
பட மூலாதாரம், Getty Images
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது பாஜக அரசு. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த, முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்; மேலும் இந்திய குடியுரிமை பெறவும் வழிவகை செய்கிறது.
கடந்த வருடத்தின் இறுதியில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு பேரணியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ – Citizenship Amendment Act)’ என்பது நாட்டின் சட்டம். இந்த சட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றனர். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும். அதை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது,” என்று கூறியிருந்தார்.
இன்று நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதுதொடர்பான அறிவிப்பு அரசிதழலில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, 2019ஆம் ஆண்டு மக்களவையில் நீண்ட விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதா நிறைவேறியது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், ஆதரவளித்த எம்.பி.க்களுக்கு நன்றி எனவும் அப்போது பிரதமர் நரேந்திர மோதி கூறியிருந்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சிகளின் கருத்து என்ன?
சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், Getty Images
1955ஆம் ஆண்டில் அமலில் இருந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் 2019இல் சில மாற்றங்களைச் செய்தது மத்திய அரசு. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியான இன்னல்களுக்கு உள்ளாகி, 2014 டிசம்பர் 31க்கு முன்பாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பார்சிகள், பெளத்தர்கள், சீக்கியர்கள் உட்பட 6 மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை.
இந்த சட்டத்தின்படி அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த மேற்குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள், தங்களிடம் எந்தவித ஆவணமும் இல்லாத போதிலும், இங்கு 6 ஆண்டுகள் தங்கியிருந்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். 2019இல் இந்த சட்டத்திற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது.
ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, இஸ்லாமிய மக்கள் இந்தியா முழுவதும் இந்த சட்டத்துக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற மதங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் போது இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஏன் வழங்கக் கூடாது? எனக் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டங்களின் போது நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதை ஒத்திவைத்திருந்த மத்திய அரசு, நான்கு ஆண்டுகளுக்கு இன்று முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
இது அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவை மீறும் செயல் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறுகின்றன. மதத் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் முயற்சி என்று மத்திய அரசு கூறினாலும், இதன் மூலம் இஸ்லாமிய மக்களை வீடற்றவர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் முஸ்லிம்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
உள்துறை அமைச்சகம் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்த சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் இதற்கான இணையதள போர்டல் விரைவில் தொடங்கப்படும் என்றும் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
மேலும் தனது எக்ஸ் பக்கத்தில், “குடியுரிமை திருத்தம்ச் சட்டம், 2019இன் விதிகள் குறித்து உள்துறை அமைச்சகம் இன்று அறிவிப்பை வெளியிடும். இதன் மூலம், சிஏஏ-2019இன் கீழ் தகுதியுள்ள எந்தவொரு நபரும் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்” என பதிவிட்டுள்ளார்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், “பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மத ரீதியிலான இன்னல்கள் காரணமாக இந்தியாவுக்கு வந்த சிறுபான்மையினரை அனுமதிக்கும் குடியுரிமை திருத்த விதிகள், 2024இன் அறிவிப்பை மோதி அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
“இந்த அறிவிப்பின் மூலம், இந்த நாடுகளில் வாழும் சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்ட மற்றொரு வாக்குறுதியை பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளார். அவர்களுக்கு நீங்கள் இங்கேயே இருங்கள் உங்களுக்கான குடியுரிமை கிடைக்கும் என பிரதமர் நம்பிக்கை அளித்துள்ளார்,” என்று கூறியுள்ளார்.
அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், HINDUSTAN TIMES VIA GETTY IMAGES
“தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடுமை காட்டியுள்ள நேரத்தில், அதை திசைதிருப்பவே இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இதை அமல்படுத்துவதன் மூலம், அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களில் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் தேர்தல் ஆதாயம் அடையப் பார்க்கிறது பாஜக,” என விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.
மேலும், “நாடாளுமன்றத்தில் 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை அமல்படுத்த மோடி அரசுக்கு நான்கு ஆண்டுகள் 3 மாதங்கள் தேவைப்பட்டுள்ளன. தனது அரசு மிகவும் நேர்த்தியாகவும் சரியான நேரத்திலும் செயல்படுகிறது என்று மோடி கூறிவருகிறார். சிஏஏ அமல்படுத்துவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம் என்பது பிரதமர் மோடியின் பொய்க்கு மற்றொறு சிறந்த உதாரணம்,” என்று அவர் கூறினார்.
“குடியுரிமை திருத்தச் சட்டத்தில் நல்லவை இருந்தால் அதை ஆதரிப்போம். கெட்டவை இருந்தால் கண்டிப்பாக அதை திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கும். ரமலான் மாதம் தொடங்கும் சமயத்தில் இதை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என நான் அறிவேன். மக்கள் அமைதி காக்க வேண்டும், வதந்திகளை நம்பக் கூடாது” என கூறியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம், இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் சிஏஏ சட்டத்தை இயற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு. அதனை திமுக உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன.
ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால் தான் அச்சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பா.ஜ.க.
திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் – 2019-ஐ ரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோதி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.
அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பாஜகவையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்