PAK vs SA: பாகிஸ்தானின் தோல்வியை சென்னை ரசிகர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

PAK vs SA: பாகிஸ்தானின் தோல்வியை சென்னை ரசிகர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக் கோப்பை, சென்னை

பட மூலாதாரம், Getty Images/BBC

உலகக்கோப்பைத் தொடரில் நேற்று (வெள்ளிக்கிழமை, அக்டோபர் 27) பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் ரசிகர்களின் பேராதரவுடன் விளையாடிய பாகிஸ்தான் அணி கடைசி வரை வெற்றிக்காகப் போராடியது.

ஒரு கட்டத்தில் வெற்றி பெற்றதாகவே கருதப்பட்ட பாகிஸ்தான் அணி, நடுவரின் முடிவால் கடைசி விக்கெட் தப்பிப் பிழைக்க நூலிழையில் தென் ஆப்ரிக்க அணியிடம் தோற்றது.

இந்த ஆட்டம் முழுதும் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமலேயே சென்றது.

இந்த ஆட்டம் முடிந்து மைதானத்திலிருந்து வெளிவந்த ரசிகர்களிடம் பிபிசி தமிழ் கருத்துகளைக் கேட்டது.

சென்னை ரசிகர்கள் என்ன சொன்னார்கள்?

இந்த உலகக்கோப்பையின் ‘முதல் திரில்லர்’

பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக் கோப்பை, சென்னை

பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான நேற்றைய போட்டியை இந்த உலகக்கோப்பையின் ‘முதல் திரில்லர்’ என்று வர்ணித்தார் ஒரு ரசிகர்.

பாகிஸ்தானின் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தாலும், தென் ஆப்பிரிக்க அணி சமாளித்து வென்றதைப் பற்றிப் பேசிய அந்த ரசிகர், “பாகிஸ்தானின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. ஸ்பின் மற்றும் வேகப்பந்துவீச்சு இரண்டுமே நன்றாக இருந்தது. பௌன்சர்களையும் நன்றாகப் பயன்படுத்தினர்.

இரண்டு, மூன்று விக்கெட்டுகள் விழுந்ததும் தென் ஆப்பிரிக்க அணி சற்றுத் தடுமாறியது, ஆனால் அவர்கள் சமாளித்து வென்றுவிட்டனர்,” என்றார் குடும்பத்துடன் ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்த தென் ஆப்பிரிக்க அணியின் ரசிகரான இவர்.

‘பாகிஸ்தான் செய்த மிகப் பெரும் தவறு’

பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக் கோப்பை, சென்னை

பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தைப் பற்றிப் பேசிய மற்றொரு ரசிகர், “அந்த அணி மொத்த ஓவர்களையும் ஆடி முடித்திருந்தால், 10-20 ரன்களை அதிகம் எடுத்திருக்க முடியும். ஆனால் அதைத் தவற விட்டதால்தான் தோற்றனர். அதுதான் அவர்கள் செய்த மிகப்பெரும் தவறு,” என்றார்.

மேலும், மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் தென் ஆப்பிரிக்கா இந்தியாவுக்கு சவாலாக இருக்குமா என்ற கேள்விக்கு, “இந்தியாவுக்கு எந்த பிரச்னையும் இருக்காது. இந்தியா கண்டிப்பாக கோப்பையை வெல்லும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் அந்த ரசிகர்.

நேற்றைய போட்டியோடு சென்னையில் முடியும் உலகக்கோப்பை தொடர் போட்டிகளை சென்னை ரசிகர்கள் மிகவும் ரசித்ததாகவும், நல்ல முறையில் ஒத்துழைத்ததாகவும், ஒரு தொந்தரவும் செய்யவில்லை என்றும் அந்த ரசிகர் கூறினார்.

‘பாபர் ஆசமின் கேப்டன்சி சோபிக்கவில்லை’

பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக் கோப்பை, சென்னை

ஆட்டம் முழுவதையும் மிக உற்சாகமாக ரசித்ததாகக் கூறிய இளம் ரசிகர் ஒருவர், பாகிஸ்தானின் ஆட்டத்தைப் பற்றிப் பேசுகையில், ஷதாப் கான் காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படாதது அந்த அணியின் மோசமான ஆட்டத்திற்கு ஒரு காரணம் என்றார்.

“ஷதாப் கான் இருந்திருந்தால் பாகிஸ்தான் சிறப்பாக ஆடியிருக்க வாய்ப்புண்டு. மெலும், பாபர் ஆசமின் கேப்டன்சி பெரிதாக சோபிக்கவில்லை,” என்றார்.

கடைசி ஓவரில் யார் வெல்லப் போகிறார்கள் என்ற பரபரப்பு ஓங்கியிருந்த நேரத்தில், அனைவரும் ஆட்டத்தை உன்னிப்பாகக் கவனித்ததாகவும், தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், சென்னை ரசிகர்கள், எந்தவொரு அணிக்கும் தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும், எந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அவர்களுக்கு ஆதரவளித்ததாகவும் கூறினார்.

‘இந்தியா கடின உழைப்பைப் போட வேண்டும்’

பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக் கோப்பை, சென்னை

பட மூலாதாரம், Getty Images

தென் ஆப்பிரிக்காவை ஆதரித்த பெண் ரசிகை ஒருவர், ஆட்டத்தின் இறுதித் தருணங்கள் மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தன என்றார்.

“தென் ஆப்பிரிக்காவுக்கு அதிக பந்துகள் இருந்தும் கடைசி நான்கு ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்படனர். ஆனாலும் வெற்றி பெற்றனர்,” என்றார்.

தென் ஆப்பிரிக்கா இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுக்குமா என்ற கேள்விக்கு, ‘இந்தியா இன்னும் அதிக பயிற்சியும், முயற்சியும் எடுக்க வேண்டும்,’ என்றார் அவர்.

‘சென்னை ரசிகர்கள் நல்ல கிரிக்கெட்டை ஆதரிப்பார்கள்’

பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக் கோப்பை, சென்னை

பட மூலாதாரம், BBC Sport

இந்த ஆட்டத்தைக் காண பெங்களூருவில் இருந்து வந்திருந்த ஒரு ரசிகர், நேற்றைய ஆட்டம்தான் ‘இந்த உலகக்கோப்பைத் தொடரின் மிகச் சிறந்த ஆட்டம்’ என்றார்.

சென்னை ரசிகர்கள் எப்போதுமே நல்ல கிரிக்கெட்டை ஆதரிப்பார்கள் என்றும், நல்ல பந்துகளையும், நல்ல ஆட்டத்தையும் அவர்கள் ஆதரித்ததாகவும் கூறினார்.

பாகிஸ்தானின் அடுத்தடுத்த தோல்விகளைப் பற்றிக் கேட்டபோது, அவர்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்ததாகவும், கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்காவுக்கு ஆட்டத்தைக் கையளித்ததாகவும் கூறினார்.

மேலும், சேப்பாக்கம் 270 ரன்கள் எடுக்கக்கூடிய ஆடுகளம் அல்ல, 290 ரன்கள் எடுப்பதற்கானது என்றும், கடைசிவரை ஆட்டம் கணிக்க முடியாததாகவே இருந்தது என்றும் கூறினார்.

“ஆட்டத்தின் முதல் பகுதியில் சுவார்ஸ்யம் சற்றுக் குறைவாகவே இருந்தாலும், இரண்டாம் பகுதி மிகவும் விறுவிறுப்பாகச் சென்றது,” என்றார் இந்த ரசிகர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *