ஆல்ஃப்ரட் நோபல்: டைனமைட் வெடிமருந்தை கண்டுபிடித்தவர் அமைதிக்கான நோபல் பரிசை நிறுவியது ஏன்?

ஆல்ஃப்ரட் நோபல்: டைனமைட் வெடிமருந்தை கண்டுபிடித்தவர் அமைதிக்கான நோபல் பரிசை நிறுவியது ஏன்?

நோபல் பரிசு, அமைதிக்கான நோபல் பரிசு

பட மூலாதாரம், Getty Images

(வெடிமருந்தைக் கண்டுபிடித்தவரும், நோபல் பரிசை நிறுவியவருமான ஆல்ஃப்ரட் நோபலின் பிறந்த தினம் அக்டோபர் 21)

உலக அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும் செயல்படும் தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் உலகிலேயே வழங்கப்படும் மிக உயரிய விருது அமைதிக்கான நோபல் பரிசு.

ஆனால் இந்த விருதை நிறுவியவர்தான் பல போர்களுக்காகவும் வெடிகுண்டுகளைத் தயாரிக்க உதவிய டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். அவர் தான் ஆல்ஃப்ரட் நோபல் என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர்.

இந்த முரண் எப்படிச் சாத்தியமானது? யார் இந்த ஆல்ஃப்ரட் நோபல்? அவர் தன் வாழ்நாளில் செய்தது என்ன?

யார் இந்த ஆல்ஃப்ரட் நோபல்?

ஆல்ஃப்ரட் நோபல் 1833-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் பிறந்தார்.

அவரது தந்தை ஒரு வேதியியலாளர், பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர். 1842-ஆம் ஆண்டு, நோபலின் குடும்பம் ரஷ்யாவுக்குக் குடிபெயர்ந்தது. அங்கு அவரது தந்தை ஜார் மன்னரின் படைகளுக்கு உபகரணங்களை வழங்கும் ஒரு பொறியியல் நிறுவனத்தைத் துவங்கினார். 1850-ஆம் ஆண்டு, நோபலின் தந்தை அவரை இரசாயனப் பொறியியல் படிக்க வெளிநாட்டுக்கு அனுப்பினார்.

இரண்டு வருட காலப்பகுதியில் நோபல், ஸ்வீடன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்குப் பயணம் செய்தார். தமது குடும்ப நிறுவனம் திவாலான பிறகு 1863-இல் அவர் தனது தந்தையுடன் ஸ்வீடன் திரும்பினார்.

இதன்பின்னர் தான் வெடிமருந்து தயாரிப்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அது அவரது வாழ்வையே மாற்றியது.

நோபல் பரிசு, அமைதிக்கான நோபல் பரிசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நோபலின் மிகவும் பிரபலமான கண்டுபிடிப்பு: டைனமைட் எனப்படும் வெடிமருந்து

சகோதரன் கொல்லப்பட்டபோதும் தடைபடாத சோதனை

ஆல்ஃப்ரட் நோபல், தனது வாழ்நாளில், எளிதில் வெடிக்கும் நிலையற்ற திரவமான நைட்ரோகிளிசரின் சார்ந்த பரிசோதனைகளுக்காக மிகவும் பிரபலமானார். அவரும் அவரது மூன்று சகோதரர்களும் தங்கள் தந்தை, இம்மானுவேல் நோபல் ஆகியோருடன் இணைந்து, ஸ்வீடன் மற்றும் ரஷ்யாவில் கட்டிடத் தொழில் மற்றும் ரஷ்ய இராணுவத்திற்கான கண்டுபிடிப்புகளில் பணிபுரிந்தனர்.

ஆல்ஃப்ரட் நோபல், நைட்ரோகிளிசரைனை, பாதுகாப்பாகக் கையாளும் வகையில் நிலையான பொருளாக எவ்வாறு மாற்றுவது என்பதைக் கண்டறிவதில் பணிபுரிந்தார்.

இந்நிலையில், 1864-ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி, ஒரு விபத்து நிகழ்கிறது. நோபலின் சோதனைகளில் ஒன்று அவரது ஆய்வகத்தில் ஒரு வெடிப்பை ஏற்படுத்தியது. இதில் அவரது இளைய சகோதரர் எமில் உட்பட ஐந்து பேர் இறந்தனர். தனது சகோதரரின் மரணத்திற்குப் பிறகும், ஆல்ஃப்ரட் நோபல் தனது வெடிமருந்து ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

இதன் விளைவாக, 1866 வாக்கில், தான் நினைத்ததை ஆல்ஃப்ரட் கண்டடைந்தார். நைட்ரோகிளிசரினை நிலையான, பாதுகாப்பாகக் கையாளக்கூடிய பொருளாக மாற்றினார்.

இப்படி உருவானதுதான் அவரது மிகவும் பிரபலமான டைனமைட் எனப்படும் வெடிமருந்து.

நோபல் பரிசு, அமைதிக்கான நோபல் பரிசு
படக்குறிப்பு,

நோபல் தனது வாழநாளில், நோபல் 355 காப்புரிமைகள் பெற்றார். 20 நாடுகளில் 100 இடங்களில் தொழிற்சாலைகள் மற்றும் ஆய்வகங்கள் வைத்திருந்தார்

16 நாடுகளில் 14 வெடிமருந்து ஆலைகள்

இந்தக் கண்டுபிடிப்பு போர் முறையிலும் வெடிகுண்டு தயாரிப்பிலும் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

அதுவரை கையாளவோ, பல இடங்களுக்குக் கொண்டு செல்லவோ இயலாதிருந்த நைட்ரோகிளிசரின், எளிதாகக் கையாளப்படவும், கொண் டுசெல்லப்படவும் ஏதுவானதாக மாறியது.

இது நோபலை, அந்நாளைய உலகின் மிகப்பெரும் பணக்காரராகவும் மாற்றியது.

நோபல் தனது கண்டுபிடிப்புக்காக, அறிவுசார் காப்புரிமையைப் பெற்று, அதனைத் தக்கவைத்துக் கொள்ள பல உலக நாடுகளுக்கும் பயணித்தார்.

‘நோபல் டைனமைட் டிரஸ்ர் கம்பெனி’ என்ற பெயரில் ஸ்டாக்ஹோமில் ஒரு சர்வதேச நிறுவனத்தைத் துவங்கினார். இதன்மூலம் வேறு நாடுகளிலும் கிளைகளைத் துவங்கி, நோபல் அவற்றில் கூட்டு நிறுவனராக இருந்தார்.

1864-ஆம் ஆண்டு ஸ்வீடனில் துவங்கி, 1871 வரை, நார்வே, ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட பல உலகநாடுகளிலும் தன் நிறுவனத்தின் கிளைகளைத் துவங்கி அதில் கூட்டு நிறுவனராக இருந்தார் நோபல்.

தனது வாழ்நாளில், நோபல் 355 காப்புரிமைகள் பெற்றார். 20 நாடுகளில் 100 இடங்களில் தொழிற்சாலைகள் மற்றும் ஆய்வகங்கள் வைத்திருந்தார்.

நோபல் பரிசு, அமைதிக்கான நோபல் பரிசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நோபல் இத்தாலியில் சான் ரெமோ நகரில் 1896-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி பக்கவாதத்தால் இறந்தார். அவரது இறுதிச் சடங்குக்கு மறுநாள், அவர் கைப்பட எழுதிய உயில் வாசிக்கப்பட்டது

நோபல் தன் உயிலில் என்ன சொன்னார்?

ஆனால், இவையனைத்தையும் விட, இன்று நோபல் நினைவுகூரப்படுவது வேறு ஒரு விஷயத்திற்காக.

அவர், இத்தாலியில் சான் ரெமோ நகரில் 1896-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி பக்கவாதத்தால் இறந்தார். அவரது இறுதிச் சடங்குக்கு மறுநாள், அவர் கைப்பட எழுதிய உயில் வாசிக்கப்பட்டது.

அதில், அவருடைய செல்வத்தின் பெரும்பகுதி, இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் சர்வதேசச் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்க ஒதுக்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.

நார்வே நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் அமைதிக்கான பரிசைத் தவிர, மற்ற அனைத்து விருதுகளும் ஸ்வீடனின் அமைப்புகளால் வழங்கப்படும். மேலும், இந்தப் பரிசுகள் உலகில் உள்ள எந்த தேசத்தவருக்கும் வழங்கலாம் என்று அவரது உயில் கூறியது.

எதிர்பார்த்தது போலவே, இது அவரது குடும்பத்தினரை ஆத்திரமூட்டியது.

அதேபோல அவர் எந்தெந்த நிறுவனங்கள் இந்தப் பரிசுகளை வழங்க வேண்டுமென்று எழுதியிருந்தாரோ, அவை இது அதிக நேரமும், உழைப்பும் கோரும் பணி என்று அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கின.

இக்காரணங்களால், முதல் நோபல் பரிசுகள் 1901-ஆம் ஆண்டு தான் வழங்கப்படத் துவங்கின. இன்றுவரை வழங்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு வருடமும் நோபலின் பிறந்த தினமான டிசம்பர் 10-ஆம் தேதி இப்பரிசுகள் வழங்கப்படுகின்றன.

நோபல் பரிசு, அமைதிக்கான நோபல் பரிசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அமைதியைப் பற்றிய தனது கருத்துக்களை, நோபல் ஆஸ்திரிய அமைதிச் செயல்பாட்டாளரான பெர்த்தா ஃபான் ஸட்னரோடு நேரடியாகவும், கடிதம் வாயிலாகவும் பகிர்ந்துகொண்டார்

வெடிமருந்தும் உலக சமாதானமும் ஒரே இடத்திலா?

தனது வாழ்வின் இரண்டாம் பாதியில்தான் நோபல் போர் நிறுவனங்களுக்கு நேரடியாகத் தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டார். அப்போதுதான் அமைதியைப் பற்றிய அவரது கருத்துகளும் உருவாயின, என்று ஸ்வென் தாகில் என்ற ஸ்வீடனைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் கூறுகிறார்.

அமைதியைப் பற்றிய அவரது கருத்துகளை ஆஸ்திரிய அமைதிச் செயல்பாட்டாளரான பெர்த்தா ஃபான் ஸட்னரோடு நேரடியாகவும், கடிதம் வாயிலாகவும் பகிர்ந்துகொண்டார்.

ஸட்னரின் கூற்றுப்படி, நோபல், தான் உருவாக்கும் கருவிகள் மறைமுகமாகப் போரை வேரோடு அழிக்க உதவும் என்று நினைத்தார். ‘ஒருநாள் எனது தொழிற்சாலைகள் தயாரிக்கும் பொருட்கள் மூலம் இரு நாடுகளின் ராணுவங்கள் ஒன்றையொன்று முழுதாக அழித்துக்கொண்டபின், போர் எவ்வளவு கொடியது என்று இரு நாடுகளும் உணர்ந்து, அதிர்ந்து, அந்த பீதியில் தங்கள் ராணுவத்தைக் கலைத்துவிடுவார்கள்,’ என்பதே நோபலின் நம்பிக்கையாக இருந்தது என்று ஸட்னர் குறிப்பிடுகிறார்.

ஆனால், இக்கருத்தை முதல் உலகப்போர் பொய்யாக்கியது. அதைப் பார்க்க நோபல் உயிரோடு இல்லை.

மேலும், நோபல், ஆயுதத் தயாரிப்பினையும், உலக அமைதிக்காக பணியாற்றுவதையும் முற்றிலும் இருவேறு விஷயங்களாகப் பார்த்தார். அதில் அவருக்கு முரண்கள் ஏதும் இருக்கவில்லை.

அந்த காலத்தில் பரவலாக இருந்த கருத்தாக்கம், எந்தவொரு அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பும் நல்லதும் அல்ல தீயதும் அல்ல, அவை அது பயன்படுத்தும் முறையிலும் நோக்கத்திலும் தான் உள்ளது. அவை பயன்படுத்தப்படும் முறைக்கும் நோக்கத்திற்கும் கண்டுபிடிப்பாளன் பொறுப்பாக மாட்டான்.

இக்கருத்தையே நோபலும் கொண்டிருந்ததால்தான், அவரால் ஆயுதத் தொழிற்சாலைகளை நடத்திக்கொண்டே உலக அமைதிக்காகவும் செயல்பட முடிந்தது என்கிறார் வரலாற்றாசிரியர் தாகில்.

நோபல் பரிசு, அமைதிக்கான நோபல் பரிசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

1979-ஆம் ஆண்டு அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது

சர்வதேச அளவில் முக்கியம் வாய்ந்த பரிசு

ஆனாலும், ஸட்னர் தன்மீது செலுத்திய தாக்கத்தால், அவர் அறிவியல் துறைகள் மற்றும் இலக்கியத்தோடு சேர்த்து அமைதிக்காகவும் ஒரு பரிசை நிறுவினார். அது இன்றளவும் வழங்கப்பட்டு வருகிறது. (ஸட்னருக்கும் 1905-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.)

இது உலகளவில் மிக முக்கியமான விருதாகப் பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவிலான அரசியல், சமூக நிகழ்வுகளை இப்பரிசு பிரதிபலிப்பதாகவும், நிர்ணயிப்பதாகவும் பல மட்டங்களிலும் பார்க்கப்படுகிறது.

செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. சபை, யுனிசெஃப், போன்ற அமைப்புகளுக்கும், மார்டின் லூதர் கிங், அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா போன்ற செயற்பாட்டாளர்களுக்கும் இந்தப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *