
பட மூலாதாரம், TAMILNADU FIRE & RESCUE
சென்னையில் நடிகர் அமீர்கான் பத்திரமாக மீட்பு
சென்னை வெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகர்கள் அமீர்கான் மற்றும் விஷ்ணுவிஷால் மீட்கப்பட்ட சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதேவேளையில் அவர்கள் குடியிருந்த நிலப்பகுதியின் உண்மை நிலை குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை மிக்ஜாம் புயல் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி கடந்தது ஆந்திராவின் நெல்லூர் அருகே பாபட்லா பகுதியில் நிலப்பரப்பைத் தாக்கியது. சென்னையின் வழியாக புயல் கடந்து சென்றபோது அதீத கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் 24 மணிநேரத்தில் 40 செ.மீ மேல் மழை பதிவானது.
இதனால் சென்னை நகரமே 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தை நினைவுபடுத்தும் விதமாக மழை வெள்ளத்தில் மிதந்து வருகிறது. சென்னையின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் வெள்ளத்தில் சிக்கி உணவு, பால், இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம், பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளநீர் உள்ள பகுதியிகளில் இருந்து மீட்கப்படும் மக்களை அருகே உள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கும் பணியில் அரசு இறங்கியுள்ளது.
காரப்பாக்கம் அருகே 8 அடி வெள்ளம் சூழ்ந்த வீட்டில் சிக்கிய பாலிவுட் நடிகர் அமீர் கான், தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தீயணைப்பு மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டது எப்படி?
மழை வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட பாலிவுட் நடிகர் அமீர்கான் மீட்புக் குழுவிடம் கூறியது என்ன?

பட மூலாதாரம், TAMILNADU FIRE & RESCUE
நடிகர்கள் வீட்டிற்குள்ளும் புகுந்த மழை நீர்
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை வழியாக கடந்த டிசம்பர் 4ஆம் தேதி பயணித்து டிசம்பர் 5ஆம் தேதி ஆந்திரா மாநிலத்தின் நெல்லூர் பகுதியின் பாபட்லாவில் கரையைக் கடந்தது. இதனால் சென்னையில் அதீத கன மழை கொட்டியது.
கடந்த 1976, 1985,1996, 2005, 2015 ஆகிய ஆண்டுகளில் சென்னையின் ஆண்டு மழை 2000 மி.மீ தொட்டது. அதாவது 200 செ.மீ. அதே போல் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டும் டிசம்பர் மாதத்தின் துவக்கத்திலேயே 2000 மி.மீ மழையை சென்னை கடந்துள்ளது.
டிசம்பர் 4ஆம் தேதி 24 மணிநேரத்தில் மட்டும் சென்னை பெருநகரில் 400 மி.மீ மழை பதிவாகியுள்ளது. குறுகிய காலத்தில் பெய்த அதிக மழை இது என்று வானியல் நிபுணர்கள் இதைக் கணிக்கின்றனர்.
இந்த கனமழை சென்னை பெருநகரின் அனைத்துப் பகுதிகளையும் வெள்ளைக்காடாக விட்டுச் சென்றுள்ளது. குறிப்பாக கடந்த 2015ஆம் ஆண்டும் பெரும் வெள்ளத்தில் சிக்கிய வேளச்சேரி, மேற்கு தாம்பரம், முடிச்சூர், பள்ளிக்கரணை, அசோக் நகர், அரும்பாக்கம், புளியந்தோப்பு, வட சென்னை உள்ளிட்ட பல பகுதிகள் இந்த ஆண்டும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
அந்தப் பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடியாமல் முழங்காலுக்கு மேல் இருப்பதால் அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைவரும் அரசின் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
டிசம்பர் 5ஆம் தேதி அதிகாலை முதல் மழை நின்று இருப்பதால் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. இருந்தபோதிலும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மழை நீர் வடியாத நிலையே காணப்படுகிறது.
வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணு விஷால்

பட மூலாதாரம், VISHNU VISHAL / TWITTER
நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டர் பதிவு
சென்னை காரப்பாக்கத்தில் குடும்பத்தினருடம் வசிக்கும் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால், தான் சென்னை மழை வெள்ளத்தில் சிக்கி இருப்பதாகவும், தனக்கு உதவி வேண்டும் எனவும் தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவில் “காரப்பாக்கத்தில் உள்ள எனது வீட்டிற்குள் மழைநீர் புகுந்து நீரின் அளவு சீராக உயரத் தொடங்கி இருக்கிறது.
இங்கே, மின்சாரம் இல்லை, தொலைத்தொடர்பு வசதி இல்லை, வைஃபை வசதி இல்லை, எனது வீட்டின் மாடியில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே சிறிதளவு இணைய வசதி கிடைக்கிறது, உதவியை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.
நானும், என்னைப் போல இந்தப் பகுதியில் சிக்கியுள்ள மக்களும் உதவி கிடைக்கும் என நம்புகிறோம். சென்னை மக்களின் மனநிலையை என்னால் உணர முடிகிறது”, என்று தெரிவித்தார்.
அமீர் கான், விஷ்ணு விஷாலை மீட்ட தீயணைப்பு மீட்புக் குழு
தென் சென்னை பகுதியில் உள்ள காரப்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கியிருந்த திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால், அவரது குடும்பத்தினர் மற்றும் அருகில் வசித்த பாலிவுட் நடிகர் அமீர்கான், அவரது குடும்பத்தினரை, தீயணைப்பு மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மிதவைப் படகின் உதவியுடன் மீட்டு அழைத்து வந்தனர்.
இதையடுத்து தீயணைப்பு மீட்புக் குழுவினருடன் சேர்ந்து நடிகர் அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷால் புகைப்படம் எடுத்து விஷ்ணு விஷால் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
அதில், “எங்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்த தீயணைப்புத் துறையினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது காரப்பாக்கம் பகுதியில் 3 படகுகள் மூலம் அங்கு வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு வருகின்றனர்.
இதுபோன்ற பேரிடர் காலத்தில் அரசு நிர்வாகம், அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்,” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

பட மூலாதாரம், VISHNU VISHAL / TWITTER
நடிகர்கள் அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷாலை மீட்ட மீட்புப்படை
அமீர்கான் வீட்டில் 8 அடி உயரத்திற்கு வெள்ளம்
சென்னை காரம்பாக்கம் பகுதியில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது குடும்பத்தினருடன் குடி பெயர்ந்தார். மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த மழையால் காரம்பாக்கம் பகுதியில் மழைநீர் சூழ்ந்தது.
இது குறித்து விஷ்ணு விஷால் பதிவிட்ட சமூக ஊடக பதிவின் அடிப்படையில், தயாளன் தலைமையிலான தீயணைப்பு மீட்புக் குழுவினர் அந்தப் பகுதிக்குச் சென்றனர்.
அமீர்கான் வீட்டில் முதல் தளம் வரை நீர் சூழ்ந்ததாக பிபிசியிடம் கூறினார் சிறப்பு தீயணைப்புக் குழுவை ஒருங்கிணைத்த தயாளன்.
காரம்பாக்கம் லேக் வியூ என்பது ஏரி இருக்கும் பகுதி. இங்கு நடிகர்கள் அமீர்கான், விஷ்ணு விஷால் சிக்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.
மேலும், “அந்தப் பகுதியில் 8 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியிருந்தது. குறிப்பாக பாலிவுட் நடிகர் அமீர்கானின் வீட்டினுடைய முதல் தளத்தில் ஒரு அடி அளவுக்கு நீர் தேங்கியிருந்தது.
மேலும், அவரது தாயின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்திருப்பதாக அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். நடிகர் அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷாலின் குடும்பத்தினர், அமீர்கானின் பாதுகாவலர்கள் என 20க்கும் மேற்பட்ட நபர்களை மீட்டோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
தயாளனின் கூற்றுப்படி, அமீர்கான், விஷ்ணு விஷால் இருவரும் அதிகளவிலான பொருட்களை வைத்திருந்ததால், 6 பேர் வீதம் மீட்புப் படையினர் இரண்டு படகுகளில் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வந்தனர்.
அதேபோல், அந்தப் பகுதியில் சிக்கித் தவித்த முதியவர்கள், அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் என 55 நபர்கள் வரை டிசம்பர் 5ஆம் தேதி காரப்பாக்கம் பகுதியில் இருந்து மீட்டதாகவும் தயாளன் தெரிவித்தார்.

பட மூலாதாரம், TAMILNADU FIRE & RESCUE
அமீர்கானுடன் செல்ஃபி எடுத்த மீட்புப் படையினர்
அமீர்கானுக்கு அடைக்கலம் கொடுத்த அஜித்
தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் இறக்கிவிடப்பட்ட பிறகு, தங்களை மீட்ட குழுவினருக்கு அமீர்கான் நன்றி தெரிவித்ததாகவும் தங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டதாகவும் தயாளன் தெரிவித்தார்.
வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட அமீர்கான், விஷ்ணு விஷால் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நடிகர் அஜித்குமார் தங்க இடம் கொடுத்திருப்பதாகவும் தனது சமூக ஊடக பதிவில் விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், VISHNU VISHAL / TWITTER
நடிகர் அஜீத்துடன் விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கான்
அமீர்கான், விஷ்ணு விஷால் வசித்த பகுதி ஆபத்தானதா?
‘லேக் வியூ பாயின்ட்’ என்ற “தந்திர வார்த்தையை” பயன்படுத்தி கட்டுமான நிறுவனங்கள் நீர்நிலையின் அருகே பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி விற்பனை செய்வதாகக் குற்றம் சாட்டுகிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் பிரபாகரன்.
மேலும், அங்கு வெள்ளம் வராது என்று நம்பியதால் மக்கள் தற்போது சிக்கித் தவிப்பதாகவும், அவை வெள்ள அபாயமுள்ள, மிகவும் ஆபத்தான பகுதிகள் எனவும் கூறினார். இதுதான் இத்தகைய குடியிருப்புப் பகுதிகளின் உண்மை நிலை என்றும் இவற்றை மக்கள் உணர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக் கூடியது என்று நம்பி மக்கள் சென்னையின் புறநகர்ப் பகுதியில் வீடுகளை வாங்குவதால் இதுபோன்ற வெள்ளக் காலங்களில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருந்தும்,” என்றும் பிரபாகரன் கூறுகிறார்.

பட மூலாதாரம், PRABHAKARAN
நீர்நிலைகள் அருகே இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
வெள்ள பாதிப்பைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
தொடர்ந்து பேசிய அவர், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை பெரு வெள்ள பாதிப்பிற்கு பின்பு சிஏஜி ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், “நீர்நிலைப் பகுதிகளின் கரையோரங்களை 15 மீட்டருக்கு அகலப்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் அடையாற்றின் கரையை ஒட்டியுள்ள பகுதியில் பெரிய கட்டடங்கள் இருப்பதால் அரசு தயக்கம் காட்டுகிறது.
நீர்நிலைகள் அருகே இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே வருங்காலத்தில் வெள்ள பாதிப்பைத் தடுக்க முடியும்,” என்றும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சுற்றுச்சூழல் ஆர்வலர் பிரபாகரன்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்