ஜல்லிக்கட்டு வரலாறு: தமிழ்நாட்டில் சங்க காலம் முதல் ஏறு தழுவுதல் தொடர்வதற்கான சோழர் கால சான்று என்ன?

ஜல்லிக்கட்டு வரலாறு: தமிழ்நாட்டில் சங்க காலம் முதல் ஏறு தழுவுதல் தொடர்வதற்கான சோழர் கால சான்று என்ன?

ஏறு தழுவுதலின்  வரலாறு

வேளாண்மை தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த ஒன்றாகும். கால்நடைகள் வேளாண்மையின் முதுகெலும்பாகும். நான்கு நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடி மகிழும் பொங்கல் விழாவின் மூன்றாவது நாள் மாட்டுப்பொங்கல். தாங்கள் வளர்த்துவரும் கால்நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆதி காலம் முதல் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

தற்காலத்தில் வேளாண்மை பணிகளுக்கு பல்வேறு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் முன்பு வேளாண்மையின் பல்வேறு வேலைகளுக்கும் உழவர்கள் மாடுகளையே பயன்படுத்தி வந்தனர். மண்ணை உழுது சமன் செய்வதற்கு, கிணற்றிலிருந்து நீர் இறைக்க, தானியத்தை பிரித்தெடுக்க என அனைத்து வேலைகளுக்கும் மாடுகள் பயன்படுத்தப்பட்டன.

உழவர்களின் உற்ற தோழனாக விளங்கும் மாடுகளை குளிக்க வைத்து பொங்கலிட்டு வணங்கி நன்றி செலுத்தும் விழாவாகவே மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து உழவர் தினம் என்று சொல்லக்கூடிய காணும் பொங்கல், ஜல்லிக்கட்டும் இன்றளவிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

தமிழர் வரலாற்றில் ஏறு தழுவுதல், காணும் பொங்கல் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.

சங்க காலம் முதல் தொடரும் ஏறு தழுவுதல்

ஏறு தழுவுதலின்  வரலாறு

விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் பிபிசி தமிழிடம் ஏறு தழுவுதல் குறித்து விவரித்தார்.

மாடுகளின் பயன்பாடு ஆதிகாலம் முதலே இருந்துள்ளது. சிந்து சமவெளி காலம் முதல் கால்நடைகள் மக்களுடன் இணைந்து இருந்துள்ளன. சிந்து சமவெளி முத்திரைகள் இதற்கு மிகச்சிறந்த ஆதாரமாகும். மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நகரங்களில் அகழாய்வில் கிடைத்த முத்திரைகளில் திமில் காளை உருவம் காணப்படுகின்றது.

சங்க இலக்கியமான கலித்தொகையில் ஏறு தழுவுதல் பற்றி தெளிவாக உள்ளது.

‘ எழுந்தது துகள்,

ஏற்றனர் மார்பு,

கவிழ்ந்தன மறுப்பு

கலங்கினர் பலர்…’

என்ற அடிகள் ஏறுதழுவுதல் களம் குறித்து தெளிவுபடுத்துகின்றன.

அதேபோல் திமில் பெருத்த காளைகள் கால்களால் தரையை கீறி புழுதியை எழுப்பின. நிலத்தை காலால் உதைத்தன. முரண்பட்டு ஒன்றோடு ஒன்று எதிர்த்து நின்றன. இந்த காளைகள் மிடுக்குடனும் வீரத்துடனும் போருக்கு செல்லும் வீரர்களை ஒத்ததாக இருந்தன என்பதை

‘நீர் எடுப்பவை, நிலம் சாடுபவை,

மாறுயேற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவை

துளங்கு இமில் நல் ஏற்றினம் பல களம்புகும்,

மள்ளர் வனப்பு ஒத்தன’

என கலித்தொகை பாடல்

விவரிக்கின்றது என்றார்.

பழந்தமிழ் நூலான மலைபடுகடாம் நூலிலும், பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.

தமிழர்கள் பலவகை மாடுகளை அறிந்தவார்களாக இருந்தனர்.

கருப்புக் காளைநின்று குத்திக் காளை, பில்லைக் காளை,

காராம் பசுபுள்ளி மாடு,

குள்ளிமாடு , மயிலைக் காளை என பல வகையான மாடுகள் இருந்தன.

அதேபோல் ஏறு தழுவுதல் நடைபெறும் போது காளைகளை பற்றிய செய்தியை பறையறைந்து தெரிவித்தனர்.

வெள்ளை காளையை அடக்கியவன் முள் போல் பல்லழகு கொண்டவளை திருமணம் செய்யலாம். காரிக்காளையின் சினத்துக்கு அஞ்சாமல் அடக்கியவன் ஒளி மிக்கவளின் வாரி முடித்த கூந்தலில் உறங்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஏறு தழுவுதல் நிகழ்ச்சியில் காளையை அடக்கியவர்களுக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுத்ததை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

ஏறு தழுவுதலின்  வரலாறு
படக்குறிப்பு,

பேராசிரியர் ரமேஷ்

கூட்டுணர்வின் வெளிப்பாடே ஏறுதழுவுதல் விழா

அந்த காலம் முதல் பல நூறு ஆண்டுகளாக பல்வேறு அரசியல் சூழல்களையும் தாண்டி தொடர்ந்து தற்காலத்திலும் தமிழ் மக்களின் கூட்டுணர்வின் எழுச்சியின் குறியீடாக ஏறு தழுவுதல் இன்னமும் நடைபெற்று வருகிறது. இது அனைவரையும் பெருமைப்படுத்தும் விழாவாகும். காளையை அறிமுகம் செய்யும்போது அந்த காளையின் உரிமையாளரின் பெயர், ஊரின் பெயர் அறிவிக்கப்படும். அதைப்போலவே காளையை அடக்கி வெற்றி பெறும் இளைஞரின் பெயரும் அவரின் ஊர் பெயரோடு சேர்த்து சொல்லப்படும் எனவே இது ஒரு பெருமைப்படுத்தும் விழாவாகவே பார்க்கப்படுகிறது.

இலக்கியங்கள் மட்டும் அல்லாது பாறை ஓவியங்கள் மூலமாகவும் காளைகள், மாடுகள் பற்றிய ஓவியங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் காணக் கிடைக்கின்றன .

கூரிய கொம்புகளும், சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளை பலர் கூடி விரட்டுவது போன்ற பண்டைய கால ஓவியம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கருக்கையூரில் காணப்படுகிறது.

திமிலுடன் கூடிய காளையை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூத்து மேட்டுப்பட்டியில் கண்டறியப்பட்டது. தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே சித்திரக்கல் புடவு என்ற இடத்தில் திமிலுடன் கூடிய பாறை ஓவியமும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் மாடுகள் கோட்டோவியம் கண்டறியப்பட்டுள்ளது இன்று ஓவிய சான்றுகள் குறித்தும் கூறினார்.

ஏறு தழுவுதலின்  வரலாறு

திரைப்படங்களில் ஏறு தழுவுதல்

அக்கால இலக்கியங்கள் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் தொடர்ந்து ஏறு தழுவுதல் என்று சொல்லப்படும் ஜல்லிக்கட்டு விழா பற்றி விரிவாக காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.

1956-ல் தாய்க்குப் பின் தாரம், 1959 -வீரபாண்டிய கட்டபொம்மன் 1980- முரட்டுக்காளை, 1983- மண்வாசனை, 2004-விருமாண்டி, 2012- அரவாண் என்று பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

நடுகல்லில் ஏறு தழுவுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் கிராமத்தில் தென் பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள விவசாய நிலத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

இதில் காளையானது முன்னங்காலை தூக்கி ஓடுவது போல காட்டப்பட்டுள்ளது. அதற்குப் பின்னால் அக்காளையை அடக்க முற்படும் வீரன் காளையின் திமிலை இறுகப் பற்றிக்கொண்டு காளையின் முன்னங்காலில் தனது கால்களை பின்னிக்கொண்டு தொங்குகிறான். இதனால் காளையின் நாக்கு வாய்க்கு வெளியே தொங்குகிறது. ஏறு தழுவுதல் என்னும் சொல்லுக்கு ஏற்ப இந்த நடுகல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.

இதேபோல் ஏறுதழுவுதல் குறித்த நடுகல் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே ஆதமங்கலம் புதூர் அருகே கண்டெடுக்கப்பட்டதையும் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவுதல்

சல்லி என்பதற்கு பணம் என்று பொருள், காளையின் கொம்பில் பணமுடிப்பை கட்டி வைத்து, அதன்பின் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள், மாட்டினை அடக்கி அந்த பணமுடிப்பை கைப்பற்றியதால் இவ்வீர விளையாட்டிற்கு “ஜல்லிக்கட்டு” எனும் இப்பெயர் வழங்கப்பட்டு , அது இன்றளவும் தொடர்கிறது.

இந்த ஜல்லிக்கட்டானது இலக்கியங்களில் ஏறுதழுவல் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது என்றார்.

பாண்டியருக்கு மீனும், சேரருக்கு வில்லும், சோழருக்கு புலியும், சாளுக்கியருக்கு பன்றியும் இலச்சினையாகத் திகழ்ந்தது போன்று, பல்லவருக்கு நந்தி (காளை உருவம்) இலச்சினையாகத் திகழ்ந்தது.

பல்லவர்கள் ஆட்சி பொ.ஆ. 4 -ஆம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்டது. தமிழ் நாட்டில் இவர்களது ஆட்சி பொ.ஆ. 6 ஆம் நூற்றாண்டு முதல் சிம்மவிஷ்ணு காலந்தொட்டு தொடங்கியது.

பல்லவர் காசுகளில் அவர்களது குலச்சின்னமான திமிலுடன் கூடிய காளை உருவமே பெரும்பாலும் இடம்பெறுகின்றது. ஒரு சில காசுகளில் சிங்க உருவம் உள்ளது.

ஒரு பக் கம் காளையும் மறுபக்கம் ஸ்ரீவத்ஸமும் உள்ள எழுத்துப்பொறிப்பற்ற காசு காஞ்சிபுரம் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது .

ஸ்ரீவஸ்தா, பிறை, சங்கு, பாம்புடன் காளை உருவமுள்ள காசுகள் இரண்டாம் சிம்மவர்மன் காலத்தில் தொடங்கப் பெற்று பின்னர் வந்த மன்னர்களாலும் பயன்படுத்தப்பட்டன என்றார்.

அதேபோல் சம்புவராயர்களின்14- ஆம் நூற்றாண்டு ஆட்சி காலத்தில் அவர்கள் குலச்சின்னமான காளை ஒரு புறம் பொறிக்கப்பட்ட செப்பு காசுகள் பயன்படுத்தப்பட்டன என்றும் தெரிவித்தார்.

ஏறு தழுவுதலின்  வரலாறு

சோழர் கால சான்று

சங்க காலச் சேரர் தலைநகரான கரூரில், அமராவதி ஆற்றுப்படுகையில், சங்க காலச் சோழர் காசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. காசின் முன்பக்கத்தில் காளை உருவம் நின்ற நிலையில் காணப்படுகிறது. காளையின் கீழே நந்திப் பாதச் சின்னங்கள் காணப்படுகின்றன. பின்பக்கத்தில் புலி உருவம் கோடுகளினால் வரையப்பட்டுள்ளது. காசின் வடிவம் நீள் சதுர வடிவத்தில் அமைந்துள்ளது.

காசில் உள்ள காளை, அச்சுக் குத்திய வெள்ளி முத்திரை நாணயங்களில் உள்ள காளையைப் போலவே உள்ளது என்று கூறினார். இதுபோல் பல்லவர்கள், சம்புவராயர்கள், சோழர்கள் காலகட்டத்திலும் மாடுகளின் முக்கியத்துவம் உணர்ந்து நாணயங்களில் அதன் உருவங்கள் குறித்து பயன்படுத்தப்பட்டன என்று தெரிவித்தார்.

பொம்மை காளை ஆட்டம்

காளை மாட்டின் பொம்மைக் கூட்டிற்குள் நுழைந்துகொண்டு நையாண்டிமேளம் இசைக்கேற்ப ஆடப்படுவது காளை ஆட்டம் ஆகும். சல்லிக்கட்டில் இடம்பெறும் காளையை அடக்குதல் என்ற நிகழ்வு காளை ஆட்டத்தில் போலச் செய்தலாக நிகழ்த்திக் காட்டப்படும். கரகாட்டத்தின் துணைநிலை ஆட்டமாக இன்றும் கிராமங்களில் நடைபெறும் திருவிழா காலங்களில் ஆடப்பட்டுவருகிறது என்று கூறி முடித்தார் பேராசிரியர் ரமேஷ்.

தொடர்ந்து எழுத்தாளரும் ,திருச்சி ஆற்றுப்படை மையத்தின் நிர்வாகியுமான பார்த்திபன் நடுக்கலில் ஏறுதழுவுதல் குறித்து விவரித்தார்.

ஐல்லிகட்டு நிகழ்வு வெறும் வீரம் தொடர்பானது மட்டுமல்ல, ஒரு காளையை தழுவும்போது, அந்த காளை மாடு பிடி வீரர்களின் எதிர்ப்பை தாண்டி ஒரு 50 அடி தூரம் சென்றுவிட்டால் அந்த காளைக்கு வீரியம் அதிகம் என்று கருதி அதை இனப்பெருக்கத்திற்கு அனுப்புவார்கள். பிடிபட்ட காளைகளை விவசாயத்துக்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்றார்.

ஏறு தழுவுதலில் இறந்தவர்களுக்கு நடுகல்

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் ஏறுதழுவல் குறித்த வீரக்கல் இருந்தது.

தற்பொழுது அது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது .

அதில் மாட்டின் உருவமும் அருகில் வீரனும் இருப்பார்கள் அருகிலேயே அது பற்றிய விவரமும் உள்ளது. கோவூர் சங்கன்என்பவர் எருதுவிளையாட்டில் இறந்துவிடுகிறார். அவருக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாகும்.

இது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படுகிறது.

கருவந்துறை அதாவது கல்வராயன் மலை கருமந்துறை என்னும் ஊரில் கோவூர் சங்கன் என்பவர் எருது விளையாடி அதில் இறந்து விடுகிறார். அவனது மகன் தனது தந்தைக்கு எடுத்த நடுகல்லாக ‘சங்கன் மகன் பெரிய பயலு நட்ட கல்லு’ என்று கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.

அதேபோல் துறையூர் வட்டம் நாகலாபுரம் கிராமத்தில் தொன்மையான நடுகல் கண்டெடுக்கப்பட்டது. இது 17 -ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்,

இது ஏறுதழுவல் போல அல்லாமல் மஞ்சு விரட்டு அல்லது எருதாட்டம் என்று சொல்லக்கூடிய விளையாட்டில் வீரமரணம் அடைந்த வீரனுக்காய் எழுப்பப்பட்டுள்ள நடுகல் ஆகும்.

இதில் காளையின் இருபுறமும் வீரர்கள் கயிறு கட்டி இழுத்து வருவது போலவும், அதனை இவ்விளையாட்டில் உயிர் நீத்த வீரன் அதனை தழுவுவது போலவும் வீரன் அருகில் ஒரு பெண் நிற்பது போலவும், இருபுறமும் சூரியன் சந்திரன் ஆகிய சின்னங்களோடும் இந்த நடுகல் காணப்படுகிறது என்று விரிவாக கூறினார்.

ஏறு தழுவுதலின்  வரலாறு

காணும் பொங்கல்

உற்றார், உறவினர்கள், நண்பர்களைக் கண்டு இனிப்புகளைப் பரிமாறி சந்தோஷம் அடைவதே காணும் பொங்கலாகும்.

“விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,

வேந்தனும் வெம்பகை தணிந்தனன்” (அகநானூறு:54)

விருந்து எனும் சொல்லிற்கு புதுமை எனும் ஒருபொருளை தொல்காப்பியம் தருகிறது.

பண்டைய தமிழரின் பண்பாட்டில் தலையாய் இருந்த பண்பு விருந்தோம்பல் ஆகும். “பண்டமாற்று முறை வழக்கிருந்த அக்காலத்தில் போக்குவரத்து வசதிகளும் இல்லாத சூழலில். இரவலர்கள் மட்டுமின்றி ஏனையோரும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு மக்கள் நடந்து செல்ல வேண்டியிருந்தது.

உணவு விடுதிகள் இல்லாத காரணத்தினால் உண்டிக்கும் உறையுளுக்கும் அனைவரும் செல்லும் ஊர்களையே நம்ப வேண்டியிருந்தது. ஆகவே, புதிதாக வருவோர்க்குப் பசிக்கு உணவளிக்க வேண்டிய நிலை இருந்தமையால் விருந்தோம்பல் பண்பாடு தமிழகத்து இல்லங்களில் உருவாயிற்று.

‘விருந்தோம்பல்’ என்பது தம் இல்லம் தேடி வரும் புதியவர்களை இன்முகத்துடன் வரவேற்று இனிய மொழி கூறி உபசரித்து உணவளிக்கும் உயரிய பண்பாகும்.

இதை நீலகிரி மலைப்பகுதியின் உயர்ந்த இடத்தில் உள்ள கறிக்கையூரில் பாறை ஓவியம் எடுத்துக்காட்டுகிறது.

அதில் தம் கைப்பிடித்து புதிதாய் வருபவரை மகிழ்வாய் வரவேற்று மகிழ்கிறான் ஆதிக்குடி குடிமகன் என்று கூறினார். ஏறு தழுவுதல் மாட்டுப்பொங்கல் காணும் பொங்கல் என்று அழைக்கப்படும் தமிழர்களின் பாரம்பரிய விழா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் வாழ்வியலோடு இணைந்தது அதற்கு பல்வேறு ஆதாரங்களும் உள்ளது என்றும் கூறினார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *