
பட மூலாதாரம், ANI
ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடமிருந்து ரூ.200 கோடிக்கும் அதிகமான ரொக்கத்தை மீட்டுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தீரஜ் சாஹூடன் தொடர்புடைய, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் பல உள்ள இடங்களில் வெள்ளிக்கிழமையன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
ஒடிசா மற்றும் ஜார்கண்டில் உள்ள அவரது வீட்டில் இருந்து இந்த கட்டுக்கட்டாக ரெக்கம் மீட்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி, செய்தி நிறுவனமான பிடிஐ வெளியிட்டுள்ள செய்தியில் அதிகாரிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் சோதனைகளை நடத்தியதாகக் கூறியுள்ளது. இந்த காலகட்டத்தில், “கணக்கில் வராத” ரொக்கம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக மீட்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை, ஒடிசாவில் உள்ள பௌத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையைத் தொடங்கினர். பல்தேவ் சாஹூ இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதுவரை ரூ.220 கோடி எண்ணப்பட்டுள்ளது என்றும், இந்தத் தொகை ரூ.250 கோடி வரை அதிகரிக்கலாம் என்றும் ஆதாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
பி.டி.ஐ. செய்தியின்படி, ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கு சுமார் மூன்று டஜன் பணம் எண்ணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இயந்திரங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், நோட்டு எண்ணும் பணி மந்த கதியில் நடைபெற்று வருகிறது.

பட மூலாதாரம், DHIRAJSAHU.IN
தீரஜ் சாஹு மூன்று முறை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியால் தேர்வு செய்யப்பட்டார்.
ரெய்டுகள் எங்கு நடந்தன?
ஒடிசா மாநிலம் போலங்கிர் மாவட்டத்தின் சுடாபாடா பகுதியில் உள்ள மறைவிடத்தில் இருந்து 156 பைகளில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை வருமான வரித்துறை அதிகாரிகள் மீட்டனர்.
இதுவரை 6-7 பைகள் மட்டுமே எண்ணப்பட்டதாகவும், அதில் இந்த அளவு பணம் எண்ணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போலங்கிரில் மட்டும் ரூ.200 கோடி மதிப்புள்ள பணம் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் ஒடிசாவில் உள்ள சம்பல்பூர் மற்றும் சுந்தர்கர், ஜார்கண்டில் உள்ள பொகாரோ மற்றும் ராஞ்சி மற்றும் கொல்கத்தாவில் இருந்து பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒடிசாவின் சம்பல்பூர், போலங்கிர், திதிலாகர், பௌத், சுந்தர்கர், ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் மற்றும் ஜார்கண்டின் ராஞ்சி மற்றும் பொகாரோ ஆகிய இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனைகள் குறித்து வருமான வரித்துறையிடம் இருந்து இதுவரை எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
இந்த விவகாரத்தை மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரிக்க வேண்டும் என்று பாஜகவின் ஒடிசா பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒடிசாவில் ஆளும் பிஜேடியிடம் பாஜக விளக்கம் கேட்டுள்ளது.

பட மூலாதாரம், YEARS
வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
தீரஜ் பிரசாத் சாஹூ யார்?
நாடாளுமன்ற மேலவையின் இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவலின்படி, தீரஜ் பிரசாத் சாஹூ, ராஞ்சியில் நவம்பர் 23, 1955 இல் பிறந்தார், தந்தையின் பெயர் ராய் சாஹேப் பல்தேவ் சாஹு மற்றும் தாயின் பெயர் சுசீலா தேவி.
அவர் மூன்று முறை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2009ல் மேலவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியால் தேர்வு செய்யப்பட்டு முதன்முறையாக உறுப்பினரானார். மீண்டும் ஜூலை 2010 இல், அவர் ஜார்கண்டிலிருந்து நாடாளுமன்ற மேலவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2018 மே மாதம் அவர் மூன்றாவது முறையாக மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பட மூலாதாரம், DHIRAJ PRASAD SAHU @FB
தீரஜ் பிரசாத்தின் சொந்த வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி , அவர் ஒரு வணிக குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை ராய் சாஹேப் பல்தேவ் சாஹூ ஒருங்கிணைந்த பீகாரில் உள்ள சோட்டாநாக்பூரைச் சேர்ந்தவர் மற்றும் சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.
அவரது குடும்பம் இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அவரே 1977ல் அரசியல் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். லோஹர்டகா மாவட்ட இளைஞர் காங்கிரஸில் இணைந்து அப்போது செயல்பட்டார்.
அவரது சகோதரர் சிவபிரசாத் சாஹூ ராஞ்சியில் இருந்து இரண்டு முறை காங்கிரஸ் சார்பில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஞ்சியில் உள்ள மார்வாரி கல்லூரியில் பி.ஏ. படித்துள்ள இவர் தற்போது ஜார்கண்ட் மாநிலம் லோஹர்டகாவில் வசித்து வருகிறார்.
2018 ல் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தீரஜ் சாஹூ தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவர் தனது சொத்து ரூ.34.83 கோடி என அறிவித்திருந்தார். 2.04 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
அந்த பிரமாணப் பத்திரத்தின்படி, அவர் மீது கிரிமினல் வழக்கு எதுவும் இல்லை. அவருக்கு ரேஞ்ச் ரோவர், ஃபார்ச்சூனர், பிஎம்டபிள்யூ மற்றும் பஜெரோ ஆகிய கார்கள் உள்ளன.

பட மூலாதாரம், YEARS
வெள்ளிக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பிற பாஜக தலைவர்கள் இந்த விஷயத்தை விமர்சித்திருந்தனர். தீரஜ் சாஹூவின் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து பல கருத்துக்களைத் தெரிவித்தனர்.
பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்ப அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோதி சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.
அவர் தமது பதிவில், “நாட்டு மக்கள் இந்தக் குவியல் குவியலான கரன்சி நோட்டுகளைப் பார்த்துவிட்டுத் தங்கள் தலைவர்களின் நேர்மையான ‘பேச்சுகளை’ கேட்க வேண்டும்… பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவையும் திரும்பக் கொடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். இது மோடியின் உத்தரவாதம்,” எனத்தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனமான பிடிஐயின் அறிக்கையின்படி, பிரதமர் நரேந்திர மோதியின் இந்த கருத்து அந்த மதுபான நிறுவனத்துடன் தொடர்புடைய ஒடிசா மற்றும் ஜார்கண்ட் அரசியல்வாதிகளுக்கு ஒரு சமிக்ஞையாகும்.

பட மூலாதாரம், Getty Images
மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவும் மீட்கப்படும் என பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா தமது செய்தியாளர் சந்திப்பில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை மட்டும் குறிவைக்காமல் சோனியா காந்தி குடும்பத்தையும், காங்கிரஸ் கட்சியையும் மையப்படுத்திப் பேசினார்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அந்த பதவியில் தொடர உரிமை இல்லை என்றும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அவர் அப்போது வலியுறுத்தினார்.
“ஊழலை தழைக்க விடமாட்டோம், ஊழல் செய்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்பது பிரதமரின் உத்தரவாதம்” என்றார்.
“காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 அமைச்சர்களிடம் இருந்து மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கம் சிக்கிய நிலையில், தற்போது ஒரு எம்.பி.யிடம் ரூ.100 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. கட்சியில் எத்தனை எம்.பி.க்கள் உள்ளனர்? மொத்தத்தில் உலகிலேயே ஊழல் மிகுந்த குடும்பம் தான் சோனியா காந்தியின் குடும்பம்,” எனப் பதிவிட்டுள்ளார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்