மத்திய பிரதேசம்: சட்டமன்ற தேர்தலில் பாஜக எடுத்துள்ள ‘விபரீத முடிவுக்கு’ பலன் கிடைக்குமா?

மத்திய பிரதேசம்: சட்டமன்ற தேர்தலில் பாஜக எடுத்துள்ள 'விபரீத முடிவுக்கு' பலன் கிடைக்குமா?

நரேந்திர சிங் தோமர்

பட மூலாதாரம், SANDEEP YADAV/BBC

படக்குறிப்பு,

மத்திய பிரதேசத்தில் நிலவி வரும் கோஷ்டி பூசல் காரணமாக தேர்தல் வியூகம் வகுக்க நரேந்திர சிங் தோமர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

மத்திய பிரதேசத்தின் மொரீனாவில் இருந்து திமானி செல்லும் சாலை முழுவதும் நேற்று நெரிசலாக இருந்தது. வழிநெடுகிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 22 கி.மீ. தூரம்தான் என்றாலும் காலை முதலே வாகனங்கள் வரிசையில் நின்றன.

நேற்று ஒரு சிறப்பு நாள். மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தெடுக்கப்பட்ட பின்னர், மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று முதல் முறையாக தனது சட்டமன்றத் தொகுதிக்குச் சென்றார்.

அவர் மொரீனாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி). அந்த மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் நேற்று அங்கு செல்லவிருந்ததால், மக்களின் பார்வை சாலையில் வரும் வாகனங்களை நோக்கியே இருந்தது.

பா.ஜக. தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்த நேற்று திமானியில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குவாலியர்-சம்பல் பிரிவு மாநில அரசியலின் முக்கியமான பகுதியாகும்.

காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுடைய அரசியலின் கோட்டையாகவும் இது கருதப்படுகிறது.

ஆனால், ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து வலிகி, தனக்கு ஆதரவான 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பிறகு, இந்தப் பகுதியில் அனைத்து அரசியல் கணக்குகளும் வேகமாக மாறியது.

பாஜகவுக்குள் அதிருப்தி வளரத் தொடங்கி, கோஷ்டி பூசல் அதிகரிக்கத் தொடங்கியது.

பாஜக

பட மூலாதாரம், SANDEEP YADAV/BBC

மத்திய அமைச்சர்களுக்கும், எம்பி.க்களுக்கும் அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை

இந்த கோஷ்டி மோதலைக் கட்டுப்படுத்த மத்திய பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகம் வகுக்க மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரை ஒருங்கிணைப்பாளராக பா.ஜ.க.வின் உயரதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அவர் நீண்ட காலமாக மாநில அரசியலில் இருந்து விலகியிருந்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, மத்திய அமைச்சரவையில் விவசாய அமைச்சராக சேர்க்கப்பட்டார்.

அவரது பதவிக்காலத்தின் பெரும்பகுதி விவசாயிகள் இயக்கத்தைக் கையாள்வதில் கழிந்தது.

ஒரு மாதத்திற்கு முன்பு பிபிசியிடம் பேசியபோது, ​​அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார். மாநில அரசியலுக்குத் திரும்பிய பிறகு தனக்கான தேர்தல் வியூகத்தை உருவாக்கத் தொடங்கினார்.

ஆனால், பாஜக வேட்பாளர் பட்டியலில் முதல் பெயராக அவரது பெயர் இடம்பெற்றிருந்தது. இது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த முடிவு குறித்து அவருக்கு எந்த முன் அறிவும் இல்லை. அது தொடர்பாக அவரிடம் இருந்து எந்த ஆலோசனையும் எடுக்கப்படவில்லை என்று அவருக்கு நெருக்கமான தலைவர்கள் கூறினர்.

இதனால், அதிருப்தியில் இருந்த அவரும், தனது சட்டமன்ற தொகுதியான திமானியில் இருந்து விலகியிருந்தார்.

எம்.எல்.ஏ போட்டியில் எம்.பி.க்கள்

பாஜக

பட மூலாதாரம், SANDEEP YADAV/BBC

படக்குறிப்பு,

தோமரை தவிர, பிரதமர் நரேந்திர மோதியின் அமைச்சரவையில் இருந்த அவரது சக அமைச்சர்களான ஃபக்கன் சிங் குலாஸ்தே பிரஹலாத் படேல் ஆகியோர் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலில், 3 மத்திய அமைச்சர்கள், மற்றும் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா உள்பட மொத்தம் 7 எம்பி.க்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இது மாநில அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோமரை தவிர, பிரதமர் நரேந்திர மோதியின் அமைச்சரவையில் இருந்த அவரது சக அமைச்சர்களான ஃபக்கன் சிங் குலாஸ்தே, பிரஹலாத் படேல் ஆகியோர் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், மாநில அரசியலில் அதற்கு முன்பாக இருந்த அனைத்து அரசியல் கணக்குகளும் தலைகீழாக மாறியது.

மூத்த பத்திரிக்கையாளரும் அரசியல் ஆய்வாளருமான தேவ் ஸ்ரீமாலி குவாலியரில் பிபிசியிடம் பேசுகையில், தேர்தலில் களமிறங்கியுள்ள அனைத்து பெரிய தலைவர்களும் இந்த முடிவால் அதிருப்தியில் உள்ளனர் என்றார்.

அவர்களில் சிலர் ஐந்து முறையும், சிலர் ஆறு முறையும் எம்.பி.யாக இருந்தவர்கள் என்றார், தேவ் ஸ்ரீமாலி.

தொடர்ந்து பேசிய தேவ்ஸ்ரீமாலி, ​​“கடந்த 15-20 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தில் பாஜக தலைமையின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது. இப்போது, அக்கட்சி, தனது சொந்த தலைவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதன் பின்னணியில் உள்ள உத்தி என்ன என்பதை கட்சி இன்னும் தெளிவுபடுத்தவில்லை,” என்றார்.

பாஜக.வின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்கா’ இந்த முடிவு?

பாஜக.

பட மூலாதாரம், SANDEEP YADAV/BBC

படக்குறிப்பு,

பாரதிய ஜனதா கட்சி முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காததால், பெரிய தலைவர்களின் ஆதரவாளர்கள் அதிக நம்பிக்கையில் உள்ளனர்.

திமானியின் படேகானில் வசிக்கும் ஆகாஷ் தோமரும் கட்சியின் முடிவால் ஆதிர்ச்சியில் உள்ளார்.

நரேந்திர சிங் தோமர் மாநில அரசியலின் மூலம் நாட்டின் அரசியலை எட்டியிருக்கிறார் என்கிறார்கள் அங்கிருந்தவர்கள். அப்படிப்பட்ட மூத்த தலைவரையும், மத்திய அமைச்சரையும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வைப்பது சரியல்ல என ஆகாஷ் உட்பட அவருடன் இருந்தவர்கள் கருதுகிறார்கள்.

படேகான் பகுதியில் உள்ள ஒரு சந்தையில், அங்கிருந்த கட்சிக்காரர்களும், பொது மக்களும், ‘நரேந்திர சிங் தோமர் அப்படி என்னதான் செய்தார்’ என அவர்களுக்குள் ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.

மாநிலத்தில் நடந்து வரும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை குறித்தும் ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.

அங்குள்ள பாஜக தொண்டர் சோனு தோமர் கூறுகையில், “நரேந்திர சிங் தோமரை களமிறக்குவது, மாநிலத்தில் கட்சிக்குள் நிலவி வரும் உட்கட்சி பூசலைச் சமாளிக்க கட்சிக்கு ஏற்பட்ட மாஸ்டர் ஸ்ட்ரோக்காக இருக்கும்.

பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காததால், பெரிய தலைவர்களின் ஆதரவாளர்கள் அதிக நம்பிக்கையில் உள்ளனர்,” என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர், ​​“சட்டமன்றத் தேர்தலில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்ஜிக்கு கட்சி புதிய பொறுப்பை வழங்கியுள்ளது. எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட அவர் களமிறக்கப்பட்டுள்ளார். அவரை நல்ல வாக்குகளால் வெற்றி பெறச் செய்ய வேண்டும். பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த உற்சாகம் நிலவுகிறது. நரேந்திர சிங் தோமர்ஜி திமானியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக அனுப்பப்படுவார்,” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

மத்தியப் பிரதேசத் தேர்தல்

பட மூலாதாரம், SANDEEP YADAV/BBC

படக்குறிப்பு,

திமானியில் மொத்தம் 2,01,517 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 89,234 பெண்கள் உள்ளனர்.

அங்கிருந்த தொழிலதிபர் ராஜு ஜெயின் கூறுகையில், “நான் வாக்களிக்க ஆரம்பித்ததில் இருந்து பாஜகவுக்கு மட்டுமே வாக்களித்தேன். ஆனால் இந்த முறை இல்லை. மாற்றத்தை விரும்புகிறோம். அரசாங்கம் எங்களுக்காக எதுவும் செய்யவில்லை,” என்றார்.

கடந்த இடைத் தேர்தலில் பாஜக இந்தத் தொகுதியை இழந்தது. இங்கு காங்கிரஸின் தற்போதைய எம்.எல்.ஏ.வும் தோமர்தான். அவர் பெயர் ரவீந்தர் சிங் தோமர்.

திமானியில் மொத்தம் 2,01,517 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 89,234 பெண்கள் உள்ளனர். தோமர் சமூகத்தின் வாக்குகள் சுமார் 65,000 இருக்கும்.

ஆனால் இரண்டு தோமர்கள் களமிறங்கியுள்ள நிலையில், அனைவரது பார்வையும் பட்டியல் சாதியினரின் 48,000 வாக்குகள் மீதுதான் உள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் இங்கு அதிகம் இருப்பதால், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இங்கு இருப்பது தேர்தல் போட்டியை இன்னும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.

யார் இந்த நரேந்திர சிங் தோமர்?

நரேந்திர சிங் தோமர்

பட மூலாதாரம், SANDEEP YADAV/BBC

நரேந்திர சிங் தோமர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். முழு மனதுடனா அல்லது அதிருப்தியுடனா என்பதைப் பற்றித்தான் தற்போது விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் அவருடைய முந்தைய அணுகுமுறைக்கும் இன்றைய அணுகுமுறைக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாகத் தெரிகிறது.

திமானியில் அவர் தனது தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைக்கும் நேரத்தில் அன்றைய தினமே முடிந்திருந்தது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது.

அவருடன் நடந்த உரையாடலை, மொபைல் ‘டார்ச்’ வெளிச்சத்தில், கேமராவில் பதிவு செய்யும்போது, ​​’இவ்வளவு இடைவெளிக்குப் பின், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது, தனக்கு வித்தியாசமான அனுபவம்’ என்பதை ஒப்புக் கொண்டார்.

பிபிசியிடம் பேசிய அவர், “மக்களவையில் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளேன். 15 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம் வித்தியாசமான அனுபவம்.

ஆனால், கட்சி எனக்கு அவ்வப்போது உத்தரவுகளை அளிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் கட்சியின் உத்தரவைப் பின்பற்றுவது எனது பாக்கியம் மற்றும் எனது பொறுப்பு,” என்றார்.

நரேந்திர சிங் தோமருக்கு தேர்தலில் போட்டியிடுவது பெரிய விஷயமல்ல. ஒரு காலத்தில் இந்தத் தேர்தல் போர்க்களத்தின் தளபதியாக இருந்தவர் அவர் என்பதுதான் வித்தியாசம்.

அதாவது, மாநிலம் முழுவதும் தேர்தல் வியூகம் வகுக்கும் ஒருங்கிணைப்பாளராக ஆக்கப்பட்டுள்ளார். அவர் மற்ற தலைவர்களுக்காக பிரசாரம் செய்தார். இப்போது ராணுவ வீரர் போல் போராடி வருகிறார்.

“போர்க்களத்தில் இருக்கும்போது, ​​​​பல வகையான வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. களத்தில் இருக்கும் ஒரு சிப்பாயும் அந்த வியூகத்தின்படி நிற்க வேண்டும்,” என்று அவர் வாதிட்டார்.

கடந்த முறை இந்தத் தொகுதியில் பாஜக தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. இம்முறையும் இங்கிருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவீந்திர சிங் தோமருக்கு கடும் சவால் உள்ளது.

ரவீந்திர சிங் தோமர் பிபிசியிடம் பேசியபோது, ​​“மத்திய அமைச்சரை திமானிக்கு அனுப்புவது பாஜகவுக்கு பயமாக இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இரண்டரை ஆண்டுகளாக எம்எல்ஏவாக உள்ளேன். அந்த பயத்தின் காரணமாக பாஜகவில் இருந்து எந்த வேட்பாளரும் உருவாகவில்லை. தற்போது, இதற்காக மத்திய அமைச்சரை அழைத்து வந்துள்ளனர்,” என்றார்.

ஃபக்கன் சிங் குலாஸ்தேவுக்கு இருக்கும் சவால்கள் என்ன?

ஃபக்கன் சிங் குலாஸ்தே

பட மூலாதாரம், SANDEEP YADAV/BBC

திமானியில் இருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள மாண்ட்லாவை சேர்ந்த நான்கு முறை எம்.பி.யும், பழங்குடியினத் தலைவருமான ஃபக்கன் சிங் குலாஸ்தே, 1990க்குப் பிறகு தனது சொந்த மாவட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இவர் மத்திய இணை அமைச்சராக உள்ளார். கொளுத்தும் வெயிலிலும் ஒரு கிராமத்துக்குப் பிரசாரத்துக்கு சென்றார்.

அவரிடம் ஒரு சில வாகனங்கள் மட்டுமே உள்ளன. வழியில் சிறு கிராமங்களில் நின்று ஊர் மக்களிடம் பேசி வந்தார். அவர்களிடம் வாக்கு கேட்டார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் நிவாஸ் தொகுதியில் பாரதிய ஜனதா தோல்வியைs சந்திக்க நேரிட்டது.

எனவே, குலாஸ்தேவுக்கான பாதை அவ்வளவு எளிதானது அல்ல. இந்த முறை களமிறங்குவார் என்று அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

கால அவகாசம் குறைவு, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான இலக்கு பெரியது. ஏனெனில் இந்தத் தேர்தலில் வெற்றி தோல்வியைப் பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும் என நம்பப்படுகிறது.

அப்படியொரு தேர்தல் கூட்டத்தின்போது மேடையில் பேசும்போது, ​​எம்.பி.யாக இருந்து பல பணிகளைச் செய்துள்ளேன் என்று கூறிக்கொண்டே இருந்தார்.

“பாருங்கள், நான் என்னை ஒரு பொது பிரதிநிதியாகக் கருதியதில்லை. நான் எப்போதும் ஒரு சமூக சேவகியாகவே பணியாற்றி வருகிறேன். அதனால்தான் நான் எந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்பது எனக்கு முக்கியமில்லை. நான் எம்பி.யாக உள்ளேன். இன்று நானும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன்.

எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. என்னைப் பற்றி இங்கு கூடியிருந்தவர்களிடம் கேட்கலாம். ஒரு சாதாரண குடிமகனைப் போல, நான் மக்களுடன் தொடர்ந்து பேசுகிறேன், மக்களின் முன்னேற்றத்திற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்ல்கிறேன்,” என அந்தக் கூட்டத்தில் பேசினார்.

அந்த உரையாடலில், தேர்தலில் போட்டியிடப் போவது குறித்து தனக்குத் தெரியாது என்பதையும் ஒப்புக்கொண்டார். அதாவது அவரது சம்மதத்திற்காக கட்சியில் இருந்து யாரும் கேட்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

அமைச்சரின் கூட்டம் முடிந்து ஜபல்பூருக்கு புறப்பட்டார், அங்கிருந்து டெல்லிக்கு விமானம் பிடிக்க வேண்டும். நாங்களும் அவரைப் பின்தொடர்ந்து ‘நெடுஞ்சாலை’யில் புறப்பட்டோம். வழியில் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு கடையில் பகதூர் சிங் நரேட்டியை சந்தித்தோம்.

அப்போது பிபிசியிடம் பேசிய நரேதி, “மத்திய அமைச்சருக்கு ஒரு எம்.எல்.ஏ இடம் கிடைத்துள்ளது. அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டமன்றத் தேர்தல் அரசியலில் அவர் 35 ஆண்டுகளாக உள்ளார். வளர்ச்சி இருந்திருந்தால், தேர்தலில் போட்டியிட இடம் கிடைக்கும்,” என்றார்.

வினோத் குமார் மராவி

அருகிலுள்ள மற்றொரு கிராமத்தில், வெளிப்படையாகப் பேச விரும்பும் வினோத் குமார் மராவியை சந்தித்தோம்.

பிபிசியிடம் பேசிய அவர், “கடந்த முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது நிவாஸ் சட்டமன்றத் தொகுதியில் குறைவான வாக்குகளே பெற்றிருந்தார். அவர் இங்கு வசிப்பவர்.

அவர் இந்த சட்டமன்றத் தொகுதியில் வசிப்பவர் மட்டுமே. அவர் குடியிருக்கும் சட்டமன்ற தொகுதியில் வாக்களிக்கும் வாய்ப்பு குறைவு. இந்த முறை பாஜக பதற்றத்தில் உள்ளது. எல்லா உத்திகளையும் முறியடித்தாலும் வெற்றி பெறுவது கடினம்,” என்றார்.

ஆனால், பாஜக வேட்பாளருக்கு ஏதேனும் ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றால், அது நரசிங்பூரில் இருந்துதான். மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை மற்றும் ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் களமிறக்கப்பட்டார் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

பிரஹலாத் சிங் படேலின் அரசியல் எதிர்காலம் என்ன?

பிரஹலாத் சிங்

பட மூலாதாரம், SANDEEP YADAV/BBC

பிரஹலாத் சிங் படேல் அன்று இரவை சாகோன் காட் கரையில் வசிக்கும் மல்லாஹ் சமூகத்தினருடன் கழித்தார்.

அதற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்தது. இரவு தங்க வேண்டிய வீடு சுத்தம் செய்யப்பட்டது. அங்கு ஓவியம் வரையப்பட்டது.

அவர் வந்தவுடன் கலாசார நிகழ்ச்சிகளும் ஆரம்பமாகின. அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இசைக்கருவிகளுடன் வந்து மேளம் முழங்க மத்தியில் அமைச்சர் மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

பிரஹலாத் படேல் முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான கமல்நாத்தை எதிர்த்து சிந்த்வாரா சட்டமன்றத் தொகுதியில் அவர் போட்டியிட முன்மொழியப்பட்டது.

ஆனால் அவர் தனது சகோதரர் ஜலம் சிங் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் நரசிங்பூரில் போட்டியிடுவது நல்லது என்று நினைத்தார்.

கடந்த 1989ஆம் ஆண்டு முதல் நாடாளுஸஅன்ற உறுப்பினராக இருந்து வரும் பிரஹலாத் படேல், மத்திய பிரதேச அரசியலிலும், நாடாளுமன்ற அரசியலிலும் மூத்தவர். ஆனால் அவருக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் இல்லை.

இருப்பினும், கட்சியின் முடிவுக்குப் பிறகு, அவர் களத்தில் இறங்கினார். அவருக்கு அவரது சகோதரர் ஜலம் சிங் படேல் ஆதரவைத் திரட்டியுள்ளார்

பாஜக/ காங்கிரஸ்

பட மூலாதாரம், SANDEEP YADAV/BBC

சைகோனை அடைவதற்கு முன்பு கரேலியில் பிரஹலாத் படேலை சந்தித்தோம். தேர்தலில் வேறு இடத்திலிருந்து போட்டியிட வேண்டும் என்று கூறினார்.

அவர் பிபிசியிடம் பேசியபோது, ​​“நான் வேறு இடத்தில் போட்டியிட வேண்டியிருந்தது. நானும் சரி என்றேன். ஆனால் அவர் (அவரது சகோதரர்) இரண்டு சகோதரர்கள் ஒன்றாகப் போட்டியிடக்கூடாது என்றார். நீங்கள் போட்டியிட்டால் நான் போட்டியிட மாட்டேன் என்று கூறினார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு நான் எனது சொந்த ஊருக்குத் திரும்பினேன்,” என்றார்.

மற்ற இரண்டு மத்திய அமைச்சர்களுடன் ஒப்பிடும்போது, ​​டாமோ எம்.பி., பிரஹலாத் சிங் படேலுக்கு வெற்றிப்பாதை கடினமாக இருக்காது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால் ஜலம் சிங் தனது இருக்கையை தியாகம் செய்ய வேண்டும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கு மனதளவில் தயாராகிவிட்ட ஜலம் சிங், “நானும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் அவரும் (பிரஹலாத் சிங் படேல்) வேறு ஏதாவது மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் கட்சி கூறியுள்ளது. ஆனால் அவருக்கு நரசிங்கபுரத்தில் இருந்து சீட்டு கொடுக்க வேண்டும் என்று கட்சியிடம் கோரிக்கை விடுத்தேன்.

ஏனென்றால், அவர் ஒரு சிறந்த தலைவர். கொள்கை ரீதியானவர். எங்கள் மாவட்டத்திற்கு அவர் தேவைப்பட்டார். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால், கட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார் ஜலம் சிங்.

பிரஹலாத் சிங் படேல்

பட மூலாதாரம், SANDEEP YADAV/BBC

பிரஹலாத் சிங் படேலின் நாடாளுமன்றத் தொகுதியானது தாமோ மற்றும் பாலகாட் ஆகும். அவர் முதலில் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயின் அமைச்சரவையில் உறுப்பினரானார்.

இது 1989ஆம் ஆண்டிலிருந்து அதாவது நாடாளுமன்ற அரசியலில் நரேந்திர மோதி மற்றும் அமித் ஷாவைவிட மூத்தவர். மாநில அரசியலைப் பற்றிப் பேசினால், சிவராஜ் சிங் சவுகான்தான் மூத்தவர்.

பிபிசியுடனான கலந்துரையாடலின்போது, ​​மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு எதிரான அலையைவிட, கட்சிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளன என்று அவர் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “ நடப்பு ஆட்சிக்கு எதிரான மனநிலை, ஆதரவான மனநிலை என்ற சொற்களை மாற்ற வேண்டும். மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். மக்களிடம் இருந்து எந்த எதிர்ப்பு இல்லை. கட்சியினருக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்திகள், ஆட்சிக்கு எதிரான மனநிலையாகக் கருத முடியாது. எங்களது செயல்பாட்டில் போதாமை இருக்கலாம். கட்சி அதைக் கவனிக்கிறது.

விரைவில் சரியாகும் என நம்புகிறேன். ஆனால், நாங்கள் 18 ஆண்டுகளாக மாநில அரசியலில் உள்ளோம். நாங்கள் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும். ஒரு முறை வெற்றி பெற்றால், அது பெரிய விஷயமில்லை. ஆனால், மீண்டும் வெற்றி பெறுவது கடினம் என அடல்ஜி கூறியுள்ளார்,” என்றார் சிங்ராஜ் சிங் சவுகான்.

அரசியல் ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

பாஜக/ காங்கிரஸ்

பட மூலாதாரம், SANDEEP YADAV/BBC

கடந்த சட்டமன்றத் தேர்தலில்கூட பாரதிய ஜனதா ஆட்சிக்கு எதிரான அலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கடந்த தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்திக்க வேண்டியிருந்தது. இம்முறையும் அதே நிலை நீடிப்பதால் காங்கிரஸுக்கு கொஞ்சம் கடுமையானதாகத் தோன்றியிருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், கடந்த முறை போலவே காங்கிரஸ் தனது செயல்திறனைத் தக்க வைத்துக்கொள்ள விரும்பினால், அது மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.

காங்கிரசை நீண்ட காலமாகக் கவனித்து வரும் மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான ரஷித் கித்வாய், அதீத நம்பிக்கையின் வலையில் சிக்காமல் இருப்பதே காங்கிரஸின் முன் உள்ள மிகப்பெரிய சவால் என்கிறார்.

அதீத நம்பிக்கை எப்போதுமே காங்கிரஸில் ‘பெரிய சவாலாக’ இருந்து வருகிறது என்று கித்வாய் பிபிசியிடம் கூறினார். “சில நேரங்களில் அதில் அதிகமாக சிக்கிக் கொள்கிறார்கள். காங்கிரஸின் பெரிய தலைவர்கள் கூட மற்றவர்களின் தவறுகளால் வெற்றி பெறுவோம் என்று நம்பத் தொடங்குகிறார்கள். ஆனால் அது அப்படி இல்லை,” என்றார்.

தொடர்ந்து பேசிய ரஷித் கித்வாய், “காற்று தனக்கு சாதகமாக இருப்பதாக இப்போது காங்கிரஸ் கருதுவதால், அது கோஷ்டிவாதம், சாதிவெறி மற்றும் உணர்ச்சிப் பிரச்னைகளைத் தவிர்க்க வேண்டும். மதப் பிரச்னைகளைப் போலவே, இது மிகப்பெரிய சவால். கமல்நாத் தனது இந்து தரப்பை பலப்படுத்தியுள்ளார்.

ஆனால், 92 சதவீத மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டின் மிகச் சில மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்று என்பதால், இந்த விஷயத்தில் பாஜக மிகவும் முன்னிலையில் உள்ளது. மேற்கு ஆசியாவில் இப்போது என்ன நடக்கிறது. ‘ஹமாஸ் மற்றும் உலகெங்கிலும் உள்ள விஷயங்கள் இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்,” என்றார்.

ஆனால், இந்த முறை முன்பைவிட சிறப்பாக ‘ஹோம் வொர்க்’ செய்த பிறகே களம் இறங்கியுள்ளதாக காங்கிரஸ் கூறுகிறது.

மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்பி.க்களை தேர்தலில் நிறுத்துவது பாரதிய ஜனதாவுக்கு எதிரான சூழலை உருவாக்குவதாகவும் அவர் நம்பினார்.

என்ன சொல்கிறது காங்கிரஸ்?

காங்கிரஸ்

பட மூலாதாரம், SANDEEP YADAV/BBC

மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் கூறுகையில், “பாஜகவில் நிலவும் கோஷ்டி பூசல் காங்கிரசுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எங்களைப் பொறுத்தவரை இதுவொரு வெற்றிகரமான சூழ்நிலை. மத்திய பிரதேசத்தில் சிவராஜ் பாஜக, மகாராஜ் பாஜக, நாசர் பாஜக என மூன்று பாஜக.க்கள் உள்ளன. எனவே, நீங்கள் பார்க்கப் போகும் பாரதிய ஜனதா கட்சியின் இந்த மூன்று பிரிவுகளும், இவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களையும் குறிப்பாக இந்தப் பெரிய பிம்பத்தின் தலைவர்களையும் தோற்கடிப்பதில் ஈடுபடுவார்கள்,” என்றார்.

மேலும், சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் மத்திய தலைவர்களின் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஏனென்றால், சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் மக்களவைத் தேர்தலும் உடனடியாக நடைபெற உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சட்டமன்றத்தில் அவர் வெற்றி பெறுவதைப் பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும்.

அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சட்டமன்றத் தேர்தல்

தேவ் ஸ்ரீமாலி.

பட மூலாதாரம், SANDEEP YADAV/BBC

படக்குறிப்பு,

பாஜக எம்.பி.க்கள் தங்கள் எதிர்காலத்தை வைத்து ஒருவித சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள், என்றார் மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் ஆய்வாளருமான தேவ் ஸ்ரீமாலி.

மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் ஆய்வாளருமான தேவ் ஸ்ரீமாலி கூறுகையில், “சட்டமன்ற தேர்தல் முடிவுகள், மூன்று மத்திய அமைச்சர்களுக்கு மட்டுமல்ல, இப்பகுதியில் களமிறங்கிய நான்கு எம்.பி.க்களுக்கும் சவாலாக உள்ளது. அவர்கள் அனைவரும் இதற்குத் தயாராக இல்லை,” என்று அவர் கூறுகிறார்.

ஸ்ரீமாலியின் கூற்றுப்படி, “அவர்களின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற விவாதம் நடந்து வருகிறது. ஆனால், இந்தக் கேள்விகளுக்கு பாரதிய ஜனதா கட்சி இன்னும் பதில் அளிக்கவில்லை. கேள்வி என்னவென்றால், அவர்கள் வெற்றி பெற்றால், அவர்களின் பங்கு என்னவாக இருக்கும்?

நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டார்களா? இந்தக் கேள்விகளை கட்சிக்காரர்கள் மட்டும் கேட்கவில்லை, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எம்.பி.க்களும் இதைத்தான் கேட்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்றால் அவரது மக்களவைத் தொகுதியில் அவருக்கு சீட்டு கிடைக்குமா என்பதுகூடத் தெரியவில்லை. அவர்கள் தங்களின் அரசியல் வாழ்க்கையின் எந்தக் கட்டத்தில் இருந்தாலும், பாஜக எம்பி.க்கள் தங்கள் எதிர்காலத்தை வைத்து ஒருவித சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்,” என்றார் அவர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *