
பட மூலாதாரம், Getty Images
உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் உள்ளே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. செங்குத்தாக துளையிடும் பணி முடிவடைந்ததும், தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வர வசதியாக நீண்ட குழாயும் பதிக்கப்பட்டுவிட்டது. இதனால், 16 நாட்களாக இரவு பகலாக நீண்ட மீட்புப் பணிகள் நிறைவடையும் நேரம் வந்துவிட்டதாக மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு, அதனுள் 41 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். மீட்புப் பணியின் 16-வது நாளான நேற்றிலிருந்து (நவம்பர் 27) இயந்திரம் மூலம் இடிபாடுகளைத் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு, தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி நடைபெற்றது. அந்தப் பணிகள் முடிவடைந்து, தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடம் வரை நீண்ட குழாய் பதிக்கும் பணியும் முடிவுக்கு வந்துவிட்டதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
விபத்து நேரிட்ட சுரங்கப்பாதைக்கு நேரடியாக சென்று மீட்புப் பணிகளை அவர் பார்வையிட்டு வருகிறார். மீட்புப் பணிகள் குறித்த தகவல்களை அவர் சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
“பாபா பௌக் நாக் கருணையாலும், கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையாலும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மீட்புக் குழுவினரின் அயராத உழைப்பாலும் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வருவதற்காக சுரங்கப்பாதையில் குழாய்கள் பதிக்கும் பணி முடிவுக்கு வந்துள்ளது. அனைத்து தொழிலாளர் சகோதரர்களும் விரைவில் பத்திரமாக வெளியேற்றப்படுவார்கள்” என்று முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சில்க்யாரா சுரங்கப்பாதை மீட்பு நடவடிக்கை குறித்து, தொழில்நுட்ப, சாலை மற்றும் போக்குவரத்து கூடுதல் செயலர் மஹ்மூத் அகமது கூறுகையில், “மொத்தம் 86 மீட்டரில், 44 மீட்டர் வரை செங்குத்து துளையிடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீட்பதற்குரிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன.” என்று கூறியுள்ளார்.
“கிடைமட்டமாக துளையிடுவதைப் பொருத்தவரை,, 55.3 மீட்டர் அளவுக்கு துளையிடப்பட்டுள்ளது. இந்த வேலையை தொழிலாளர்களே கைப்பட செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே இடிபாடுகளை அகற்றிய பிறகு குழாய் பொருத்தப்படும். இன்னும் ஐந்து மீட்டர் தேவைப்படும். எதுவும் சொல்ல முடியாது. ஆனால் எல்லாம் சரியாக நடந்தால் இன்று மாலைக்குள் நல்ல செய்தி கிடைக்கும்.” என்று அவர் தெரிவித்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்