IND vs SA இந்தியாவின் தொடர் வெற்றிக்கு தென் ஆப்ரிக்கா முற்றுப்புள்ளி – பலவீனங்களை அம்பலமாக்கிய 2-வது டி20 போட்டி

IND vs SA இந்தியாவின் தொடர் வெற்றிக்கு தென் ஆப்ரிக்கா முற்றுப்புள்ளி - பலவீனங்களை அம்பலமாக்கிய 2-வது டி20 போட்டி

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

ஹென்ட்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியை5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்க அணி.

இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பல வாய்ப்புகள் இருந்தபோதிலும் அனுபவமற்ற பந்துவீச்சு, ஆல்ரவுண்டர்கள் அதிகம் இல்லாதது, தொடக்க வீரர்களின் மோசமான பேட்டிங் போன்றவற்றால் இந்திய அணி தோற்றது.

தென் ஆப்ரிக்கா முன்னிலை

முதலில் பேட் செய்த இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது. ஆனால், ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இலக்கு திருத்தப்பட்டு 15 ஓவர்களில் 152 ரன்கள் சேர்க்க தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதிரடியான தொடக்கத்தை அளித்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி நடுப்பகுதியில் தடுமாறினாலும் இறுதியில் 7 பந்துகள் மீதமிருக்கையில் 13.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஜடேஜாவுக்கு வாய்ப்பு ஏன்?

இதில் என்ன வியப்பு என்றால், தென் ஆப்பிரி்க்க சுழற்பந்துவீச்சாளர் ஷம்ஸிக்கு சுழற்பந்துவீச்சு சிறப்பாக எடுபட்ட ஆடுகளம் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, குல்தீப் யாதவ் பந்துவீசும்போது பெரிதாக டர்ன் ஆகவில்லை. அதிலும் ஜடேஜாவை இன்னும் எத்தனை நாட்களுக்கு ஆல் ரவுண்டர் என்று கூறிக் கொண்டு அணியில் வைத்திருக்கப் போகிறது இந்திய அணி நிர்வாகம் எனத் தெரியவில்லை.

கடந்த 2009ம் ஆண்டிலிருந்து இந்திய அணியில் டி20 போட்டிகளில் ஆடி வரும் ஜடேஜா இதுவரை சர்வதேச அரங்கில் ஒரு அரைசதம்கூட அடிக்கவில்லை. கடந்த 2009ம் ஆண்டிலிருந்து விளையாடி வரும் ஜடேஜா கடந்த ஆண்டுதான் 9 போட்டிகளில் அதிகபட்சமாக 201 ரன்கள் குவித்துள்ளார்.

இப்படியிருக்கும் போது ஏன் ஜடேஜாவை ஆல்ரவுண்டர் வரிசையில் இன்னும் அணியில் வைத்திருக்கிறார்கள், இவருக்குப் பதிலாக அக்ஸர் படேல், அல்லது ரவி பிஷ்னோய் போன்ற லெக் ஸ்பின்னர்களுடன் களமிறங்கி இருக்கலாம்.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

இந்திய டி20 வரலாற்றில் 2வது முறை

இந்திய அணியின் தொடக்க பேட்டர்கள் ஜெய்ஸ்வால், சுப்மான் கில் இருவரும் நேற்று டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர். இந்திய டி20 வரலாற்றில், கடந்த 2016ம் ஆண்டுக்குப்பின் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக்அவுட்டில் ஆட்டமிழந்தது நேற்று 2வது முறையாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் கெய்க்வாட், ஜெய்ஸ்வால் ஜோடி சிறப்பான தொடக்கத்தை ஒவ்வொரு ஆட்டத்திலும் அளித்தனர்.ஜெய்ஸ்வால் அதிரடியான பேட்டிங்கை கையில் எடுத்தபோது கெய்க்வாட் நிதானம் காட்டினார். இருவருமே டி20 போட்டிகளில் குறிப்பிடத்தகுந்த அளவு ரன்கள் குவித்துள்ளனர்.

ஆனால், சுப்மான் கில்லைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் மட்டுமே கில் பெரிய பேட்டர் என்று கூறிக்கொள்ளலாம். மற்ற வகையில் சர்வதேச அரங்கில் இதுவரை 12க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் ஆடிய கில் ஒரு சதம் அடித்ததைத் தவிர்த்துப் பார்த்தால் பெரிதாக ஸ்கோர் ஏதும் செய்யவில்லை. ஆதலால், அடுத்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலுடன் ஆடுவதற்கு கில்லுக்குப் பதிலாக கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு வழங்கலாம். அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை எதிர்நோக்கி இந்திய அணி தயாராகி வரும் நிலையில், தகுதியான பேட்டர்களுக்கு வாய்ப்பை வழங்கலாம் என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

பேட்டிங்கில் சொதப்பல்

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை கேப்டன் சூர்யகுமார் யாதவ் (56), ரிங்கு சிங் 68 நாட்அவுட் ஆகியோரின் பங்களிப்பைத் தவிர்த்துப் பார்த்தால் இந்திய அணியின் ஸ்கோர் 80 ரன்களைக் கூட தாண்டாது. தொடக்க பேட்டர்கள் ஏமாற்றியதால், ஒட்டுமொத்த சுமையும் நடுவரிசை பேட்டர்களான சூர்யகுமார், ரிங்கு மீது விழுந்தது.

இதில் திலக் வர்மா சிறிய கேமியோ ஆடி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே முடிவதற்குள் இந்திய அணி 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற மோசமானநிலையில் இருந்துதான் மீண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யகுமார்-ரிங்கு சிங் 4வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 70 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். மற்ற வகையில் ஜிதேஷ் ஷர்மா(1), ரவீந்திர ஜடேஜா(19) பெரிதாக நிலைத்து ஆடவில்லை.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளில் கடைசிவரை பேட்டர்களைக் கொண்டிருக்கும் அணியாக இருக்கிறது. ஆனால், இந்திய அணியைப் பொறுத்தவரை 7-வது வரிசைக்குப்பின் பேட்டர்களோ அல்லது ஆல்ரவுண்டர்களோ இல்லாதது பெரிய குறை.

ஆதலால் இந்திய அணியின் பேட்டர்கள் ஒவ்வொருவரும் தங்களின் ஆட்டத்தின் பாணியை மாற்றி அதிரடி ஆட்டத்தை கையாண்டால்தான் கடைசி வரிசை வீரர்கள் மீது சுமை ஏற்றாமல் இருக்க முடியும்.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

கண்ணாடியை உடைத்த ரிங்கு

ரிங்கு சிங் களத்தில் இருந்தவரை இந்திய அணியின் ரன்ரேட் நிச்சயமாக உயரும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால், 16 முதல் 18 ஓவர்களுக்கு இடையே 2 பவுண்டர்கள் மட்டுமே சென்றது. இருப்பினும் ரிங்கு அவ்வப்போது தனது அதிரடியான ஷாட்களால் சிக்ஸர் பவுண்டரி அடிக்கத் தவறவில்லை. மார்க்ரம் வீசிய ஓவரில் ரிங்கு சிங் லாங் ஆன் திசையில் அடித்த பந்து, மைதானத்தில் இருந்த பத்திரிகையாளர் அறையின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு சென்றது.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

‘கட்டுக்கோப்பில்லாத’ வேகப்பந்துவீச்சு

பந்துவீச்சைப் பொறுத்தவரை குல்தீப் யாதவ் மட்டுமே ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். மற்ற வகையில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான தென் ஆப்பிரிக்க ஆடுகளத்தில்கூட சிராஜ், முகேஷ் குமார், அர்ஷ்தீப் ஆகியோர் லைன் லென்த் தவறித்தான் பந்துவீசினர். அதிலும் முதல் 2 ஓவர்களில் ஹென்ட்ரிக்ஸ், பிரிட்ஸீ அடித்த அடியைப் பார்த்து மிரண்ட சூர்யகுமார் 3வது ஓவரிலேயே ஜடேஜாவுக்கு வழங்கினார்.

அதிலும் முகேஷ் குமார் யார்கர் வீச முயற்சி செய்தாலும் அதில் பெரும்பகுதி “லோ ஃபுல்டாஸாக” மாறிவிட்டதால் பேட்டர்கள் எளிதாக பெரிய ஷாட்களை அடிக்க ஏதுவாக இருந்தது. அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சு ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து மோசமாக இருந்து வரும்நிலையில் அவரை ஏன் தென் ஆப்பிரிக்கத் தொடருக்கும் தேர்ந்தெடுத்தார்கள் என்பது கேள்வியாக சமூக வலைத்தளத்தில் எழுகிறது. இந்த ஆட்டத்திலும் அர்ஷ்தீப் 2 ஓவர்கள் வீசி31 ரன்களை வாரி வழங்கினார்.

ஒட்டுமொத்தத்தில் பும்ரா, ஷமி இல்லாத நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பலம், பலவீனம் என்ன என்பது தெளிவாகி வருகிறது. இதே நிலையில் தயாராகினால், டி20 உலகக் கோப்பைக்கும், ஷமி, பும்ராவின் உதவியை இந்திய அணி நாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

அர்ஷ்தீப் சிங்,முகேஷ் குமார் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் போன்ற வேறுபட்ட தளத்தில் பந்துவீச்சை வெளிப்படுத்தினாலும் சர்வதேச தளம் என்று வரும்போது அவர்களின் திறமைக்கு உரைகல்லாக ஒவ்வொரு போட்டியும் மாறிவிடுகிறது.

இந்த ஆட்டத்தில் சிராஜ் வீசிய முதல் ஓவரிலே 2 கேட்ச்களை இந்திய அணிவீரர்கள் தவறவிட்டனர். அதன்பின் 2வது ஸ்லிப் வரை வைத்த போதிலும் சுப்மான் கில் ஒரு கேட்சை தவறவிட்டார். கேட்சுகளை தவறவிடுவது வெற்றியைத் தவறவிடுவது போன்றதாகும். சூர்யகுமார், கில் தவறவிட்ட கேட்சுகளை பிடித்திருந்தால் ஹென்ட்ரிக்ஸ், பிரிட்ஸ்கீ தொடக்கத்திலேயே ஆட்டமிழந்திருப்பார்கள் ஆட்டமும் திசைமாறியிருக்கும்.

கடைசி நேரத்தில் விழிப்பு

இந்திய அணி தனது வெற்றி குறித்து கடைசி நேரத்தில்தான் உணர்ந்தது போல் செயல்பட்டது. அதனால்தான், கடைசி நேரத்தில் பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்ததால், 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்க அணி இழந்தது. குல்தீப் யாதவ் தனது கடைசி ஓவரை பவுண்டரியின்றி வீசினார், முகேஷ் குமார், சிராஜ் கட்டுக்கோப்பாக வீசி நெருக்கடியளித்தனர். இந்த நெருக்கடி தரும் பந்துவீச்சை தொடக்கத்திலேயே செய்திருந்தால் ஆட்டம் வேறு திசையில் பயணித்திருக்கும்.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

ஹென்ட்ரிக்ஸ் அதிரடி தொடக்கம்

கடந்த டி20 உலகக் கோப்பைக்கு ஹென்ட்ரிக்ஸைத் தேர்வு செய்யாமல் சென்றது தவறு என்பதை இந்த ஆட்டத்தில் ஹென்ட்ரிக்ஸ் நிரூபித்துவிட்டார். இந்தியப் பந்துவீச்சை வெளுத்துவாங்கிய ஹென்ட்ரிக்ஸ் 27 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். கேப்டன் மார்க்ரம் 17 பந்துகளி்ல் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரைத் தவிர மற்ற பேட்டர்கள் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை என்றாலும், தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது என்பதுதான் போட்டியின் சிறப்பாகும். ஒவ்வொரு பேட்டரும் சிறிய அளவு கேமியோ ஆடிவிட்டு சென்றது வெற்றியை விரைவாக எட்ட உதவியது.

குயின்டன் டீ காக் இல்லாத நிலையில் வாய்ப்புப் பெற்ற ஹென்ட்ரிக்ஸ் தனக்குரிய இடத்தைத் தக்கவைக்கும் விதத்திலேயே பேட் செய்தார். முதல் 16 பந்துகளில் ஹென்ட்ரிக்ஸ், பிரிட்கீ இருவரும் 46 ரன்கள் சேர்த்து இந்திய அணியை திணறடித்தனர். அதன்பின் மார்க்கிரத்துடன் சேர்ந்த ஹென்ட்ரிக்ஸ் 5 ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு கடைசி 6ஓவர்களில் 44 ரன்கள் தேவைப்பட்டது. கிளாசன்(7), மில்லர்(17) என விரைவாக ஆட்டமிழந்தாலும், ஸ்டப்ஸ்(14), பெலுக்வாயோ(10) இருவரும் சேர்த்து அதிரடியாக பேட் செய்து வெற்றிக்கு வித்திட்டனர்.

தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சில் யான்சென், ஷம்ஸியின் பந்துவீச்சு நேற்று அற்புதமாக இருந்தது. உலகக் கோப்பைத் தொடரில் கலக்கிய யான்சென் டி20 தொடருக்கும் தன்னை எளிதாக தகவமைத்துக்கொண்டார். ஜெய்ஸ்வால் பலவீனத்தை உணர்ந்து பேக்வேர்ட் பாயின்ட் திசையில் பீல்டரை நிறுத்தி கேட்சுக்கு வழி செய்தார். வில்லியம்ஸ், கோட்ஸி இருவரும் பவர்ப்ளே ஓவருக்குள் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு பெரிய நெருக்கடி ஏற்படுத்தினர்.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் தொடர் வெற்றிக்கு தென் ஆப்ரிக்கா முற்றுப்புள்ளி

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டநிலையில் கடைசி ஆட்டம் நாளை(14ம்தேதி) ஜோகன்னஸ்பர்க் நகரில் நடக்கிறது. இதில் இந்திய அணி வென்றால் டி20 தொடரை 1-1 என்று சமன் செய்ய முடியும். இதன் மூலம் கடைசியாக விளையாடிய 3 தொடர்களையும் வென்று டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் வெற்றிநடைக்கு தென் ஆப்ரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது-

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி உள்நாட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய கையோடு தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டது. இரண்டாவது டி20 போட்டி இந்திய அணியின் பலவீனங்களை அம்பலமாக்கியுள்ளது. முதல்ஆட்டமே அதிர்ச்சியாக அமைந்துள்ளதால், புதிய மைதானம், காலநிலை, உள்ளூர் ரசிகர்கள் ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க மைதானங்கள் என்றாலே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகவும், பவுன்ஸருக்கு ஏதுவாகவும் அமைக்கப்பட்டிருக்கும். அந்த மைதானத்தில் சுழற்பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்திய தப்ரியாஸ் ஷம்ஸி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *