
பட மூலாதாரம், Getty Images
ஹைதராபாத்தில் நேற்று நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தினாலும், நியூசிலாந்து அணி அடுத்தடுத்துவரும் போட்டிகளில் தடைகளை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஹைதராபாத்தில் நேற்று பகலிரவாக நடந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் சேர்த்தது. 323 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 223 ரன்களில் ஆட்டமிழந்து, 99 ரன்களில் தோல்வி அடைந்தது.
இது நியூசிலாந்து அணி பெறும் 2வது வெற்றியாகும். இதன் மூலம் அந்த அணி 4 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட் 1.958 என்ற நிலையில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 36 ரன்களையும், பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மிட்ஷெல் சான்ட்னர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பட மூலாதாரம், Getty Images
சான்ட்னரின் பந்துவீச்சில் நேற்றைய ‘ஹைலைட்’, நெதர்லாந்து கேப்டன் எட்வார்ட்ஸை ஆட்டமிழக்கச் செய்ததுதான்
சான்ட்னர் பந்துவீச்சின் ‘ஹைலைட்’
உலகக் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து தரப்பில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் சான்ட்னர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் சான்ட்னர். இதற்கு முன் நியூசிலாந்து தரப்பில் எந்தப் பந்துவீச்சாளரும் 5 விக்கெட்டுகளை வீழத்தியதில்லை.
ஆட்டநாயகன் விருது வென்ற சான்ட்னர் கடைசியில் களமிறங்கி 17 பந்துகளில் 36 ரன்களை அதிரடியாகச் சேர்த்தார். பந்துவீச்சிலும் 59 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் சான்ட்னர் தனது அபார ஆட்டத்தின்மூலமும், பல்வேறு வேகங்களில் பந்து வீசியும் நெதர்லாந்து பேட்டர்களை திக்குமுக்காடவைத்தார்.
சான்ட்னரின் பந்துவீச்சில் நேற்றைய ‘ஹைலைட்’, நெதர்லாந்து கேப்டன் எட்வார்ட்ஸை ஆட்டமிழக்கச் செய்ததுதான். சான்ட்னர் பந்தை டாஸ்செய்து ஆஃப் சைடு விலக்கி வீசனார், இதை எட்வார்ட்ஸ் கிராஸ்பேட் போட்டு அடிக்க முற்பட்டபோது, பந்து பேட்டில் எட்ஜ் எடுத்து சான்ட்னரிடமே கேட்சானது.

பட மூலாதாரம், Getty Images
நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் தங்களின் உற்சாகத்தையும், ஆட்டத்தின் முன்னெடுப்பையும் இழக்கவில்லை
‘கியரை’ மாற்றாத நெதர்லாந்து
நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை தொடக்கத்தில் நெதர்லாந்தின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 3 மெய்டன்களை வழங்கியது. ஆனால், கடைசி 3 ஓவர்களில் 50 ரன்களை சேர்த்ததால்தான் 322 ரன்களை எட்டமுடிந்தது. நெதர்லாந்து தனது சேஸிங்கை மெதுவாகத் தொடங்கி அதேவேகத்திலேயே பயணித்ததே தவிர ரன்சேர்க்கும் கியரை கடைசிவரை மாற்றவில்லை. நெதர்லாந்து தரப்பில் ஆக்கர்மேன் அதிகபட்சமாக 69 ரன்கள் சேர்த்தார் மற்ற எந்தபேட்டர்களும் 30 ரன்களைக் கூட தாண்டவில்லை.
நியூசிலாந்து தரப்பில் 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர். தொடக்க ஆட்டக்காரர் வில் யங் (70), ரச்சின் ரவீந்திரா (51), டாம் லாதம் (53) ஆகியோர் முக்கியப் பங்களிப்பு செய்தனர். இதில் ரவீந்திரா அருமையான ஃபார்மில் இருந்து முதல் போட்டியில் சதமும், நேற்றைய ஆட்டத்தில் அரைசதமும் அடித்துள்ளார். பந்துவீச்சிலும் அசத்திய ரவீந்திரா 45 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
நெதர்லாந்து அணி ஒவ்வொரு போட்டியிலும் புதிய அனுபவத்தைக் கற்று வருகிறது. தொடக்கத்திலிருந்து கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய நெதர்லாந்து கடைசி டெத் ஓவர்களில் கோட்டைவிட்டதால்தான் நியூசிலாந்து 300 ரன்களுக்கு மேல்குவித்தது.
இருப்பினும் நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் தங்களின் உற்சாகத்தையும், ஆட்டத்தின் முன்னெடுப்பையும் இழக்கவில்லை. இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றிக்காகப் போராடி வருகிறார்கள், என்றாலும் வரும் போட்டிகளில் பெரிய அணிகளுக்கு சவால்களை நெதர்லாந்து அளிக்கும்.

பட மூலாதாரம், Getty Images
‘தவறுகளைத் திருத்திக் கொள்வோம்’
நெர்லாந்து கேப்டன் எட்வார்ட்ஸ் கூறுகையில் “நியூசிலாந்து அணியிடம் தரமான பந்துவீச்சு இருக்கிறது. 40 முதல் 50 ரன்கள் பாட்னர்ஷிப் வைத்துக்கொண்டு 320 ரன்களை சேஸிங் செய்வது கடினம். எங்கள் வீரர்களிடம் பேசுவேன், நிச்சயமாக அடுத்த ஆட்டத்தில் சாதகமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். எங்களின் தவறுகளை அடுத்த 7 ஆட்டங்களில் திருத்திவிடுவோம். எங்களைப் பொருத்தவரை அடுத்த ஆட்டத்தில், சிறப்பான பங்களிப்பை வழங்குவோம்,” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
அடுத்த இரு போட்டிகளுக்கும் சிறந்த ப்ளேயிங் லெவனை தேர்ந்தெடுக்கும் சிக்கலில் நியூசிலாந்து அணி இருக்கிறது
நியூசிலாந்து அணி சந்திக்கவிருக்கும் பிரச்சினைகள் என்ன?
உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து 15 வீரர்களை அறிவித்தாலும், 12 வீரர்களுடந்தான் களமிறங்கியது. இதில் வில்லியம்ஸன், டிம் சவுதி, பெர்குஷன் ஆகியோர் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாமல் இருந்தனர். வெள்ளிக்கிழமை நடக்கும் ஆட்டத்தில் 15 வீரர்களும் தயாராகிவிடுவார்கள் என்று நம்பப்படும் நிலையில், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய வீரர்களை அடிப்படையாக வைத்து அணித் தேர்வை நியூசிலாந்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
வில்லியம்சன் முழுமையாக குணமடைந்து போட்டிக்குத் தயாராகிவிட்டார். பேட்டிங் வரிசையில் இவரது 3வது இடத்தையும் விட்டுக்கொடுக்க வேண்டும். ஆனால் தொடக்க ஆட்டக்காரர்களாக வில் யங், கான்வே இருவரும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். 3வது இடத்தில் களமிறங்கிய ரவீந்திரா ஒரு சதம், அரைசதம் என சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜொலிக்காத யங், நேற்றைய ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். இந்த ஆண்டில் அவர் அடித்த 6வது அரைசதம். அதிலும் குறிப்பாக சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு யங் சிறப்பாக ஆடுவது அடுத்தப் போட்டிகளுக்கு இவரது தேவையை உறுதி செய்கிறது.

பட மூலாதாரம், Getty Images
சுழற்பந்துவீச்சு பூமி
மேலும், நியூசிலாந்து அடுத்த 2 போட்டிகளையும் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் விளையாடுகிறது. இரு ஆட்டங்களிலும், சுழற்பந்துவீச்சாளர்களை அதிகம் கொண்ட வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளை எதிர்கொள்கிறது.
ஆஸ்திரேலியாவை தனது சுழற்பந்துவீச்சு மூலம் இந்திய அணி வீழ்த்தியது யாருக்கும் மறந்திருக்காது. அதனால், சென்னை ஆடுகளத்தில் வங்கதேசம், ஆப்கானிஸ்தானின் தரமான சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள வில் யங் போன்ற தேர்ந்த பேட்டர்கள் நியூசிலாந்துக்கு அவசியம்.
எனவே, வில்லியம்ஸன் அணிக்குள் வந்தாலும், தொடக்க ஆட்டக்காரர்களை மாற்ற முடியாது. 3வது இடத்தை வில்லியம்ஸனுக்கு தர வேண்டும், ரவீந்திராவை 4வது இடத்தில் களமிறக்க வேண்டும். மேலும், மார்க் சாப்மேனை பெஞ்சில் அமரவைக்கவேண்டிய நிர்பந்தம் நியூசிலாந்துக்கு இருக்கிறது.
மிட்ஷெல் சான்ட்னர் நெதர்லாந்து அணிக்கு எதிராகக் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 36 ரன்கள் சேர்த்தார். இல்லாவிட்டால் நியூசிலாந்து 300 ரன்களைக் கடந்திருக்காது. அதிலும் பாஸ் டி லீட் ஓவரில் 18 ரன்களை சான்ட்னர் விளாசினார். இதனால் பேட்டிங் வரிசையில் 8-வது இடத்தை சான்ட்னர் உறுதியாக்கிவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் “அடுத்த ஆட்டம் சென்னையில் நடப்பதால் அந்த சூழலுக்கு ஏற்க நாங்கள் மாற வேண்டும்,” என்றார்.
ப்ளேயிங் லெவனில் இருக்கப்போவது யார்?
இதனால், டிம் சவுதி, ஹென்றி, பெர்குஷன், டிரன்ட் போல்ட் ஆகியோரில் யாரை களமிறக்குவது என்ற இக்கட்டான நிலை நியூசிலாந்துக்கு ஏற்படும். ஹென்றி கடந்த 2 போட்டிகளிலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஃபார்மில் இருக்கிறார், 145 கி.மீ. வேகத்தில் வீசுவதற்கு பெர்குஷன் அவசியம், போல்ட், சவுதி இருவரும் தவிரக்க முடியாத பந்துவீச்சாளர்கள் என்பதால் யாரை தேர்ந்தெடுப்பது என்ற சிக்கல் நியூசிலாந்துக்கு இருக்கிறது.
அடுத்துவரும் போட்டிகளில் நியூசிலாந்து அணி போல்ட், ஹென்றி தவிர்த்து, பெர்குஷன், சவுதி அல்லது நீஷம் ஆகியோரில் யாரேனும் இருவரைத் தேர்ந்தெடுத்து களமிறங்க வேண்டும். ஏனென்றால் நேற்றைய ஆட்டத்தில் பெர்குஷன் 145 கி.மீ. வேகத்தில் பந்துவீசி, பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களை காண்பித்தாலும் விக்கெட் வீழ்த்தவில்லை. ஓவருக்கு 4 ரன்கள் வீதம்தான் பெர்குஷன் வழங்கினார். ஆனால், பேட்டிங் திறன் என்றவகையில், பெர்குஷனைவிட சவுதி மேலானவர். இதனால் சவுதிக்கு இடம் கொடுக்க பெர்குஷன் வழிவிட வேண்டிய நிலையில் இருக்கிறார்.
ஆதலால், அடுத்த இரு போட்டிகளுக்கும் சிறந்த ப்ளேயிங் லெவனை தேர்ந்தெடுக்கும் சிக்கலில் நியூசிலாந்து அணி இருக்கிறது.
‘சென்னைக்கு தயாராக வேண்டும்’
நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் கூறுகையில் “பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டோம், நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தோம். ரவீந்திரா பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டார். சுழற்பந்துவீச்சாளர்கள் அருமையாக செயல்பட்டனர். பெர்குஷன் திரும்பி வந்தது மகிழ்ச்சி. அடுத்த ஆட்டம் சென்னையில் நடப்பதால் அந்த சூழலுக்கு ஏற்க நாங்கள் மாற வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்