
பட மூலாதாரம், Getty Images
தருண் கோயல் மலைப்பாதைகளில் நடக்கும் விருப்பம் கொண்டவர் மற்றும் ஒரு ட்ராவல் ப்ளாகர். சாலைகள் அமைக்கப்பட்டதால் இப்போது வெறிச்சோடிக் கிடக்கும் இமயமலையின் பழங்காலக் கணவாய்களையும், பழைய பாதைகளையும் ஆராய்வதை அவர் விரும்புகிறார்.
பனி படர்ந்த பள்ளத்தாக்குகளில் பல மைல்கள் கடினமான பயணங்களின் போது எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அவற்றைக் கடந்து வந்த அனுபவங்கள் குறித்து – ’சப்ஸே ஊன்சா பஹாட்’ (மிக உயர்ந்த மலை) என்ற புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார்.
பலர் சமூக வலைதளங்களில் தருணுக்கு செய்திகளை அனுப்புகிறார்கள். அவரது புத்தகத்தைப் படித்த பிறகு மலையேற்றத்தை மேற்கொள்ள தூண்டப்பட்டதாக அவரிடம் கூறுகிறார்கள். ஆனால் இன்று மலையேற்றம் மற்றும் அது தொடர்பான எழுதுதல் ஆகிய இரண்டின் மீதான ஆர்வத்தையும் தான் இழந்து வருவதாக தருண் கூறுகிறார்.
“நான் நீண்ட காலத்திற்கு முன்பே இரண்டாவது புத்தகத்தையும் எழுதி முடித்து விட்டேன். ஆனால் அதை அச்சிட்டு விற்க எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. மேலும் இப்போது கடும் குளிரில் பனியில் நடக்கவும், கூடாரத்தில் வாழவும், பல சிரமங்களை சந்திக்கவும் எனக்கு மனமில்லை” என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
தருணுக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் நம்மில் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். நாம் சில வேலைகள் அல்லது செயல்பாடுகளில் முன்பு அதிக ஆர்வம் காட்டியிருக்கலாம். ஆனால் படிப்படியாக அவை மீதான ஆர்வம் குறைந்திருக்கலாம். இது வேலை மற்றும் தொழில் விஷயங்களிலும் நிகழ வாய்ப்பு உள்ளது.
‘தி எக்ஸ்பெக்டேஷன் எஃபெக்ட்: ஹவ் யுவர் மைண்ட்செட் கேன் டிரான்ஸ்ஃபார்ம் யுவர் லைஃப்’ என்ற புத்தகத்தை எழுதிய டேவிட் ராப்சன், தனது ஆறு வயதிலேயே எழுத்தாளராக வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.
இன்று ஒரு எழுத்தாளராகவும், செய்தியாளராகவும் உள்ள அவர், தனது குழந்தைப் பருவ கனவை நனவாக்க முடிந்ததை அதிர்ஷ்டமாகக் கருதுகிறார். ஆனால் இந்த வேலைகள் மீதான ஆர்வம் குறைந்த பல காலகட்டங்களும் அவரது வாழ்க்கையில் இருந்தன.
“லண்டனில் ஜனவரி மாத குளிர் காரணமாக மனநிலையில் உற்சாகமின்மை இருக்கும். ஒரே செயலை தொடர்ந்து செய்வது என்பது, ஒருபோதும் நிற்காத டிரெட்மில்லில் ஓடுவது போல் சோர்வாக மாறும். அதிலிருந்து குதித்து இறங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்,” என்று அவர் விளக்கினார்.
இதுபோன்ற எண்ணம் அவருக்கு மட்டுமே ஏற்படுகிறது என்று சொல்லமுடியாது. சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ’அமைதியாக விலகும் போக்கு’ (Quiet quitting) காணப்படுகிறது. இதன் பொருள், வேலையில் திருப்தி இல்லையென்றால் வேலையை விட்டுவிடுவதற்கு பதிலாக கடினமாக உழைக்காமல் தொடர்ந்து வேலை செய்வது.
வேலையில் பதவி உயர்வு வேண்டி ஒருவர் கடினமாக உழைத்தபோதும் அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது இது நிகழ்கிறது.
ஒரு வேலை மீது ஆர்வத்தை இழப்பது என்பது தொழிலை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை குறிக்கிறது. ஆனால் தொழிலை மாற்றுவது எப்போதும் சாத்தியமில்லை.
ஆராய்ச்சிகள் சொல்வது என்ன ?

பட மூலாதாரம், Getty Images
வேலை மீதான ஆர்வத்தையும் ஊக்கத்தையும் பராமரிக்க சிலர் பொதுவாகவே பல்வேறு முறைகளை பின்பற்றுகிறார்கள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான பாட்ரிசியா சேன் என்பவரும் இதே தலைப்பில் ஆராய்ச்சி செய்துள்ளார்.
அவர் தனது முந்தைய ஆராய்ச்சியில், வேலையின் மீதான ஆர்வத்தின் மீது ‘ஃபிட் தியரி’ மற்றும் ‘டெவலப் தியரி’ ஆகிய இரண்டு வெவ்வேறு மனநிலைகளின் விளைவு என்ன என்பதைக் கண்டறிய முயன்றார்.
‘ஃபிட் மனநிலை’ கொண்டவர்கள், ஒவ்வொரு நபருக்கும் ஒரு குறிப்பிட்ட பணி மட்டுமே சரியானதாக இருக்கும் என்று நம்புகிறார்கள். எந்தவொரு வேலையிலும் ஒருவரது ஆர்வம், மகிழ்ச்சி மற்றும் வெற்றி ஆகியவை, அது அவருக்கு விருப்பமான வேலையா இல்லையா என்பதைப் பொருத்து உள்ளது.
அதேசமயம், ஒரு வேலையைக் கற்கும் செயல்முறையின் மூலம் செல்லும்போது, அதன் மீது ஆர்வம் வளரும் என்று ‘டெவலப் மனநிலை’ கொண்டவர்கள் நம்புகிறார்கள். அதாவது ஒரு வேலையை நீங்கள் சிறப்பாகச் செய்யும்போது, உங்கள் வேலையை நீங்கள் அதிகமாக நேசிக்கத் தொடங்குவீர்கள்.
”எளிமையான வார்த்தைகளில் சொன்னால் ஒரு கோட்பாடு நீங்கள் விரும்பும் வேலையைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. நீங்கள் செய்யும் வேலையை அனுபவித்து மகிழ வேண்டும் என்று மற்றொரு கோட்பாடு சொல்கிறது,” என்று ‘ஃபிட்’ மற்றும் ‘டெவலப்’ கோட்பாட்டைப் பற்றி, தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு மேம்பஸ்ஸில் உள்ள உளவியல் உதவிப் பேராசிரியர் டாக்டர் இஷிதா உபாத்யாய் தெரிவித்தார்.
“ஃபிட் தியரியின் படி, ஒருவருக்கு வேலை பிடித்தால் மட்டுமே அவருக்கு அதன்மீது ஆர்வம் ஏற்படுகிறது. இது ஒரு அமெரிக்க கருத்தாகும். அதில் வேலையை விட தனி மனிதனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் ஆசிய கலாசாரத்தில் ஒரு நபர் படிப்படியாக தனது வேலையை விரும்பத் தொடங்குகிறார் என்று நம்பப்படுகிறது. இந்த சிந்தனை அதிக மனிதநேயம் கொண்டது,” என்று டாக்டர் இஷிதா கூறுகிறார்.
பேராசிரியை பாட்ரிசியா சேன் தனது ஆராய்ச்சியின் போது தொடர்ச்சியான கேள்விகள் மூலம் பல்வேறு இடங்களில் பணிபுரியும் மக்களின் மனநிலையையும் செயல்திறனையும் மதிப்பீடு செய்தார். மக்களின் எண்ணத்தை பொருந்து பலன்கள் அமைகின்றன என்பதை அவர் கண்டறிந்தார்.
உதாரணமாக, தங்களுக்கு விருப்பமில்லாத ஒரு வேலையில் மகிழ்ச்சியைக் கண்டறிவதில் ஃபிட் மனநிலை கொண்டவர்கள் சிரமப்படுகிறார்கள். அதேசமயம் டெவலப் மனநிலை கொண்டவர்கள் பல்வேறு வகையான வேலைகளில் மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். அவற்றில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். வேலை அவர்களின் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யாவிட்டாலும் காலப்போக்கில் அவர்களின் திருப்தியை அதிகரிக்கிறது.
டெவலப் மனநிலை கொண்டவர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் தங்கள் ஆர்வத்தை எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பதை பேராசிரியர் சேன் கண்டுபிடிக்க முயன்றார். வேலையில் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் என்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள்?
இதற்காக அவர் பல்வேறு பாடங்களைப் படிக்கும் 316 இளங்கலை மாணவர்களிடம் ஆய்வு செய்தார். அவர்கள் படிக்கும் பாடங்களின் மீதான ஆர்வம் எப்போது, எப்படி மாறியது என்று கேட்டார்.
இந்த மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட நூற்றுக்கணக்கான பதில்களிலிருந்து ஐந்து உத்திகள் அடையாளம் காணப்பட்டன. தாங்கள் படிக்கும் பாடங்கள் மீதான ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் மாணவர்களுக்கு இவை உதவி செய்தன.
உத்வேகம் பெற 5 யோசனைகள்

பட மூலாதாரம், Getty Images
1. உங்களுக்கு முக்கியமான விஷயங்களைக் கண்டறிதல்:
கோட்பாட்டின் மூலம் பெற்ற அறிவு ஒரு ஸ்டார்ட்அப் தொடங்க உதவும் என்று பிசினஸ் படிக்கும் ஒரு மாணவர் நினைக்கலாம்.
2. சமூகக் கண்ணோட்டத்தில் முக்கியமான விஷயங்களைக் கண்டறிதல்
தான் படிக்கும் பாடத்தில் இருந்து பெறும் அறிவு சமுதாயம் மற்றும் உலகம் பற்றிய புரிதலை வளர்க்க உதவும் என்று மாணவர் நினைக்கலாம்.
3. தகவல் சேகரிப்பு
புதிய தகவல்களைப் பெறுவது என்பது மேலும் தெரிந்துகொள்ளும் விருப்பத்தை உங்களுக்குள் உருவாக்கலாம். நமக்கு ஆர்வமுள்ள விஷயங்களை அடையாளம் காண இது உதவும். யாராவது மன அளவில் சோர்வாக உணர்ந்தால் அவர் ஒரு புதிய திறமையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
4. நடைமுறை அனுபவத்தைப் பெறுதல்
இன்டர்ன்ஷிப் அல்லது நடைமுறை வேலை அனுபவத்தைப் பெறுவது, படிப்பதில் அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கிறது என்று மாணவர்கள் கண்டனர்.
5. ஒரு வழிகாட்டியைக் கண்டுபிடித்து சூழலை மாற்றுதல்
மாணவர்கள் தங்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும் ஆசிரியர்கள் அல்லது தங்கள் வேலையை ஆர்வமுள்ளதாக ஆக்கக்கூடிய நண்பர்களை தேடலாம்.
டெவலப் மனநிலை கொண்ட மாணவர்களுக்கு காலப்போக்கில் தங்கள் பாடத்தின் மீதான ஆர்வம் அதிகரிப்பதையும், ஃபிட் மனநிலை கொண்ட மாணவர்களால் அத்தகைய முறைகளை பின்பற்ற முடியவில்லை என்பதையும் பேராசிரியர் சேன் கண்டறிந்தார்.
உத்வேகம் பெறுவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
பேராசிரியர் சேனின் ஆராய்ச்சி மாணவர்களை மையமாகக் கொண்டிருந்தாலும் அதன் முடிவுகள் பணி ஆர்வம் மற்றும் உந்துதல் பற்றிய பரந்த உளவியல் ஆராய்ச்சியுடன் ஒத்துப்போகின்றன.
இந்த ஆராய்ச்சியின் போது அவர் சில செயல்முறைகளைக் கண்டறிந்தார். அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் சில வேலைகளைச் செய்ய நீங்கள் தூண்டுதலை பெறலாம் மற்றும் உற்சாகத்தையும் தக்க வைத்துக் கொள்ளலாம்.
ப்ராக்ஸிமல் கோல் செட்டிங் (குறுகியகால இலக்கை அமைத்தல்) மற்றும் செல்ஃப் கான்ஸிக்வேட்டிங் (உங்களுக்கான தண்டனை அல்லது வெகுமதியை நிர்ணயித்தல்) போன்றவை இரண்டு பயனுள்ள செயல்முறைகள்.
பல சவால்கள் இருக்கின்ற ஆனால் கிடைக்கின்ற பலன்கள் குறைவாக இருக்கும் வேலையில் நீங்கள் இருந்தால், அத்தகைய சூழ்நிலையில், வேலையைத் தொடங்க எந்த உத்வேகமும் இல்லை என்றால் இந்த நுட்பங்கள் உதவிகரமாக இருக்கும்.
அத்தகைய சூழ்நிலையில் ப்ராக்ஸிமல் இலக்கு அமைப்பில் நீங்கள் இந்த திட்டத்தை, ’விரைவாக முடிக்கும்’ பல சிறிய பணிகளாகப் பிரிக்க வேண்டும். பிறகு அந்தப் பணிகளை நீங்கள் செய்து முடிக்கும்போது உங்களுக்கு திருப்தி ஏற்படும்.
சிறிய பணிகளைச் செய்து முடித்த பிறகு உங்களுக்கு நீங்களே வெகுமதி அளிக்கும்போது இந்த முறை பயனுள்ளதாக இருக்கும் என்று ஜெர்மனியில் உள்ள முன்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் போஸ்ட் டாக் ஆய்வாளரான மைக்கி ட்ராட்னர் கூறுகிறார். நெட்ஃப்ளிக்ஸ் பார்ப்பது அல்லது உங்கள் விருப்பப்படி வேறு ஏதாவது செய்வது போன்றவை இதில் அடங்கும். இது செல்ஃப் கான்ஸிக்வேட்டிங் என்று அழைக்கப்படுகிறது.
என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
மேலே குறிப்பிட்டுள்ள உத்திகள் ‘டெவலப்’ மனநிலை கொண்டவர்களிடம் இயல்பாகவே நிகழ்கின்றன. ஆனால் அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று பேராசிரியர் சேனின் ஆய்வு காட்டுகிறது.
இவருடைய ஆராய்ச்சியில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான மாணவர்களின் ஃபிட் மனநிலை கொண்டவர்கள். அத்தகைய சூழ்நிலையில் அவர்களுக்கும் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் அதிகரிக்கும் திறன் உள்ளது என்று சொன்னால் அது அவர்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்.
இந்த செயல்முறைகள் படிப்பில் மட்டுமல்ல, வேலை மற்றும் தொழில் விஷயங்களில் கூட பயன்படுத்தப்படலாம்.
உங்கள் வாழ்க்கையின் பெரிய இலக்குகளைப் பற்றி சிந்தித்து, உங்கள் பணி மற்றவர்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதைப் பற்றி சிந்தித்து, ஊக்கமளிக்கும் சக ஊழியர்களின் உதவியை நாடுவதன் மூலம் மற்றும் உங்களுக்காக சிறிய வெகுமதிகளை நிர்ணயித்து கொள்வதன் மூலம் உங்கள் வேலை மீதான ஆர்வத்தை அதிகரிக்கலாம்.
ஆனால் எல்லாப் பொறுப்புகளையும் நீங்களே ஏற்க வேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல.
ஏனா கே. ஷாஃப்னர் பிரிட்டனில் லைஃப் கோச்சாக உள்ளார். “நீங்கள் உங்கள் பாஸிடம் பேசி உங்கள் விருப்பத்திற்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற வேலையைப் பெற முயற்சிக்க வேண்டும். வேலை அளிப்பவர்களும் இந்த விஷயத்தில் தாராள மனப்பான்மையைக் கடைப்பிடிக்க வேண்டும், ஏனென்றால் அவர்களின் ஊழியர்கள் சிறப்பாகச் செயல்பட இது உதவும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
”நீங்கள் உங்கள் வேலையில் சிக்கி கொண்டிருப்பதாக உணர்ந்தால் நீங்கள் அதிக எதிர்பார்ப்புகளுடன் உள்ளீர்கள் என்று பொருள்படக் கூடும். இது அதிருப்தியை அதிகரிக்கலாம்,” என்றார் அவர்.
“ஏதாவது ஒரு பொழுதுபோக்கை (Hobby) மேற்கொள்ளுங்கள்,” என்று அவர் அறிவுரை கூறுகிறார். ”இது உங்களுக்கு ஒரு நோக்கத்தையும் மன திருப்தியையும் தரும். வாழ்க்கையில் திருப்தியைப் பெற வேலை மட்டுமே ஒரே வழி அல்ல,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்