பட மூலாதாரம், Getty Images
70 வயதான மருத்துவர் மார்கோஸ் பாரெட்டோ ஒவ்வொரு வாரமும் அதே கதையைத்தான் கேட்கிறார்.
“டாக்டர், பிரஷர் குக்கர் வெடித்துவிட்டது.”
பல தசாப்தங்களாக பிரேசிலில் உள்ள தீக்காய சிகிச்சை மையம் ஒன்றின் பொறுப்பாளராக இருந்த அறுவை சிகிச்சை நிபுணரான பாரெட்டோ, வாரத்திற்கு ஒருவராவது பிரஷர் குக்கர் வெடித்ததால் ஏற்பட்ட தீக்காயங்களுடன் சிகிச்சை பெற வருவதாக தெரிவிக்கிறார்.
அத்தகைய நிகழ்வுகளில் குறிப்பிடத்தகுந்தவற்றை பாரெட்டோ நினைவுகூர்ந்தார். பிரஷர் குக்கர் வெடித்து அதிலிருந்த உணவு முகத்தில் ஒட்டிக்கொண்டதால் தீக்காயம் ஏற்பட்டதையும் மற்றொரு சம்பவத்தில் நோயாளி ஒருவர் தனது பார்வையின் ஒருபகுதியை இழந்ததையும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய விபத்துகளால் பொதுவாக பாதிக்கப்படுபவர்கள் ஏழைப் பெண்கள், இல்லத்தரசிகள் அல்லது வீட்டு வேலை செய்பவர்களாக உள்ளனர்.
சமையலறையில் பெரியவர்களுக்கு உதவும் 12 அல்லது 13 வயதுடைய பதின்ம வயதினரும் இத்தகைய விபத்துகளில் சிக்குகின்றனர்.
இத்தகைய சோகமான உதாரணங்களை ஒவ்வொரு வாரமும் பாரெட்டோ எதிர்கொண்டாலும், அவர் பிரஷர் குக்கர் பயன்படுத்துவதை நிறுத்த நினைத்ததில்லை.
“வீட்டில் எந்த சிரமமும் இல்லாமல் பிரஷர் குக்கரை பயன்படுத்துகிறோம். மாட்டிறைச்சியின் நாக்கு, இறைச்சி, பீன்ஸ் சமைக்க அதனை பயன்படுத்துகிறோம்” என்று கூறும் அவர், முறையாக பயன்படுத்தினால் எந்த ஆபத்தும் இல்லை என கூறுகிறார்.
“பயப்பட வேண்டாம்”
“சரியான கால இடைவெளியில் பிரஷர் குக்கரை முறையாக பராமரித்து வந்தால் ஒரு விபத்தும் நிகழாது“ என, பொறியாளரும் மெட்டீரியல் சயின்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவருமான லியாண்ட்ரோ போசமாய் கூறுகிறார்.
“இதில் பயப்பட ஒன்றுமில்லை, ஏனெனில் அதன் பயன்பாடு பாதுகாப்பானது. சமையலறை என்பது ஆபத்தான சூழல் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அங்கு நீங்கள் நெருப்பை மூட்டிவிட்டு செல்போனில் விளையாடி கொண்டிருக்க முடியாது,” என்று சமையல் கலை நிபுணரும் பேராசிரியருமான ஜெனிர் டல்லா கோஸ்டா கூறுகிறார்.
எனினும் இத்தகைய விபத்துகள் தொடர்ந்து நிகழ்கின்றன. இந்த விபத்துகள் நடக்கும்போது எடுக்கப்பட்ட காணொளிகள் பல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தகவல் பற்றாக்குறை காரணமாகவே இத்தகைய விபத்துகள் அதிகம் நிகழ்வதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
பட மூலாதாரம், GETTY IMAGES
சித்தரிப்புப் படம்
பிரஷர் குக்கர் விபத்துகளை தடுப்பது எப்படி?
- எவ்வளவு கால இடைவெளியில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என்பதை பிரஷர் குக்கரை வாங்கும்போதே அதன் பாதுகாப்பு கையேட்டைப் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
- நீராவி வெளியேறும் வால்வு தெளிவாகவும் சுத்தமாகவும் உள்ளதா என்பதை எப்போதும் சரிபார்க்கவும்.
- பிரஷர் குக்கரில் எவ்வளவு உணவுப்பொருட்களை நிரப்ப வேண்டுமோ (பொதுவாக மூன்றில் இரண்டு பங்கு) அதற்கு மேல் நிரப்பக் கூடாது.
- உணவுப்பொருட்களை சமைக்கும் போது அதன் அளவு அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- தண்ணீர் இல்லாமல் பிரஷர் குக்கரை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.
- குக்கருக்குள் கேன்கள் போன்ற எவ்வித கொள்கலன்களையும் ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம், அவை உட்புற அழுத்தம் காரணமாக வெடிக்கலாம்.
- பிரஷர் குக்கர் முறையாக மூடப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும். அடுப்பில் தீயை அணைத்தவுடன் பிரஷர் குக்கரின் அழுத்தம் தானாகவே நீங்கும் வரை காத்திருங்கள். (ஒருபோதும் ஒரு முட்கரண்டி கொண்டு வால்வை இழுக்காதீர்கள், இதனால் நீராவி காரணமாக தீக்காயங்கள் ஏற்படலாம்).
- பிரஷர் குக்கரின் அழுத்தம் விரைவாக நீங்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், அதன் மேல் குளிர்ந்த நீரை ஊற்றலாம். (ஆனால் நீராவி வெளியேறும் வால்வில் தண்ணீரைக் கொட்டாமல் கவனமாக இருங்கள்)
- அனைத்து நீராவியும் வெளியேறும் வரை மூடியைத் திறக்க வேண்டாம்.
- பிரஷர் குக்கர் அழுத்தத்தை அடையவில்லை என்றால், உடனடியாக வெப்பத்தை அணைத்து, அது குளிர்ந்து போகும் வரை காத்திருக்கவும்.
பட மூலாதாரம், PERSONAL FILE
லூசிலெய்ட் மரியா டீ சில்வா
52 வயதான லூசிலெய்ட் மரியா டீ சில்வா என்பவர் தன் வீட்டில் மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்தபோது தான் அந்த சம்பவம் நடந்தது.
ஸ்டவ் பர்னர் ஒன்றில் அரிசியைக் கிளறிக் கொண்டிருந்தார், மறுபுறம் பிரஷர் குக்கரில் பீன்ஸ் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அது வெடித்தது. பீன்ஸ் பறந்துவந்து அவருடைய முகத்தில் தெறித்தது.
“கண்களை மூடிக்கொண்டு, முகத்தில் சூடான நீராவியை உணர்ந்ததுதான் என்னால் செய்ய முடிந்த ஒரே விஷயம். நான் என் மகனிடம் உதவி கேட்டு கத்தினேன்,” என்று அவர் நினைவு கூர்ந்தார்.
இந்த விபத்தில் வீட்டின் மேற்கூரை சேதமடைந்ததுடன், அவருடைய கண்ணாடியும் உடைந்தது.
லூசிலெய்டின் குடும்பத்தினர் அவரை சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு அதிகமான வலி நினைவில் இல்லை. மாறாக, சூடான தானியங்களால் அவரது முகம் இன்னும் அழுக்காக இருந்தது.
ஆனால், விளைவு அவருடைய முகம் முழுவதிலும் இரண்டாம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டன. அதனால் அவர் ஒன்பது நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது. மயக்க மருந்து செலுத்தப்பட்டு அவருடைய முகம் சுத்தப்படுத்தப்பட்டது. மருந்துகளும் எடுத்துக்கொண்டார்.
பிரஷர் குக்கர் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளாததுதான் இத்தகைய விபத்துகளுக்கு காரணமாக உள்ளது.
விபத்து நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு, தனது கணவர் பிரஷர் குக்கரின் பாதுகாப்பு வால்வு திறப்பதைத் தடுக்கும் வேலையை செய்ததாகவும் இதனால் நீராவி குக்கரிலிருந்து வெளியேற முடியாதபடி அதைத் தடுத்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
“நம்பமுடியாததாகத் தோன்றினாலும், நீராவி வெளியேறவும் வெடிக்காமல் இருக்கவும் வால்வு திறக்கப்பட வேண்டும் என்பதுபற்றி எங்களுக்குத் தெரியவில்லை. இது பலருக்கும் தெரியாது என்று நான் உறுதியளிக்கிறேன்.” என்கிறார் அவர்.
“கவனமின்மையே காரணம்”
பட மூலாதாரம், PERSONAL FILE
குக்கர் வெடித்ததால் சேதமடைந்த லூசிலெய்ட் மரியா டீ சில்வாவின் வீடு.
“நெருப்பை விட கவனமின்மை தான் அதிக தீக்காயங்களை ஏற்படுத்துகிறது” என்று மருத்துவர் மார்கோ பாரெட்டோ கூறுகிறார்.
தகவலறிந்தவர்களுக்கு விபத்துகள் நேராது என்பது மட்டுமல்ல, அவர்கள் பயப்படவும் மாட்டார்கள் என்று உணவியல் பேராசிரியர் ஜெனிர் டல்லா கோஸ்டா தெரிவிக்கிறார்.
“சிலர் அந்த பயத்துடன் வருகிறார்கள், ஆனால் பிரஷர் குக்கரை சரியாகப் பராமரித்து, வால்வை சுத்தமாக வைத்திருந்தால் அது பாதுகாப்பானது என்று அவர்களுக்கு கற்பிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்,” என்று அவர் கூறுகிறார்.
பிரஷர் குக்கர் வெடிப்பதைத் தடுப்பதற்கான முக்கியமான உதவிக்குறிப்புகளில் ஒன்று, வால்வை எப்போதும் கவனிப்பது. பிரஷர் குக்கர் வால்வை ஊசியால் சுத்தம் செய்யலாம் என்று டல்லா கோஸ்டா விளக்குகிறார்.
குக்கர் மூடியில் உள்ள ரப்பர் தேய்ந்தாலோ அல்லது தளர்வாக இருந்தாலோ அதை மாற்றுவதும் முக்கியம்.
ஃபெடரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கோயாஸில், இயற்பியல் கற்பித்துவரும் பேராசிரியர் லியாண்ட்ரோ போசமாய் வகுப்பறையில் பிரஷர் குக்கரை ஒரு நடைமுறை உதாரணமாகப் பயன்படுத்துவதற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளார்.
அன்றாடப் பொருட்கள் “வெறுமனே வேலை செய்யாது” என்பதைக் காட்டுவதே இதன் கருத்து.
பிரஷர் குக்கர் அழுத்தத்தை அடையும்போது, தண்ணீர் ஏற்கனவே பானைக்குள் அதிகபட்ச வெப்பநிலையை அடைந்துவிட்டதால், அடுப்பின் வெப்பத்தை குறைக்கலாம், இதனால், சமையல் நேரத்தையும் எரிவாயு செலவையும் குறைக்க முடியும் என உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விளக்குகிறார்.
பிரஷர் குக்கர் நேரம் மற்றும் பொருளாதார காரணங்களுக்கு மட்டும் முக்கியமானது அல்ல. சில உணவுகளின் தரத்திற்கும் இது அவசியம்.
உதாரணமாக, பீன்ஸை பிரஷர் குக்கரில் சமைத்தால் அதன் தரம் சிறப்பாக இருக்கும் என்கிறார் டல்லா கோஸ்டா. “நீங்கள் அவற்றை ஒரு சாதாரண பாத்திரத்தில் சமைத்தால், அதிக எரிவாயு செலவு தவிர, பீன்ஸ் கருகிவிடும், மேலும் அவை ஒரே மாதிரியாக இருக்காது.”
கொண்டைக்கடலை மற்றும் சில வகையான பீன்ஸ் போன்ற தோல் பிரியும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இத்தகைய உணவுப்பொருட்கள் குக்கர் முழுதும் நிரம்பியிருந்தால் அவற்றின் தோல் வால்வை அடைத்துவிடும்.
“பொதுவாக, அது நிகழும்போது, நீர் வால்வு வழியாக வெளியேறுகிறது” என்று டல்லா கோஸ்டா கூறுகிறார். “ஏதோ ஒன்று வேலை செய்யவில்லை என்பதற்கான அறிகுறிகளை பிரஷர் குக்கர் எப்போதும் கொடுக்கும்.”
“நான் எப்போதும் சொல்வது இதுதான்: நீங்கள் பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்துவிட்டு வேறு எங்கும் செல்ல முடியாது. சமையலறையில் அப்படி எந்த வேலையும் செய்ய முடியாது.”
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
