
பட மூலாதாரம், IDUMVAVAM KARTHI/ NAAM TAMILAR
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் மீது நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த புகார் தொடர்பாக இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள சென்னையைச் சேர்ந்த நடிகை விஜயலட்சுமி, ‘‘சீமான் என்னை திருமணம் செய்து ஏமாற்றியதுடன், என் அனுமதியின்றி கருவைக் கலைத்துள்ளார்,’’ எனக் கூறி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, 2011இல் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை, ஆரம்பம் முதலே சீமான் மறுத்து வருகிறார். அவ்வப்போது இந்த விவகாரம் செய்திகளில் வெளியாகி அரசியல் களத்தில் பேசுபொருளாவதும், பிறகு அமைதியாவதும் கடந்த பத்தாண்டுகளாக நடந்து வருகிறது.
சீமான் மீதான விஜயலட்சுமி புகார் என்ன?
சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தார்.
“நான் சினிமாவில் நடித்து சேர்த்து வைத்திருந்த 60 லட்சம் ரூபாய் பணம், 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைப் பெற்றுக்கொண்டார். எனக்குத் தெரியாமல் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் அளித்த புகாரின் பேரில், 2011இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்.
சீமான் மீதும், என்னை மிரட்டும் மதுரை செல்வம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என விஜயலட்சுமி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

விசாரணைக்கு நேரில் ஆஜராக சீமானுக்கு சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
விஜயலட்சுமியின் புகாரின் பேரில் சீமான் மீது போலீஸார், பாலியல் வல்லுறவு, மோசடி, மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த விவகாரம் அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
போலீசார் விஜயலட்சுமியை நேரில் வரவழைத்து, 8 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தி, ஆதாரங்களைப் பெற்று, திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.
விஜயலட்சுமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஜயலட்சுமி மற்றும் அவருக்கு ஆதரவாக வந்த தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் மீது, நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் அவதூறு வழக்குகள் பதிவு செய்ததுடன், ‘விஜயலட்சுமி பணம் பறிப்பதற்காக சீமான் மீது புகார் கொடுத்துள்ளார்,’ எனக் கூறி, சமூக ஊடகங்களில் வீடியோக்களையும் பதிவேற்றினர்.
சீமானுக்கு காவல்துறை சம்மன்
விஜயலட்சுமிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், அவருடைய புகார் தொடர்பாக காவல் நிலையத்தில கடந்த 9ஆம் தேதி நேரில் ஆஜராக போலீசார் சீமானுக்கு சம்மன் அளித்தனர்.
ஆனால் ஏற்கெனவே திட்டமிட்டபடி தமக்கு சில முக்கிய அரசியல் நிகழ்ச்சிகள் இருப்பதால் தன்னால் நேரில் காவல் நிலையத்துக்கு வரமுடியாது எனத் தெரிவித்த சீமான், தனது வழக்கறிஞரை அனுப்பிவைத்தார்.
இருப்பினும் போலீசார் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என இரண்டாவது முறையாக கடந்த 14-ம் தேதி ஒரு சம்மனை அளித்தனர்.
இதற்கிடையே, நடிகை விஜயலட்சுமி தன் மீது பொய் புகார்களைத் தெரிவித்து களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி சீமான் ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் தனக்கு இழப்பீடாக ரூ. 1 கோடி வழங்கவேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றது ஏன்?
ஆனால், இந்த முறையும் கடந்த 15ஆம் தேதியன்று தனது புகாரைத் திரும்பப் பெற்ற நடிகை விஜயலட்சுமி, மீண்டும் பெங்களூருவுக்குப் போவதாக அறிவித்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து சீமானிடம் பேசியதாகக் குறிப்பிட்ட அவர், “வழக்கின் போக்கு எனக்கு திருப்திகரமாக இல்லை. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் மெத்தனமாகச் செயல்பட்டனர். கடைசியில் சீமான் தான் சக்தி வாய்ந்தவராக இருக்கிறார்,” என்றார்.
மேலும், “தமிழ்நாட்டில் சீமானுக்கு அதிகாரம் உள்ளது. அவரை எதுவும் செய்ய முடியாது. என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். சீமான் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும்,” என்றார்.

பட மூலாதாரம், NAAM TAMILAR KATCHI
வழக்கைத் திரும்பப் பெற யாரும் வற்புறுத்தவில்லை என்றும், புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கூறிய அவர், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியதோடு, தனி ஒருவராக அவரால் போராட முடியவில்லை என்றும், சீமானை எதிர்கொள்ள போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று நேரில் ஆஜரான சீமானிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் கேள்விகளுக்கு சீமான் பதில் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” என் மீது களங்கம் ஏற்படுத்தவே இது போன்ற புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மக்களிடம் எனக்கு அதிகரிக்கும் செல்வாக்கை அழிக்க அரசியல் கட்சிகள் விரும்புகின்றன. இருப்பினும், சட்டப் படி, போலீசாரின் விசாரணைக்கு நான் நேரில் வரவேண்டும் என்பதால் 18ஆம் தேதி வருவதாக அவர்களிடம் தெரிவித்திருந்தேன். அதனடிப்படையில் இன்று காவல் நிலையத்தில் ஆஜராகி போலீசாரின் கேள்விகளுக்குப் பதில் அளித்தேன்,” என்றார்.
காவல் நிலையத்தில் ஆஜராக சீமான் வந்த போது, அவர் மனைவியும் உடனிருந்தார். சீமானுடைய ஆதரவாளர்களும், நாம் தமிழர் கட்சியினரும் காவல் நிலையத்தின் அருகே குவிந்திருந்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.
வழக்கு வாபஸ் பெற்ற பிறகும் சீமான் ஆஜர் ஏன்?
காவல் நிலையத்துக்கு சீமான் நேரில் சென்றது குறித்து மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் பிபிசி தமிழுடன் பேசிய போது, “விசாரணைக்காக சீமான் காவல் நிலையத்துக்கு நேரடியாகச் சென்றது புகார்தாரர் புகாரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறாரா என்பதைப் பற்றியது அல்ல. விஜயலட்சுமி அளித்த ஒரு புகார் தொடர்பாக விசாரணை நடத்த சீமானுக்கு போலீசார் அழைப்பாணையை அனுப்பியிருந்தனர்.
அதை ஏற்பது மற்றும் காவல் நிலையத்துக்குச் சென்று போலீசாரின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது சீமானின் சட்டப்பூர்வமான கடமை என்பதைத் தவிர, புகாரில் என்ன கூறப்பட்டிருந்தது என்பது குறித்து அல்லது சீமானிடம் போலீசார் என்ன கேள்விகளைக் கேட்டனர் என்பது குறித்து யாருக்கும் தெரியாது,” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்