
பட மூலாதாரம், Getty Images
2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் ஆக்ரோஷமான பேட்டிங்கை அறிமுகப்படுத்தி, சர்வதேச அணிகளை திக்குமுக்காடச் செய்து சாம்பியன் பட்டம் வென்றது இங்கிலாந்து அணி.
ஆனால், இந்த ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்து அணிக்கு மிக மோசமாகத் தொடங்கியுள்ளது. இதுவரை 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் தோல்வி அடைந்து, இங்கிலாந்து 9-வது இடத்தில் இருக்கிறது.
2019-ஆம் ஆண்டு பின்பற்றிய ஆக்ரோஷமான பேட்டிங் என்ற அதே ஃபார்முலா 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு பயன்படவில்லை. ஆக்ரோஷமான பேட்டிங்கை அனைத்துப் போட்டிகளிலும் கையில் எடுத்தால் என்ன நடக்கும் என்பதற்கு இங்கிலாந்து அணியின் நிலைமையே சிறந்த உதாரணம்.
இங்கிலாந்து அணி எங்கு சறுக்கியது? அதற்கு அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புகள் உண்டா?
மீதமுள்ள 4 ஆட்டங்கள், அரையிறுதி வாய்ப்பு?
நடப்பு சாம்பியன் என்ற மரியாதையுடன் உலகக் கோப்பைத் தொடரில் நுழைந்த இங்கிலாந்துக்கு முதல் போட்டியிலேயே நியூசிலாந்து மோசமான பதிலடி கொடுத்தது. அதன்பின் ஒரு வெற்றி மட்டுமே பெற்ற இங்கிலாந்து, நேற்றைய ஆட்டத்தில் இலங்கையிடம் தோற்றதுவரை தொடர்ந்து 3வது தோல்வியைச் சந்தித்துள்ளது.
இதுவரை 5 போட்டிகளில் 4 தோல்விகள் அடைந்து, புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் 2 புள்ளிகளுடன் இங்கிலாந்து பின்தங்கியிருக்கிறது. நிகர ரன்ரேட் படுமோசமாக மைனஸ் 1.632 என்று சரிந்துள்ளது.
இன்னும் இங்கிலாந்து அணிக்கு 4 ஆட்டங்கள் மட்டுமே உள்ளன. இந்த 4 ஆட்டங்களிலும் வென்றால் அரையிறுதிக்குள் செல்ல முடியுமா, அல்லது இதோடு அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டதா என்பது கேள்வியாக ரசிகர்கள் முன் எழுந்துள்ளது.
ஏனென்றால், உலகக் கோப்பைத் தொடர் தொடங்கும் முன், அரையிறுதி செல்லும் வாய்ப்புள்ள 4 அணிகளில் ஒரு அணியாக இங்கிலாந்து அணி கணிக்கப்பட்டது. ஆனால், தற்போது நடந்துள்ளது அனைத்தும் தலைகீழாக இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பல முக்கிய வீரர்களைத் தேர்வு செய்யவில்லை, காயத்தாலும் சிலரை தேர்வு செய்ய முடியாதது பெரிய பலவீனமாக அமைந்தது
இங்கிலாந்தின் நிலைக்கு காரணங்களாக சுட்டிக் காட்டப்படுபவை என்னென்ன?
- 50 ஓவர்கள் உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக, குறைவான அளவில்தான் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடியதுதான், குறைந்த ரன்கள் சேர்க்க முக்கியக் காரணம்.
- பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பல முக்கிய வீரர்களைத் தேர்வு செய்யவில்லை, காயத்தாலும் சிலரை தேர்வு செய்ய முடியாதது பெரிய பலவீனமாக அமைந்தது. குறிப்பாக ஜேஸன் ராய், ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் பிளங்கெட் போன்றோர் அணியில் இல்லாதது பெரிய பலவீனம்.
- இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தங்கள் மண்ணில் நடந்தபோது, அதிகமாக ஸ்விங் செய்ய வாய்ப்பு இருந்தது. வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்களாக இங்கிலாந்து மைதானங்கள் இருந்தன. ஆனால், இந்திய ஆடுகளங்கள் அவ்வாறு இல்லாதது இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பெரிய பலவீனம்.
- இந்தியாவின் காலநிலை, தட்பவெட்பநிலை ஆகியவையும் இங்கிலாந்து அணியினருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஒரு போட்டியில் நல்ல வெயிலும், மற்றொரு நகரில் நடக்கும் போட்டியில் இதமான சூழலும் என மாறி,மாறி இருப்பது அவர்களுக்கு சவுகரியக் குறைவை ஏற்படுத்தியது.
- குறிப்பாக தொடக்க வீரராக வந்து இங்கிலாந்து ரன்ரேட்டை கடந்த உலகக் கோப்பையில் எகிறச் செய்த ஜேஸன் ராய் இந்த உலகக் கோப்பையில் இல்லாததும், வேகப்பந்துவீச்சாளர் பிளங்கெட் இல்லாததும் பெரிய பின்னடைவு. இருவரின் இடத்தை நிரப்ப எந்த வீரரும் தற்போது அணியில் இல்லை.

பட மூலாதாரம், Getty Images
ஒரு போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்து, மற்ற 3 ஆட்டங்களில் வென்றாலும் இங்கிலாந்துக்கு மொத்தம் 8 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும்
சிக்கலான சூழ்நிலை
இங்கிலாந்து அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் மீதமுள்ளன. அதில் நெதர்லாந்து அணியிடம் வேண்டுமென்றால் தாக்குப்பிடித்து வென்றுவிடலாம். ஆனால், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வெல்வது அவ்வளவு எளிதானது அல்ல.
இதில் ஒரு போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்து, மற்ற 3 ஆட்டங்களில் வென்றாலும் மொத்தம் 8 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும் அது அரையிறுதிக்குள் செல்ல உதவாது.
என்ன நடந்தால் அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும்?
இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் செல்வதற்கு சில வாய்ப்புகள் உள்ளன. ஆனால், மற்ற காரணிகள் இங்கிலாந்துக்கு சாதகமாக இருந்தால்மட்டும்தான் அது சாத்தியமாகும். அவை என்ன?
- நியூசிலாந்து அணி தனது அடுத்துவரும் 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்து, 8 புள்ளிகளோடு நிற்க வேண்டும். (ஆனால் இதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு.)
- இந்திய அணி அடுத்துவரும் 4 ஆட்டங்களில் 3 ஆட்டங்களில் மட்டுமே வெல்ல வேண்டும், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோற்க வேண்டும்.
- தென் ஆப்பிரிக்க அணி அனைத்து அணிகளையும் வெல்ல வேண்டும், இந்தியாவிடம் மட்டும் தோற்க வேண்டும். இவ்வாறு நடந்தால், இந்திய அணி 16 புள்ளிகளும், தென் ஆப்பிரிக்கா 14 புள்ளிகளும் பெற்று முதல் இரு இடங்களைப் பிடிக்கும்.
- ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை வெல்ல வேண்டும். ஆனால், மற்ற போட்டிகளில் தோற்க வேண்டும். (இதற்கான சாத்தியங்களும் மிகக்குறைவு.)
- ஆப்கானிஸ்தான் நெதர்லாந்தையும், ஆஸ்திரேலியாவையும் தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு நடந்தால் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா இரு அணிகளும் 8 புள்ளிகள் பெறும்.
- இலங்கை அணி நியூசிலாந்தையும், ஆப்கானிஸ்தானையும் வீழ்த்த வேண்டும். பாகிஸ்தான் அணி, வங்கதேசத்தையும், நியூசிலாந்தையும் தோற்கடிக்க வேண்டும். இதனால் இலங்கை, பாகிஸ்தான் தலா 8 புள்ளிகளுடன் தொடரை முடிக்கும்.
- இவ்வாறு நடந்தால் இங்கிலாந்து 10 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பிடிக்கும், 8 புள்ளிகளுடன் இருக்கும் 5 அணிகள் 4வது இடத்துக்கு மல்லுக்கட்டும்.
இவை அனைத்தும் சாத்தியமானால்தான் இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் செல்வது உறுதியாகும். இதில் ஏதேனும் மாற்றம் அடைந்தால், இங்கிலாந்தின் நாக்அவுட் சுற்று ‘அவுட்’ ஆகிவிடும்.

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் வீழ்த்தினால், பாகிஸ்தான் 10 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது
பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்லுமா?
பாகிஸ்தான் அணி தற்போது 5 போட்டிகளில் 3 தோல்வி, 2 வெற்றி என 4 புள்ளிகளுடன் இருக்கிறது.
இன்றைய (வெள்ளிக்கிழமை, அக்டோபர் 27) ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றால்கூட, பாகிஸ்தான் மீதமுள்ள 3 ஆட்டங்களில் வென்றால் 10 புள்ளிகள் வரை பெறலாம்.
அப்போது, மேலே கூறப்பட்ட வாய்ப்புகள் நடந்து, இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் வீழ்த்தினால், பாகிஸ்தான் 10 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. இங்கிலாந்து அணி 8 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்காக போராடும்.

பட மூலாதாரம், Getty Images
12 புள்ளிகள் என்பது இந்திய அணி அரையிறுதிக்குள் செல்ல பாதுகாப்பானது அல்ல
இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்துக்கு எதிராக நடக்கும் ஆட்டத்தி்ல இந்திய அணி வென்றால், தொடர்ந்து 6 போட்டிகளில் வென்று சாதனை படைத்து 12 புள்ளிகளைப் பெறும். ஆனால், மேலே கூறப்பட்ட சம்பவங்கள் நடந்தால், இந்திய அணி 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
ஆனாலும் 12 புள்ளிகள் என்பது இந்திய அணி அரையிறுதிக்குள் செல்ல பாதுகாப்பானது அல்ல. ஒருவேளை இந்திய அணி ஒருஆட்டத்தில் மட்டும் வென்று, மற்ற 3 ஆட்டங்களிள் தோற்று 12 புள்ளிகளுடன் நின்றுவி்ட்டால், மற்ற 5 அணிகளும் போட்டியில் பங்கேற்று நிகர ரன்ரேட் அடிப்படையில் முடிவாகும். ஆதலால், இந்திய அணி 14 புள்ளிகளைப் பெறுவது பாதுகாப்பானது.
5-ஆவது இடத்தில் இலங்கை
தொடர்ந்து இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள இலங்கை புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி 5வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. அதன் நிகர ரன் ரேட்டும் கணிசமாக அதிகரித்திருக்கிறது . 5வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் 6வது இடத்துக்குச் சரிந்துள்ளது.
இதுவரை 5 போட்டிகளில் இரு போட்டியில் வென்று, 3 போட்டிகளில் இலங்கை தோற்று, 4 புள்ளிகளுடன் உள்ளது.
நாக்அவுட் சுற்றுக்குள் செல்ல அடுத்துவரும் 4 போட்டிகளிலும் வெல்வது இலங்கைக்கு கட்டாயமாக இருக்கும். இந்தியா, நியூசிலாந்து அணிகளுடனான ஆட்டம் அந்த அணிக்குச் சவாலாக இருக்கும். வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளையும் அவ்வளவு எளிதாக வெல்ல முடியாது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கட்டுக்கோப்பான பந்துவீச்சு, ஃபீல்டிங், நழுவவிடாத கேட்சுகள், நம்பிக்கையளிக்கும் பேட்டிங் ஆகியவற்றைத் தொடர்ந்தால் அரையிறுதி வாய்ப்பு இலங்கைக்கு சாத்தியமாகலாம்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்