அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் அதிபர் வேட்பாளர் ஆகிறாரா? – அஞ்சும் நட்பு நாடுகள்

அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் அதிபர் வேட்பாளர் ஆகிறாரா? - அஞ்சும் நட்பு நாடுகள்

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

அமெரிக்காவின் அடுத்த அதிபர் வேட்பாளருக்கான போட்டியில், குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்குள் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.

நிக்கி ஹேலியுடன் நேரடியாகப் போட்டியிடும் அவர், இன்று (ஜனவரி 23) நியூ ஹேம்ப்ஷைர் மாகாணத்தில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தேர்வுப் போட்டியில் 55% வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

இதனால் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டிரம்ப் தான் என்பது முடிவாகி விட்டாது.

இந்த முடிவுகள் வெளியானபோது உரையாற்றிய டிரம்ப், ஹேலி மற்றும் முன்னர் அவரது போட்டியாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி ஆகியோரைக் கடுமையாக விமர்சித்தார்.

ஆனால் டிரம்பை எதிர்த்துப் போட்டியிடும் நிக்கி ஹேலி, தான் போட்டியிலிருந்து விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். இதையடுத்து டிரம்ப் ஹேலியை ‘மோசடிக்காரர்’ என்று விமர்சித்தார்.

நவம்பர் பொதுத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான அதிபர் ஜோ பைடனுடன் மீண்டும் போட்டியிடுவது இப்போது மிகவும் உறுதியாகத் தெரிகிறது.

நியூ ஹாம்ப்ஷயரில் டிரம்பின் வெற்றி சமீபத்திய கருத்துக் கணிப்புகளால் கணிக்கப்பட்ட 20-புள்ளி வித்தியாசத்துடன் பொருந்தவில்லை என்றாலும், வேட்பாளர் போட்டியின் தற்போதைய நிலை மாறியுள்ளது.

ஒவ்வொரு பகுதியில் நடக்கும் வாக்கெடுப்பிலும், ஒரு உண்மை தெளிவாகிறது. பல மாதங்களாக கருத்துக் கணிப்புகள் காட்டுவது போல், குடியரசுக் கட்சி இன்னும் டொனால்ட் டிரம்பின் கட்சிதான்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், FULTON COUNTY SHERIFF’S OFFICE

படக்குறிப்பு,

2020ஆம் ஆண்டின் தேர்தலைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் கடந்த ஆணடு ஆகஸ்ட் மாதம் அவர் ஜார்ஜியா மாகாணத்தில் கைது செய்யப்பட்டார்.

அரசியல் வீழ்ச்சியிலிருந்து மீண்டு வந்த டிரம்ப்

கடந்த சில ஆண்டுகளாகவே பல சர்ச்சைகளிலும் வழக்குகளிலும் டொனால்ட் டிரம்ப் சிக்கினார். அவரது அரசியல் வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்டதாகவும் பலர் நினைத்தனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய கலவரம் அமெரிக்காவையே அதிரவைத்தது.

கடந்த 2020ஆம் ஆண்டின் தேர்தலைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் கடந்த ஆணடு ஆகஸ்ட் மாதம் அவர் ஜார்ஜியாவில் கைது செய்யப்பட்டார். அதோடு சேர்த்து அவர் அப்போது வெவ்வேறு வழக்குகளுக்காக நான்கு முறை கைது செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் இவை அனைத்தையும் தாண்டி தற்போது அதிபர் வேட்பாளர் போட்டியில் முன்னிலை வகித்து வருகிறார்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய கலவரம் அமெரிக்காவையே அதிர வைத்தது.

இது எப்படி சாத்தியமானது?

இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை என்கிறார் டிரம்பின் பட்ஜெட் இயக்குநராகவும், அவரது ஆட்சியில் வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாகவும் இருந்த மிக் முல்வானே.

ஓர் ஆண்டுக்கு முன்பு வரை டிரம்ப் மீண்டும் அரசியல் களத்தில் முன்னேற்றம் காண்பார் என்பது சந்தேகமாகவே இருந்தது, என்கிறார் அவர்.

“டிரம்ப் தனக்கு எதிராக நடந்த குற்ற விசாரணைகளையே தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டார்,” என்கிறார் முல்வானே.

“பைடன் அரசாங்கம் அரசியல் எதிரிகளை வேட்டையாடுவது போல இதைச் சித்தரித்தார். இதை வைத்து வாக்காளர்களிடம் ஒரு செய்தியைச் சொன்னார்.

‘எனக்கு நடப்பதைப் பாருங்கள். எனக்கே இந்த நிலைமை என்றால், உங்கள் நிலைமையை யோசித்துப் பாருங்கள். எனக்கு வாக்களித்தால் உங்களுக்கு இது நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார் அவர்,” என்று முல்வானே பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில் கூறினார்.

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் ஏன் முக்கியமானது?

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அமெரிக்காவின் பல நட்பு நாடுகள், டிரம்பின் மறுபிரவேசத்தைக் கண்டு மிகவும் பயப்படுகிறார்கள்.

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலை அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே கூர்ந்து கவனிக்கிறது.

அமெரிக்கா தற்போது யுக்ரேன், காஸா ஆகிய இரண்டு போர்களில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், அமெரிக்க-சீனா உறவுகள் மோசமடைந்து, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

மத்திய அமெரிக்க நாடுகளும் பேசுபொருளாக மாறியிருக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சி செய்கிறார்கள். மேலும் ஏமனில் ஹூத்திகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட உலகின் எல்லாப் பகுதியிலும் அமெரிக்கத் தலைமை ஏதோவொரு வகையில் ஆதிக்கம் செலுத்துகிறது.

டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவிக்கு வருவதற்கான வாய்ப்பும், அவரது ‘முதலில் அமெரிக்கா’ வெளியுறவுக் கொள்கையும், ஏற்கெனவே கொந்தளிப்பான இந்தச் சூழ்நிலையை மேலும் நிச்சயமற்றதாக ஆக்குகிறது.

சில நாடுகள் அவர் மீண்டும் வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. ஆனால் அமெரிக்காவின் பல நட்பு நாடுகள், டிரம்பின் மறுபிரவேசத்தைக் கண்டு மிகவும் பயப்படுகிறார்கள்.

அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

இந்த ஆண்டு நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் சிறப்பாக நடந்து வருகிறது. இது ஒன்பது குடியரசுக் கட்சியினர், நான்கு ஜனநாயகக் கட்சியினர், இரண்டு சுயேச்சைகள் என 15 வேட்பாளர்களுடன் தொடங்கியது.

இரண்டு பிரதான கட்சிகளும் ஒரு அதிபர் வேட்பாளர், ஒரு தொடர் மாநில ப்ரைமரிஸ்(primaries) மற்றும் காக்கஸ்களை(Caucuses) நடத்துவதன் மூலம் பரிந்துரைக்கின்றன.

இதில், கட்சிகளுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. செயல்முறையும் ஒரு மாகாணத்திற்கும் மற்றொரு மாகாணத்திற்கும் மாறுபடும்.

மார்ச் 3ஆம் தேதி “சூப்பர் செவ்வாய்” என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அந்த நாளில் 12 மாகாணங்கள் தங்கள் முதன்மைப் போட்டிகளை நடத்தும்.

அதிபர் பைடன் இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தார். சில நீண்ட சவால்கள் இருந்தபோதிலும் – ஜனநாயகக் கட்சியின் வேட்புமனுவை எளிதாக வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுக் கட்சியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் இரண்டு மாகாணப் போட்டிகளிலும் வெற்றி பெற்றார், மேலும் அவர் ஏற்கெனவே வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் எனத் தெரிகிறது.

முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் மருமகன் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் உட்பட சில சுயேட்சை வேட்பாளர்களும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *