்ள ஆட்டங்கள்-3, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா)

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தான் அணி 3 தோல்விகள், 2வெற்றிகள், 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் பாகிஸ்தானுக்கு கீழே இருக்கிறது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் யாரும் கணிக்க முடியாத அணியாக ஆப்கானிஸ்தான் உருவெடுத்துள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி மற்ற அணிகளுக்கு ஆப்கானிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி 3 தோல்விகள், 2வெற்றிகளுடன் 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் பாகிஸ்தானுக்கு கீழே இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி இன்று இலங்கை அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அடுத்தக் கட்டத்துக்குச் செல்லும் என்பதால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாகப் போராடும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி இலங்கை அணியை வென்று, நெதர்லாந்தையும் வென்றுவிட்டால் 8 புள்ளிகள் பெறும்.
ஆனால், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளை ஆப்கானிஸ்தான் அணியால் வெல்வது கடினம்தான். ஒருவேளை இரு அணிகளிடமும் தோற்றால் ஆப்கானிஸ்தான் 8 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்புக்காக மற்ற அணிகளைச் சார்ந்திருக்கும். ஒருவேளை ஆஸ்திரேலியா,தென் ஆப்பிரிக்கா அணிகளில் ஒரு அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தினாலும், புள்ளிப்பட்டியல் பரபரப்பாகச் செல்லும். அந்த இரு அணிகளின் அரையிறுதி வாய்ப்புக்கே ஆப்கானிஸ்தான் வேட்டுவைத்துவிடும்.
வங்கதேசம் (மீதமுள்ள ஆட்டம்-3, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா)

பட மூலாதாரம், Getty Images
வங்கதேச அணி உலகக் கோப்பைத் தொடரிலிருந்து ஏறக்குறைய வெளியேறிவிட்டது என்பதே உண்மை.
வங்கதேச அணி உலகக் கோப்பைத் தொடரிலிருந்து ஏறக்குறைய வெளியேறிவிட்டது. அடுத்துவரும் ஆட்டங்களில் ஒரு முறைக்காகவே விளையாடும். வங்கதேசம் நாக்அவுட் சுற்று செல்ல, மீதமுள்ள போட்டிகளில் வென்றாலும்கூட சாத்தியமில்லை.
இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 5 தோல்விகள், 2 புள்ளிகளுடன் வங்கதேசம் 9-வது இடத்தில் இருக்கிறது. இ்ன்னும் வங்கதேச அணிக்கு 3 ஆட்டங்கள் மீதமுள்ளன. இந்த 3 ஆட்டங்களிலும் வங்கதேசம் வென்றால்கூட அரையிறுதி வாய்ப்புக் கிடைக்காது. அதிலும் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக வெற்றி பெறுவது எளிதல்ல, இலங்கையும் வெற்றியை எளிதாக விட்டுத்தராது. ஆதலால், வங்கதேசத்தின் அரையிறுதிக் கனவு ஏறக்குறைய முடிந்துவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெல்வது நெதர்லாந்துக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்.
நெதர்லாந்து(மீதமுள்ள ஆட்டங்கள்-3, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, இந்தியா)
நெதர்லாந்து அணி உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி 2வது வெற்றியைப் பெற்று தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. 6 போட்டிகளில் 2 வெற்றி, 4 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் நெதர்லாந்து அணியால் 3 போட்டிகளில் வென்று 10 புள்ளிகள் வரை பெற முடியும்.
ஆனால், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிராகக் கூட நெதர்லாந்து அணியால் வென்றுவிடமுடியும். ஆனால், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெல்வதும் நெதர்லாந்துக்கு சாத்தியம் இல்லை. ஆதலால் அடுத்துவரும் 3 ஆட்டங்களில் நெதர்லாந்து 2 வெற்றிகளை அதிகபட்சம் பெற்று 8 புள்ளிகள்வரை பெறலாம். 8 புள்ளிகளுடன் அரையிறுதி செல்வது சாத்தியமாகாது என்பதால், நெதர்லாந்தின் நாக்அவுட் கனவும் கலைந்துவிட்டது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்