இந்திய தொழிலாளர்களுக்கு தைவானில் எதிர்ப்பு: தமிழர்களை பாதிக்குமா?

இந்திய தொழிலாளர்களுக்கு தைவானில் எதிர்ப்பு: தமிழர்களை பாதிக்குமா?

இந்திய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தைவானில் எதிர்ப்பு: தமிழர்களை பாதிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் இருந்து தைவானுக்கு புலம்பெயர் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இந்த ஆண்டின் (2023) இறுதிக்குள் கையெழுத்திடப்பட வேண்டுமென இந்தியா மற்றும் தைவான் திட்டமிட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக தைவான் ஊடகங்களில் இந்த ஒப்பந்தம் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தைவான் அரசுடன் இணைந்த மத்திய செய்தி நிறுவனம் (Central News Agency- சிஎன்ஏ) டிசம்பர் 10ஆம் தேதியன்று, ஒரு அநாமதேய ஆதாரத்தை மேற்கோள் காட்டி, இரு தரப்பும் 2020ஆம் ஆண்டு முதல் இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது எனவும் கூறியது.

தொழிற்சாலைகள், பண்ணைகள் மற்றும் மருத்துவமனைகளில் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க தைவான் ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தப் போவதாக ப்ளூம்பெர்க் அறிக்கை கூறியது.

இந்த ஒப்பந்தம் பற்றிய செய்திகள் தைவானில் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இனவெறியைத் தூண்டும் கருத்துகள்

இந்தியாவின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தைவானில் எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம், FACEBOOK/X

படக்குறிப்பு,

வேறொரு நாட்டில் இருந்து தொழிலாளர்களை தைவானுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியம் என்ன என்பதை விளக்க இந்த அரசு தவறிவிட்டது.

இதற்கு எக்ஸ், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் கணிசமான விமர்சனங்கள் எழுந்தன. இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் தைவானுக்கு அதிகளவில் வருவது குறித்து இனவெறியைத் தூண்டும் கருத்துகளும் எழுந்தன. அத்தகைய இனவெறி ரீதியிலான கருத்துகள் கவலை அளிப்பதாக இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.

சிஎன்ஏ-வின் ஆங்கில மொழிப் பதிப்பான ஃபோகஸ் தைவான் (Focus Taiwan), இம்மாதத் தொடக்கத்தில் இந்த நடவடிக்கைக்கு எதிரான ஒரு போராட்டத்தைப் பற்றி அறிவித்தது. அந்தப் போராட்டத்தின் அமைப்பாளரான யூனா என்ற பெண், “வேறொரு நாட்டில் இருந்து தொழிலாளர்களை தைவானுக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியம் என்ன என்பதை விளக்க இந்த அரசு தவறிவிட்டது,” என குற்றம் சாட்டினார்.

டிசம்பர் 5 அன்று தைவான் பிரீமியர் சென் சியென்-ஜென், “ஒரு லட்சம் இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய ஆன்லைன் வதந்திகள், வெளிநாட்டு குழுக்களால் வேண்டுமென்றே பரப்பப்பட்ட போலிச் செய்தி” என்று கூறினார்.

இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக அரசாங்கம் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

தைவானின் தொழிலாளர் அமைச்சக தரவுகளின்படி, செப்டம்பர் 2023இன் இறுதியில் தைவானில் ஏறக்குறைய 7,50,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். இதில் பெரும்பான்மையானவர்கள் இந்தோனீசியா (267,194), வியட்நாம் (261,301) மற்றும் பிலிப்பைன்ஸ் (152,026) ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள்.

‘ஆன்லைன் விமர்சனங்களுக்கு பெய்ஜிங்கின் சதியே காரணம்’ – தைவான்

இந்தியாவின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தைவானில் எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்தியாவுடனான தொழிலாளர் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதை தைவான் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தைவானின் வெளியுறவு அமைச்சகத்தின் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நவம்பர் 21 அன்று இடப்பட்ட பதிவில், “இந்திய தொழிலாளர்களை இழிவுபடுத்தும் இனவெறி கருத்துகள் அதிகரித்திருப்பதில், சீனாவின் மக்கள் குடியரசு (People’s Republic of China-PRC) இயக்கத்தின் பங்கு இருப்பதாகத் தெரிகிறது” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய இனவெறி கருத்துகளை புறக்கணிக்குமாறும் தைவான் மக்களை அறிவுறுத்தயுள்ளது.

தைவான் ஒரு “பன்மைத்துவ நாடு” என்றும், இந்தியாவை சேர்ந்தவர்கள் உட்பட பல நாடுகளின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாரபட்சமின்றி நீண்ட காலமாக நாங்கள் அரவணைத்து வருகிறோம் என்றும், “புதிய தென்புறக் கொள்கை” நாடுகளில் இந்தியாவின் நிலையை மேற்கோள் காட்டி, இந்தியாவுடனான தொழிலாளர் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதை தைவான் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு அதிபர் சாய் இங்-வென்னால் தொடங்கப்பட்ட “புதிய தென்புறக் கொள்கை”, தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுடனான நல்லுறவை மேம்படுத்த முயல்கிறது.

டிசம்பர் 5ஆம் தேதி ஒரு அநாமதேய ஆதாரத்தை மேற்கோள் காட்டி சீன மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட சிஎன்ஏ-வின் செய்தியறிக்கை, தைவானின் தொழிலாளர் அமைச்சகத்துடைய ஃபேஸ்புக் பக்கத்தை “திட்டமிட்டு உருவாக்கப்பட்ட செய்திகளை” கொண்டு சீன அரசு தொடர்ந்து “ஸ்பேம்” செய்து வருவதாகக் கூறுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் இந்திய புலம்பெயர் தொழிலாளர்களையும் நிராகரிக்க வேண்டுமென்று சமூக ஊடக கணக்குகள் மூலமாக வலியுறுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

அந்த பெரும்பாலான கணக்குகள் “அசாதாரணமானவை” என்றும், “தனிப்பட்ட செயல்பாடுகள் மற்றும் சமூக வலைப்பின்னல் தடயங்கள் பற்றிய வரையறுக்கப்பட்ட தகவல்கள்” உடையவை என்றும் அந்த அநாமதேய ஆதாரம் கூறியது, மேலும் “புலம்பெயர் தொழிலாளர் பிரச்னை தொடர்பான தவறான கருத்துகளைப் பரப்ப அவை உருவாக்கப்பட்டன” என்றும் அறிக்கை கூறுகிறது.

தைவான்-இந்தியா ஒத்துழைப்பு மோதி அரசின் தலைமையில் மேம்படுத்தப்படுகிறது

இந்தியாவின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தைவானில் எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு,

தைவான்-இந்தியா வேலை ஒப்பந்தம் தைவானுக்கு திறமையான மற்றும் பன்மொழி தொழிலாளர்கள் கிடைப்பதற்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

புரிந்துணர்வு உடன்படிக்கை மட்டுமல்லாது, இந்தியாவிற்கும் தைவானுக்கும் இடையிலான ராஜதந்திர மற்றும் பொருளாதார பரிமாற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் சில ஊடகங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கை அடிக்கோடிட்டும் அவை காட்டுகின்றன.

தைவானில் பணிபுரிய இந்தியர்களைப் பணியமர்த்துவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் “இரு நாடுகளுக்கு இடையிலான உறவை ஆழப்படுத்துவதற்கான மற்றொரு படி” என்று டிசம்பர் 6 அன்று தனது தலையங்கத்தில் கூறியது தைபே டைம்ஸ். இது ஜனநாயக முற்போக்கு கட்சிக்கு ஆதரவான ஆங்கில மொழி செய்தித்தாள்.

“இந்திய அரசாங்கம் சமீபத்தில் ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன் உட்படக் குறைந்தது 13 நாடுகளுடன் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளதால், தைவான்-இந்தியா வேலை ஒப்பந்தம் தைவானுக்கு திறமையான மற்றும் பன்மொழித் தொழிலாளர்கள் கிடைப்பதற்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது,” என்று அது கூறியது.

அடுத்த நாள் மற்றொரு தைபே டைம்ஸ் தலையங்கம், ஜி20இன் தலைவர் (இந்திய பிரதமர் நரேந்திர மோதி) பற்றிய கட்டுரையை “வளர்ந்து வரும் இந்தியா-தைவான் உறவின் வரவேற்கத்தக்க அடையாளம்” என்று பாராட்டியது.

இந்தியாவும் தைவானும் “அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தலைச் சந்திக்கவுள்ளன” என்பதை அது எடுத்துக்காட்டியது. மேலும் மோதியும் சாய்வும், சீனாவின் சவால்களை மிகுந்த உறுதியுடன் எதிர்கொள்கின்றனர். தைவான் ஜலசந்தியில் அல்லது இந்தோ-சீனா எல்லையில் சீனாவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் தொடர்ந்து சீனாவை எதிர்க்க வேண்டுமென்றும் அது வலியுறுத்தியது.

கடந்த மாதம் ஃபோகஸ் தைவான், இந்திய ஆய்வுகளுக்கான லாப நோக்கற்ற தைவான் சங்கம் குறித்த ஒரு செய்தியை வெளியிட்டது. இந்திய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு படிப்படியாகத் துறைகளைத் திறக்க அரசாங்கத்தை அந்தச் சங்கம் ஊக்குவிப்பதாகவும், அதே நேரத்தில் பரஸ்பர புரிதலை மேம்படுத்த இரு நாடுகளுக்கும் இடையே அதிக பரிமாற்றங்களின் அவசியத்தையும் சங்கம் வலியுறுத்துகிறது எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டது.

டெல்லி-தைபே இணைப்புகளை எதிரொலிக்கும் இந்திய ஊடகங்கள்

இந்தியாவின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தைவானில் எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தைவானின் 790 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய நடவடிக்கை இது.

இந்தியாவில் உள்ள பல ஊடகங்களும் இரு நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் நல்லுறவை எடுத்துரைத்து வருகின்றன.

தொழிற்சாலைகள், பண்ணைகள் மற்றும் மருத்துவமனைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்ப ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களை தைவான் வேலைக்கு அமர்த்துவது பற்றிய ப்ளூம்பெர்க் அறிக்கையை பெரும்பாலான ஊடகங்கள் மேற்கோள் காட்டின.

“தைவானின் 790 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய நடவடிக்கை இது” என்று தனியார் செய்தி சேனலான WIONஇன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை, “கடந்த சில ஆண்டுகளாக புது டெல்லி மற்றும் தைபே இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளன. இருதரப்பு வர்த்தகம் உயர்ந்து வருகிறது, வர்த்தகத்தின் அளவு 2006இல் இரண்டு பில்லியன் டாலர்களில் இருந்து 2021இல் 8.9 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது” என்று கூறுகிறது.

தைவான் வாழ் தமிழர்கள் கூறுவது என்ன?

இந்தியாவின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தைவானில் எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தைவானியர்கள் ‘ தைவான் தைவானியர்களுக்கே’ என்ற கொள்கையுடையவர்கள்.

தற்போதைய சர்ச்சைகள் தைவானில் வாழும் இந்தியர்கள் மத்தியில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிந்துகொள்ள அங்கு வாழும் தமிழர்கள் சிலரிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது, “தைவான் ஒரு அமைதியான மற்றும் பாதுகாப்பான நாடு என்று கூறுகின்றனர் தமிழர்கள் சிலர்.

“தைவானியர்களை பொறுத்தவரை ‘ தைவான் தைவானியர்களுக்கே’ என்ற கொள்கையுடையவர்கள். இங்கு சீனாவின் செல்வாக்கைக் குறைக்கவே இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் பணியாளர்களை இங்கு கொண்டு வர இந்திய அரசோடு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக,” அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் கடந்த மாதம் இந்தியர்கள் குறித்த இனவெறி சர்ச்சை எழுந்த போதும் அதில் சீனாவின் தலையீடு இருக்கலாம் என்றும், தைவான் அரசால் அந்த சர்ச்சை தீர்க்கப்பட்டுவிட்டது என்றும் கூறுகின்றனர் தைவான் வாழ் தமிழர்கள்.

மேலும், இங்கு வாழும் 7000த்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலரும் கல்வியிலும், பணியிடங்களிலும் உயரிய இடங்களில் இருப்பதால் இரு நாடுகளின் முடிவுகள் பெரியளவில் தங்களைப் பாதிக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *