
பட மூலாதாரம், STRA MAA/BIGGBOSS/UGC
ஹைதராபாத் நகரத்தில் திரை பிரபலங்களும், செல்வந்தர்களும் வசிக்கக் கூடிய ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்டுடியோ ஒன்றின் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் பெரிய திரை நட்சத்திரத்தை அல்லது, அரசியல்வாதியை காண வரவில்லை. அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த வந்தது, ஒரு விவசாயியின் மகனுக்காக.
பல்லவி பிரசாந்த தெலுங்கு பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று, அதில் வெற்றியும் பெற்றுள்ளார். பல லட்சம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பல்லவி பிரசாந்துக்காகவே, அவர் வெற்றி பெற்ற மாலையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அவர்களை கட்டுப்படுத்துவது போலீஸாருக்கும் சவாலானதாகவே இருந்தது.
திரண்டு வந்த ரசிகர்கள், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மற்ற பங்கேற்பாளர்களுக்கும் அவர்களின் ரசிகர்களுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பி, அவர்களின் கார்களை சேதப்படுத்தினர்.
இதனால் போலீஸார் பல்லவி பிரசாந்தை உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேற்ற வேண்டியிருந்தது. போலீஸார் அவரை அப்புறப்படுத்த முயன்ற போது, “இது தான் ஒரு விவசாயியின் மகனுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையா?” என்று பல்லவி பிரசாந்த் கேட்டார்.

பட மூலாதாரம், UGC
மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் பல்லவி பிரசாந்துக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
காவல் கண்காணிப்பாளர் : உங்களால் தான் இங்கு பிரச்னை ஏற்படுகிறது.
பிரசாந்த் : ஆமாம். விவசாயியின் மகனாக இருந்து வெற்றி பெற்றது என் தவறு தான். நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே.
காவல் கண்காணிப்பாளர் : இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பிரசாந்த்: நான் பேசக் கூடாதா? பேசுவதற்கு உரிமை இல்லையா?
காவல் கண்காணிப்பாளர் : நீங்கள் இங்கு பிரச்னை செய்ய வேண்டாம். இங்கிருந்து கிளம்புங்கள்
பிரசாந்த் : நான் தவறாக எதுவும் சொல்லவில்லையே. நான் எதுவும் பிரச்னை செய்யவில்லை.
காவல் கண்காணிப்பாளர் : இது சரியல்ல.
மற்றொரு காவல் அதிகாரி : கற்கள் வீசப்படுகின்றன, முன்னால் உள்ள கார் கண்ணாடிகள் மீது.
எனினும் பிரசாந்தின் வாகனம் மெதுவாகவே நகர்கிறது. குழுமியிருக்கும் ரசிர்கர்களுக்கு காரிலிருந்து தனது கையை நீட்டினார். கூட்டத்தில் இருந்த ஒரு பெண், பிரசாந்துக்கு கை குலுக்க முயன்ற போது, ஓ வென்று அலறினார். உடனே போலீஸார் காரின் அருகே வந்தனர். மீண்டும் போலீஸார் மற்றும் பிரசாந்துக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்றது.
காவல் கண்காணிப்பாளர் : ஹே..இங்கு பிரச்னை செய்ய வேண்டாம், ட்ரைவர் வண்டியை எடு.
பிரசாந்த்: நான் என் வீட்டுக்கு செல்கிறேன் சார்.
காவல் கண்காணிப்பாளர்: ட்ரைவர், இங்கு இருந்தால் உயிரிழப்புகள் ஏற்படும், சட்ட ஒழுங்கு பிரச்னையாக மாறும்.
பிரசாந்த் : ஒரு விவசாயியின் மகனுக்கு அவ்வளவு தான் மதிப்பு வழங்கப்படுகிறது.
மற்றொரு காவல் அதிகாரி : நீங்கள் போங்க சாமி.
இந்த வாக்குவாதத்துக்கு பிறகு, பல்லவி பிரசாந்தின் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவதுக்கும் முன்பும் பின்பும் நிறைய குழப்பம் இருந்தது.
தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7-ல் பிரசாந்த் உடன் பங்கேற்ற அமர்தீப் அஸ்வினி மற்றும் கீது ஆகியோரின் கார்கள் தாக்கப்பட்டன. அவர்களின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து கீது ராயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பட மூலாதாரம், Instagram
ரசிகர்களால் தாக்கப்பட்ட பேருந்துகள்
அதன் பிறகு தெலுங்கானா போக்குவரத்து கழகத்தின் ஆறு பேருந்துகள் மற்றும் ஒரு போலீஸ் வாகனமும் ரசிகர்களால் தாக்கப்பட்டது. போலீசார் தாமாக முன்வந்து இது குறித்து வழக்குப் பதிவு செய்தனர். சி சி டிவி காட்சிகளை வைத்து தாக்கியவர்கள் யார் என கண்டறிந்து வருகின்றனர். இந்திய தண்டனைச் சட்டம் 147, 148, 290, 353, 427 ஆகிய பிரிவுகளின் கீழ் ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரசிகர்களுக்கு அழைப்பு இல்லாத போதும் அவர்களை அங்கே திரள் செய்ததற்காக பல்லவி பிரசாந்த் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அரசு சொத்துகளை சேதப்படுத்தியதற்காக மேலும் ஒரு வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஜாமீன் பெற முடியாத வழக்காகும்.
தெலுங்கானா போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனர் வி சி சஜ்ஜனார் இதுதான் ரசிகர் கூட்டமா என காட்டமாக கேள்வி எழுப்பினார். “ஆறு பேருந்துகளின் ஜன்னல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரசிகர்கள் என்ற பெயரில் கிறுக்குத்தனமாக நடந்து கொள்வது சமூகத்திற்கு நல்லதல்ல . மக்களை பாதுகாப்பாக பிற இடங்களுக்கு கொண்டு செல்லும் பேருந்துகளை தாக்குவது சமூகத்தை தாக்குவது போல் ஆகும். போக்குவரத்து கழக பேருந்துகள் பொது சொத்தாகும். அவற்றை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு” என்றார் அவர்.
இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகுவதற்கு என்ன காரணம்? உண்மையாகவே ரசிகர்கள் தாமாக வருகிறார்களா அல்லது இது விளம்பர உத்தியா என்ற விவாதம் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பட மூலாதாரம், UGC
‘ஆன்லைன் மோதல் தற்போது வன்முறையாகியுள்ளது’
பிக்பாஸ் பங்கேற்பாளர்களின் ரசிகர்களுக்கு இடையிலான மோதல் கடந்த காலங்களிலும் நடைபெற்றுள்ளன. ரசிகர்களின் வாக்குகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் வெற்றி அடைகிறார்களா தோல்வி அடைகிறார்களா என்பதை தீர்மானிப்பது இதற்கு முக்கிய காரணமாகும்.
முந்தைய சீசனில் பங்கேற்ற நடிகர் கெளஷிக் ஆதரவாக ஆன்லைனில் கௌஷிக் ஆர்மி உருவாக்கப்பட்டு அவர்கள் மற்ற பங்கேற்பாளர்களை ட்ரோல் செய்து வந்தனர். அப்போது அவை சமூக ஊடக தாக்குதல்களாகவே இருந்தன, நேரடி தாக்குதல்கள் நடைபெறவில்லை.
பல்லவி பிரசாந்த் தான் ஒரு விவசாயின் மகன் என்பதனை அவ்வபோது கூறிவந்தார். பிக் பாஸின் மற்றும் ஒரு பங்கேற்பாளரான அமர்தீப் விவசாயியின் மகன் என்ற பட்டத்தை பிரசாந்த் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்று விமர்சித்திருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே நாராயணா பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
“இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட வேண்டும் .போக்குவரத்து கழக பேருந்துகள் தாக்கப்பட்டதால் அல்ல. இந்த நிகழ்ச்சியை அனுமதிப்பதே தவறாகும். பிரசாந்த் என்ற பையனுக்கு பிக்பாஸ் பட்டமளித்து கிராமப்புறத்திலுள்ள மக்களை ஈர்க்க பார்க்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், STRA MAA/BIGGBOSS
மூத்த சினிமா பத்திரிக்கையாளர் பிரபு பிக்பாஸ் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். “பிக்பாஸ் ஒரு நல்ல தளம் அமைத்து தருகிறது. இந்த சீசன் நன்றாக நடைபெற்றது சின்னத்திரையில் அற்புதமான உணர்வுகள் உருவாக பிக்பாஸ் ஒரு தளமாக இருக்கிறது” என்றார்.
மேலும், “பிக் பாஸ் பலரது மனதை மாற்றக்கூடியது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை பார்க்கவும் வாய்ப்புகள் கிடைக்கலாம். எனவே பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் தங்களை சிறந்த முறையில் விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில் அவர்களை பார்ப்பதற்கு தாமாக நூற்றுக்கணக்கானோர் முன்வருகிறார்கள். சிலர் ரசிகர்களை தாமாக அழைத்து வரவும் செய்கிறார்கள். அழைத்துவரப்பட்ட ரசிகர்களிடையே இந்த மோதல்கள் நடைபெறுகின்றன. வெற்றி பெறாதவரின் ரசிகர்கள் சண்டை போடுகிறார்கள், குற்றம் சாட்டுகிறார்கள்” என்றார்.
இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க நிகழ்ச்சி நடத்துவதற்கு கடுமையான விதிகள் இருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் முரளிதர் பிபிசியிடம் தெரிவித்தார். தற்போது சொத்துக்கள மட்டுமே சேதமடைந்துள்ளன. மனித இழப்புகளும் ஏற்பட்டிருந்தால் கடந்த காலங்களில் என்டிஆர் காலத்தில் மோதல்கள் ஏற்பட்டதிலிருந்து சினிமா நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கும்போது ஒரு பெரிய தொகை பாதுகாப்பு டெபாசிட்டாக பெறப்படும் எனவே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பொறுப்பேற்று இது போன்ற மோதல்கள் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்வார் என்று கூறினார்.
பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் ரசிகர்கள் என்று கூறுபவர்கள்னுடைய நடத்தை சினிமா பத்திரிகையாளர்கள் விமர்சித்து வருகின்றனர். மூத்த சினிமா பத்திரிகையாளர் பிரபு கூறுகையில், “தற்போதெல்லாம் ரசிகர்ள் வெறித்தனமாக இருக்கிறார்கள். பங்கேற்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கூட விட்டு வைப்பதில்லை. மிகவும் மோசமாக நடந்துகொள்கிறார்கள். காவல்துறையினர் கூறுவதை கேட்பதில்லை. பெரிய திரை நட்சத்திரங்களின் ரசிகர்ளுக்கு இடையே கூட இதுபோன்ற சண்டைகள் நடைபெறுவதில்லை. தியேட்டர்களுக்கு வெளியே சிறிய அளவிலான மோதல்கள் இருக்கும். ஆனால் அவை வன்முறையாக தெருக்களில் மாறியது இல்லை. ஆனால் இங்கு ரசிகர்கள் வெறியுடன் இருக்கிறார்கள் நிகழ்ச்சி தொடங்கியவுடன் யார் என்றே தெரியாதவர்கள் எல்லாம் இவ்வளவு பிரச்சனை ஏற்படுத்துகிறார்கள்” என்றார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்