இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யாமல் இருப்பது ஏன்?

இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யாமல் இருப்பது ஏன்?

இந்தியா கூட்டணியின் விளம்பர தூதர் பிரதமர் மோதி : ஸ்டாலின்

மும்பையில் நடந்த ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாக இணைந்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட குழுக்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இது மட்டும் போதுமா?

பா.ஜ.கவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள இந்தியா கூட்டணியின் இரண்டு நாள் கூட்டம் மும்பையில் உள்ள கிராண்ட் ஹையத் ஹோட்டலில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் 28 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் கூட்டத்தில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றாக இணைந்து சந்திக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் இடங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்கி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியா  கூட்டணி

இந்தியா கூட்டணியின் தாரக மந்திரம்

மேலும், நாடு முழுவதும் மக்கள் பிரச்னைகள் குறித்து ஊர்வலங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. “Judega Bharat, Jiteega India” (பாரதம் ஒன்றிணையும் இந்தியா வெற்றி பெறும்) என்பதே இந்தக் கூட்டணியின் முழக்கமாகப் பல்வேறு மொழிகளில் முன்வைக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

ஒருங்கிணைப்பாளர்கள், அமைப்பாளர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 13 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது. கூட்டணியின் முக்கிய முடிவுகளை இந்தக் குழுவே மேற்கொள்ளும்.

ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் யார் யார்?

இந்தக் குழுவில் கே.சி. வேணுகோபால் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஷரத் பவார் (தேசியவாத காங்கிரஸ் கட்சி), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), அபிஷேக் பானர்ஜி (திருணமூல் காங்கிரஸ்), ஜாவேத் கான் (சோஷலிஸ்ட் கட்சி), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), சஞ்சய் ராவத் (சிவசேனா), ராகவ் சத்தா (ஆம் ஆத்மி), லல்லன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்), டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), ஒமர் அப்துல்லா (தேசிய மாநாடு), மெகபூபா முஃப்தி (மக்கள் ஜனநாயகக் கட்சி) உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற பெயரில் சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் முடிவடைந்த பிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அரவிந்த் கேஜ்ரிவால், நிதீஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் செய்தியாளர்கள் மத்தியில் பேசினர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வரும் மாதங்களில் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளால் மேலும் பல கைதுகள், சோதனைகள், தாக்குதல்கள் நடக்கலாம்; அதற்குத் தயாராக இருக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.

“எதிர்க்கட்சிக பாட்னா, பெங்களூருவில் நடத்திய கூட்டங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்தக் கூட்டங்களுக்குப் பிறகு, பிரதமர் இந்தியாவை தாக்கிப் பேசியதோடு அல்லாமல், நம்முடைய நாட்டை பயங்கரவாத அமைப்போடு ஒப்பிட்டார் என்பதை வைத்துப் பார்க்கும்போதே இதைப் புரிந்துகொள்ள முடியும்,” என்றும் குறிப்பிட்டார் கார்கே.

இந்தியா  கூட்டணி

பட மூலாதாரம், MK STALIN/TWITTER

இந்தியா கூட்டணியின் விளம்பர தூதர் மோதி: ஸ்டாலின்

இதில் தமிழில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கூட்டணியின் விளம்பரத் தூதராக பிரதமர் மோதி செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.

“பிரதமர் மோதி எங்கே போனாலும் அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், அங்கெல்லாம் 9 ஆண்டுகளில் செய்த சாதனைகளைப் பற்றிச் சொல்ல முடியாமல் இந்தியா கூட்டணியைப் பற்றியே பேசுகிறார்.

இந்தக் கூட்டணியின் சிறந்த விளம்பரத் தூதராக மோதி செயல்படுகிறார். அதற்காக எங்கள் கூட்டணியின் சார்பில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒன்பது ஆண்டுகளில் செய்ததாகச் சொல்வதற்கு அவர்களிடம் எந்த சாதனையும் கிடையாது. அவர்களுடைய ஆட்சிக்கு தினம் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. எங்கள் கூட்டணியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

இதுவொரு திருப்புமுனைக் கூட்டமாக அமைந்திருக்கிறது. பா.ஜ.கவின் சரிவு ஆரம்பித்துவிட்டது. இந்தியாவில் ஒருபோதும் காணாத சர்வாதிகார ஆட்சியை நாம் பார்க்கிறோம்.

சிஏஜி அறிக்கை குறித்து பிரதமர் பதில் சொல்ல முன்வரவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பில்லை. அமலாக்கத் துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை என அரசு அமைப்புகளை ஏவல் அமைப்புகளாக பா.ஜ.க. அரசு பயன்படுத்தி வருகிறது.

ஆனால், நாங்கள் நாட்டை ஒன்றாக இணைத்திருக்கிறோம். இந்தியாவை காக்க, மதச்சார்பின்மையைக் காக்க இணைந்திருக்கிறோம். ஒரு போர்க்களத்தில் இணைந்திருக்கிறோம்,” என்று பேசினார் மு.க. ஸ்டாலின்.

இந்தியா  கூட்டணி

பட மூலாதாரம், GETTY IMAGES

பிரதமர் வேட்பாளர் யார்?

இந்தக் கூட்டத்திற்கு முன்பாக, பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த கூட்டணிக்கு உள்ளேயே குழப்பங்கள் இருந்ததாகப் பேசப்பட்ட நிலையில், இந்தக் கூட்டத்தில் அது குறித்துப் பெரிதாக விவாதிக்கப்படவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது.

இதுகுறித்து பிபிசியின் மராத்தி சேவையிடம் பேசிய மூத்த பத்திரிகையாளரான ரஷீத் கித்வாய், “இப்போதைய சூழலில் இந்தியா கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவார் என்பதில் ஒருமித்த கருத்தை எட்டவில்லை.

அதற்குக் காரணம், பிரதமர் வேட்பாளரைச் சொல்வதாக இருந்தால், நரேந்திர மோதி என்ற பெயருக்கு இணையாக ஒரு தலைவரை அவர்கள் முன்னிறுத்த வேண்டும். அதனால்தான் அந்தக் கூட்டணி மிக எச்சரிக்கையுடன் செயல்படுகிறது,” என்கிறார்.

அதுவொரு பலவீனம்தான்; ஆனால், அந்த திசையில்தான் இந்தியா கூட்டணி செல்ல வேண்டும் என்கிறார் பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

“முதலில் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்யவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரைத் தேர்வு செய்வார்கள். ஆகவே முன்கூட்டியே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டியதில்லை.

தேர்தல் முடிந்த பிறகு அதை முடிவுசெய்யலாம். 2014ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. நரேந்திர மோதியை முன்னிறுத்தி, தேர்தலைச் சந்தித்ததால்தான் இப்போது அந்தக் கேள்வி வருகிறது. பிரதமர் வேட்பாளர் இல்லாமல் தேர்தலைச் சந்திப்பது ஒரு பலவீனம்தான்.

ஆனால், இதை மக்களிடம் புரிய வைத்து தேர்தலைச் சந்திக்க வேண்டும். இல்லாவிட்டால், பா.ஜ.கவின் வலையில் வீழ்ந்துவிட்டதாக ஆகிவிடும்,” என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

காங்கிரஸ் 2004இல் பின்பற்றிய மாடல்

இந்தியா கூட்டணியின் விளம்பர தூதர் பிரதமர் மோதி : ஸ்டாலின்

“கடந்த 2004ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக அப்போதைய பிரதமர் வாஜ்பேயி இருந்தார். ஆனால், காங்கிரஸ் எந்த பிரதமர் வேட்பாளரையும் முன்னிறுத்தாமலேயே வெற்றி பெற்றது. ஆகவே, இந்தத் தேர்தலையும் அப்படியே சந்திப்பது நல்லது,” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.

ஒரு வகையில் பார்த்தால் இந்த மூன்றாவது கூட்டம் ஒற்றுமையாக நடந்திருப்பதே வெற்றிகரமான விஷயம்தான் என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

“முன்பு 19 கட்சிகள் இருந்த கூட்டணியில் இப்போது 28 கட்சிகள் இணைந்திருக்கின்றன. இந்த நிலையில் மூன்றாவது கூட்டம் நடந்ததே பெரிய சாதனைதான்.

ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் கட்சித் தலைவர் பிரதமராக இருக்க வேண்டும் என தாங்கள் விரும்பினாலும் கூட்டணி முடிவு செய்யும் எனச் சொல்லிவிட்டார்கள்.

கடந்த 2019இல் நாம் பார்க்காத காட்சி இது. அதற்காக எல்லா முரண்பாடுகளும் தீர்ந்துவிட்டதாக அர்த்தமில்லை. முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். இன்னும் சில கட்சிகள் பா.ஜ.கவின் அழுத்தத்தால் வெளியேறலாம். இருந்தாலும் இந்தக் கூட்டம் வெற்றிகரமானதுதான்.

காரணம், பெங்களூரு, பாட்னா கூட்டங்களுக்கு முன்பாக அமலாக்கத் துறை போன்ற துறைகளை வைத்துப் பல இடங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த முறை அப்படியேதும் நடக்கவில்லை என்பதே பா.ஜ.க. பின்வாங்குவதைக் காட்டுகிறது,” என்கிறார் ராதாகிருஷ்ணன்.

இந்தியா  கூட்டணி

பட மூலாதாரம், FACEBOOK

பெரிய கட்சிகள் கூட்டணியில் இருப்பது பிரச்னையா?

ஆனால், இந்தக் கூட்டணியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பலமான கட்சிகள் இருப்பது பிரச்னைதான் என்கிறார் ரஷீத் கித்வாய்.

“இதற்கு முன்பாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி எனப் பல கூட்டணிகள் உருவாகியிருக்கின்றன.

அவற்றில் ஒரு சக்தி வாய்ந்த கட்சி இருக்கும். மற்றவை சிறிய கட்சிகளாக இருக்கும். இதிலும் ஒரு பெரிய கட்சி இருக்கிறது. ஆனால், பல சக்தி வாய்ந்த கட்சிகளும் கூட்டணியில் உள்ளன. அது உள்ளுக்குள்ளேயே போட்டியை ஏற்படுத்தும்,” என்கிறார் அவர்.

“ஒரே நாடு ஒரே தேர்தல்” அவசரம் ஏன்?

வியாழக்கிழமையன்று இந்தக் கூட்டம் துவங்குவதற்கு முன்பாக, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் செப்டம்பர் மாதம் நடக்கும் என்ற அறிவிப்பு வெளியானது.

வெள்ளிக்கிழமையன்று, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருப்பதாக செய்தி வெளியானதும் சலசலப்பை ஏற்படுத்தியது.

“ஒரே நாடு ஒரே தேர்தல்” என்பது சாத்தியமில்லை என்பதை ஏற்கெனவே சட்ட ஆணையம் தெரிவித்துவிட்டது. குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்கிறார்கள். பாட்னா கூட்டம் வெற்றிகரமாக நடக்காது, ஷரத் பவார் வரமாட்டார் என நினைத்தார்கள்.

ஆனால், அவர் அதில் பங்கேற்றார். கூட்டமும் வெற்றிகரமாக நடந்தது. அதனால், பெங்களூருவில் நடந்த கூட்டத்திற்கு முன்பாக தே.ஜ.கூவின் கூட்டத்தை நடத்தினார்கள். இப்போது நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம், ஒரே நாடு, ஒரே தேர்தல் எனப் பேசுகிறார்கள்,” என்கிறார் ராதாகிருஷ்ணன்.

இந்தியா கூட்டணியின் கூட்டம் துவங்குவதற்கு முன்பாக, கூட்டணிக்கென இலச்சினை முடிவு செய்யப்படும் எனப் பேசப்பட்டது. ஆனால், அப்படி ஏதும் முடிவு செய்யப்படவில்லை. அதற்கு சில காரணங்கள் இருக்கலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.

இந்தியா  கூட்டணி

பட மூலாதாரம், ANI

குறைந்தபட்ச செயல் திட்டம்

“முன்னர் 1970களின் பிற்பகுதியில், ஜனதா என்ற கூட்டணி ஒரே இலச்சினையின் கீழ்தான் உருவானது. ஆனால், விரைவிலேயே உடைந்துவிட்டது.”

“ஆகவே அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. அது சரியாகவும் வராது. ஆனால், குறைந்தபட்ச செயல்திட்டத்தை விரைவில் முடிவுசெய்ய வேண்டும். வெறும் பா.ஜ.க. எதிர்ப்பு மட்டும் தேர்தல்களை வெல்லப் போதாது.

பா.ஜ.கவை 200 இடங்களுக்குள் முடக்கினால்தான், எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க முடியும். அதற்கு, 300-350 தொகுதிகளிலாவது பா.ஜ.கவுக்கு எதிராக ஒரே வேட்பாளர் நிற்க வேண்டும். இந்திரா காந்திக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணன் அப்படித்தான் செய்தார்.

இந்திரா காந்தி அதனால் 294 தொகுதிகளில் தோற்றுப் போனார். இந்தக் கூட்டணியால் எத்தனை இடங்களில் அதைச் செய்ய முடியும் என்பதைப் பார்க்க வேண்டும்,” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.

ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பது நல்ல சமிக்ஞை என்று குறிப்பிடும் ஷ்யாம், அந்தக் குழுவில் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

“அவர்கள் சற்றுப் பெருந்தன்மையாக நடந்துகொண்டிருக்கலாம். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் இடம்பெறவில்லை என்பது புரியவில்லை,” என்கிறார் ஷ்யாம்.

மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி இனி வரும் நாட்களில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *