
பட மூலாதாரம், ANI
இந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் எது குறித்து விவாதிப்பதற்காக என அரசு தெரிவிக்கவில்லை.
மத்திய அரசு, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை செப்டம்பர் 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 22ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்குக் கூட்டியுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இந்தத் தகவலை தெரிவித்தார்.
ட்விட்டரில் பதிவிட்ட அவர், “சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் (17வது மக்களவையின் 13வது கூட்டத்தொடரும், மாநிலங்களவையின் 261வது கூட்டத் தொடரும்) செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை கூட்டப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
எனினும் இந்த சிறப்பு கூட்டத்தொடரில் என்ன விவாதிக்கப்படவுள்ளன என்ற விவரங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சில முக்கியமான மசோதாக்களை அரசு இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற திட்டமிட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை கூட்டியிருக்கும் நேரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏன் இந்த திடீர் கூட்டத் தொடர்?

பட மூலாதாரம், JOSHIPRALHAD
நாடாளுமன்றத்தை சிறப்புக் கூட்டத் தொடர் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை கூட்டப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் ஐந்து அமர்வுகள் இருக்கும் என பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். அமிருத் காலத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடர் அர்த்தமுள்ளதாக அமையும் என நம்புவதாக அவர் தெரிவித்தார். அப்போதும், எது குறித்து விவாதிக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
இந்தக் கூட்டத்தொடர் ஜி20 மாநாடு குறித்தும், சுதந்திரத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் குறித்தும் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தொடர், மே மாதம் திறந்து வைக்கப்பட்ட, நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட நெடு நாட்களாக ஒத்திவைக்கப்பட்டிருக்கும் மசோதாக்கள் குறித்துப் பேசலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சந்திரயான் -3 திட்டத்தின் வெற்றி குறித்தும், அமிருத் காலத்தின் இலக்குகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ குறித்த மசோதா இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் செப்டம்பர் 9, 10 தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இந்த ஐந்து நாட்கள் கூட்டத்தொடரானது, இந்த மாநாடு முடிந்த உடனே நடைபெறுகிறது. அந்தச் சூழலில், உலக மாநாட்டை நடத்தியது, சந்திரயான் 3-ன் வெற்றி என அரசு தனது சாதனைகளை பேசுவதற்கு இந்த கூட்டத்தொடர் ஒரு வாய்ப்பாக அமையும் எனக் கருதப்படுகிறது.
உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, அரசின் பிம்பத்தை வலுப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக இந்தக் கூட்டத்தொடரை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.
சுதந்திரத்தின் 50 ஆண்டுகள் முடியும்போது 1997இல் இதே போன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டதால் தற்போது 75 ஆண்டுகள் முடியும் போது அதேபோன்ற சிறப்புக் கூட்டத்தொடராக இது அமையக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்புகளும் இருக்கின்றன.
மேலும், இந்த கூட்டத்தொடரானது நாடாளுமன்றங்களின் தலைவர்களின் P-20 மாநாட்டுக்கான தயாரிப்புக் கூட்டமாக இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது. இந்தக் கூட்டம் டெல்லியில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. 30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
சிறப்புக் கூட்டத்தொடர்கள் எப்போது கூட்டப்பட்டுள்ளன?

பட மூலாதாரம், ANI
இந்தியா கூட்டணியின் கூட்டம் மும்பையில் செப்டம்பர் 1ஆம் தேதி நடத்தப்பட்டது.
மோதி அரசு இதற்கு முன்பாக 2017ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டியது. அதில் ஜி.எஸ்.டி அமலாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத்தொடரில் அண்ணல் அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, அவருக்கு சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அப்போதிலிருந்து நவம்பர் 26, அரசியல் சாசன தினமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 2002ஆம் ஆண்டு, கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத்தொடரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், தீவிரவாதத்துக்கு எதிரான சட்டத்தை நாடாளுமன்ற இரு அவைகளிலும் மார்ச் 26ஆம் தேதி நிறைவேற்றியது.
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 50வது ஆண்டை அனுசரிக்க 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது.
எதிர்க்கட்சிகள் என்ன கூறின?

பட மூலாதாரம், ANI
இந்தியா கூட்டணியின் கூட்டத்துக்கான எதிர்வினையே சிறப்புக் கூட்டத்தொடர் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டிருப்பதை பல எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. மும்பையில் நடைபெறும் இந்தியா கூட்டணியின் கூட்டத்துக்கு எதிர்வினையாகத்தான் இந்தக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்துவதிலிருந்து தப்பிக்கவே அரசு இந்த சிறப்புக் கூட்டத்தொடரை நடத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. அப்படிச் செய்தால் நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஐந்து மாநிலத் தேர்தல்களுடன் நடத்திட பாஜக திட்டமிடுவதாக காங்கிரஸ் விமர்சிக்கிறது.
அரசு பதட்டமாக இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். அதானி குறித்துப் பேச ஆரம்பித்தாலே பிரதமர் பதட்டமாகிறார் என்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி தெரிவித்தார்.
மகாராஷ்ட்ராவில் உள்ள தலைவர்கள் இந்தக் கூட்டத்தொடரின் நேரம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.
சிவ சேனா நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, சிறப்புக் கூட்டத்தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், தனது ட்விட்டரில், “விநாயகர் சதுர்த்தி தினத்தன்று கூட்டம் நடத்துவது இந்து மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. இந்த தேதிகளை அரசு தேர்ந்தெடுப்பது குறித்து அதிர்ச்சியடைகிறேன்,” என்று பதிவிட்டிருந்தார்.
அதே போன்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சூலே, சிறப்புக் கூட்டத்தொடரின் தேதிகளை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
“அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறுவதை அனைவரும் விரும்புகிறோம். விநாயகர் சதுர்தியன்று கூட்டத்தொடர் நடைபெறுவதால், அதை மாற்றியமைக்க கோரிக்கை விடுக்கிறேன்,” என்றார்.

பட மூலாதாரம், @PRIYANKAC19
தொழிலதிபர் கௌதம் அதானி விவாகரங்களிலிருந்து திசை திருப்பவே சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டிருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
“செய்திகளை கையாளும் மோதியின் முறை இது. ‘மோதானி’ ஊழல் குறித்த செய்திகள் இன்று அனைத்து இடங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன. நாளை இந்தியா கூட்டணியின் செய்திகள் வெளியாகும். இதை எப்படி தடுப்பது?
ஐந்து நாட்களுக்கு சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும், அதுவும் மழைக்காலக் கூட்டத்தொடர் முடிந்து மூன்று வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில்…” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
சிறப்புக் கூட்டத்தொடர் இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நடைபெறும் நேரத்தில் கூட்டப்பட்டுள்ளது.
கடந்த மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த காலக்கட்டத்தில் 23 மசோதாக்களை அரசு நிறைவேற்றியது. மணிப்பூர் வன்முறை குறித்தும், டெல்லியில் பணியிட மாற்றங்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தொடரில் எதிர்ப்பு தெரிவித்தன.
மோதி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூன்று நாட்கள் விவாதிக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்