
பட மூலாதாரம், Getty Images
மீரா முரட்டி 2018 இல் ‘Open AI‘ நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார்.
நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் ‘ஓப்பன் ஏஐ’யின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற போது மீரா முரட்டி உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். இது ஒரு பொறுப்பான பதவி, ஆனால் அவர் ஒரு நெருக்கடியைச் சரிசெய்தபோது, அவர் சர்வதேச அரங்கில் மிக முக்கியமான ஆளுமையாக உருவெடுத்தார்.
‘ஓப்பன் ஏஐ’யின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மீரா முரட்டி, அந்நிறுவனத்தின் முக்கிய முகங்களில் ஒருவரானார். இந்த நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்றாக ChatGPT உள்ளது, இது செயற்கை நுண்ணறிவு அமைப்பு மற்றும் தொழில்நுட்ப உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார்ச்சூன் இதழின் கூற்றுப்படி, அல்பேனியாவைச் சேர்ந்த 34 வயதான பொறியாளரான மீரா முரட்டி இந்த ஆண்டு உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதுடன், சிலிக்கான் வேலியின் முக்கிய முகங்களில் ஒருவராக மாறியுள்ளார்.
இருப்பினும், நிறுவனத்திற்குள் தனது பணி எளிதானது அல்ல என்று மீரா முரட்டி கூறுகிறார்.
‘தி டெய்லி ஷோ’ ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “தினமும் நாம் சந்திக்கும் கேள்விகள் ஏராளம்,” என்றார்.
அவரது மற்ற செயல்பாடுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அதிக தகவல்கள் இல்லை என்றாலும், அது பற்றிய சில குறிப்புகள் நிச்சயமாக இணையத்தில் கிடைக்கின்றன.
அவர் ‘பிஹைண்ட் தி டெக்’ போட்காஸ்டில் பேசியபோது, “நான் நிறைய படிக்க விரும்புகிறேன் என்பதுடன் ஹைக்கிங் செய்யவிரும்புகிறேன். ஹைக்கிங் செய்யும் போது இயற்கையால் சூழப்பட்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்த நிலைகளில் ஒன்றாகும்,” என்றார்.
மேலும் பிரபல டைம் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், ரேடியோ ஹெட்டில் ஒலிபரப்பான ‘பரனாய்டு ஆண்ட்ராய்டு’ பாடல் தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்று கூறியுள்ளார். அவருக்குப் பிடித்த புத்தகங்களில் ‘ரெய்னர் மரியா ரில்கேவின் ‘டினோ எலிஜீஸ்’ அல்லது டினோஸ் எலிஜிஸ்‘ கவிதைத் தொகுப்பும் உள்ளது.
அதேபோல், திரைப் படங்களில் ஸ்டான்லி குப்ரிக்கின் ‘2001: A Space Odyssey’ அவருக்கு மிகவும் பிடித்தமானது.
மீரா முரட்டி யார்? அவர் எங்கிருந்து வந்தார்? அவருடைய தொழில் எப்படி இருக்கிறது? செயற்கை நுண்ணறிவு பற்றி அவர் என்ன நினைக்கிறார்?

பட மூலாதாரம், Getty Images
சிறுவயதிலிருந்தே கணிதம் மற்றும் இயற்பியலில் ஆர்வம் கொண்டிருந்ததாக மீரா முரட்டி கூறினார்.
அல்பேனிய வம்சாவளிப் பெண்
அல்பேனியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்ச்சியடைவதற்கு சிறிது காலத்துக்கு முன்பு, 1988ல் மீரா முரட்டி பிறந்தார். இது பால்கன் தீபகற்பத்தில் உள்ள ஒரு சிறிய நாடு என்பதுடன் ஐரோப்பாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும்.
ஒரு இலக்கியப் பேராசிரியரின் மகளாகப் பிறந்த அவரது குழந்தைப் பருவம் ‘மிருகத்தனமான கம்யூனிசத்திலிருந்து தாராளமய முதலாளித்துவத்திற்கு மாறிய காலத்தில்’ கழிந்தது.
‘பிஹைண்ட் தி டெக்கில்’ பேசுகையில், “எனக்கு இரண்டு வயதாக இருந்தபோது, சர்வாதிகார அரசாங்கம் வீழ்ந்தது. ஒரே இரவில் எல்லாம் மாறி அராஜகம் பரவியது,” என தமது கடந்த காலம் குறித்துப் பேசினார்.
சிறுவயதிலிருந்தே கணிதம் மற்றும் இயற்பியலில் ஆர்வம் கொண்டிருந்ததாக அந்த நிகழ்ச்சியில் அவர் கூறினார்.
“அல்பேனியா அன்று வட கொரியாவைப் போலவே நம்பமுடியாத தனிமைப்படுத்தப்பட்ட நாடாக இருந்தது,” என்று கூறிய அவர், தமக்கு புத்தகங்களைத் தவிர, அதிக பொழுதுபோக்கு அல்லது வேறு எதிலும் பெரிய அளவில் ஆர்வம் இல்லை எனத்தெரிவித்தார்.
பதினாறாவது வயதில், கனடாவின் வான்கூவரில் படிப்பதற்காக அவருக்கு உதவித்தொகை கிடைத்தது. அங்கு அவர் உயர்நிலைப் பள்ளியின் கடைசி இரண்டு ஆண்டுகளை முடித்தார். பின்னர் டார்ட்மவுத் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ChatGPT என்பது Open AI இன் முதன்மையான திட்டமாகும்.
‘ஓப்பன் ஏஐ’-ல் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு
பின்னர் அவர் விரைவில் சான் பிரான்சிஸ்கோவிற்குச் சென்று ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார் என்பதுடன் ஒரு ஏஐ மாடலை உருவாக்க உதவினார்.
டெஸ்லாவுக்குப் பின்னர், லீப் மோஷனில் சிறிது காலம் தயாரிப்பு மற்றும் பொறியியல் துறையின் துணைத் தலைவராக பணியாற்றினார்.
பின்னர் அவர் 2018 இல் ‘ஓப்பன் ஏஐ’ (Open AI) இல் வேலைக்குச் சேர்ந்தார் என்பதுடன் அந்நிறுவனத்துக்கு நற்பெயரைப் பெற்றுத்தந்த மென்பொருட்களான Chat GPT மற்றும் Dal-e ஆகிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.
அந்த நேரத்தில் ஓப்பன் ஏஐ ஒரு இலாப நோக்கற்ற ஆராய்ச்சி ஆய்வகமாக இருந்தது. ஆனால் அது பின்னர் விரைவில் வணிக ரீதியில் செயல்படும் நிறுவனமாக மாறியது.
அப்ளைடு ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸின் துணைத் தலைவராக அவர் அந்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார், விரைவில் 2020 இல் வாடிக்கையாளர் விசாரணைகள் மற்றும் தயாரிப்பு துறையின் மூத்த துணைத் தலைவராகவும் பின்னர் 2022 இல் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்றார்.
நியூயார்க் டைம்ஸின் கூற்றுப்படி, ஓப்பன் ஏஐ-இல் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்த பங்குதாரரான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உறவுகளை மீரா முரட்டி நிர்வகித்தார். மேலும் வாஷிங்டன் மற்றும் ஐரோப்பாவில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி தொடர்பான கொள்கையை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்தார்.
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லா டைம் இதழில் எழுதிய தமது கட்டுரையில், “அவர் தனது மிகுந்த தொழில்நுட்ப தேர்ச்சி, வணிக ரீதியிலான புத்திசாலித்தனம் மற்றும் பணி உணர்வுடன் குழுக்களை உருவாக்கும் திறனை வெளிப்படுத்தினார்,” எனத்தெரிவித்துள்ளார்.
“இதன் விளைவாக, நாம் இதுவரை பார்த்திராத செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பத்தின் சில அற்புதமான பயன்பாடுகளை உருவாக்க மீரா உதவியுள்ளார்,” என்றும் அவர் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
செயற்கை நுண்ணறிவின் வருகை ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார் மீரா முரட்டி.
ஃபார்ச்சூன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஆபத்தான திறன்களைக் கொண்ட ஏஐ மாடல்கள் தன்னைத் தொந்தரவு செய்யும் விஷயங்களில் ஒன்று என்று அவர் கூறினார்.
“நாம் உருவாக்கும் விஷயங்களில் சர்வதேச அரசியலை அதிகம் பாதிக்கும் தொழில்நுட்பம் இதுவாகும். நிச்சயமாக அணு ஆயுதங்களின் மிக நெருக்கமான பிரச்னையாகக் கூட அது இருக்கலாம்.”
அத்தகைய சூழ்நிலையில், இந்த ஆபத்தை சமாளிக்கும் வகையில், இது தொடர்பான விதிகளை எப்படியாவது நாம் உருவாக்குவது மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவின் வருகைக்குப் பிறகு நமது எதிர்காலம் என்னவாகும் என்று அவரிடம் கேட்டபோது, அதில் ஒரு நேர்மறையான அம்சம் இருப்பதாகவும், அதனுடன் ஒரு ஆபத்தும் இருப்பதாகவும், இரண்டிற்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் கூறினார்.
இது குறித்துப் பேசிய அவர், “எல்லாமே சரியாக நடக்கிறதா என்பதை நாங்கள் உறுதிசெய்ய முடியும் என்பதில் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆனால் தொழில்நுட்பம் இயற்கையாகவே இரண்டு சாத்தியங்களையும் கொண்டுள்ளது. “இது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற அர்த்தத்தில் நாங்கள் உருவாக்கிய மற்ற கருவிகளை விட இது வேறுபட்டதல்ல என்பதுடன் உண்மையில் இவை ஆபத்தான விஷயங்களுக்கு வழிவகுக்கும், பேரழிவு நிகழ்வுகளுக்கு கூட வழிவகுக்கும்.
அதில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இது ஒரு இருத்தலியல் அச்சுறுத்தலையும் உள்ளடக்கியது என்பதுடன் இது அடிப்படையில் மனித கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் முடிவைப் பற்றியது என்பது உங்களுக்குத் தெரியும். என் கருத்துப்படி, இது நடக்க ஒரு சிறிய வாய்ப்பு மட்டுமே உள்ளது. ஆனால் இந்த சிறிய சாத்தியம் கூட அதைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம்,” என தனது கவலையை வெளிப்படுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
டைம் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில், அவரும் அவரது குழுவும் உருவாக்கி வரும் தொழில்நுட்ப மாடல்களில் இருக்கும் ஆபத்துகள் குறித்து குறிப்பிட்டார்.
அதில், “தொழில்நுட்பம் நம்மை உருவாக்குகிறது. நாமும் அதை உருவாக்குகிறோம். சரிசெய்ய முடியாத பல கடினமான பிரச்சனைகள் உள்ளன. அவற்றைச் சரிசெய்ய உதவும் தொழில்நுட்பமும் நம்மிடையே உள்ளது,” எனத் தெரிவித்த அவர். “உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரியை நீங்கள் எவ்வாறு வடிவமைக்கிறீர்கள் என்பதும், அது மனிதர்களின் விருப்பத்தின் கீழ் எப்படி செயல்படுகிறது மற்றும் இறுதியில் மனிதகுலத்தின் சேவையில் எப்படிச் செயல்படும் என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
“இந்தக் கேள்விக்கு தற்போது எங்களிடம் எந்த பதிலும் இல்லை. முடிவுகளை எடுக்கும் அதிகாரம் யாருக்கு இருக்கும் என்பதற்கும் உண்மையில் பதில் இல்லை. புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பை யார் கட்டுப்படுத்துவார்கள்? நிறுவனங்களா அல்லது அரசாங்கங்களா?”
தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் ஒரு சிறிய குழு, இந்த அமைப்பில் எங்களுக்கு நிறைய உள்ளீடுகள் தேவை. மேலும், தொழில்நுட்பத்திற்கு அப்பாற்பட்ட நிறைய உள்ளீடுகள் தேவை. இதில் நிச்சயமாக கட்டுப்பாட்டாளர்கள், அரசாங்கங்களும் இந்த உள்ளீடுகளில் அடங்கும். மற்ற அனைவரும் இதில் அடங்குவர்,” என்றார்.

பட மூலாதாரம், MIRAMURATI
மின்சாரமோ, அல்லது அச்சு எந்திரமோ கண்டுபிடிக்கப்பட்ட பின் அவை பெற்றுள்ள முக்கியத்துவத்துக்கு இணையான முக்கியத்துவம் இந்த புதிய தொழில்நுட்பத்துக்குக் கிடைக்கும் என்றார் மீரா முரட்டி.
வயர்டு இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், பணி அல்லது பதிப்புரிமை என்ற நிடைமுறைகளில் உலகில் Chat GPT அல்லது GPT-4 போன்ற மென்பொருள்கள் உருவாக்கக்கூடிய பிரச்சனைகளைப் பற்றி மீரா முரட்டி குறிப்பிட்டுள்ளார்.
“இது அனைத்து வகையான தொழில்களையும் மாற்றப் போகிறது,” என்று அவர் அந்தப் பேட்டியில் கூறினார். மக்கள் அதை மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது அல்லது அச்சகம் கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஒப்பிட்டுள்ளனர். எனவே சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் அதைச் சேர்ப்பது அவசியம் என்ற நிலையில், அவை குறித்த பதிப்புரிமைச் சட்டங்கள், தனியுரிமை, நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறை பற்றி சிந்திக்கத் தொடங்குவதும் மிகவும் முக்கியம்.”
புதிய தொழில்நுட்பம், செயற்கை பொது நுண்ணறிவு (AGI) எனப்படும் புதிய வடிவத்தை நோக்கி நகர்கிறது. இது பெரிய அளவில் கல்வியைப் புரிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் மற்றும் அதைப் பயன்படுத்தி முடிவெடுக்கவும் முடியும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்