
பட மூலாதாரம், SHARAD BADHE/BBC
சுமார் 450-500 ஆண்டுகளுக்கு முன்பு, மகாராஷ்டிராவில் ஐரோப்பிய பாணியில் நகரம் இருந்தது. அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களின் வீடுகள், தேவாலயங்கள், மருத்துவமனைகள், சந்தைகள், நீதிமன்றங்கள், நகராட்சி அலுவலகங்கள், கல்லூரிகள், கிணறுகள், சாலைகள், ஓட்டல்கள், கழிவுநீர் அமைப்பு என எல்லாமே ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்டிருந்தது என்று சொன்னால் நம்புவீர்களா?
ஆனால், அது உண்மையில் அப்படித்தான் கட்டப்பட்டிருந்தது. அப்படி கட்டப்பட்ட நகரம் மகாராஷ்டிராவின் தலைநகரான முப்பையில் இருந்து சுமார் ஒரு 50 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. மிகவும் பரபரப்பாக உயரமான கட்டடங்களைக்கொண்ட அந்த நகரம் வசாய் கோட்டையில் தான் அமைந்திருந்தது.
போர்த்துகீசியர்கள் இந்த நகரத்தை 1536 இல் கட்டியுள்ளனர். இந்தியாவில் உள்ள கோட்டைகளை நேசிப்பவர்களுக்கும், ஏன் மகாராஷ்டிராவில் வசிப்பவர்களுக்குமே வசாய் என்ற பெயர் பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மகாராஷ்டிராவின் கடற்கரையில் அமைந்துள்ள வசாய் கோட்டை நானூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று சாட்சியாக உள்ளது. போர்த்துகீசியர்கள் வர்த்தகத்திற்காக இந்தியாவில் காலூன்றி பின் எவ்வளவு வலிமையாக இருந்தார்கள் என்பதற்கு இந்த கோட்டை ஒரு சாட்சியாக உள்ளது.
அதேபோல, மராத்தியர்கள் போர்த்துகீசியர்களை வேரோடு அங்கிருந்து அப்புறப்படுத்தும் வல்லமை கொண்டவர்கள் என்பதற்கும் வசாய் கோட்டை ஒரு உதாரணம்.

பட மூலாதாரம், SHARAD BADHE/BBC
விரார் நகரத்துடன் வசாய்-விரர் என்ற கூட்டுப் பெயர் இப்பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
போர்த்துகீசியர்களுக்கு எதிராக சிமாஜி அப்பாவின் பிரச்சாரத்தால் வசாய் கோட்டை வரலாற்றில் பிரபலமானது.
ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள கோர்லாய், சால் போன்ற மற்ற போர்ச்சுகீசியக் கோட்டைகள் இந்த நிலையைப் பெறவில்லை. அதனால்தான் வசாயை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
வசாய் கோட்டை எங்குள்ளது ?

பட மூலாதாரம், SHRIDUTT RAUT/BBC
வசாய் கோட்டை ஆராய்ச்சியாளர் ஸ்ரீதத்தா ரவுத்தின் கூற்றுப்படி, இந்த கோட்டை நேரடியாக குஜராத்தின் சுல்தானுக்கு தொடர்புடையது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை
மும்பைக்கு வடக்கே சுமார் 50 கிமீ தொலைவில் வசாய் நகரம் உள்ளது. ஒரு காலத்தில் தானே மாவட்டத்தில் இருந்த இந்த நகரம் தற்போது பால்கர் மாவட்டத்தின் ஒரு முக்கியமான அங்கமாக அறியப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் பேசின் என்று அழைக்கப்பட்டது.
விரார் நகரத்துடன் வசாய்-விரர் என்ற கூட்டுப் பெயர் இப்பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. வசாய் வேகமாக வளர்ந்து வருகிறது. மும்பையைச் சுற்றியுள்ள சிறிய நகரங்களில் வசாய் என்ற பெயர் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. வசாய் பகுதியில் இருந்து மக்கள் தினமும் மும்பைக்கு வருகிறார்கள்.
வசாய் கோட்டை எப்போது உருவானது ?

பட மூலாதாரம், SHARAD BADHE/BBC
போர்த்துகீசியர்கள் இங்கு நீண்ட காலம் தங்கள் கட்டுப்பாட்டை வைத்திருந்தனர்
வசாய் கோட்டை பற்றி தெரிந்துகொள்ளும்போது, போர்த்துகீசியர்கள் எப்படி அங்கு காலடி வைத்தனர் என்பது பற்றிய தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானது. போர்த்துகீசியர்கள் இந்தியா வந்தபோது, இந்தியாவின் வடக்கு மாகாணம் ப்ரோவின்சியா டு நோடி (Provincia do Norte) என அழைத்தனர்.
இது வடக்கில் டாமன் முதல் தெற்கில் கரஞ்சா வரை சுமார் 200 கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இதில் டையூ தீவு மற்றும் சால் ஆகியவையும் அடங்கும். இந்த பகுதி முன்பு குஜராத் மாநிலத்தின் அஹ்மத்நகரில் இருந்தது.
வசாய் அவர்களின் மாகாணத்தின் தலைநகராக இருந்தது. குஜராத்தின் சுல்தான் முகலாயர்களுக்கு எதிராகப் போரிட உதவி கேட்டபோது, போர்த்துகீசியர்களுக்கு வசாய் கொடுத்தார், போர்த்துகீசியர்கள் இங்கு நீண்ட காலம் தங்கள் கட்டுப்பாட்டை வைத்திருந்தனர்.
இருப்பினும், வசாய் கோட்டை ஆராய்ச்சியாளர் ஸ்ரீதத்தா ரவுத்தின் கூற்றுப்படி, இந்த கோட்டை நேரடியாக குஜராத்தின் சுல்தானுக்கு தொடர்புடையது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
“இந்த கோட்டை 12 ஆம் நூற்றாண்டில் போங்லே மன்னர்களால் கட்டப்பட்டது என்பதற்கான குறிப்புகள் மற்றும் சான்றுகள் உள்ளன. ஒரு கோட்டையும் சில கட்டமைப்புகளும் அப்போது கட்டப்பட்டன, அதை இன்றும் காணலாம்.
குஜராத் சுல்தான் காலத்தில் நடந்த சிறிய கட்டுமானங்கள், போர்த்துகீசியர் காலத்தில் வேகமாக அதிகரித்தது. கோட்டையையின் உள்பகுதியில் மாற்றியமைக்க பெரிய அளவிலான கட்டுமானங்கள் தொடங்கப்பட்டன.
போர்த்துகீசியர்கள் உள்ளே ஒரு கோட்டை, தேவாலயங்கள், கட்டிடங்கள், குடியிருப்புகள் மற்றும் வெளியே ஒரு கோபுரத்துடன் ஒரு பெரிய கோட்டையை கட்டத் தொடங்கினர்.

பட மூலாதாரம், SHRIDUTT RAUT/VASAI
வசாய் கோட்டை பகுதி ஒரு தீவு போன்றது. மேற்கில் அரபிக் கடலும், தெற்கு மற்றும் தென்மேற்கில் உல்ஹாஸ் நதியும் உள்ளது. இது வசாய் வளைகுடா என்றும் அழைக்கப்படுகிறது. அதன் ஒரு கிளை கிழக்கில் இருந்தது. அந்த பகுதி முழுவதும் தற்போது வண்டல் மண் நிரம்பியுள்ளது. இவ்வாறு நிலத்துடன் இணைக்கப்பட்டு, நீரால் சூழப்பட்ட இந்த கோட்டையை ஒரு நகரம் போன்ற அமைப்பை உருவாக்கினார்கள், போர்த்துகீசியர்கள்.
அவர்கள் 1536 முதல் 1739 வரை கோட்டையின் மீது ஒரு உறுதியான பிடியை வைத்திருந்தனர், அதற்கு அது மராத்தி பேரரசுடன் இணைக்கப்பட்டது..
கோட்டை அமைப்பு

பட மூலாதாரம், SHARAD BADHE/BBC
கோட்டையின் கோபுரங்களுக்கு யஷ்வந்த், கல்யாண், பவானி மார்டண்ட், வெத்தல், தர்யா என்று பெயரிடப்பட்டது.
இந்த கோட்டையின் முக்கிய அம்சம் பல கோட்டைகளை உள்ளடக்கிய ஒரு வலுவான பெரிய கோட்டை என்பது தான். கோட்டைக்கு இரண்டு வாயில்கள் உள்ளன, அவற்றில் ஒன்று நிலப்பரப்பை நோக்கியும் மற்றொன்று விரிகுடாவை நோக்கியும் உள்ளது. இந்தக் கோட்டைக்கு அருகாமையில் சாவோ செபஸ்தியோ, சாவோ பாலோ, சாவோ பெட்ரோ, செயின்ட் பிரான்சிஸ் சேவியர் போன்ற பல கோட்டைகள் உள்ளன.
கோட்டையில் மூன்று தேவாலயங்களும், ஒரு கல்லூரியும் இருந்தது. உள்ளே, சாலைகள் மற்றும் குடியிருப்புகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கோட்டையிலேயே சிறையும் நீதிமன்றமும் இருந்தது.
இந்த கோட்டையில் ஒரு சந்தை கட்டப்பட்டது. இதில் ஒரு வஜ்ரேஸ்வரி கோவிலும் உள்ளது. பேஷ்வாக்கள் கோட்டையைக் கைப்பற்றிய பிறகு, கோபுரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன.
கோபுரங்களுக்கு யஷ்வந்த், கல்யாண், பவானி மார்டண்ட், வெத்தல், தர்யா என்று பெயரிடப்பட்டது. இதனால், கோட்டையைச் சுற்றி ஒரு சிறு நகரமாக வசாய் கோட்டை உருவானது.
போர்த்துகீசிய காலத்தில், அதன் கோட்டை ‘ஃபோர்ட் டி சாவோ செபாஸ்டியோ’ (Forte de Sao Sebastio) என்று அழைக்கப்பட்டது.
இந்த இடம் தோராயமாக கோட்டையின் மையத்தில் உள்ளது. சுமார் 3 கிலோமீட்டர் நீளமுள்ள கோட்டையில் 10 சிறு கோட்டைகளால் இந்த பெரிய கோட்டை பாதுகாக்கப்பட்டது.

பட மூலாதாரம், SHARAD BADHE/BBC
12 ஆம் நூற்றாண்டில் போங்லே மன்னர்கள் இங்கு ஒரு கோட்டையை கட்டினார்கள்
கோட்டையைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும் போது, வரலாற்றாசிரியர் ஸ்ரீதத் ராவத், “இந்தக் கோட்டை மிஷ்ரதுர்க் வகையைச் சேர்ந்தது. அதன் பரப்பளவு சுமார் 110 ஏக்கர் இருக்கும். மூன்று பக்கமும் தண்ணீரும் ஒரு பக்கம் சதுப்பு நிலமும் உள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள பெரும்பாலான கோட்டைகளின் எச்சங்கள் அழிக்கப்பட்டுள்ளன, ஆனால் இந்த கோட்டையின் எச்சங்கள் இன்றும் உள்ளன. இது ஐரோப்பிய பாணி கட்டிடங்களால் வகைப்படுத்தப்படுகிறது.” என்றார்.
தொடர்ந்து இந்தக் கோட்டையின் பழமை குறித்து பேசினார் ஸ்ரீதத் ராவத்.
“வசாய் மிகவும் பழமையானது. இந்தக்கோட்டையில் உள்ள ஆதாரங்களை வைத்து பார்க்கும்போது, இந்தக் கோட்டை 8 முதல் 10 ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்ததாக அறியப்படுகிறது. நாக குலங்கள், ராஷ்டிரகூடர்கள், கொங்கன் மௌரியர்கள், திரிகூடர்கள், ஷிலகர்கள், போர்த்துகீசியர்கள், மராட்டியர்கள், ஆங்கிலேயர்கள் போன்ற ஆட்சியாளர்கள் இங்கு இருந்துள்ளனர்.
12 ஆம் நூற்றாண்டில் போங்லே மன்னர்கள் இங்கு ஒரு கோட்டையை கட்டினார்கள். பின்னர், குஜராத் சுல்தானகத்தின் சர்தார் மாலிக் துகான் இங்கு தங்கியிருந்தபோது பிடிபட்டார்.
வசாய் கோட்டை போர்த்துகீசியர்களால் கட்டப்படவில்லை, அவர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் அதை 1536 முதல் 1600 வரை கட்டினர். பொதுவாக மக்கள் கோட்டையை கட்டிவிட்டு வாழ வருவார்கள். ஆனால், வசாய் மக்கள் முதலில் வாழ வந்தார்கள், அவர்கள் திட்டமிட்டு நகரத்தை கட்டினார்கள். இன்றும், அன்றைய சாலைகள், கழிவுநீர் அமைப்பு மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றைக் காணலாம்.”
இவ்வாறு ஸ்ரீதத் ராவத் கூறினார்.
வசாய் கோட்டையை கைப்பற்றிய மராத்தியர்கள்
அந்த நேரத்தில் மேற்கு கடற்கரையில் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து, போர்த்துகீசியர்கள் மிகவும் வலிமையான சக்தியாக கருதப்பட்டனர்.
1719-20 இல் மராத்தியர்கள் கல்யாணைக் கைப்பற்றியபோது மராட்டியர்களுக்கும் போர்த்துகீசியர்களுக்கும் இடையே முதல் மோதல் ஏற்பட்டது. பின்னர் 1737 இல் மராட்டியர்கள் தானே கோட்டையை கைப்பற்றினர். அப்போது தான், வசாய் கோட்டையையும் கைப்பற்ற வேண்டும் என்ற பிரச்சாரம் தொடங்கியது.
பின், 1739 இல் மராட்டியர்களால் வசாய் கோட்டையை கைப்பற்றிய பிறகு தான் வடக்கு மாகாணத்தில் போர்த்துகீசியர்களின் செல்வாக்கு குறைந்தது.
வசாய் கோட்டையை கைப்பற்றுவதற்கான பயணத்தை வழிநடத்திய சிமாஜி அப்பா, போர்த்துகீசியர்களால் பாராட்டப்பட்டார். கோட்டையை சிமாஜி கைப்பற்றியபிறகு, வசாய் மாகாணத்தை தாங்கள் இழக்கவில்லை, ஆனால் மக்களின் நம்பிக்கையையும் அரசியலில் தங்கள் நிலையையும் இழந்துவிட்டதாக போர்த்துகீசியர்கள் ஒப்புக்கொண்டனர்.
யார் இந்த சிமாஜி அப்பா ?

பட மூலாதாரம், SHRIDUTT RAUT/VASAI
சிமாஜி அப்பா, பாலாஜி விஸ்வநாத்தின் மகனும் முதல் பாஜிராவின் சகோதரரும் ஆவார். அவர் 1707 இல் பிறந்திருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. சிமாஜி அப்பா இளமையாக இருக்கும்போதே அவரது தந்தை பாலாஜி விஸ்வநாத் இறந்துவிட்டார். எனவே, பேஷ்வா பொறுப்பு முதலில் பாஜிராவ் வகித்திருந்தார்.
சிமாஜி அப்பாவும் விரைவில் அவருக்கு உதவினார். சிமாஜியின் முதல் மனைவியின் பெயர் ரக்மாபாய். சிமாஜி அப்பாவுக்கு சதாசிவ என்ற மகன் பிறந்தார்.
அவர் பின்னர் பானிபட் போரின் போது சதாசிவரபாவ் அல்லது பௌசாஹேப் என்று அழைக்கப்பட்டார். ரக்மாபாய் இறந்த பிறகு, சிமாஜி அன்னபூர்ணாபாயை மணந்தார்.
கோட்டையை கைப்பற்றியது எப்படி ?

பட மூலாதாரம், Getty Images
சிட்டியர்களின் (Siddi’s ) குடியேற்றத்திற்கு எதிரான பிரச்சாரத்தின் விளைவாக அவர்களை முழுவதுமாக மகாராஷ்டிராவில் இருந்து அகற்றிய பிறகு, மராத்தியர்கள் போர்த்துகீசீயர்களின் குடியேற்றத்திற்கு எதிரான பிரச்சாரம் செய்தனர்.
இதன் காரணமாக, போர்த்துகீசியர்கள் தங்கள் மாகாணத்தில் மிகக் கடுமையான சட்டங்களை இயற்றியிருந்தனர்.
எனவே, இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை ஒழிக்க பேஷ்வாவுக்கு புகார்கள் வந்தன. அதில், சஷ்டி தீவில் நடக்கும் கொடுமைகளுக்கு பதில் அளிக்க பிலாஜி ஜாதவ் அனுப்பப்பட்டார்.
அவருக்கு மலாட்டைச் சேர்ந்த தேசாய் அந்தாஜி காவ்லே, கல்யாண் அருகே உள்ள அஞ்சூரைச் சேர்ந்த கங்காஜி நாயக் ஆகியோர் உதவியாக இருந்தனர். ஆனால் சஷ்டி மராட்டியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதை உணர்ந்த பிறகு, ஆங்கிலேயர்கள் போர்த்துகீசியர்களுக்கு உதவினார்கள்.
1734 முதல், போர்த்துகீசியர்கள் தானேவில் ஒரு கோட்டையைக் கட்டத் தொடங்கினர்.
பேஷ்வாக்கள் இந்த இயக்கத்தில் கவனம் செலுத்தினர். மார்ச் 1737 இல், சிமாஜி அப்பா போர்த்துகீசியர்களுக்கு எதிராகப் புறப்பட்டார். அவர்கள் பத்லாபூரை அடைந்த நேரத்தில், அஞ்சூரின் நாயக், ஷங்கராஜி பாட்கே, தானேவை அடைந்துவிட்டார். அதன்பின், திடீர் தாக்குதலில் தானாவை மராத்தி ராணுவம் கைப்பற்றியது.
இதனால், போர்த்துகீசியர்கள் அங்கிருந்து ஓட வேண்டியதாயிற்று. அதன் பிறகு அவர்கள் மரோல், மலாட், டர்பே போன்ற இடங்களைக் கைப்பற்றத் தொடங்கினர், ஆனால் பாந்த்ரா மற்றும் வெசாவே (வெர்சோவா) அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.
அதன்பிறகு எல்லா பிராந்தியத்தையும் கைப்பற்றிவிட்டு, அப்பா புனே திரும்பினார். அதன் பிறகும் வசாய் கோட்டையை கைப்பற்ற பல முயற்சிகள் தொடர்ந்தன.

பட மூலாதாரம், Getty Images
மராத்தியர்கள் வசாயைக் கைப்பற்ற விரும்பினால், அவர்கள் முதலில் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கைப்பற்ற வேண்டும். 1739 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு கலவரம் ஏற்பட்ட போது, சிமாஜி அப்பா வசாய் கோட்டையைத் தாக்கினார்.
வசாய் கோட்டையின் உள்ளே இருந்த ஒவ்வொரு கோட்டையையும் குறிவைத்து சுரங்கப்பாதைகள் தோட்டப்பட்டது. அப்போது, போர்த்துகீசியர்கள் சண்டையை நிறுத்தி, ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளும்படி கேட்டுக் கொண்டனர்.
போர்ச்சுகீசிய வழக்கறிஞர்கள் வெள்ளைக் கொடியுடன் கோட்டையை விட்டு வெளியே வந்து ஒப்பந்தம் மூலம் கோட்டையை விடுவித்து கையகப்படுத்துவதாக பேச்சுவார்த்தை நடத்தி வசாய் கோட்டைக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
போர்த்துகீசியர்களும் அவர்களது மக்களும் பாதுகாப்பாக வெளியேறவும், அவர்களது சொத்துக்களை அவர்களுடன் எடுத்துச் செல்லவும் பல ஷரத்துக்கள் இருந்தன. கோட்டைக்கு தானியங்கள் மற்றும் வெடிமருந்துகளை எடுத்துச் செல்லவும் அனுமதி கோரப்பட்டது.
வசாய் பகுதியில் மக்கள் தங்கள் மதத்தை பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் தேவாலயங்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
போர்த்துகீசியர்கள் கல்பாத்தில் இருக்கும் வரை மற்றும் துப்பாக்கி எல்லைக்கு வெளியே இருக்கும் வரை மராத்தியர்கள் எந்த படையையும் கோட்டைக்குள் கொண்டு வரக்கூடாது என்றும் அந்த ஒப்பந்தத்தில் கோரப்பட்டிருந்தது.
கோட்டையில் உள்ள கிறிஸ்தவ பாதிரியார்களை கூட பாதுகாப்பாக செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிபந்தனைகள் அனைத்தையும் மராத்தியர்கள் பின்பற்றினர்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு பிறகு, மராத்தியர்கள் வடக்கு மாகாணத்தில் போர்த்துகீசிய ஆக்கிரமிப்பை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வந்து வெற்றி பெற்றனர்.
வசாய் பற்றி ஸ்ரீதத் ராவத் கூறுகையில், “இந்தியாவில் ஐரோப்பிய சக்தியின் முதல் தோல்வி வசாய் நகரில் தொடங்கியது என்பது மிக முக்கியமான விஷயம். 205 ஆண்டுகால போர்ச்சுகீசியப் பேரரசு வசாயில் தோற்கடிக்கப்பட்டது வரலாற்றில் பேசப்பட வேண்டியது.
மராத்தியர்கள் போர்த்துகீசியர்களுக்கு எதிரான பிரச்சாரத்தின்போது, வட கொங்கனிகளுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தனர். வடகொங்கனிப் பகுதியில் இருந்த 100 கோட்டைகளையும் மராத்தியர்கள் கைப்பற்றினர்.
இன்றைய நிலை என்ன ?
மராத்தியர்கள் கோட்டையைக் கைப்பற்றிய பிறகு, 1739 முதல் 1818 இல் மராத்தியப் பேரரசு வரும் வரை கோட்டையை ஆட்சி செய்தனர். அதன் பிறகு ஆங்கிலேயர் காலத்தில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை.
ஆங்கிலேயர்கள் கோட்டையை தொழிற்சாலைக்கு குத்தகைக்கு கொடுத்தனர். போர்த்துகீசியர்கள் காலத்தில் இங்கு செய்யப்பட்ட பாரிய கட்டங்கள் இடிந்து விழுந்தது.
ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை லிட்டில்வுட் என்ற நபருக்கு சர்க்கரை ஆலைக்காக கொடுத்தனர். ஆனால், எதிர்பார்த்த பணம் கிடைக்காததால் கடனில் இருந்த லிட்டில்வுட், கோட்டை கற்களை விற்று பணம் திரட்ட ஆரம்பித்தார்.
ஆங்கிலேயர் காலத்தில் மும்பையில் பெரிய கட்டுமானங்கள் இருந்தன. இந்தக் கட்டுமானங்களுக்காக கோட்டையின் கற்கள் பயன்படுத்தப்பட்டன.
மராத்தியர்களை கண்டு பயந்த ஆங்கிலேயர்கள்

பட மூலாதாரம், Getty Images
ஆங்கிலேயர்களின் அனைத்து பரிவர்த்தனைகளும் பம்பாய் கோட்டையில்தான் நடந்தன. அவர்கள் இந்தக் கோட்டையைச் சுற்றி அரண்களைக் கட்டியதோடு, ஒவ்வொரு மூலையிலும் மலர் மரம், கிங்ஸ், சர்ச், மூர், ராயல் போன்ற கோபுரங்களையும் கட்டினார்கள். ஆனால், ஆங்கிலேயர்கள் பாதுகாப்பாக உணரவில்லை. காரணம், வசாய் கோட்டை மீது மராத்தியர்கள் மேற்கொண்டிருந்த படையெடுப்பு.
மராத்தியர்கள் போர்த்துகீசியர்களுடன் போரிட்டு வசாய் நகரைக் கைப்பற்றியதால், ஆங்கிலேயர்கள் மராத்தியர்களைக் கண்டு பயப்படத் தொடங்கினர்.
மராத்தியர்கள் பம்பாய் வாசலில் வந்துவிட்டதைக் கண்ட ஆங்கிலேயர்கள், பாதுகாப்புக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கத் தொடங்கினர். வசாய்க்குப் பிறகு மராத்தியர்கள் தெற்கே பாந்த்ரா மற்றும் குர்லியா வரை நகர்ந்தனர்.
எனவே, முதலில் சிமாஜியப்பாவை சந்திக்க ஜேம்ஸ் இன்ச்பேர்ட், வசாய்க்கு அனுப்பப்பட்டார். சிமாஜி அப்பா விதித்த 15 நிபந்தனைகளுடன் ஜேம்ஸ் பம்பாய் திரும்பியதாக கோவிந்த் சகாராம் சர்தேசாய் ‘மராத்தி ரியாசத்தின்’ மூன்றாவது தொகுதியில் எழுதியுள்ளார்.
ஜேம்ஸ் முதல் பாஜிராவை புனேவில் சந்தித்தார். ஆனாலும், ஆங்கிலேயர்களின் பயம் குறையவில்லை. அவர்கள் பம்பாய் கோட்டையைச் சுற்றி அகழிகளைத் தோண்டினார்கள். இந்தக் குழியைத் தோண்டுவதற்கு வணிகர்கள் ஒன்று கூடி பணம் சேர்த்தனர். இந்தத் தொகை 30 ஆயிரம். ஆனால், பள்ளம் தோண்ட மொத்த செலவு 2.5 லட்சம்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்