
பட மூலாதாரம், Getty Images
உலகக்கோப்பையில் முக்கியமான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இமாலய இலக்கை நிர்ணயித்தும் பாகிஸ்தானிடம் தோற்றுப் போயுள்ளது. ஆட்டம் நடந்த பெங்களூருவில் தொடர்ந்து பெய்த மழை, நியூசிலாந்து அணிக்கு எமனாகிப் போனது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
உலகக்கோப்பையின் தொடக்கத்தில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை குவித்த நியூசிலாந்து அணி, அடுத்தடுத்து அடைந்த 4 தோல்விகளால் தற்போது இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஏன் சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை?
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். பாகிஸ்தான் அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் நீக்கப்பட்டு, 4 வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டது கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கே வியப்பாக இருந்தது. சதாப் கான், உசாமா மிர் ஆகியோர் நீக்கப்பட்டது பல்வேறு கேள்விகளை விமர்சகர்கள் மத்தியில் எழுப்பியது.
பெங்களூரு சின்னசாமி அரங்கு மிகவும் சிறைய மைதானம். இங்கு சுழற்பந்துவீச்சாளர்களை பந்துவீசச் செய்து, நியூசிலாந்து பேட்டர்கள் வெளுக்கத் தொடங்கினால், ஸ்கோர் எகிறிவிடும். இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக, லைன் லென்த்தில் வீசக்கூடிய 4 வேகப்பந்துவீச்சாளர்களை பாகிஸ்தான் அணியில் சேர்த்தது. புதிய பந்தில் லைன் லென்த்தில் வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் தேவை என்பதாலும் கூடுதல் வேகப் பந்துவீச்சாளர்களைச் சேர்த்தது.
நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் முக்கியமானது என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் ஆட்டத்தில் களமிறங்கின. நியூசிலாந்து அணிக்கு டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா தொடக்கம் அளித்தனர்.
நியூசிலாந்து சிறப்பான தொடக்கம்
ஹசன் அலி வீசிய 2வது ஓவரில் பவுண்டரி அடித்து ரவீந்திரா கணக்கைத் தொடங்கிவைத்தார். ஹசன் அலி வீசிய 4-வது ஓவரில் ரவீந்திரா, கான்வே தலா ஒருபவுண்டரி அடித்து 9 ரன்கள் சேர்த்தனர்.
அப்ரிடி வீசிய 7-வது ஓவரில் கான்வே 2 பவுண்டரிகளையும், ரவீந்திரா ஒரு பவுண்டரி என 13 ரன்களை விளாசினர். இப்திகார் முகமது பந்துவீசியும் அவரின் ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினர். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி நியூசிலாந்து அணி 60 ரன்கள் சேர்த்திருந்தது.
ஹசன் அலி வீசிய 11வது ஓவரில் கான்வே 35 ரன்கள் சேர்த்தநிலையில் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த வில்லியம்ஸன், ரவீந்திராவுடன் இணைந்தார்.
ஹாரிஸ் ராஃப் வீசிய 12வது ஓவரில் வில்லியம்ஸன் 2 பவுண்டரிகளை விளாசினார். நிதானமாக ஆடிய ரவீந்திரா 51பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். உலகக் கோப்பைத் தொடரில் ரவீந்திரா அடிக்கும் 3வது அரைசதம் இதுவாகும். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்து 6 ரன்ரேட்டில் பயணித்தது.
20 ஓவர்களுக்குப்பின் நியூசிலாந்து அணியின் ரன்ரேட் உயரத் தொடங்கியது. வில்லியம்ஸன் அதிரடி ஆட்டத்துக்கு மாறி பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுக்கத் தொடங்கினார்.
சல்மான் வீசிய 23-வது ஓவரில் வில்லியம்ஸன் ஒரு பவுண்டரி, சிக்ஸர் என 13 ரன்கள் சேர்த்தார். இப்திகார் வீசிய 25-வது ஓவரில் வில்லியம்ஸன் 2 பவுண்டரிகளையும், ரவீந்திரா ஒரு பவுண்டரி என 15 ரன்கள் சேர்த்தனர். வில்லியம்ஸன் 50 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
29 ஓவர்களில் நியூசிலாந்து அணி 200 ரன்களைக் குவித்து 30ஓவர்களில் 211 ரன்களைத் தொட்டது. 20 ஓவர்கள் முடிவில் 125ரன்களாக இருந்த நியூசிலாந்து அடுத்த 10 ஓவர்களில் 86 ரன்கள் அதாவது ஓவருக்கு 8.6 ரன்கள் சேர்த்தது.
ஹசன் அலி வீசிய 32-வது ஓவரில் வில்லியம்ஸன் ஒருபவுண்டரி, சிக்ஸரும், ரவீந்திரா பவுண்டரி என 18 ரன்கள் சேர்த்தனர். வில்லியம்ஸன், ரவீந்திரா இருவருமே சதத்தை நெருங்கினர். ரவீந்திராவுக்கு பின்னர் இறங்கிய வில்லியம்ஸன் அதிரடி ஆட்டத்தால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
ரவீந்திராவின் மிரட்டல் ஃபார்ம்
இளம் வீரர் ரவீந்திரா 88 பந்துகளில் உலகக் கோப்பைத் தொடரில் 3வது சதத்தை நிறைவு செய்தார். அது மட்டுமல்லாமல் 24 வயதில் உலகக் கோப்பைத் தொடரி்ல் அதிக ரன்கள் குவித்த சச்சினின்(523) சாதனையையும் ரவீந்திரா முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பைத் தொடரில் மூன்று சதங்கள் விளாசிய முதல் நியூசிலாந்து பேட்டர் என்ற பெருமையையும் ரவீந்திரா பெற்றார்.
உலகக் கோப்பைத் தொடருக்கு முன் ரவீந்திரா 8 இன்னிங்ஸில் 189 ரன்கள் மட்டும் சேர்த்திருந்தார், சராசரி 23 ரன்களாக இருந்தது. ஆனால், உலகக் கோப்பைத் தொடரில் 8 இன்னிங்ஸில் 523 ரன்கள் சேர்த்து 74 சராசரியாக வைத்திருக்கும் 24 வயது ரவீந்திரா, 3 சதங்கள், 2அரைசதங்கள் அடித்து மிரட்டியுள்ளார்.
சதத்தை தவறவிட்ட வில்லியம்ஸன்
சதத்தை நோக்கி நகர்ந்த வில்லியம்ஸன் 95 ரன்கள் சேர்த்தநிலையில் இப்திகார் அகமது வீசிய 35வது ஓவரில் பக்கர் ஜமானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு வில்லியம்ஸன், ரவீந்திரா இருவரும் சேர்ந்து, 180 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்த சிறிது நேரத்தில் ரவீந்திராவும் ஆட்டமிழந்தார். முகமது வாசிம் வீசிய 36-வது ஓவரில், ரவீந்திரா 108 ரன்கள் சேர்த்தநிலையில் சவுத் சகீலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சாப்மேன், மிட்ஷெல் அதிரடிஆட்டம்
4வது விக்கெட்டுக்கு சாப்மேன், டேரல் மிட்ஷெல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பவுண்டரிகளாக விளாசி ரன்ரேட்டை உயர்த்தினர். குறிப்பாக அப்ரிடி வீசிய 39-வது ஓவரில் சாப்மேன் 3 பவுண்டரிகள் உள்ளிட்ட 16 ரன்கள் சேர்த்தார். 40 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது.
40ஓவர்களுக்கு மேல் மிட்ஷெல் அதிரடி ஆட்டத்தில் இறங்கினாலும நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஹசன் அலி வீசிய 41-வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என11 ரன்களை மிட்ஷெல் சேர்த்தார். ஆனால் ஹாரிஸ் ராஃப் வீசிய 42-வது ஓவரில் மிட்ஷெல் 29 ரன்கள் சேர்த்தநிலையில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு சாப்மேன், மிட்ஷெல் இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்துவந்த கிளென் பிலிப்ஸ், சாப்மேனுடன் சேர்ந்தார். ரன் சேர்க்க வேண்டிய அவசரத்தில் நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. நிதானமாக பேட் செய்து வந்த சாப்மேன் 39 ரன்கள் சேர்த்தநிலையில் முகமது வாசிம் வீசிய 45-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். 318 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூசிலாந்து, அடுத்த 27 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
மிட்ஷெல், சான்ட்னர் கடைசி நேரத்தில் அதிரடியாக பேட்டைச் சுழற்றினர். அப்ரிடி வீசிய 48-வது ஓவரில் சிக்ஸர் உள்ளிட்ட 13 ரன்களையும், முகமது வாசிம் வீசிய 49-வது ஓவரில் சான்ட்னர் ஒரு சிக்ஸர், பிலிப்ஸ் பவுண்டரி அடித்தனர். அதே ஓவரில் பிலிப்ஸ் 40 ரன்களில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.சான்ட்னர், மிட்ஷெல் கூட்டணி 6-வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்தனர்.
50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் சேர்த்தது. சான்ட்னர் 26 ரன்களும், லாதம் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மிகவும் மோசமான பந்துவீச்சை இன்று வெளிப்படுத்தினர். இப்திகார் அகமது, முகமது வாசிம் தவிர மற்றவர்கள் 9 ரன்கள் வீதம் வாரி வழங்கினர். ஒரு சுழற்பந்துவீச்சாளரைக் கூட அணியில் வைத்துக்கொள்ளாமல் வேகப்பந்துவீச்சை மட்டுமே நம்பி களமிறங்கி பாபர் ஆசம் கையைச் சுட்டுக்கொண்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு பெரிய கூட்டணி
நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா சதம்(108), கேப்டன் வில்லியம்ஸன்(95) ஆகியோர் மிகப்பெரிய பங்களிப்பு செய்து 180 ரன்கள் சேர்த்தனர். நடுவரிசை பேட்டர்களும் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் சேர்த்ததால் மிகப்பெரிய ஸ்கோரை நியூசிலாந்து எட்டியது. கடைசி 20 ஓவர்களில் மட்டும் நியூசிலாந்து அணி ஓவருக்கு 9 ரன்கள் வீதம் சேர்த்ததே மிகப்பெரிய ஸ்கோர் வந்ததற்கு காரணம்.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் அணிகள் சேர்த்த 11 அதிகபட்ச ஸ்கோர்களில் 10 ஸ்கோர்கள் என்பது, அணியில் உள்ள டாப்-4 பேட்டர்கள் சேர்த்தவை என்பது சுவாரஸ்யமான தகவலாகும்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பவுண்டரிகள், சிக்ஸர்கள் மிக அருகே இருக்கும் என்பதால், மிகப்பெரிய ஸ்கோரை நியூசிலாந்து எட்டியது.
பாகிஸ்தான் அதிர்ச்சித் தொடக்கம்
402 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஓவருக்கு 8 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் திட்டத்துடன் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.
அப்துல்லா ஷபீக், பக்கர் ஜமான் ஆட்டத்தைத் தொடங்கிய நிலையில், சவுதி வீசிய 2வது ஓவரில் ஷபீக் 4 ரன்னில் வில்லியம்ஸனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2வது விக்கெட்டுக்கு கேப்டன் பாபர் ஆசம் களமிறங்கி, பக்கர் ஜமானுடன் சேர்ந்தார்.
பக்கர் ஜமான் ருத்ரதாண்டவம்
5-வது ஓவரில் இருந்து பக்கர் ஜமான் அதிரடியை வெளிப்படுத்தினார். போல்ட் வீசிய 5-வது ஓவரில் பக்கர் ஜமான் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரும், பாபர் ஆசம் ஒரு பவுண்டரியும் என 17 ரன்களை வெளுத்தனர். மீண்டும் போல்ட் 6-வது ஓவரை வீச வந்தபோதும் குறிவைக்கப்பட்டார், அந்த ஓவரில் பக்கர் ஒருசிக்ஸரும், பாபர் 2 பவுண்டரிகள் என 16 ரன்களை விளாசினர்.
சவுதி வீசிய 9-வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என 11 ரன்களை பக்கர் ஜமான் சேர்த்தார். சான்ட்னர் வீசிய இரு ஓவர்களிலும் ஜமான், பாபர் இருவரும் தலா ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டு பாகிஸ்தான் நல்ல ரன்ரேட்டில் பயணித்தது. 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் சேர்த்தது.
ஈஷ் சோதி வீசிய 14-வது ஓவரில் பவுண்டரி அடித்து, 39 பந்துகளில் பக்கர் ஜமான் அரைசதம் அடித்தார். அதன்பின் பக்கர் ஜமான் அதிரடி ஆட்டத்துக்கு மாறி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
பக்கர் ஜமான் சதம்
குறிப்பாக பிலிப்ஸ் வீசிய 15-வது ஓவரில் பக்கர் 2 சிக்ஸர்கள் உள்ளிட்ட 15 ரன்களையும், 17-வது ஓவரை மீண்டும் பிலிப்ஸ் வீச வந்தபோது அந்த ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் என 15ரன்கள் சேர்த்து தெறிக்கவிட்டார். சான்ட்னர் 20-வது ஓவரை வீசியபோது, அந்த ஓவரில் சிக்ஸர் அடித்து பக்கர் ஜமான் சதத்தை நிறைவு செய்தார். பக்கர் ஜமான் சதத்தில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.
20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. 22வது ஓவர்கள் வீசப்பட்டபோது, ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அப்போது, பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்திருந்தது.
இலக்கு மாற்றி அமைப்பு
மழையால் ஆட்டம் தடைபட்டதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் விதிப்படி பாகிஸ்தான் அணிக்கு இலக்கு 41 ஓவர்களில் 342 ரன்கள் சேர்க்குமாறு மாற்றி அமைக்கப்பட்டது. இதன்படி, பாகிஸ்தான் அணி வெற்றி பெற 19.3 ஓவர்களில் 182 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் ஒவ்வொரு பந்துவீச்சாளரும் 8 ஓவர்கள்தான் வீச முடியும், கடைசிப் பவர்ப்ளே 34-வது ஓவரிலேயே எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே பாகிஸ்தான் அணி 161 ரன்களுடன் வலுவாக இருந்ததால், பாகிஸ்தான் வெற்றிக்கு 182 ரன்கள் தேவைப்பட்டது. மழை நின்றவுடன் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
ஈஷ் சோதி வீசிய 23-வது ஓவரில் பாபர் ஆசம் 2 பவுண்டரிகள் உள்ளிட்ட 12 ரன்கள் சேர்த்து அரைசதத்தை நிறைவு செய்தார். சோதி வீசிய 25-வது ஓவரில் பாபர் ஆசம் ஒரு சிக்ஸரும், பக்கர் ஜமான் 2 சிக்ஸர்களையும் விளாசி 20 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி 26 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது.
அப்போது ஆட்டத்தில் மீண்டும் மழை குறுக்கிட்டது. ஆனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி பாகிஸ்தான் 21 ரன்கள் கூடுதலாக இருந்ததால், நம்பிக்கையுடன் இருந்தனர். பாகிஸ்தான் அணி வெற்றி பெற 93 பந்துகளில் 142 ரன்கள் தேவைப்பட்டது.
பாகிஸ்தான் அணி வெற்றி என்று அறிவிப்பு
பெங்களூருவில் தொடர்ந்து மழை விட்டுவிட்டு பெய்ததையடுத்து போட்டியை தொடர்ந்து நடத்தும் சூழல் இல்லை. நடுவர்கள் ஆடுகளத்தை ஆய்வு செய்து, போட்டி நடுவர்களிடம் நிலவரத்தைத் தெரிவித்தனர். ஏற்கெனவே டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 21 ரன்கள் கூடுதலாக பாகிஸ்தான் இருந்ததால், பாகிஸ்தான் 21 ரன்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்