
பட மூலாதாரம், Getty Images
உலகக்கோப்பையில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதிய அரையிறுதி ஆட்டம் இன்றும் இந்திய ரசிகர்களின் கண் முன்னே வந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதுகுறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவிடமும் செய்தியாளர்கள் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
அதற்கு ரோகித் சர்மா கூறிய பதில் என்ன? நியூசிலாந்தை எதிர்கொள்ள இந்திய அணி வகுத்துள்ள உத்தி என்ன? மறுபுறம், உலகக்கோப்பை தொடரை ஆரவாரமாக தொடங்கி, தட்டுத் தடுமாறி அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து அணி, பலமான இந்திய அணியை எதிர்கொள்ள என்ன திட்டம் வைத்துள்ளது? அதுகுறித்து அந்த அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் என்ன கூறுகிறார்? விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியா – நியூசிலாந்து நாளை மோதல்
இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வரும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. லீக் போட்டிகளில் வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்த இந்திய அணி தோல்வியையே சந்திக்காமல் 9 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து கம்பீரமாக அரையிறுதிக்கு வந்துள்ளது. இந்தியாவுடன் அரையிறுதியில் மோதவுள்ள நியூசிலாந்து அணியோ, இந்தியா போலவே தொடரை அதிரடியாக தொடங்கினாலும் முதல் 4 வெற்றிகளைப் போலவே அடுத்து 4 தொடர் தோல்விகளையும் சந்திக்க நேரிட்டது. முடிவில் ஒருவழியாக நான்காவது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. அதற்காக இரு அணி வீரர்களும் பலத்த பாதுகாப்புடன் இன்று மைதானத்திற்கு வந்து சேர்ந்தனர்.
இந்திய அணி பற்றி வில்லியம்சன் கருத்து
அரையிறுதி ஆட்டம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த நியூசிலாந்து அணி கேப்டன் கனே வில்லியம்சன், “இது மிகவும் சவாலான ஆட்டமாக இருக்கும். ஏனெனில், இந்திய அணி இந்த தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது” என்று கூறினார்.
உலகக்கோப்பையில் 2 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் கூட நியூசிலாந்து அணி குறைத்து மதிப்பிடப்படுவது குறித்துப் பேசிய வில்லியம்சன், “அவ்வாறு நீங்கள்(பத்திரிகையாளர்கள்) தான் எழுதுகிறீர்கள். அது மாறிவிட்டதாக நன் கருதவில்லை. பரவாயில்லை. இந்தியா மிகச்சிறப்பான அணியாக உருவெடுத்துள்ளது.
ஆனால், நாளைய தினம் எங்களுக்கான நாளாக அமையும் பட்சத்தில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகையில் எங்களுக்கான சிறந்த வாய்ப்புகள் உள்ளன. கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நாங்கள் எங்கள் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். இந்த தொடரில் சில ஆட்டங்களில் நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்தியுள்ளோம். குறைந்த வித்தியாசத்தில் இரு தோல்விகளை சந்தித்தோம். ஆனாலும் பின்னர் கிடைத்த வெற்றிகள் எங்களை இங்கே கொண்டு வந்துள்ளன.” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
2019 உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியது பற்றி…
4 ஆண்டுகளுக்கு முன்பு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தியதை நினைவுகூர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “இந்த ஆட்டம் சற்று வித்தியாசமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். வானிலையைப் பாருங்கள். 2 நாட்களுக்குப் பதிலாக இந்த ஆட்டம் ஒரே நாளில் முடிந்துவிடும்” என்று அவர் கூறினார்.
மைதானத்தில் பல ஆயிரம் இந்திய ரசிகர்களுக்கு முன்பாக ஆடவிருப்பது குறித்துப் பேசிய வில்லியம்சன், “மைதானத்தில் இந்திய அணி ரசிகர்களே நிறைந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் இந்திய அணியை தொடர்ந்து உற்சாகப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய ரசிகர் கூட்டத்திற்கு முன்பாக ஆடுவது எப்போதுமே சிறப்பான ஒன்று. இதுபோன்ற பல தருணங்களை நாங்கள் ஏற்கனவே எதிர்கொண்டுள்ளோம். எங்கள் நாடு மிகச்சிறியது என்பதால் எங்கள் ரசிகர்களால் எப்போதுமே மைதானத்தை நிறைத்துவிட முடியாது. ஆகவே, இதுபோன்ற அனுபவங்கள் எங்களுக்கு புதிது அல்ல. இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக உலகக்கோப்பை அரையிறுதியில் மோதுவது என்பது சிறப்பானது.” என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
2019 உலகக்கோப்பை தோல்வி பற்றி ரோகித் கூறியது என்ன?
இதேபோல், நாளை நியூசிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் ஆடப் போவது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும் செய்தியாளர்களிடம் பேசினார். அவரிடமும் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோற்றது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ரோகித் சர்மா, “1983-ம் ஆண்டு முதன் முறையாக உலகக்கோப்பையை வென்ற போது எங்கள் அணியில் பலர் பிறக்கவே இல்லை. 2011-ம் ஆண்டு கோப்பையை வென்ற போது பலர் கிரிக்கெட் விளையாடவே தொடங்கியிருக்கவில்லை. இதற்கு முன் உலகக்போப்பைகளை எவ்வாறு வென்றோம் என்பது பற்றி அணி வீரர்கள் பேசி நான் பார்க்கவில்லை. நாம் எவ்வாறு இன்னும் மேம்படுவது என்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறோம். முதல் ஆட்டத்தில் இருந்தே இன்று வெல்ல வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்” என்றார்.
நெதர்லாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் கோலி, சூர்யகுமார், சுப்மான் கில் உள்பட 9 வீரர்கள் பந்துவீசியது குறித்த கேள்வியை ரோகித் சர்மாவிடம் செய்தியாளர்கள் எழுப்பினர்.
“வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயமடைந்ததால் அணியில் எல்லாமே மாறிவிட்டது. அது முதலே, ஸ்பெஷலிஸ் பந்துவீச்சாளர்கள் தவிர மற்றவர்களையும் பந்துவீச்சில் பயன்படுத்திக் கொள்ள விரும்பினோம். பந்துவீச கூடுதல் தெரிவுகள் இருப்பது நல்லதுதான். ஆனால், அவர்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் எழாது என்று நம்புகிறேன்” என்று ரோகித் சர்மா கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
2019 இந்தியா – நியூசி. அரையிறுதியில் என்ன நடந்தது?
2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தை இப்போதுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. இந்தப் போட்டியின் முடிவுக்காக ரசிகர்கள் 28 மணிநேரம் 24 நிமிடங்கள் காத்திருந்தனர்.
2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரிலும் இந்திய அணி அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்னமாகத் திகழ்ந்தது. ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி 3 பேரும் அசுரத்தனமான ஃபார்மில் இருந்தனர்.
ஆனால், 2019 ஜூலை 9-ஆம் தேதி மான்செஸ்டரில் நடந்த ஆட்டம் மழையால் தடைபடவே ஆட்டம் ரிசர்வ் நாளான மறுநாள் நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
இதையடுத்து கடைசி 3 ஓவர்கள் மட்டும் மறுநாள்(10-ஆம் தேதி) காலை வீசப்பட்டது. நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் என 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது.
240 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஏற்கனவே மழை பெய்து ஆடுகளம் ஈரப்பதத்துடன் இருந்தது. மேலும் காலநிலை, குளிர்ந்த சூழல், காற்று ஆகியவை நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்திருந்தது.
லீக் ஆட்டங்களில் பட்டையை கிளப்பி வந்த ரோஹித் சர்மா, ராகுல், கோலி ஆகியோர் மாட் ஹென்றியின் வேகப்பந்துவீச்சில் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். 92 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தோல்வியின் பிடியில் இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
2019 அரையிறுதியில் இந்திய ரசிகர்களின் இதயத்தை நொறுக்கிய தோனியின் ரன் அவுட்
6-வது விக்கெட்டுக்கு ஜடேஜா, தோனி கூட்டணி இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்டது. இருவரின் அற்புதமான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றியை நெருங்கியது. கடைசி 18 பந்துகளில் இந்திய அணி வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. டிரன்ட் போல்ட் வீசிய ஸ்லோ பாலில் ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
கிரேட் ஃபினிஷர் தோனி களத்தில் இருந்ததால், இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தனர். கடைசி 2 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டன. 49-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து, தோனி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
3-வது பந்தில் 2 ரன்கள் எடுத்து ஸ்ட்ரைக்கை தக்கவைக்க தோனி முயன்ற போது கப்திலின் டைரக்ட் ஹிட்டில் அவர் ரன்அவுட் ஆனார். தோனி 50 ரன்னில் ஆட்டமிழந்ததும் இந்திய அணியின் தோல்வி உறுதியானது. 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்து 18 ரன்களில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்