ஆளுநர் சட்டத்தை மீறுகிறாரா? துணைவேந்தர் தேர்வுக்குழு விவகாரத்தில் என்ன சர்ச்சை?

ஆளுநர் சட்டத்தை மீறுகிறாரா? துணைவேந்தர் தேர்வுக்குழு விவகாரத்தில் என்ன சர்ச்சை?

சட்டத்தை மீறி துணைவேந்தர் தேர்வுக் குழுவை அமைக்கிறாரா ஆளுநர்? - மீண்டும் சர்ச்சை

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு,

தமிழ்நாடு அரசுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையில் பல்வேறு விவகாரங்களில் மோதல்கள் தொடர்ந்து வருகிறது.

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கும் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேர்வுக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்திருக்கிறார். மாநில அரசு இது சட்டவிரோதம் என்கிறது.

தமிழ்நாடு அரசுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையில் பல்வேறு விவகாரங்களில் மோதல்கள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு நியமனம் மாநில அரசு, ஆளுநருக்கு இடையிலான மோதலுக்கு ஒரு புதிய களத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பில் நேற்று இரண்டு செய்தி அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஒன்று, பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான கமிட்டியின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை அறிவித்தது.

இரண்டாவது, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான கமிட்டியின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை அறிவித்தது.

தமிழ்நாடு துணைவேந்தர்கள் நியமனம்  ஆர் என் ரவி பொன்முடி
படக்குறிப்பு,

துணைவேந்தர் தேர்வுக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டே வெளியிட்ட அரசாணைகள்.

பாரதியார் பல்கலைக்கழக தேர்வுக் குழுவில், நான்கு உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். அரசின் பிரதிநிதியாகவும் ஒருங்கிணைப்பாளராகவும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபிள்யு.சி. டேவிதார், சிண்டிகேட் பிரதிநிதியாக சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் பி. துரைசாமி, செனட் பிரதிநிதியாக பாரதியார் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஜி. திருவாசகம், யுஜிசி தலைவரின் பிரதிநிதியாக பெங்களூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பி. திம்மேகவுடா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் தேர்வுக் குழுவில் வேந்தரின் சார்பில் பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினரான பேராசிரியர் சுஷ்மா யாதவ், அரசின் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே. அலாவுதீன், சிண்டிகேட்டின் பிரதிநிதியாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டி. பத்மநாபன், யுஜிசி தலைவரின் சார்பில் தெற்கு பிகார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எச்.சி.எஸ். ரத்தோர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

 தமிழ்நாடு துணைவேந்தர்கள் நியமனம்  ஆர் என் ரவி பொன்முடி

ஆளுநர் நடைமுரையில் உள்ள சட்ட விதிகளுக்கு எதிராகச் செயல்படுகிறாரா?

இந்த அறிவிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு என்று தனித்தனியே சட்டம் மற்றும் விதிகள் உள்ளன.

இவற்றின்படி துணை வேந்தரின் பதவிக்காலம் முடிந்தவுடன் அதை நிரப்ப தேடுதல் குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் துணைவேந்தர் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்.

உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக சட்ட விதிகளில், ஆளுநர், துணை வேந்தரை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவை அமைக்க வழிமுறை இல்லை. பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் 17.10.2022 அன்றும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் 30.11.2022 அன்றும் முடிவடைந்தது.

அதனால், தேடுதல் குழு உறுப்பினர்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களின் விதிகளின்படி நியமனம் செய்யப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலோடு தமிழ்நாடு அரசிதழில் முறையே 20.09.2022 மற்றும் 19.10.2022 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு துணைவேந்தர்கள் நியமனம்  ஆர் என் ரவி பொன்முடி

பட மூலாதாரம், TNDIPR

இதுவரையில் எந்தவொரு ஆளுநரும் தன்னிச்சையாக தேடுதல் குழுவை அமைத்ததில்லை. அதற்கு விதிகளில் வழிவகையும் இல்லை. தேர்வுக்குழு குறித்த விவரங்களை அரசுதான் அரசிதழில் வெளியிடும். இதுநாள் வரையிலும் தேடுதல் குழு உறுப்பினர்கள் அந்தந்த பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிட்டு, அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது ஆளுநர் அவர்கள் நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு எதிராக தேடுதல் குழுவை தன்னிச்சையாக முடிவு செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆளுநரால் அமைக்கப்பட்டுள்ள இந்த தேடுதல் குழு பல்கலைக்கழக சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு மாறானது. அரசின் அலுவல் விதிகளின்படி அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். ஆனால் ஆளுநர் தன்னிச்சையாக அறிவிக்கை வெளியிட்டது, மரபு மற்றும் விதிகளுக்கு முரணானது.

தெலங்கானா மற்றும் குஜராத் மாநில பல்கலைக்கழகங்களில் உள்ளது போல் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்யும் அதிகாரத்தை அரசுக்கு அளிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா சட்டமன்ற பேரவையில் 25.04.2022 அன்று நிறைவேற்றப்பட்டு, 28.04.2022 அன்று ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், இது நாள்வரையில் மேற்படி மசோதாவிற்கு ஆளுநரிடமிருந்து ஒப்புதல் பெறப்படவில்லை. ஆளுநர் தன்னிச்சையாக பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை அமைத்து வெளியிடப்பட்ட அறிக்கையை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு துணைவேந்தர்கள் நியமனம்  ஆர் என் ரவி பொன்முடி
படக்குறிப்பு,

துணைவேந்தர் தேர்வுக் குழு அமைப்பது குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறை

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியிருப்பதுபோல, இந்த இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான குழு தமிழக அரசால் ஓராண்டுக்கு முன்பே அமைக்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஓராண்டுக்குப் பிறகு, அந்தப் பட்டியலில் கூடுதலாக பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதிகளை இணைத்து புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

தேர்வுக் குழு குறித்து யுஜிசி விதிகள் சொல்வது என்ன?

துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு அமைப்பது குறித்து, பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள் பொதுவான ஒரு வரையறையை வழங்குகின்றன. அதன்படி,

  • தேர்வுக் குழு ஒன்றை அமைத்து, அந்தத் தேர்வுக் குழு அளிக்கும் 3 – 5 பேர்களில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • அந்தத் தேர்வுக் குழுவின் உறுப்பினர்கள் உயர் கல்வித் துறையில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியோடு சம்பந்தப்பட்டவர்களாக இருக்கக்கூடாது.
  • பெயர்களைப் பரிந்துரைக்கும்போது, ஒவ்வொருவரது கல்விப் புலம் சார்ந்த அனுபவம், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள உயர்கல்வித் துறைகளோடு உள்ள பரிச்சயம், கல்வி மற்றும் நிர்வாகத்தில் உள்ள அனுபவம் ஆகியவை குறித்து தனித்தனி கருத்துகளை எழுத்து மூலமாக வேந்தருக்கு அளிக்க வேண்டும்.
  • தேர்வுக் குழு, அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் சட்டங்கள்/விதிமுறைகளின்படி அமைக்க வேண்டும்.
 தமிழ்நாடு துணைவேந்தர்கள் நியமனம்  ஆர் என் ரவி பொன்முடி
படக்குறிப்பு,

துணைவேந்தர் தேர்வுக் குழு அமைப்பது குறித்த தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சட்டம்.

பாரதியார், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக சட்டங்கள் சொல்வது என்ன?

பாரதியார் பல்கலைக்கழக சட்டத்தின்படி துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவில் மூன்று பேர் இடம்பெற்றிருப்பார்கள்.

அதில் அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்படுபவர்கள் முதன்மைச் செயலர் மட்டத்தில் தற்போது பணிபுரியும் அல்லது ஓய்வுபெற்ற அதிகாரியாக இருப்பார்கள் அல்லது மிகச் சிறந்த கல்வியாளராக இருப்பார்கள்.

அடுத்ததாக சென்ட் மற்றும் சிண்டிகேட்டின் சார்பில் தலா ஒரு கல்வியாளர் தேர்வுக் குழுவில் இடம்பெறுவார்கள்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக சட்டத்தின்படி, துணைவேந்தர் தேர்வுக் குழுவில் ஒருவர் வேந்தரின் சார்பில் நியமிக்கப்படுவார். ஒருவரை அரசும் மற்றொருவரை சிண்டிகேட்டும் நியமிக்கும்.

இப்போது இந்த இரண்டு தேர்வுக் குழுக்களிலும் கூடுதலாக யுசிஜியின் பிரதிநிதி ஒருவரை நியமித்து ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டிருக்கிறார்.

ஆளுநர் VS பொன்முடி: பழைய மோதலின் தொடர்ச்சியா?

ஜூலை 4ஆம் தேதியன்று தமிழக பல்கலைக்கழகங்களில் உள்ள ஆட்சி மன்றக் குழு, கல்வி மன்றக் குழுவின் உறுப்பினர்களுடன், குறிப்பாக இந்தக் குழுக்களில் ஆளுநர்களால் நியமிக்கப்பட்டவர்களுடன் கூட்டம் ஒன்றை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தினார்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக பல்கலைக்கழகங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

 தமிழ்நாடு துணைவேந்தர்கள் நியமனம்  ஆர் என் ரவி பொன்முடி

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு,

தமிழகத்தில் சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு, சட்டப்படியான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது என்று அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார்.

அதன் முக்கியக் குற்றச்சாட்டாக, “பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் இல்லாதது அவற்றின் பணிகளைப் பாதிக்கிறது. விரைவிலேயே தேடுதல் கமிட்டியை அமைக்க வேண்டுமென மாநில அரசிடம் சொல்லப்பட்டிருக்கிறது,” என்று கூறப்பட்டிருந்தது.

அந்தநேரத்திலேயே இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “தமிழகத்தில் சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு, சட்டப்படியான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. எனினும், அந்தக் குழுவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் தரவில்லை.

துணைவேந்தர்கள் தேடுதல் குழுவில் சட்டப்படி பல்கலைக்கழக உறுப்பினர், தமிழக அரசு உறுப்பினர், ஆளுநர் தரப்பில் ஒருவர் என 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், யுஜிசி சார்பில் ஒரு உறுப்பினரைச் சேர்க்க வேண்டுமென ஆளுநர் கூறுகிறார். அதற்கு பல்கலைக்கழக சட்டத்தில் இடமில்லை. தேர்வுக் குழுவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டும் என்பதற்காக ஆளுநர் இதை வலியுறுத்துகிறார்,” என்று தெரிவித்திருந்தார்.

தற்போது ஆளுநர் ஆர்.என். ரவி, தனது விருப்பப்படி கூடுதலாக ஒருவரை நியமித்து, தேர்வுக் குழுவை விரிவுபடுத்தியிருக்கிறார். இதை தமிழ்நாடு அரசு சட்டரீதியாக எப்படி எதிர்கொள்ளப் போகிறது எனப் பார்க்க வேண்டும்.

ஏற்கெனவே சம்பந்தப்பட்ட இரண்டு பல்கலைக்கழகங்களும் துணைவேந்தர்கள் இல்லாமல் ஓராண்டுக்கு மேல் இயங்கி வரும் நிலையில், இந்தப் போராட்டம் துணைவேந்தர் நியமனங்களை மேலும் தாமதப்படுத்தும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *