
பட மூலாதாரம், Getty Images
இந்திய வம்சாவளி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெய்பால்
சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிகில் குப்தா பற்றி அமெரிக்க அரசாங்கம் ஐந்து இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் அளித்துள்ளது.
இந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக கொலை செய்யப்படவிருந்த பிரிவினைவாத தலைவர் பற்றிய தகவலை அமெரிக்க அரசு தரப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இந்திய மற்றும் சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, வழக்கறிஞர் மற்றும் சீக்கிய பிரிவினைவாத தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுவைக் கொலை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பன்னூனைக் கொலை செய்ய பணம் கொடுத்ததாக நிகில் குப்தா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.க்கள் அமி பெரா, பிரமிளா ஜெய்பால், ரோ கண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஸ்ரீ தானேதர் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். நிகில் குப்தா மீதான குற்றச்சாட்டு குறித்து பைடன் நிர்வாகம் நடத்திய ரகசிய விசாரணைக்குப் பிறகு எம்.பி.க்கள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
அதில், ‘‘நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில், நமது குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு நாங்கள் மிகப்பெரிய முன்னுரிமை அளிக்கிறோம். நிகில் குப்தா மீதான அமெரிக்க அரசின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையில் கவலையளிக்கின்றன,’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், ‘பன்னூன் கொலைச் சதி குறித்து விசாரிக்க குழு அமைக்க இந்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதனுடன், இந்திய அரசு இந்த விஷயத்தை முழுமையாக ஆய்வு செய்வதும் முக்கியம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட அனைவரையும் பொறுப்பேற்க வைத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று இந்திய அரசு உத்தரவாதம் அளிக்கும் என நாங்கள் நம்புகிறோம்,’’ என்று தெரிவித்துள்ளனர்.
இந்தியா – அமெரிக்கா உறவில் சிக்கல் வருமா? அமெரிக்க எம்.பி.க்கள் எச்சரிக்கை
ஐந்து எம்.பி.க்களின் அறிக்கையில், ‘இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களின் வாழ்க்கையில் சாதகமான, நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் கவலையளிக்கும் வகையில் உள்ளன என்பதும், கவனிக்கப்படாவிட்டால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முக்கியமான உறவுகளுக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதே எங்கள் கவலையாக இருக்கிறது,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பைடன் நிர்வாகம் தங்களுக்கு வெளிப்படையாக பல தகவல்களை அளித்துள்ளதற்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இந்த எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.
52 வயதான நிகில் குப்தா பணம் கொடுத்து கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குப்தாவுக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொலை செய்ய ஒரு கொலையாளிக்கு சுமார் 80 லட்சம் ரூபாய் தருவதாக குப்தா உறுதியளித்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பன்னூன் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார்.
அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் ஜூன் 30 அன்று செக். குடியரசு நாட்டில் குப்தா கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்த இந்திய அரசு ஏற்கனவே ஒரு குழுவை அமைத்துள்ளது.
இதற்கிடையில், காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘சீக் ஃபார் ஜஸ்டிஸ்’, இந்திய-அமெரிக்க எம்.பி.-க்களுக்கு பைடன் நிர்வாகம் வழங்கிய விளக்கத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.
‘சீக் ஃபார் ஜஸ்டிஸ்’ அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பன்னூன் இது குறித்துக் கூறுகையில், ‘’அமெரிக்க எம்.பி.-க்கள் அமெரிக்க குடிமக்களின் உயிர்களையும், அமெரிக்காவிலும் அதற்கு அப்பாலும் அவர்களின் கருத்து சுதந்திரத்தையும் பாதுகாக்க தயாராக உள்ளனர் என்பதற்கு இது உறுதியளிக்கும் நடவடிக்கையாகும். உண்மையில் இதுவே அமெரிக்க ஜனநாயகத்தின் அடிப்படை,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
நிகில் குப்தா இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் நிகில் குப்தா மனு
இந்நிலையில், இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிகில் குப்தா ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் மீதான குற்றச்சாட்டு குறித்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கில் வாதிட்டு வரும் வழக்கறிஞர் ரோகினி மூசா கூறுகையில், ஜனவரி 4-ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தெரிவித்தார்.
நிகில் குப்தா, தான் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய ரோகினி மூசா, “அவருக்கு எதிராக நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவு நகல் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அவர் நாடு கடத்தப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர்களிடமிருந்து எந்தத் தகவலையும் பெறவோ அல்லது அவர்களைப் பற்றி எதுவும் அறியவோ முடியாத நிலைதான் உள்ளது,” என்றார்.
நிகில் குப்தாவின் குடும்பத்தினரால் அவருக்கு எந்தவிதமான உதவியும் செய்ய முடியவில்லை என்றும் மூசா கூறுகிறார்.
குப்தாவின் குடும்பத்தினர், அவர் எந்தவிதமான கைது வாரண்டும் இன்றி ‘அமெரிக்காவின் பிரதிநிதிகள் என தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக் கொண்ட அமெரிக்க ஏஜெண்டுகளால்’ கைது செய்யப்பட்டதாகக் கூறுகின்றனர். அமெரிக்காவின் சார்பில் கைது செய்யப்பட்ட அவருக்கு இதுவரை நியாயமான சட்ட நடவடிக்கைகள் அல்லது உதவிகள் எதுவும் அளிக்கப்படாமல் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட நிலையில் அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகில் குப்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்தப்பட்டதாக புகார்
அவர் தனது மத நம்பிக்கைகளுக்கு முரணாக மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை உண்ணும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம், நியூயார்க் நகரில் ஒரு அமெரிக்க குடிமகனை கொலை செய்ய சதி செய்ததாக அமெரிக்க நீதிமன்றம் அவர் மீது குற்றம் சாட்டியது.
தான் அரசியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், யாரையும் அறியாத, யாருக்கும் தெரியாத அமெரிக்க குடிமகனைக் கொலை செய்வதற்கு இந்திய அரசுடன் கூட்டுச் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் நிகில் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.
குப்தாவின் விடுதலைக்காக இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு நியாயமான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சட்ட உதவிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று குப்தாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனுடன், அமெரிக்கா மற்றும் செக். குடியரசில் தனக்காக வாதாட ஒரு இந்திய வழக்கறிஞரையும் குப்தா கோரியுள்ளார்.

பட மூலாதாரம், ANI
இந்த விவகாரத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விசாரிக்க இந்தியா சார்பில் சிறப்புக் குழு
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “அமெரிக்க குடிமகனைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த குற்றப்பத்திரிகையில் எந்த இந்திய அதிகாரியின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்று அரிந்தம் பாக்சி செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.
அப்போது பேசிய பாக்சி, “அமெரிக்காவுடனான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தையின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள், பயங்கரவாதிகள், ஆயுத வியாபாரிகள் மற்றும் பிறரின் தொடர்பு குறித்து அமெரிக்க தரப்பு சில உள்ளீடுகளை பகிர்ந்து கொண்டதாக நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம். இதை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை இந்தியா அமைத்துள்ளது,” என்றார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது இங்கே கவனிக்கத்தக்கது.

பட மூலாதாரம், SOCIAL MEDIA
பன்னூனைக் கொலை செய்ய ரூ.80 லட்சம் பணம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
யார் இந்த குர்பத்வந்த் பன்னூன்?
அமெரிக்காவைச் சேர்ந்த குர்பத்வந்த் சிங் பன்னூன் என்பவர் ‘ஜஸ்டிஸ் ஃபார் சிக்ஸ்’ அமைப்பின் நிறுவனர் மற்றும் வழக்கறிஞர்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக மாற்றவும், காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கவும், பஞ்சாபியர்களுக்கு சுய நிர்ணய உரிமையை வழங்கவும் இந்த அமைப்பை பன்னூன் நிறுவி, தமது கோரிக்கைகளுக்கான ‘பொது வாக்கெடுப்பு-2020’ பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
இதன் கீழ், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் மற்றும் உலகெங்கிலும் வசிக்கும் சீக்கியர்கள் ஆன்லைனில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் வாக்களிப்பதற்கு முன்பே, இந்த அமைப்பு மற்றும் காலிஸ்தானுக்கு ஆதரவான 40 இணையதளங்களை இந்திய அரசு தடை செய்தது.
இந்த அமைப்பு தன்னை ஒரு மனித உரிமை அமைப்பு என்று அடையாளப்படுத்திக் கொள்கிறது, ஆனால் இந்தியா அதை ‘பயங்கரவாத’ அமைப்பாக அறிவித்துள்ளது.
பன்னூனிடமிருந்து வந்த மிரட்டல் வீடியோக்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக இந்தியாவின் பல்வேறு விசாரணை அமைப்புக்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, பன்னூன் கடந்த 2020 ஜூலையில் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
பிபிசி ஆசிய நெட்வொர்க்குடன் பேசிய குர்பத்வந்த் சிங் பன்னூன், “காலிஸ்தான் பொது வாக்கெடுப்பு நடத்துவது மரணத்தை விளைவிக்கும் என்றால், அதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்,” என்றார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்