
பட மூலாதாரம், Getty Images
நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று உலகம் முழுவதும் பல பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் விளைவாக தினசரி பயன்படுத்தப்படும் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியான பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு பதிலாக காகித ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவை உண்மையில் பாதுகாப்பானதா?
அதைப் புரிந்துகொள்வதற்கு முன்பு நம்மை காகித ஸ்ட்ராக்களுக்கு மாறத் தூண்டிய நெகிழியின் ஆபத்து குறித்துக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
பிளாஸ்டிக் என்பது சுற்றுச்சூழலுக்கு சாபக்கேடானது. நமது சுற்றுப்புறங்களுக்கு மட்டுமல்லாமல், தொலைதூர பகுதிகள், மலைகள், ஆறுகள் மற்றும் கடல்களுக்கும் பிளாஸ்டிக் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
’தி சயின்ஸ்’ (The Science) இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2040ஆம் ஆண்டுக்குள், உலகம் முழுவதும் சுமார் 1.3 பில்லியன் டன் பிளாஸ்டிக் குவிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் 33 லட்சம் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்திய அறிவியல் கழகம் (IISc) மற்றும் பிராக்சிஸ் குளோபல் அலையன்ஸ் (Praxis Global Alliance) இணைந்து தயாரித்த அறிக்கையின்படி, இந்தியா ஒவ்வோர் ஆண்டும் சுமார் 340 கோடி கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகிறது, அதில் முப்பது சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.
இந்த அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களை மனிதர்கள் சார்ந்திருக்கும் அளவு அதிகரித்திருப்பதால், இந்த ‘வெள்ளை மாசுபாடு’ மிகவும் அதிகரித்து வருகிறது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் 300 ஆண்டுகள் அழியாது

பட மூலாதாரம், GETTY IMAGES
ஒரு மதிப்பீட்டின்படி, அமெரிக்காவில் தினமும் பயன்படுத்தப்படும் ஸ்ட்ராக்களின் (Straw) எண்ணிக்கை 500 மில்லியன்.
இருப்பினும், இந்த எண்ணிக்கையின் உண்மைத்தன்மையில் சில கேள்விகள் உள்ளன. அதன் உண்மையான எண்ணிக்கை அந்த எண்ணிக்கையில் பாதியாக இருக்கலாம். ஆனால், கடந்த இருபது ஆண்டுகளாக, ஒவ்வோர் ஆண்டும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஸ்ட்ராக்களுக்கு செலவிடப்படும் தொகை அதிகரித்து வருகிறது என்பது முற்றிலும் உண்மை.
இந்த ஸ்ட்ராக்களில் பெரும்பாலானவை பயன்பாட்டுக்குப் பிறகு குப்பைகளில் வீசப்படுகின்றன, இது நமது சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சுற்றுச்சூழலில் முழுமையாக மக்குவதற்கு 300 ஆண்டுகள் ஆகும்.
ஸ்ட்ரா போன்ற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதால், நீண்ட காலமாக உலகம் முழுவதும் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிக்கு எதிராகப் பெரியளவிலான பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், ANJALI DAS
இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக பிரசாரங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை எதிர்க்கும் அத்தகைய பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். அவற்றில் ஒன்று, பிளாஸ்டிக் ஸ்ட்ரா-க்கு எதிரான பிரசாரங்கள்.
மைலோ க்ரூசோ என்பவர் பிளாஸ்டிக் ஸ்ட்ரா-க்கு எதிரான பிரசாரத்தைத் தன் ஒன்பதாவது வயதில் தொடங்கினார். அவர், ‘Be Straw Free’ பிரசாரத்தைத் தொடங்கினார். இதன் காரணமாக ஸ்டார்பக்ஸ் மற்றும் மெக்டொனால்டு போன்ற நிறுவனங்கள் பிளாஸ்டிக் ஸ்ட்ராவை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டன.
ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிக்கு எதிரான பிரசாரம் காரணமாக இன்று காகிதம், உலோகம், கண்ணாடி மற்றும் தாவர அடிப்படையிலான ஸ்ட்ராக்கள் சந்தையில் அதிக அளவில் காணப்படுகின்றன. ஆனால் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது எளிதானதா? மேலும் அவை உண்மையில் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காதா?
ஆய்வு என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், GETTY IMAGES
ஒரு சமீபத்திய ஆராய்ச்சி காகித ஸ்ட்ரா தொடர்பான மற்றொரு கவனத்தை ஈர்த்துள்ளது.
பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் காகிதத்தால் செய்யப்பட்ட ஸ்ட்ரா குறித்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர். அதில் நெகிழியைவிட அதிகமான பாலிஃபுளோரோ அல்கைல் (PFAS) அதில் இருப்பதைக் கண்டறிந்தனர்.
பாலிஃப்ளூரோ அல்கைல் என்பது விரைவாக உடைந்து போகாத பொருட்கள் மற்றும் நமது சுற்றுச்சூழலில் நீண்ட காலம் மக்காத பொருளாகும். மழை நீரிலும் மண்ணிலும் அவை நீண்ட காலம் நிலைத்திருக்கும். அதனால்தான் அவை `நிலைத்திருக்கும் ரசாயனங்கள்` என்றும் அழைக்கப்படுகின்றன.
பாலிஃபுளோரோ அல்கைல் பல தசாப்தங்களாக சுற்றுச்சூழலில் நிலைத்திருக்கும். மேலும், நீர் மாசுபாடு மற்றும் மனிதர்களுக்குப் பல உடல்நல பிரச்னைகள் உள்ளிட்டவற்றையும் ஏற்படுத்தும்.
காகிதம் மற்றும் மூங்கிலைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஸ்ட்ரா-விலும் குறிப்பிடத்தக்க அளவு பாலிஃபுளோரோ அல்கைல் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே அவை நெகிழியைவிடச் சிறந்த தேர்வாக இருக்கவேண்டிய அவசியமில்லை.
அவற்றில் அதிகளவு `நிலையான ரசாயனங்கள்` இருப்பதால், அவை சுற்றுச்சூழலுக்கு எந்தளவுக்கு உகந்தவை என்ற கேள்வி எழுகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்று.

பட மூலாதாரம், PARMITA SARMA
பர்மிதா சர்மா
நெகிழி ஸ்ட்ராவுக்கு மட்டும் எதிர்ப்பு ஏன்?
பிளாஸ்டிக் ஸ்ட்ரா சுற்றுச்சூழலுக்கு குறைவான அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், அது ஏன் உலகம் முழுவதும் எதிர்க்கப்படுகிறது?
உலக காட்டுயிர் நிதியத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வணிகத்தின் துணைத் தலைவர் எரின் சைமன், பிபிசி நிருபர் எலி ஹிர்ஷ்லாக்கிடம் கூறுகையில், “இது அவ்வளவு எளிமையான பிரச்னை அல்ல, ஏனெனில் இது பிளாஸ்டிக் ஸ்ட்ரா பற்றிய பிரச்னை மட்டுமல்ல. பிளாஸ்டிக் மாசுபாடு என்பது உலகளவில் நிலவிவரும் பெரும் நெருக்கடி. அனைவரும் தங்கள் பங்களிப்பை வழங்கும்போதுதான் அதற்கான தீர்வை எட்டமுடியும்,” என்றார்.
அக்ஷர் அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் ஆர்வலர் பர்மிதா சர்மா, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மாநாட்டில் ‘பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வது எப்படி?’ என்ற தலைப்பில் விளக்கமளித்துள்ளார்.
பர்மிதா சர்மா பிபிசி இந்தி பிரிவின் அஞ்சலி தாஸிடம் கூறுகையில், “பிளாஸ்டிக் நமக்கு எல்லா வகையிலும் தீங்கு விளைவிக்கும். ஆனால் அதில் சில நன்மைகளும் உண்டு. உணவை கெட்டுப் போகாமல் தொலைதூரப் பகுதிகளுக்கு அனுப்ப பிளாஸ்டிக் பயன்படுகிறது,” என்கிறார்.
“பிளாஸ்டிக் பிரச்னைக்குத் தீர்வு காண மக்களும் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு, மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். பிளாஸ்டிக் பிரச்னையைச் சமாளிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் புரிந்துகொண்டு, மக்கள் அவற்றைப் பின்பற்ற வேண்டும்,” என்கிறார் அவர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பள்ளி, கல்லூரிகளில் பிளாஸ்டிக் பிரச்னை குறித்து உரையாடல்கள் நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதற்கான வளங்கள் இருந்தால் பிளாஸ்டிக் பிரச்னையைச் சமாளிக்க முடியும். வளர்ந்த நாடுகள் பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்து அதன்மூலம் வருவாய் ஈட்டுகின்றன,” என்றார் அவர்.
நெகிழி கழிவுகளை எப்படி குறைக்கலாம்?

பட மூலாதாரம், Getty Images
உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 380 மில்லியன் டன் நெகிழி கழிவுகள் உற்பத்தியாவதாக, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு அதன் குளோபல் பிளாஸ்டிக் அவுட்லுக்கில் (Global Plastic Outlook) மதிப்பிட்டுள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது எளிதல்ல. ஆனால் நாம் அதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டால், நம் வாழ்விலும் மற்றவர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.
இதற்கு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்பது மிக முக்கியமான விஷயம்.
இந்தியாவில் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் கழிவுகளில் 43% ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிக் கழிவுகள். இதைக் கருத்தில் கொண்டு, ஜூலை 2022 முதல் இந்தியாவில் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியை இந்திய அரசு தடை செய்துள்ளது.
ஸ்ட்ரா, குட்கா, ஷாம்பூ, ஃபாயில், சிறிய பாட்டில்கள், பிளாஸ்டிக் கண்ணாடிகள் போன்றவை மீண்டும் பயன்படுத்தப்பட முடியாதவை மற்றும் பிளாஸ்டிக் மாசுபாட்டின் முக்கியக் காரணங்களில் ஒன்று.
அப்படிப்பட்ட பொருட்களை நாம் பயன்படுத்தாமல், சந்தையில் இருந்து வாங்காமல் இருந்தால், அதன் பலன்களை நாம் நிச்சயம் பார்க்கலாம். எனவே இதற்கு நாம் பொறுப்பேற்க வேண்டும்.
இந்தியா ஒவ்வோர் ஆண்டும் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகிறது. ஆனால் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறு பயன்பாட்டுக்கு உபடுத்துவதில் உலக நாடுகளைவிட இந்தியா முன்னணியில் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தமிழகம் எந்த நிலையில் உள்ளது?
முந்தைய அதிமுக அரசு 2019ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. பிளாஸ்டிக் பை, குவளைகள், தட்டுகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
மேலும், தற்போதைய திமுக அரசு பிளாஸ்டிக் அல்லாத சமூகமாக தமிழ்நாட்டை மாற்ற `மீண்டும் மஞ்சப்பை’ என்னும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தடுக்கப் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் மனநிலையை இயற்கைப் பொருட்கள் பயன்பாட்டின் மீது மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டு ஒழிப்பில் தமிழகத்தின் செயல்பாடு குறித்துப் பேசிய `பூவுலகின் நண்பர்கள்` அமைப்பின் ஜீயோ டாமின், “பிளாஸ்டிக் ஒழிப்பு – தடை என எதுவுமே களத்தில் இல்லை. சென்னையில் மட்டும் அவ்வப்போது பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
பிளாஸ்டிக் பட்ஸ்களின் (Ear buds) உற்பத்தி தற்போது இல்லை. பிளாஸ்டிக் குவளைகளைப் பார்க்க முடிவதில்லை. ஆனால், பிளாஸ்டிக் பைகள் மிகவும் சகஜமாகவே கிடைக்கின்றன,” என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
காகிதத்தால் ஆன பொருட்களிலும் ஆபத்து மறைந்திருப்பதாக அவர் கூறுகிறார்.
“காகிதங்களால் ஆன குவளைகள், ஸ்ட்ராக்களிலும் மெழுகுப் பூச்சு செய்யப்பட்டிருக்கும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் எந்தப் பொருளானாலும் ஆபத்துதான். பழைய முறைப்படி மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களை உபயோகிக்க வேண்டும்.
காகிதத்தால் ஆன ஸ்ட்ரா-வில் நச்சுவாய்ந்த பல பொருட்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஸ்ட்ரா எதற்கு என்பதுதான் என்னுடைய கேள்வி. குளிர்பானங்களை அப்படியே அருந்தலாம். பழைய முறைதான் எப்போதுமே மாற்றாக இருக்க முடியும்.
காகிதத்தின் மூலப்பொருள் மரத்துகள்தான். எனவே அதை பிளீச் செய்து நிறம் மாற்றித்தான் குவளை, ஸ்ட்ரா உள்ளிட்டவற்றைச் செய்வார்கள். அப்போது நிச்சயம் ஹைட்ரோகுளோரைடு சேர்ப்பார்கள். சிந்தெடிக் வண்ணங்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே, அது நம் உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும்,” என்றார்.
மேலும், சிறு, குறு தொழில்கள் மூலம்தான் பட்ஸ், பிளாஸ்டிக் குவளைகள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், பிஸ்கெட் உள்ளிட்ட திண்பண்டங்களைத் தயாரிக்கும் பன்னாட்டு உணவு நிறுவனங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படவில்லை என்பதால், அதில் சூழலியல் – சமூகநீதி இல்லை என்கிறார் ஜீயோ டாமின்.
“பிளாஸ்டிக் குவளைகள் மோசமானதாக இருந்தாலும் அதை மறுசுழற்சி செய்ய முடியும். எது அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறதோ, எவற்றை மறுசுழற்சி செய்ய முடியாதோ அதைத் தடை செய்யவில்லை,” என்றார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்