சீனா பக்கம் சாயும் மாலத்தீவு: அங்குள்ள தமிழர்களுக்கு பிரச்னை ஆகுமா?

சீனா பக்கம் சாயும் மாலத்தீவு: அங்குள்ள தமிழர்களுக்கு பிரச்னை ஆகுமா?

மாலத்தீவு: சீன ஆதரவு முகமது முய்சுவால் அங்குள்ள தமிழர்களுக்கு பிரச்னை ஏற்படுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

முகமது முய்சு

இந்திய பெருங்கடலில் உள்ள சிறு தீவுக் கூட்டமான மாலத்தீவு அதன் அழகிய கடற்கரைகள், பவளப்பாறைகள் மற்றும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களுக்கு மிகவும் பிரபலமானது. அதேநேரம், புவிசார் அரசியலிலும் மாலத்தீவுக்கு முக்கிய இடமுண்டு.

அந்நாட்டு அரசியலில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்தியாவில் பலமாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. மாலத்தீவின் புதிய அதிபராக மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் முகமது முய்சு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

‘இந்தியாவே வெளியேறு’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்து அவர் தேர்தலைச் சந்தித்த நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பிறகு, இந்திய படைகளை மாலத்தீவில் இருந்து அகற்றுவதில் தாம் உறுதியாக இருப்பதாக அறிவித்தார்.

இந்தியாவுக்கு எதிரான மனநிலையுடன் இருப்பவராக முகமது முய்சு கருதப்படும் நிலையில் எதிர்வரும் காலங்களில் இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவு மோசமடையுமா, அந்நாட்டில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்குமா போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

மாலத்தீவில் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்ந்து வரும் சூழலில் தற்போதைய இந்தப் பதற்றமான சூழல் அவர்களுக்கு எதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

மாலத்தீவு தேர்தலில் ‘இந்தியாவே வெளியேறு’ பிரசாரம்

மாலத்தீவு - இந்தியா - சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

முகமது முய்சு

மாலத்தீவு அதிபர் தேர்தல் இந்த மாதம் நடைபெற்றது. அதில் தற்போதைய அதிபராக உள்ள இப்ராஹிம் சோலியை எதிர்த்து போட்டியிட்ட முகமது முய்சு 54 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இப்ராஹிம் சோலி இந்திய ஆதரவாளராக அறியப்பட்டவர். இந்தியாவின் பிரதானம் என்ற கொள்கையை கொண்டவர். 2018இல் அவர் அதிபராகப் பதவியேற்றபோது இந்திய பிரதமர் நரேந்திர மோதி அந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

ஆனால், முய்சுவோ ‘இந்தியாவே வெளியேறு’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்து தேர்தலைச் சந்தித்தார். மாலத்தீவில் இந்திய ராணுவப் படையைச் சேர்ந்த 75 வீரர்கள் இருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இவர்கள் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும் என்று முய்சு தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து வலியுறுத்தினார்.

மாலத்தீவின் முன்னாள் அதிபரும் சீன ஆதரவாளராக அறியப்படுபவருமான அப்துல்லா யமீனின் அமைச்சரவையில் இருந்தவர்தான் முய்சு.

ஊழல் வழக்கில் சிறையில் இருப்பதால் அப்துல்லா யமீன் தேர்தலில் போட்டியிட முடியாத சூழலில் அவரது கட்சியின் ஆதரவோடு தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றுள்ளார் முய்சு. நவம்பர் 17ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவு - இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மாலத்தீவின் முன்னாள் அதிபர் இப்ராஹிம் சோலி உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

மாலத்தீவும் இந்தியாவும்

ஐந்து லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கும் சிறிய நாடான மாலத்தீவு இந்திய பெருங்கடல் பகுதியில் புவியியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருப்பதால் இந்தியா அதனுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறது.

இந்தியாவில் இருந்து வெறும் 70 கடல் மைல் தூரத்தில் இருக்கும் மாலத்தீவுக்கும் இந்தியாவுக்குமான உறவு 50 ஆண்டுகளுக்கும் மேலானது.

மாலத்தீவுக்கு பல்வேறு வழிகளிலும் இந்தியா உதவியிருக்கிறது, உதவி வருகிறது. 1988ஆம் ஆண்டு மாலத்தீவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உதவியோடு ஆட்சி கவிழ்ப்புக்கு முயற்சி நடந்தபோது, இந்திய அரசு தலையிட்டு ஆப்ரேஷன் காக்டஸ் மூலம் தடுத்து நிறுத்தியது. 2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது முதல் நாடாகச் சென்று மாலத்தீவுக்கு உதவியதும் இந்தியாதான்.

கடந்த 2014ல் மாலத்தீவில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டு 1,50,000 பேர் தண்ணீரின்றி சிரமப்பட்டனர். அப்போது, ஆப்ரேஷன் நீர் என்ற பெயரில் இந்தியா விமானப்படை 374 டன் குடிநீரை டெல்லியில் இருந்தும் அரக்கோணத்தில் இருந்தும் மாலத்தீவுக்கு கொண்டு சென்று உதவியது. இதேபோல், கோவிட் தொற்றின்போதும் மாலத்தீவுக்கு தடுப்பூசிகளைக் கொடுத்து இந்தியா உதவியது.

மாலத்தீவில் தமிழர்கள்

மாலத்தீவு - இந்தியா

பட மூலாதாரம், Getty Images

மாலத்தீவில் திவெயி மொழி பேசுபவர்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இதேபோல், இந்தியர்கள், வங்கதேசத்தினர், நேபாள மக்களும் கணிசமாக உள்ளனர். 2014ஆம் ஆண்டுவாக்கில் மாலத்தீவில் சுமார் 26,000 இந்தியர்கள் இருப்பதாக இந்திய அரசுக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது, இந்த எண்ணிக்கையில் சில ஆயிரங்கள் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.

இந்தியர்களைப் பொருத்தவரை தமிழர்கள், மலையாளிகள், பஞ்சாபிகள், குஜராத்திகள், பிகாரிகள் அதிகமாக உள்ளனர். இதில், தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்றும் 8,000 முதல் 10,000 தமிழர்கள் மாலத்தீவில் இருக்கலாம் என்றும் கூறுகிறார் மாலத்தீவை சேர்ந்த சர்வதேச சமூக செயற்பாட்டாளரான கர்னல் வினோ தேவராஜ்.

“மாலத்தீவில் இந்திய தமிழர்கள் மட்டுமில்லாமல் இலங்கை தமிழர்களும் வசிப்பதால் தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. செவிலியர், மருந்தாளுநர்கள், வங்கிப் பணி, கற்பித்தல் பணிகளில் தமிழர்கள், மலையாளிகள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமானப் பணிகளில் தமிழர்கள் ஈடுபட்டாலும் பிகார் போன்ற வடமாநில மக்களின் பங்களிப்பு அதில் அதிகம்,” என்று அவர் கூறுகிறார்.

மாலத்தீவு - இந்தியா

பட மூலாதாரம், Getty Images

மாலத்தீவில் உள்ள தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

முய்சுவின் நிலைப்பாடு, மாலத்தீவின் தற்போதைய சூழல் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கர்னல் வினோ தேவராஜ், “தேர்தலுக்கு முன்பாக வெள்ளிக்கிழமை தோறும் ‘இந்தியாவே வெளியேறு’ என்ற பெயரில் பேரணிகள் நடைபெறும். தற்போது தேர்தல் முடிந்ததும் அதுபோன்ற பேரணி நடைபெறவில்லை.

அத்தகைய ஹேஷ்டேக்களையும் சமூக வலைதளங்களில் காண முடியவில்லை. எனவே, முய்சுவின் பேச்சை தேர்தலுக்காகப் பேசியதாகவே கருதத் தோன்றுகிறது. தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுப்பார் என்று தோன்றவில்லை,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சமீபத்தில் இந்தியர்கள் மாலத்தீவுக்கு விசா பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாகத் தகவல் பரவியது. பின்னர் இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்தபோது அப்படி எதுவும் இல்லை என்பது உறுதியானது.

மருத்துவம், கல்வி போன்றவற்றில் தமிழர்கள் உட்பட இந்தியர்களின் பங்களிப்பு மாலத்தீவில் அதிகமாக உள்ளது. எனவே, அவர்களை வெளியேற்றினால் போதிய நபர்கள் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்படும். அதுபோக, மருத்துவத்திற்காக பலர் இந்தியாவுக்கு வருகின்றனர்.

உணவு உட்படப் பல்வேறு விவகாரங்களில் இந்தியா மாலத்தீவுக்கு உதவி வருகிறது. அப்படியிருக்கும்போது இந்தியாவுடன் மோதல்போக்கை மாலத்தீவு கடைபிடிக்குமா என்பது சந்தேகம்தான்,” என்று கூறினார்.

மேலும், மாலத்தீவில் உள்ள மக்களிடையே இந்தியா மீது வெறுப்பு இல்லை. அரசியலுக்காகவே இதுபோன்று பேசப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மாலத்தீவுக்கு அதிகளவு சுற்றுலா செல்லும் இந்தியர்கள்

மாலத்தீவு - இந்தியா

பட மூலாதாரம், Vino devaraj

படக்குறிப்பு,

கர்னல் வினோ தேவராஜ்

மாலத்தீவின் பிரதான வருவாயாக சுற்றுலா உள்ளது. நேரடியாகவும் மறைமுகமாகவும் 70 சதவீதம் பேர் அங்கு சுற்றுலா மூலம் வேலைவாய்ப்பு பெருகின்றனர்.

சுமார் 1200 பவளத் தீவுகளைக் கொண்ட மாலத்தீவுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். 2019ஆம் ஆண்டு 1,66,030 பேர் இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றனர்.

கோவிட் 19 காரணமாக 2020இல் இந்த எண்ணிக்கை 63,000 ஆகக் குறைந்தது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. 2021ஆம் ஆண்டில் 2.91 லட்சம் பேரும், 2022இல் 2.41 பேரும் இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். நடப்பு ஆண்டில் ஜூன் 13ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இதேபோல், மாலத்தீவுகளுக்கு அதிகளவில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 2022ஆம் ஆண்டு 495.40 மில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, “பொருளாதாரத்திற்கு பெரும்பங்காற்றும் இந்தியாவுடன் மோதலை ஏற்படுத்திக்கொள்வது மாலத்தீவுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்,” என்று கர்னல் வினோ தேவராஜ் குறிப்பிடுகிறார்.

நசீர் ஆட்சியில் ஏற்பட்ட எதிர்மறை எண்ணம்

மாலத்தீவு - இந்தியா
படக்குறிப்பு,

பேராசிரியர் கிளாட்சன் சேவியர்

சென்னை லயோலா கல்லூரியின் பேராசிரியரான க்ளாட்ஸன் சேவியர் பிபிசி தமிழிடம் பேசும்போது, “மாலத்தீவின் அதிபராக இருந்த நசீர் இந்தியாவுக்கு ஆதரவான நிலைபாட்டைக் கொண்டவர். இந்தியா கொடுத்த சிலையை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மாலத்தீவு குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜாமீன் வழங்கியதால் நீதிபதியை சிறைபிடிக்க நசீர் உத்தரவிட்டார்.

இதைக் கண்டித்து நாட்டில் பெரும் போராட்டங்கள் வெடித்ததையடுத்து அவர் பதவி விலகினார். அதனால், இந்தியாவுக்கு எதிர்மறையான செயல்பாடு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டது,” என்று தெரிவித்தார்.

“தற்போது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள முய்சு சீன ஆதரவாளர் என்று கூறப்பட்டாலும் அவர் இந்தியாவுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்புகள் குறைவு. ஏனெனில், மாலத்தீவுக்கு இந்தியா தேவை, இந்தியாவுக்கு மாலத்தீவு தேவை.

எனவே, இப்போதைய சூழலில் மாலத்தீவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்புக்கும் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை,” என்றார்.

மாலத்தீவு விவகாரம் – சீனாவால் இந்தியாவுக்கு பாதிப்பா?

இந்த நெருக்கடிக்கு மத்தியில், சீன போர்க்கப்பல்கள் மாலத்தீவு நோக்கி நகர்ந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. சுந்தா மற்றும் லாம்போக் ஜலசந்தி வழியாக சீன போர்க்கப்பல்கள் நகர்வதை இந்திய கடற்படையும் உறுதி செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீன கடற்படைக்குச் சொந்தமான யுவான் வாங் 5 என்ற கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைந்து சுமார் ஒரு வார காலம் அங்கேயே தங்கியிருந்தது.

ஆராய்ச்சி தொடர்பான பணிகளுக்காக இந்த கப்பல் அங்கு நிறுத்தப்பட்டிருப்பதாக சீனா தெரிவித்தது. அதே நேரம், இது இந்தியாவை உளவு பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரும் கவலையை வெளிப்படுத்தினார்.

மாலத்தீவு - இந்தியா

பட மூலாதாரம், Getty Images

தற்போது, மாலத்தீவு நோக்கி சீன போர்க்கப்பல்கள் நகர்ந்ததாக கூறப்படுவது இந்தியாவுக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து க்ளாட்ஸன் சேவியரிடம் கேட்டபோது, “ஒரு கப்பல் வருவதாலேயே பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கூறிவிட முடியாது,” என்று தெரிவித்தார்.

அதேநேரம், “முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். மாலத்தீவின் தற்போதைய அரசியல் மாற்றம், வர்த்தக ரீதியாக சீனாவுக்கு பலனளிக்கலாம். ஆனால், பாதுகாப்பு ரீதியாக சீனாவுக்கு சாதகமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,” என்றார்.

மாலத்தீவு மூலமாக சீனா இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் தரக்கூடுமா என்பதை முகமது முய்சு அதிபராகப் பதவியேற்ற பின்னர் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறுகிறர் வினோ தேவராஜ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *