நீங்கள் செல்லும் அசைவ உணவகம் தரமானதா? எப்படி கண்டுபிடிப்பது?

நீங்கள் செல்லும் அசைவ உணவகம் தரமானதா? எப்படி கண்டுபிடிப்பது?

ஃபாஸ்ட் ஃபுட் உணவு

பட மூலாதாரம், Getty Images

நாம் தற்போது நவீன யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். விஞ்ஞான வளர்ச்சியால் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய கலாசாரம், உணவு, உடை, பழக்க வழக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றை இணையம் வழியாக நொடிப் பொழுதில் அறிந்து கொள்கிறோம். அதில் பிடித்த உடை, உணவுகள், வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறோம்.

குறிப்பாக க்ரில் சிக்கன், பர்கர், ஸ்பிரிங் ரோல், ஷவர்மா, நூடுல்ஸ், ஃப்ரைட் ரைஸ், இறைச்சி வகைகள் எனப் பல்வேறு விதமான துரித உணவுகளை உட்கொள்ளும் ஆர்வம் இளையோர் முதல் பெரியவர்கள் ஆர்வம் பெருகி வருகிறது.

இதற்கான பிரத்யேக உணவகங்களின் கிளைகள் முக்கிய நகரங்களில் ஆங்காங்கே பரவிக் கிடக்கக்கின்றன. அந்த கடைகளுக்குச் சென்று மக்கள் துரித உணவை ருசித்துண்டு மகிழ்ந்து வருகின்றனர். ஆனால் சில நேரங்களில் அந்த உணவே விஷமாகவும் மாறி விடுகிறது.

கடந்த ஆண்டு கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட +2 மாணவி உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இது அசைவப் பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அசைவம் சாப்பிடலாமா என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியது.

அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்த கலையரசி என்ற 14 வயது சிறுமி உறவினர்களுடன் சேர்ந்து அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு இருக்கிறார். பிறகு சிறிது நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி செய்து வீடு திரும்பினார். மறுநாள் காலை படுக்கையறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதே உணவகத்தில் அன்றைய நாள் உணவு உட்கொண்ட 5 குழந்தைகள் உட்பட 43 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதையடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மாவட்டம் முழுவதும் ஷவர்மா விற்க தற்காலிகத் தடை விதித்துள்ளார். இது தொடர்பாக கடையின் உரிமையாளர், கறி விநியோகம் செய்தவர் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு

ஃபாஸ்ட் ஃபுட் உணவு

இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் துரித உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு தரமற்ற உணவுகளை விற்கும் உணவகங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களில் அதிரடி ஆய்வு நடத்தி பழைய சிக்கன், தரமற்ற உணவுப் பொருட்களைப் பறிமுதல் செய்து உணவகங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

தரமான உணவகங்களைக் கண்டறிவது எப்படி என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஜெயராம பாண்டியன் பிபிசி தமிழிடம் பேசினார்.

அப்போது, “பொதுமக்கள் உணவகங்களில் சுகாதாரமான உணவை உட்கொள்ள உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

சுகாதாரத் துறையின் (FSSAI -Food Safety Standard Authority of India) உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் தரச் சான்றிதழ் பெறப்பட்ட சைவ அசைவ உணவகங்களுக்குச் சென்று உணவு உட்கொள்ளும்போது உடல் ரீதியான பாதிப்புகள் இருக்காது என்கிறார் அவர்.

“உணவகத்தின் வாயில், முகப்புப் பகுதியில் இந்தச் சான்றிதழை உணவகத்தின் உரிமையாளர்கள் வைத்திருப்பார்கள்.

உணவுப் பாதுகாப்புத் துறையின் சார்பில் ஒவ்வொரு 90 நாட்களுக்கு ஒருமுறையும் சாலையோரக் கடைகள், சிறு உணவகம், பெரு உணவகங்களுக்குச் சென்று உணவின் தரத்தை ஆய்வு செய்ய அதில் சிறு பகுதியை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்போம்.

உணவின் தரம் குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் வந்தால் உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை , அபராதம் விதிப்பு, கடைக்கு சீல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என்றும் விளக்கினார் ஜெயராம பாண்டியன்.

உணவு நஞ்சாதல்

பட மூலாதாரம், Getty Images

பொதுமக்கள் உணவகம் செல்லும் நேரங்களில் உணவுக்கூடத்தின் தூய்மை, குடிநீர் பயன்படுத்தும் முறை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு உணவகத்தின் தரத்தை கண்டறியலாம் என்கிறார் ஜெயராம பாண்டியன்.

மேலும், “உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் உணவைப் பாதுகாப்பாக கையாள்வதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் உணவகத்திற்கும், உணவகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கி வருகிறோம்.

மதுரை மாவட்டத்தில் மட்டும் 7000க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு உணவை சுகாதாரமாக அணுகும் முறை குறித்த பயிற்சி வழங்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் செய்யப்படுகிறது,” என விளக்குகிறார் ஜெயராம பாண்டியன்.

உணவின் தரம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?

பொதுமக்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறைவாக இருப்பதாக அறிந்தால் அதை 9444042322 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும், வாட்ஸ் ஆப்பில் புகைப்படம், வீடியோ அனுப்பியும் புகார் தெரிவிக்கலாம். இது சென்னையில் உள்ள உணவு பாதுகாப்புத் துறையின் புகார் எண்.

அங்கிருந்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு அந்த புகார் குறித்த தகவல் செல்லும்.

அதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்தக் குறிப்பிட்ட உணவகத்தில் 24 மணிநேரத்துக்குள் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள். உணவகம் பூட்டப்பட்டு இருந்தால் 48 மணி நேரத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள்.

உணவின் தரத்தை எப்படி அறிவது?

ஃபாஸ்ட் ஃபுட் உணவு

உணவு பாதுகாப்புத்துறை உணவின் பாதுகாப்பை மட்டுமே உறுதி செய்ய முடியும். ஆனால் பொதுமக்கள் தங்களது உடல்நலத்தில் அக்கறை எடுத்து சுகாதாரமான உணவகத்திற்குச் சென்று உணவை உட்கொள்வதைக் கருத்தில் கொள்வது அவசியம்.

உங்கள் தட்டில் வைக்கப்படும் உணவை ருசித்து, முகர்ந்து பார்த்து தரம் குறித்து அறியலாம் என்கிறார் ஜெயராம பாண்டியன்.

ஷவர்மா சாப்பிட்டு நாமக்கலில் 14 வயது சிறுமி உயிரிழந்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் மாவட்டம் முழுவதிலும் உள்ள துரித உணவு கடைகளில் ஆய்வு வருகிறார்கள்.

இருப்பினும், தரமற்ற உணவை உட்கொள்ளும்போது மக்களுக்குப் பல்வேறு விதமான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. ஒருவேளை மக்கள் தரமற்ற அல்லது கெட்டுப்போன உணவுப் பொருட்களை உட்கொண்டால் என்ன செய்ய வேண்டும்.

இது குறித்து மருத்துவர் கிளாடியா மெர்லின் பிபிசி தமிழிடம் பேசினார்.

உணவு நஞ்சாகிவிட்டால் என்ன செய்வது?

மருத்துவ ரீதியாகப் பார்க்கும்போது நாம் உணவை உணவாக மட்டும் பார்ப்பதில்லை அதில் பல்வேறு விதமான உட்பொருட்கள் உடலுக்கு சக்தி தரக்கூடியவையாக இருக்கின்றன.

“ஒரு உணவு தட்டுக்கு வருவதற்கு முன்பாக அது விதைக்கப்படும் இடத்திலிருந்து உணவு தட்டுக்கு வரும் வரையில் பயணம் சரியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது உணவாக இருக்கும். இதில் ஏதேனும் ஒரு பகுதியில் சிறு பிழை நடந்தாலும் அது விஷமாக மாறும்,” என்கிறார் மருத்துவர் கிளாடியா மெர்லின்.

துரித உணவுகளை உட்கொள்ள வேண்டாம் என மருத்துவராக நாங்கள் பரிந்துரை செய்வோம் என்றும், ஏனென்றால், அந்த உணவில் உடலுக்கு சரிவிகிதத்தில் சத்துகளைக் கொடுக்கக் கூடிய பொருட்கள் இருக்காது என்றும் அவர் கூறுகிறார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளிக் குறிப்பு,

தக்காளியின் வரலாறு என்ன? எங்கிருந்து இந்தியாவுக்கு வந்தது?

“துரித உணவில் அதிக கேலோரி, கொழுப்பு இருக்கும். நீங்கள் ஒரு நாளைக்கு உட்கொள்ளும் உணவில் ஒரு பகுதி காய்கறி, ஒரு பகுதி புரதச்சத்து, நீர்ச்சத்து இருக்க வேண்டும். இப்படி சரிவிகித உணவை உட்கொள்ளும்போது தான் உடல் எடை கூடாமல் உடலின் இயக்கம் சீராக இருக்கும்.

துரித உணவை உட்கொண்டால் உடல் பருமன் கூடும், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய், இதயக் கோளாறு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படும். சில நேரங்களில் கேன்சர் போன்ற பெரிய பாதிப்புகளுக்கும் இட்டுச் செல்லும்.

இன்றைய இளைஞர்கள் வீட்டிற்கு வெளியில் உணவு உண்பதை ஒரு பொழுதுபோக்காகப் பார்க்கின்றனர். தினசரி வெளியில் உணவு உட்கொள்ளும் பழக்கமாக வைத்துள்ளனர். இதனால் உடல் எடை கூடி உள் உறுப்புகள் பாதிப்படைகின்றன.

இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வெளியில் உணவு உட்கொள்வது உடலுக்குப் பெருமளவு பாதிப்பைக் குறைக்கும்.

ஒருவேளை நீங்கள் கெட்டுப்போன உணவு அல்லது தரமற்ற உணவை உட்கொள்ளும் போது வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு குளிர்ந்த காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

அனைவருக்கும் ஒரே மாதிரியாக அறிகுறிகள் இருப்பதில்லை. ஒரு சிலருக்கு உணவு எடுத்துக் கொண்ட 6 முதல் 24 மணிநேரத்தில் அறிகுறிகள் வெளிப்படும். ஒரு சிலருக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு பின்புகூட அறிகுறி வெளிப்படும்.

இது மாதிரியான அறிகுறிகள் வரும்போது உலக சுகாதாரம் மையம்(WHO- World Health Organization ) பரிந்துரைத்ததன் அடிப்படையில் ஓ. ஆர்.எஸ் (ORS) பவுடர் உட்கொண்டு வீட்டிலேயே முதலுதவி செய்யலாம். ஓ.ஆர்.எஸ் பவுடர் உடலில் வயிற்றுப் போக்கால் உடலில் இருந்து வெளியேறும் திரவ அளவை சரிக்கட்டும்,” என்று விளக்குகிறார் மருத்துவர் கிளாடியா மெர்லின்.

ஃபாஸ்ட் ஃபுட் உணவு

பட மூலாதாரம், Getty Images

வீட்டில் ஓ.ஆர்.எஸ் பவுடர் இல்லாதபோது எலுமிச்சை பழத்தைp பிழிந்து 1:6 என்ற அளவில் ஒரு கரண்டி உப்பு, 6 கரண்டி சர்க்கரை நீரில் கலந்து மருத்துவமனை செல்லும் வரை பயன்படுத்தினால் உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் அவர்.

பிறகு மருத்துவமனையில் சென்று உரிய சிகிச்சை பெறுவது அவசியம், இதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டால் உயிரிழப்பு ஏற்படும் என்றும் மருத்துவர் கிளாடியா மெர்லின் எச்சரிக்கிறார்.

“ஒரு உணவை உட்கொள்ளும்போது உங்களுக்குத் தவறாகப்பட்டால் அந்த உணவை உட்கொள்ளாமல் இருப்பதே நல்லது. அதையும் மீறி உட்கொண்டால் இது ஃபுட் பாய்சன் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

நாமக்கல் சிறுமி இறந்ததற்கான காரணம் உணவாகத்தான் இருக்கும். ஏன்னென்றால் அதே உணவகத்தில் சாப்பிட்ட 43 பேருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் உணவகத்தில் வைக்கப்பட்டுள்ள இறைச்சி அல்லது இறைச்சியைப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருந்திருக்கலாம்.

உணவகம் செல்லும் போது குழந்தைகளுக்கு பெற்றோர் இறைச்சி உள்ளிட்ட உணவுகளை சோதனை செய்து கொடுத்தால் உடல் உபாதைகள் ஏற்படுவதில் இருந்து தற்காத்து கொள்ளலாம்,” எனக் கூறினார் மருத்துவர் கிளாடியா மெர்லின்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *