IND vs AUS: ஆஸ்திரேலிய வீரர்கள் ‘தண்ணி’ காட்டியபோது இந்திய வீரர்களுக்கு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

IND vs AUS: ஆஸ்திரேலிய வீரர்கள் 'தண்ணி' காட்டியபோது இந்திய வீரர்களுக்கு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

ரவி பிஷ்னோய், அக்ஸர் படேல் ஆகியோரின் கட்டுக்கோப்பான சுழற்பந்துவீச்சு, ரிங்கு சிங்கின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி முதல்முறையாக வென்றது.

ராய்பூரில் நேற்று நடந்த 4-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து. 175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம்5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-1 என்ற கணக்கில் வென்று டி20 தொடரை சூர்யகுமார் தலைமை முதல்முறையாக கைப்பற்றியது. இந்த நம்பிக்கையுடன் வரும் 10ம் தேதி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரையும் இந்திய அணி எதிர்கொள்ளும் என்று நம்பலாம்.

நடுப்பகுதி ஓவர்களில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்ஸர் படேல் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

சுழற்பந்து வீச்சுக்கான வெற்றி

இந்த ஆட்டத்தில் இந்திய அணி எடுத்த 175 ரன்கள் என்ற ஸ்கோர் எளிதாக சேஸிங் செய்யக்கூடியது என்றாலும், இந்திய அணியின் பிஷ்னோய், அக்ஸர் படேல் சுழற்பந்துவீச்சுக்கு முன் ஆஸ்திரேலிய பேட்டர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அக்ஸர், பிஷ்னோய் இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நடுப்பகுதி ஓவர்களில் ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியாவின் ரன்ரேட்டை இழுத்துப்பிடித்து பெரிய நெருக்கடிக்குள் தள்ளினர்.

அதிலும் டிராவிஸ் ஹெட் தொடக்கத்தில் தீபக் சஹர் பந்துவீச்சை துவைத்து எடுத்த நிலையில் உலகக் கோப்பை இறுதிப்போட்டி நினைவுக்கு வந்தது. ஆனால், அடுத்த ஓவரில் அக்ஸர் படேல் வீசிய பந்தில் ஹெட் ஆட்டமிழந்தபின்புதான் ரசிகர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது. மெக்டார்மார்ட், ஹார்டி என நடுவரிசை பேட்டர்களின் விக்கெட்டுகளையும் அக்ஸர் எடுத்துக் கொடுத்து ஆஸ்திரேலிய அணியை நெருக்கடியில் தள்ளினார்.

ரவி பிஷ்னோய் தனது லெக் ஸ்பின் மூலம் ஆஸ்திரேலிய ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தார். தொடக்கத்திலேயே பிலிப் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த பிஸ்னோய்க்கு அடுத்து விக்கெட்டுகள் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார்.

இந்திய அணி தனது 175 ரன்களை டிபெண்ட் செய்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தது பிஸ்னோய், அக்ஸர் படேல் மட்டும்தான். இவர்கள் வீசிய 8 ஓவர்களும் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய தலைவலியாக மாறி ரன்ரேட்டையும் குறைத்தது, விக்கெட்டுகளையும் இழக்கச் செய்து தோல்விக் குழியில் தள்ளியது.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

சூர்யகுமார் கேப்டன்சி எப்படி?

சூர்யகுமார் யாதவ் எவ்வாறு அணியை வழிநடத்தப் போகிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், முதலிரு ஆட்டங்களில் ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் ஆகியோர் மூலம் பெரிய ஸ்கோரை அடித்து வெற்றியை சூர்யகுமார் தலைமைக்கு எளிதாக்கினர். ஆனால், 3-வது ஆட்டத்தில் மேக்ஸ்வெலின் ஆட்டம் இந்திய அணியை சுயபரிசோதனைக்கு ஆளாக்கியது.

இந்த ஆட்டத்தில் 5 பந்துவீச்சாளர்களுடன் மட்டுமே களமிறங்கிய சூர்யகுமார், அருமையாக பந்துவீச்சாளர்களை ரொட்டேட் செய்தார். ஆஸ்திரேலிய பேட்டர்கள் பெரிய ஷாட்களை அடிக்கத் தொடங்கும்போது, சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார். விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியபோது, தொடர்ந்து நெருக்கடி கொடுத்து ரன்ரேட்டை இழுத்துப் பிடித்து, கடந்த போட்டிகளில் செய்த தவறை சூர்யகுமார் திருத்திக்கொண்டார்.

5 தொடக்க ஆட்டக்காரர்கள்

இந்த டி20 தொடரின் மூலம் இந்திய அணிக்கு 5 தொடக்க ஆட்டக்காரர்கள் கிடைத்துள்ளனர். இவர்களை எப்படிஅடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு இந்தியஅ ணி நிர்வாகம் பயன்படுத்தப் போகிறது என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது. யாஹஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், இஷான் கிஷன், ரோஹித் சர்மா ஆகிய 5 தொடக்க வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் ரோஹித் சர்மா, கில் ஏற்கெனவே அணியில் இருக்கிறார்கள் என்ற நிலையில் மற்ற 3 பேரையும் எவ்வாறு சுழற்சி முறையில் இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்தி டி20 உலகக் கோப்பைக்கு தயார் செய்யப் போகிறது என்பது கேள்வியாக இருக்கிறது.

ஆடுகளம் பேட்டர்களுக்கு பெரிதாக ஒத்துழைக்காதது என்பதால், அதைப் புரிந்து கொண்டு ரிங்கு சிங் மட்டுமே ஓரளவுக்கு அதிரடியாக பேட் செய்தார். இந்த ஆட்டத்தில் ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா இருவரின் ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே 150 கடந்திருந்தது. மற்ற இந்திய பேட்டர்கள் யாரும் ஸ்ட்ரைக் உயரும்வகையில் பேட் செய்ய முடியவில்லை.

குறிப்பாக கெய்க்வாட், சூர்யகுமார், ஸ்ரேயாஸ் ஆகியோர் ஏமாற்றம் அளிக்கும் வகையில் பேட்டிங் இருந்தது. ஜெய்ஸ்வால் வழக்கம்போல் நல்ல தொடக்கத்தை அளித்தாலும் பவர்ப்ளேவுக்கு அடுத்து அவரால் தனது ஆட்டத்தை நீட்டிக்க முடியாதது ஏமாற்றமாகும்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

அனுபவமில்லாத ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிலிய அணியில் உலகக் கோப்பையில் ஆடிய வீரர்களில் டிராவிஸ் ஹெட் தவிர அனைத்து வீரர்களும் புதியவர்கள்தான், அனுபவம் இல்லாதவர்கள்தான். இந்தியாவில் உள்ள ஸ்லோ-பிட்சுகளில் பந்துவீசியும், பேட் செய்தும் அனுபவம் இல்லாதவர்கள் என்பதால் வெற்றி இந்திய அணிக்கு எளிதாகியது.

மேக்ஸ்வெல், வார்னர், கம்மின்ஸ், ஹேசல்வுட், போன்ற டி20 ஸ்பெசலிஸ்ட்கள் இல்லாமல் ஆஸ்திரேலியா களமிறங்கியது வலுவில்லாத அணியாகவே காணப்பட்டது. இந்த டி20 தொடரும் ஆஸ்திரேலிய அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு பெரிய அனுபவமாகவும், டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயிற்சிப் பட்டறையாகவும் இருக்கும்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். ஆஸ்திரேலிய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. மேக்ஸ்வெல், ரிச்சார்ட்ஸன், ஸ்டாய்னிஸ் ஆகியோருக்குப் பதிலாக கிரிஸ் கிரீன், மெக்டார்மார்ட், வார்ஷிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்திய அணியில் இஷான் கிஷனுக்குப் பதிலாக ரித்தேஷ் ஷர்மாவும், அர்ஷ்தீப் சிங்கிற்குப் பதிலாக தீபக் சஹரும்,திலக் வர்மாவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

பவர்ப்ளேக்கு மேல் தாங்காத ஜெய்ஸ்வால்

இந்திய அணியில் வழக்கம் போல் கெய்க்வாட், ஜெய்ஸ்வால் ஆட்டத்தைத் தொடங்கினர். ஹார்டி வீசிய முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் எந்த ரன்னும் அடிக்க முடியாததையடுத்து, மெய்டன் ஓவராக மாறியது. ஜெய்ஸ்வாலின் பலம் தெரிந்து ஆப்சை, மிட்ஆப், மிட்விக்கெட், கவர் திசையில் வலுவாக பீல்டிங் நிறுத்தியதால் ரன் ஏதும் கிடைக்கவில்லை.

பெஹரன்டார்ப் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரிகள் உள்பட ஜெய்ஸ்வால் 11 ரன்கள் வார்ஷூஸ் வீசிய 3வது ஓவரில் 3 பவுண்டரிகள் உள்பட 12 ரன்கள் சேர்த்து ஜெய்ஸ்வால் ரன்ரேட்டை உயர்த்தினார்.

5-ஆவது ஓவரே ஆஸ்திரேலிய அணியின் அறிமுக ஆஃப் ஸ்பின்னர் கிரிஸ் கிரீன் வீசினார். கிரீன் ஓவரை வெளுத்துவாங்கிய ஜெய்ஸ்வால் பாயின்ட் திசையில் பவுண்டரியும், மிட்விக்கெட்டில் சிக்ஸரும் என 14ரன்கள் சேர்த்தார்.

ஹார்டி வீசிய 6-வது ஓவரின் ஜெய்ஸ்வால் தூக்கி அடிக்க மிட்ஆன் திசையில் மெக்டார்மார்ட்டிடம் கேட்சாகியது. ஜெய்ஸ்வால் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

ஸ்ரேயாஸ், சூர்யகுமார் ஏமாற்றம்

அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார். தன்வீர் சங்கா வீசிய 7-வது ஓவரில் லாங்-ஆன் திசையில் தூக்கி அடிக்க முற்பட்டு கிரீனிடம் கேட்ச் கொடுத்து ஸ்ரேயாஸ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து சூர்யகுமார் ஒரு ரன் சேர்த்தநிலையில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்திய அணி 64 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

திணறிய கெய்க்வாட்

4-வது விக்கெட்டுக்கு ரிங்கு சிங் களமிறங்கி, கெய்க்வாட்டுடன் இணைந்தார். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சுக்கு கெய்க்வாட் தடுமாறியது நன்றாகத் தெரிந்தது. கிரீன் வீசிய 11-வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே இந்திய அணி சேர்த்தது. 12-வது ஓவரை மேத்யூ ஷார்ட் வீசினார்.

வார்ஷூஸ் 13வது ஓவரை வீசினார். ஏற்கெனவே இவரின் ஓவரை ஜெய்ஸ்வால் குறிவைத்தநிலையில் கெய்க்வாட், ரிங்கு சிங் வெளுத்து வாங்கினர். கெய்க்வாட் மிட்ஆன் திசையில் பவுண்டரி அடிக்க, ரிங்கு சிங் லாங்-ஆன் திசையில் சிக்ஸர் விளாசி14ரன்கள் சேர்த்தனர்.

14-வது தன்வீர் சங்கா வீசினார். முதல் பந்தைச் சந்தித்த கெய்க்வாட் ஷார்ட் தேர்ட் திசையில் பவுண்டரி விளாசி, 2வது பந்தையும் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடிக்க முற்பட்டார். ஆனால், தேர்டு மேன் திசையில் வார்ஷூயஸால் கேட்ச் பிடிக்கப்பட்டு கெய்க்வாட் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ரிங்கு சிங், கெய்க்வாட் கூட்டணி 48 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து ஜிதேஷ் ஷர்மா களமிறங்கி, ரிங்குசிங்குடன் சேர்ந்தார். கிரீன் வீசிய 15-வது ஓவரை ஜிதேஷ் ஷர்மா எதிர்கொண்டார். 2-வது பந்தில் ஸ்வீப்ஷாட்டில் ஜிதேஷ் ஷர்மா மிட்விக்கெட் திசையில் சிக்ஸரும், 4-வது பந்தில் லாங்-ஆன் திசையில் ஒரு சிக்ஸரும் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

தண்ணி காட்டிய ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர்கள்

கிரீன் தனது சுழற்பந்துவீச்சு வேகத்தை குறைக்காமல் 90 கி.மீ வேகத்துக்கும் அதிகமாக வீசினார். இதனால் பேட்டரின் பேட்டருக்கு நேராக பந்துவந்ததால் வெளுத்து வாங்கினார். சிறிது வேகத்தை கிரீன் குறைத்து 80 கி.மீக்குள் வீசினால் நிச்சயமாக பெரிய ஷாட்களை ஆடுவது கடினமாக இருந்திருக்கும்.

15-வது ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்தது. 16-வது ஓவரை தன்வீர் சங்கா அற்புதமாக வீசினார், எந்தப் பந்தையும் பெரிய ஷாட்களுக்கு இந்திய பேட்டர்களைச் செல்லவிடாமல் தண்ணிகாட்டினார். இதனால் 16-வது ஓவரில் இந்திய அணி வெறும் 5 ரன்களே சேர்த்தது.

17-வது ஓவரை ஆரோன் ஹார்டி வீசினார். ஏற்கெனவே தொடக்கத்தில் சிறப்பாக வீசிய ஹார்டி இந்த ஓவரையும் கட்டுக்கோப்பாக வீசி இந்திய பேட்டர்களை திணறடிக்க முயன்றார். ஆனால், பொறுமையிழந்த ரிங்கு சிங், ஸ்குயர் லெக் திசையில் ஒரு பவுண்டரி விளாச, கடைசிப்பந்தில், ஜிதேஷ் ஷர்மா ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் விளாசி 13 ரன்கள் சேர்த்தனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

டெத் ஓவர்களில் இந்தியா பேட்டிங் மோசம்

பெஹரன்டார்ப் 18-வது ஓவரை வீசினார். முதல் பந்தை ரிங்கு சிங் ஸ்வீப் ஆட முயன்றபோது, பந்து பேட்டில் எட்ஜ் எடுத்து பவுண்டரி சென்றது. 2வது பந்தை லெக் திசையில் ரிங்கு பவுண்டரி்க்கு விரட்டி 14 ரன்களை இருவரும் சேர்த்தனர்.

வார்ஷஸ் வீசிய 19-வது ஓவரை ஜிதேஷ் ஷர்மா எதிர்கொண்டார். 2வது பந்தில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் பவுண்டரி அடித்த ஜிதேஷ், 4-வது பந்தை தூக்கி அடிக்க 34 ரன்னில் லாங்-ஆன் திசையில் டிராவிஸ் ஹெட்டால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார்.

6-வது விக்கெட்டுக்கு அக்ஸர் படேல்வந்து ரிங்குவுடன் சேர்ந்தார். வந்த வேகத்தில் லாங்-ஆன் திசையில் ஷாட் அடிக்கமுற்பட்ட, அக்ஸர் படேல் தன்வீர் சங்காவிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் பெவிலியன் திரும்பினார்.

19-வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய வார்ஷஸ் 7 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்து அருமையான டெத் ஓவராக மாற்றினார்.

6-வது விக்கெட்டுக்கு தீபக் சஹர் களமிறங்கினார். கடைசி ஓவரை பெஹரன்டார்ப் வீச முதல் பந்தில் கால்காப்பில் வாங்கிய ரிங்கு சிங் 29 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து ஏமாற்றத்துடன் பெவிலியின் திரும்பினார். 3-வது பந்தில் தீபக் சஹர் லாங்ஆன் திசையில் கிரீனிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். கடைசிப் பந்தில் ரவி பிஸ்னோய் ரன் எடுக்க முற்பட்டு 4 ரன்கள் சேர்த்தநிலையில் ரன் அவுட் ஆகினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

12 ரன்களுக்கு 5 விக்கெட்

20ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி கடைசி 12 ரன்களைச் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் 45 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. 167 ரன்கள்வரை 4 விக்கெட்டுகள் என்று வலுவாக இருந்த இந்திய அணி 179 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. முதல் 10 ஓவர்களில் 79 ரன்களைச் சேர்த்த இந்திய அணி அடுத்த 10 ஓவர்களில் 95 ரன்கள் மட்டுமே சேர்த்து 8 விக்கெட்டுகளை இழந்தது.

ஆஸ்திரேலிய அணி வேகப்பந்துவீச்சாளர்கள் ஆரோன் ஹார்டி, ஹெரன்டார்ப், தன்வீர் சங்கா 3 பேருமே சிறப்பாக, கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். இந்த மூவருமே இந்திய அணியின் ரன்ரேட்டை உயரவிடாமல் இறுகப்பிடித்தனர்.

டிராவிஸ் அதிரடி ஆட்டம்

175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், ஜோஷ் பிலிப் ஆட்டத்தைத் தொடங்கினர். தீபக் சஹர் வீசிய முதல் ஓவரில் திணறிய ஹெட், பிலிப் பவுண்டரி உள்பட 7 ரன்கள் சேர்த்தனர்.

முகேஷ் குமார் வீசிய 2வது ஓவரில் பிலிப் ஒருபவுண்டரியும், ஹெட் ஒருபவுண்டரியும் என 11 ரன்கள் சேர்த்தனர். தீபக் சஹர் வீசிய 3-வது ஓவரை டிராவிஸ் ஹெட் வெளுத்து வாங்கினார். 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 22 ரன்களை விளாசி சஹருக்கு நெருக்கடி கொடுத்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

பிஷ்னோய், அக்ஸர் கலக்கல்

4-வது ஓவரை வீச பிஸ்னோய் அழைக்கப்பட்டார். முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி பிலிப் 8 ரன்னில் வெளியேறினார். அடுத்து மெக்டர்மார்ட் களமிறங்கினார். இந்த ஓவரில் பிஸ்னோய் நெருக்கடி அளிக்கும் விதத்தில் பந்துவீச ஆஸ்திரேலிய அணி 2 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

5-வது ஓவரை வீச அக்ஸர் படேல் வந்தார். அஸ்கர் ஓவருக்கு தொடக்கத்திலிருந்து திணறிய டிராவிஸ் ஹெட், ஸ்வீப் ஷாட்டில் முகேஷ் குமாரிடம் கேட்ச் கொடுத்து 31 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து ஆரோன் ஹார்டே களமிறங்கினார். இந்த ஓவரில் அக்ஸர் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்தது.

7-வது ஓவரை அக்ஸர் வீசினார். 2-வது பந்தில் க்ளீன் போல்டாகி ஹார்டே 8ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரிலும் அக்ஸர் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி இரு ஓவர்களில் பிஸ்னோய், படேல் இருவரும் சேர்ந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி அளித்தனர்.

அடுத்து டிம் டேவிட், மெக்டார்மார்ட் ஜோடி சேர்ந்தனர்.ஆவேஷ் கான், அக்ஸர் படேல் ஓவரை இருவரும் நிதானமாக கையாண்டு ரன்களைச் சேர்த்தனர். 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் சேர்த்தது. 60 பந்துகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 99 ரன்கள் தேவைப்பட்டது.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி

ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்குத் தேவையான ரன்ரேட் உயர்ந்து கொண்டே வந்ததால், பெரிய ஷாட்களுக்கு முயற்சிக்க வேண்டிய நிர்பந்தம் மெக்டார்மார்ட், டேவிட்டுக்கு ஏற்பட்டது.

12-வது ஓவரை அக்ஸர் படேல் வீசினார். முதல் பந்தில் மெக்டார்மார்ட் பவுண்டரி அடிக்க, 2வது பந்தையும் அக்ராஸ் லைனில் பவுண்டரி அடிக்க முயன்று க்ளீன் போல்டாகினார். மெக்டார்மார்ட் 19 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து மேத்யூ ஷார்ட் களமிறங்கினார். 12-வது ஓவரை கட்டுக்கோப்பாக அக்ஸர் படேல் வீசியதால், ஆஸ்திரேலிய அணிக்கு 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

48 பந்துகளில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 86 ரன்கள் தேவைப்பட்டது. ரவி பிஸ்னோய் வீசிய 13-வது ஓவரில் ரன் சேர்க்க திணறிய ஆஸ்திரேலிய பேட்டர்கள் ஒரு ரன் மட்டுமே எடுத்தனர். முகேஷ் குமார் வீசிய 14வது ஓவரை குறிவைத்த மேத்யூ ஷார்ட் 2 பவுண்டரிகள் உள்பட 9 ரன்கள் சேர்த்தார்.

தீபக் சஹர் வீசிய 15-வது ஓவரை குறிவைத்த ஷார்ட் ஒரு சிக்ஸர் விளாசி 3வது பந்தில் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை டேவிட்டிடம் கொடுத்தார். 4-வது பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் தூக்கி அடிக்க, ஜெய்ஸ்வால் கேட்ச் பிடிக்கவே 19 ரன்னில் டேவிட் வெளியேறினார். 15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் சேர்த்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

திணறிய ஆஸ்திரேலிய பேட்டர்கள்

30 பந்துகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 67 ரன்கள் தேவைப்பட்டது. 16-ஆவது ஓவரை முகேஷ் குமார் வீசினார், மேத்யூஷார்ட், வேட் இருவரும் இந்த ஓவரை குறிவைத்தனர், இதில் முகேஷ் குமார் நோபால் வீசவே, சிக்ஸர் உள்பட 14ரன்கள் சேர்த்தனர். 24 பந்துகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது.

17-வது ஓவரை தீபக் சஹர் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் சஹர் ஸ்லோ பவுன்ஸராக வீசவே, மேத்யூ ஷார்ட் தூக்கி அடிக்கவே டீப் மிட்விக்கெட்டில் ஜெய்ஸ்வாலிடம் கேட்சானது. ஷார்ட்22 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வார்ஷஸ் களமிறங்கி, கேப்டன் மேத்யூ வேட்டிடம் சேர்ந்தார்.

18 பந்துகளில் ஆஸ்திரேலிய வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் வீசிய 18-வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் சேர்க்க முடிந்தது.

12 பந்துகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை முகேஷ் குமார் கட்டுக்கோப்பாக வீசியதால், 9 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணி சேர்த்தது.

கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் பந்துவீச்சில் மேத்யூ வேட் ஒரு சிக்ஸர் உள்பட 10 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்ததால் ஆஸ்திரேலிய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

20ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்க்கவே இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.

இந்திய அணித் தரப்பில் அக்ஸர் 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹர் 2 விக்கெட்டுகளையும், பிஸ்னோய்ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

சூர்யகுமார் கூறியது என்ன?

வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவு பேசும்போது, “டாஸ் தவிர மற்ற அனைத்தும் நாங்கள் நினைத்தபடியே நடந்தன” என்று கூறிச் சிரித்தார்.

“வெற்றி பெரும் ஊக்கமாக இருந்தது, குறிப்பாக சிறுவர்கள் குணம் காட்டிய விதம். எல்லோரும் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதைத்தான் நான் அவர்களிடம் சொன்னேன். பயப்படாமல் இருங்கள், உங்கள் விளையாட்டை விளையாடுங்கள், என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஸ்டம்ப்களில் யார்க்கர்களை வீசுவது என்ற எங்களின் திட்டம் மிகத் தெளிவாக இருந்தது. அங்கிருந்து தொடங்குவோம். அது நடக்கவில்லை என்றால், என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று கூறினேன்.” என்றார் சூர்ய குமார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *