ஜி20 மாநாடு: மோதிக்கும் பாஜகவுக்கும் பலன் கிடைக்கும் என கணித்த சீன ஊடகங்கள்

ஜி20 மாநாடு: மோதிக்கும் பாஜகவுக்கும் பலன் கிடைக்கும் என கணித்த சீன ஊடகங்கள்

இந்தியாவின் செல்வாக்கு

பட மூலாதாரம், @NARENDRAMODI

படக்குறிப்பு,

பிரேசில் அடுத்த ஆண்டு ஜி-20 மாநாட்டை நடத்தவுள்ளது. இதன் காரணமாக பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவிடம் கைச்சுத்தியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஒப்படைத்தார்.

டெல்லியில் முடிவடைந்த ஜி-20 மாநாட்டில் கூட்டறிக்கை மீது ஒருமித்த கருத்து எட்டப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதேபோல உலகளவில் இந்தியாவின் செல்வாக்கு இதன்மூலம் அதிகரித்திருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் யுக்ரேன் போர் தொடர்பாக ஜி20 நாடுகள் பிளவுப்பட்டிருக்கும் சூழலில் ஒருமித்த கருத்து என்பது சாத்தியமற்றது என நிபுணர்கள் கருதினார்கள்.

ஜி20 மாநாட்டின் கூட்டுத் தீர்மானத்தை யுக்ரேனைத் தவிர ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகள் என அனைத்து தரப்பினரும் வரவேற்றனர்.

இருப்பினும் இந்த தீர்மானம் கடந்த ஆண்டின் தீர்மானத்தை போல ரஷ்யாவை கடுமையாக விமர்சிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி எல்லா உலகத் தலைவர்களுடனும் மிகுந்த நட்பு பாவத்துடன் காணப்பட்டார்.

இறுதியாக அவர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் ‘சிரித்துப்பேசும்’ படமும் வெளிவந்தது.

இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் ஜி-20 மாநாட்டின் வெற்றி குறித்து உலக ஊடகங்களும் தங்கள் அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளன.

“இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கு ஜி-20 இல் காணப்பட்டாலும், பத்திரிகை சுதந்திரம் பற்றிய கவலைகளும் இருந்தன” என்று அமெரிக்க செய்தி முகமை என்பிசி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இரண்டு நாள் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகெங்கிலும் இருந்து பல நாடுகளின் தலைவர்கள் சென்ற வார இறுதியில் புது டெல்லி வந்திருந்தனர். அந்த நேரத்தில் முழு டெல்லியும் ஸ்தம்பித்தது.

இந்தியாவின் செல்வாக்கு

பட மூலாதாரம், @RUSSUA

படக்குறிப்பு,

மாநாட்டின் இரண்டாவது நாளில் எடுக்கப்பட்ட மோடி மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த படம் பிரபலமாகி வருகிறது.

‘இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் செல்வாக்கு’

“உலகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் இந்த சந்திப்பு இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் செல்வாக்கை பறைசாற்றியது. கூடவே இந்து தேசியவாத அரசில் பத்திரிகை சுதந்திரம் எப்படி உள்ளது என்றும் வெளிப்பட்டது,” என்று என்பிசி தனது செய்தியில் கூறியுள்ளது.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடும்கூட. மறுபுறம், மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் மத்தியஸ்தராகவும் இந்தியா உள்ளது.

செய்தியாளர்கள் உலகத் தலைவர்களிடமிருந்து தள்ளி வைக்கப்பட்டதை தனது செய்தியில் குறிப்பிட்ட என்பிசி, “புது டெல்லியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் இந்தியா தன்னை ஜனநாயகத்தின் தாய் என்று அறிவித்தது. ஆனால் நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் தலைவர்களிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர்,” என்று தெரிவித்தது.

“வெள்ளிக்கிழமை இரவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் இடையிலான சந்திப்பு நிகழ்ந்த இடத்திற்கு பொது நெறிமுறைக்கு மாறாக எந்த ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படவில்லை,” என்றும் அச்செய்தி கூறியது.

ஜி20 மாநாட்டின் தீர்மானத்தை ரஷ்யா ‘வெற்றி’ என்று கூறியதையும், தீர்மானம் குறித்த யுக்ரேனின் அதிருப்தியையும் சிஎன்என் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவின் அறிக்கையை சிஎன்என் வெளியிட்டுள்ளது.

மாநாட்டின் கூட்டுத் தீர்மானம் வெளியிடப்பட்ட மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று அறிக்கை வெளியிட்ட லாவ்ரோவ், “இந்த மாநாடு இந்தியாவுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் வெற்றிகரமாக அமைந்தது” என்று கூறியிருந்தார்.

யுக்ரேன் போர் ஒரு சிக்கலான பிரச்சனை. இது தொடர்பாக மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மற்றும் சீனா இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.

இது குறித்து சனிக்கிழமையன்று வெளியான தீர்மானத்தில், “சூழ்நிலை குறித்து வெவ்வேறு பார்வைகளும் மதிப்பீடுகளும் இருந்தன,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

“இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையானது, உச்சிமாநாட்டை நடத்திய இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதிக்கு சாதகமான மாற்றம் போல இருந்தது. ஆயினும் அது அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளால் தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட மென்மையான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது,” என்று சிஎன்என் தெரிவிக்கிறது.

இந்தியாவின் செல்வாக்கு

பட மூலாதாரம், NARENDRAMODI

கூட்டறிக்கையை வெளியிடவைத்தது இந்தியாவுக்கு பெரிய வெற்றி

ஜி-20 தீர்மானம், யுக்ரேன் மீதான வளர்ந்து வரும் வேறுபாடுகளையும், ’க்ளோபல் சவுத்’ இன் (இந்தியா போன்ற வளரும் நாடுகள்) அதிகரித்து வரும் செல்வாக்கையும் பிரதிபலிக்கிறது என்று வாஷிங்டன் போஸ்ட் தனது செய்தியில் கூறியுள்ளது.

ஜி-20 மாநாட்டில், ஆப்பிரிக்க ஒன்றியமும் ஜி20 உறுப்பினராக சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

“நாடுகளை கூட்டு தீர்மானத்தில் கையொப்பமிட வைத்ததில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் சர்ச்சைக்குரிய யுக்ரேன்-ரஷ்யா போர் குறித்து மென்மையான வார்த்தைகளை பயன்படுத்தியதால் அது சாத்தியமானது,” என்று வாஷிங்டன் போஸ்ட் எழுதியது.

”ஜி-20 மாநாட்டுக்கு முன்பாக கடைசி மாதங்களில் கூட யுக்ரேன் போர் தொடர்பான அறிக்கையின் வார்த்தைகளை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ளச் செய்ய இந்தியாவால் முடியவில்லை. ஏனெனில் இந்தோனீசியாவில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளை சீனாவும் ரஷ்யாவும் கடுமையாக எதிர்த்தன,” என்று வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

மாநாடு முடிவதற்கு ஒரு நாள் முன்னதாக வெளியிடப்பட்ட தீர்மானம், “யுக்ரேன் போரின் மனித துன்பங்கள் மற்றும் எதிர்மறை தாக்கங்கள்” ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டியது. ஆனால் அதில் ரஷ்யாவின் பெயர் கூட இடம்பெறவில்லை.

ஜி-20 மாநாட்டில் கூட்டுத் தீர்மானத்தின் மீது ஒருமித்த கருத்தை எட்டுவது கடினம் என்று பல ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டனர். இருப்பினும், மாநாட்டின் முதல் நாளிலேயே புதுடெல்லியில் தீர்மானம் வெளியிடப்பட்டது.

இந்த கூட்டறிக்கை இந்திய தூதாண்மையின் வெற்றி என்று ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ட்ஸ் கூறியுள்ளார்.

ரஷ்யா தனது எதிர்ப்பை கைவிட்டதாகவும், யுக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் ஓலாஃப் கூறினார்.

இந்த தீர்மானத்தில் ரஷ்யா கையெழுத்திட்டதை ஒரு வெற்றியாக மேற்கத்திய நாடுகள் பார்க்கின்றன என்றும் வாஷிங்டன் போஸ்ட் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

மோதிக்கும் பாஜகவுக்கும் பலன் கிடைக்கும் – குளோபல் டைம்ஸ்

சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் குளோபல் டைம்ஸ் தனதுகட்டுரையில், ஜி-20 மாநாடு வளர்ந்து வரும் வேறுபாடுகளுக்கு மத்தியில் அடிப்படை ஒற்றுமையை எடுத்துக்காட்டியுள்ளது என்று கூறியுள்ளது.

“டெல்லியில் நடந்துமுடிந்த ஜி-20 உச்சிமாநாடு இறுதியாக கூட்டுத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இதில் யுக்ரேன்போர் தொடர்பாக மிகவும் அடிப்படையான ஒற்றுமை மற்றும் நடுநிலை அணுகுமுறை காணப்படுகிறது,” என்று குளோபல் டைம்ஸ் எழுதியது.

“ஜி-20, உலகளாவிய நிர்வாகத்திற்கான ஒரு முக்கியமான பல்முனை மேடை என்று சீன ஆய்வாளர்கள் இப்போதும் கருதுகின்றனர். அதே நேரத்தில் இந்தக்குழு, பெரும் சக்திகளுக்கு இடையிலான சிக்கலான மோதல்களால் செயலிழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறது,” என்று குளோபல் டைம்ஸ் குறிப்பிடுகிறது.

மாநாட்டில் பங்கேற்க வந்த சீனப் பிரதமர் லி சியாங்கின் அறிக்கையையும் குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. 

ஜி-20 உறுப்பினர்கள் ஒரு முன்மாதிரியான பாத்திரத்தை வகிக்க வேண்டும். குறிப்பிட்ட நிகழ்வுகளிலிருந்து தொடங்கி நிகழ்காலத்தில் நல்லது செய்ய முயற்சிக்க வேண்டும் என்று மாநாட்டின் போது லி சியாங் கூறினார்.

”மிக முக்கியமான விஷயம் வளர்ச்சி பற்றியது. எனவே உறுப்பினர்கள், பரந்த கொள்கை ஒருங்கிணைப்பின்மையத்தில், வளர்ச்சியை வைக்க வேண்டும்,” என்று லி கூறினார்.

“ஜி-20 மாநாட்டின் வெற்றி, இந்தியாவில் மோதி மற்றும் அவரது பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை வலுப்படுத்தும்,”என்று ஃபுடான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தின் பேராசிரியரான லிமின்வாங் கூறியதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டின் மூலம் இந்தியாவும் நிறைய சாதித்துள்ளது. ஏனெனில் சர்வதேச அரங்கில் இந்தியா தன்னை ‘வலுவான ஈர்ப்பு சக்தியாக’ ஆக்கிக்கொண்டுள்ளது.

“ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகள்ஆகிய இரண்டுமே ஆதரிக்கும் நாடாக இந்தியா உள்ளது,”என்று குளோபல் டைம்ஸ் எழுதியுள்ளது.

“யுக்ரேன் நெருக்கடியில் மேற்குலக நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் ’ஒருபக்கம்’ சாய்வதை  வளரும் நாடுகள் விரும்பவில்லை என்பதையும், சீனாவிற்கு எதிராக அமெரிக்கா எல்லா பக்கங்களிலிருந்தும் கட்டுப்பாட்டை எடுக்கத் தொடங்கிய நிலையில்,எந்த ஒரு தரப்பையும் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்க தாங்கள் விரும்பவில்லை என்பதையும் இந்தியா பிரதிபலிக்கிறது,” என்று குளோபல் டைம்ஸ் எழுதியது,

அதே சமயம் ’க்ளோபல் சவுத்’ ஐ வழிநடத்தும் கனவை நனவாக்கும் அளவுக்கு இந்தியாவின் தேசிய சக்தி மற்றும் பொருளாதாரம் இன்னும் பெரிதாகவில்லை,” என்றும் ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் செல்வாக்கு

பட மூலாதாரம், NARENDRAMODI

மோதிக்கு கிடைக்கும் பெருமை நியாயமானதே

டெல்லியில் வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனம் ஐரோப்பாவில் அமைதியைஏற்படுத்தினால் அதன் ஓரளவு பெருமை மோதிக்கு செல்லும். அது நியாயமானதே என்று பாகிஸ்தானின்’டான்’ நாளிதழில்வெளியிடப்பட்ட ஒரு பகுப்பாய்வு, தெரிவிக்கிறது.

“மோதியின் அழைப்பின்பேரில் இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரும் இந்தமாதம் தொடங்கும். அதில் அவர் வேறு  சிலபெரிய பணிகளையும் செய்யமுடியும். உலக நாடுகளின் கரகோஷத்திற்கு இடையே யுக்ரேனுக்கு அமைதிச்செய்தியை அவர் வழங்கியுள்ளார். ஆனால் மணிப்பூர், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பெரும் பகுதி மக்களின் துயரங்களைத்தீர்க்க அவர் எந்த அவசரமும் காட்டவில்லை,” என்று ‘டான்’ கூறுகிறது

ரஷ்ய செய்தி முகமையான ’டாஸ்’, ஜெர்மன் செய்தித்தாள் ’டித் ஃஜாய்த்’ இன் செய்தியைமேற்கோள் காட்டி, ”ஜி-20 இன் கூட்டு பிரகடனம் மேற்கத்தியநாடுகள் ரஷ்யாவைத் தனிமைப்படுத்தத் தவறிவிட்டதைக் குறிக்கிறது,” என்றுகூறியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *