ஜாபர் சாதிக் கைது: அரசியலாக்குகிறதா போதைப் பொருள் தடுப்பு பிரிவு? முன்னாள் காவல் அதிகாரிகள், திமுகவினர் சொல்வது என்ன?

ஜாபர் சாதிக் கைது: அரசியலாக்குகிறதா போதைப் பொருள் தடுப்பு பிரிவு? முன்னாள் காவல் அதிகாரிகள், திமுகவினர் சொல்வது என்ன?

ஜாபர் சாதிக்

பட மூலாதாரம், ANI

சர்வசேத அளவில் போதைப் பொருட்களை கடத்தி வந்ததாகக் கூறி, திமுக முன்னாள் நிர்வாகியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருளான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.

அவர் கைதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங் வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

அவற்றில், முக்கியமாக, ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலமாக வந்த பணத்தை அரசியல் கட்சிகளுக்கு வழங்கியிருக்கிறார், அவர் அந்தப் பணத்தில்தான் ‘மங்கை’ என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்பன உள்ளிட்ட தகவல்களை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி பொது வெளியில் பகிர்ந்து கொண்டது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதில் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும், இதற்கு முன் இத்தகைய வழக்குகள் இப்படியாகக் கையாளப்படவில்லை என்றும் பரவலாக விமர்சிக்கப்படுகிறது.

போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் செயல் சட்டத்திற்கு உட்பட்டதா? இதில், அரசியல் நோக்கம் உள்ளது எனும் வாதத்தை முன்னாள் காவல்துறை அதிகாரிகள் எப்படிப் பார்க்கிறார்கள்?

போதைப் பொருள் தடுப்பு பிரிவு

பட மூலாதாரம், HANDOUT

என்ன நடந்தது?

போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய ரசாயனப் பொருட்களில் ஒன்றான சூடோபெட்ரைன் (pseudoephedrine), வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் செயல்பட்டு வந்த குடோனில் அதிரடியாக நுழைந்த டெல்லி போலீஸார், அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டார் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து., திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார். பின், டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் போலீஸார் கடந்த 23-ஆம் தேதி நோட்டீஸ் ஒட்டினர்.

ஆனால், விசாரணைக்கு அவர் ஆஜராகாததை எடுத்து, ஜாபர் சாதிக்கின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீஸார், சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். தொடர்ந்து வீட்டுக்கு சீல் வைத்தனர்.

ஜாபர் சாதிக் வீட்டுக்கு வந்து சென்றவர்கள் யார் யார் என்பதைக் கண்டறிய அவரது வீட்டில் இருந்த சிசிடிவி தொடர்பான ஹார்ட் டிஸ்க்கையும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் டெல்லி கொண்டு ஆய்வு நடத்தினர்.

இதனிடையே, ஜாபர் சாதிக் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுத்தனர். மேலும், ஜாபர் சாதிக்கின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவர் தொடர்புடைய 8 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

இந்த நிலையில்தான், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அவர் ராஜஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், அவர் டெல்லியில் கைது செய்யப்பட்டதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறினர்.

ஜாபர் சாதிக்

பட மூலாதாரம், HANDOUT

போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியது என்ன?

ஜாபர் சாதிக் கைது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங், “ஜாபர் சாதிக்கின் முழுப் பெயர் ஜாபர் சாதிக் அப்துல் ரஹ்மான். இவர் டெல்லி, தமிழ்நாடு போன்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களைக் கடத்தி வந்துள்ளார்.

“சில நாட்களுக்கு முன்பு டெல்லியின் பசாய் தாராபூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில், 50 கிலோ அளவில் போதைப் பொருள் தயாரிப்பதற்கான ரசாயனப் பொருள் கைப்பற்றப்பட்டது.

“அதனைத் தொடர்ந்து கடந்த 25-ம் தேதி டெல்லி காவல் துறையின் உதவியுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்களின் தலைவர் ஜாபர் சாதிக் என்று தெரிவித்தனர்.

“போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படத் தயாரிப்பு, கட்டுமானத் தொழில், ரியல் எஸ்ட்டேட், ஹோட்டல் போன்ற பல்வேறு தொழில்கள் முதலீடு செய்துள்ளார். இவருக்கு முக்கியப் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது.

“சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஜாபர் சாதிக்கை இன்று (மார்ச் 9) கைது செய்துள்ளோம். போதைப் பொருள் கடத்தல் மூலம் வந்த பணத்தில் ‘மங்கை’ என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

“உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப் பொருள்களை ஜாபர் சாதிக் பல்வேறு நாடுகளுக்கு கடத்தியுள்ளார். போதைப் பொருள் கடத்தல் பணத்தை அரசியல் கட்சிகளுக்கும் வழங்கியிருப்பதாக தகவல் உள்ளது.

“போதைப் பொருள் கடத்தல் மூலமாக வந்த பணத்தில் சென்னையில் ஹோட்டல் ஒன்றை தொடங்கியிருக்கிறார். ஜாபர் சாதிக் திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார். இன்று அவர் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் திரைப் பிரபலங்கள் சிலருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவருக்கு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின்னர் அனைவரது பெயர்களையும் வெளியிடுவோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

போதைப் பாெருள் தடுப்பு பிரிவு அதிகாரி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங்

போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பேசியது சரியா?

ஆனால், ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, அந்த வழக்கு குறித்த தகவல்களை வெளியிடுவது சட்டப்படி சரியா, இது இதற்கு முன் இப்படி நடந்திருக்கிறதா உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து முன்னாள் ஏடிஜிபி-யான திலகவதி ஐபிஎஸ்-இடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அப்போது, அவர் இதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை என்றாலும், அது அறம் இல்லை என்றார்.

“இந்த விவகாரத்தில் சட்டப்படி அவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்கு இல்லை. ஏனென்றால், இதை சொல்ல வேண்டும், சொல்லக்கூடாது என சட்டத்தில் எதுவும் இல்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு என்று உள்ள அறம் இங்கு மீறப்பட்டிருக்கிறது. தகவல் சொன்னர் குறித்தும், அவர் என்ன என்ன விஷயங்களை சொல்லியிருக்கிறார் என்பது குறித்தும் பொது வெளியில் பகிரக்கூடாது,” என்றார் திலகவதி.

அப்படி பகிர்வதில் என்ன தவறு எனக் கேட்டபோது, “பிடிபட்ட நபர் ஒரு போதைப் பொருள் கடத்தியவர் மட்டுமே. ஆனால், இவருக்கு பின்னால் ஒரு பெரிய விநியோகச் சங்கிலி இருக்கும்.இவருக்கு கொடுக்கிறவர்கள் யார், இவர் யாருக்கெல்லாம் கொடுக்கிறார்கள் உள்ளிட்ட தகவல்களை முழுமையாகப் பெறாமல், அவர்களை பிடிக்காமல், இப்படி அனைத்து தகவல்களையும் வெளியிடுவது, வழக்கைத்தான் பாதிக்கும்,” என்றார்.

மேலும், இந்த வழக்கின் நோக்கமே கேள்விக்குள்ளாகி இருப்பதாகவும் திலகவதி கூறினார்.

“இவர் ஒரு சிறு வியாபாரி தான். இவர் குறித்த தகவல்களை வெளியிடுவதன் மூலம், இந்த வழக்கின் நோக்கமே கேள்விக்குள்ளாகி உள்ளது. இவர்கள் நோக்கம் போதைப் பொருள் கடத்தல் கும்பலைப் பிடிப்பதா, அல்லது அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதா, எனத் தெரியவில்லை,” என்றார் திலகவதி.

இந்தியா முழுவதும் இதுபோன்ற போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் பிடிபடும் குற்றவாளிகளுக்கு அரசியல் பின்புலங்கள் இருப்பதாகக் கூறும் திலகவதி, “இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. இதற்கு எந்த ஒரு அரசியல் கட்சியையும் குற்றம்சாட்ட முடியாது. ஒவ்வொருவர் குறித்தும் முழுமையாக விசாரித்து கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்,” என்றார்.

ஆனால், ஜாபர் சாதிக் விஷயத்தில், வழக்கை விசாரிக்கும் விசாரணை அமைப்பு தங்களின் பொறுப்பில் இருந்து முற்றிலுமாக தவறியதாக பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் காவல்துறை டிஜிபி ஒருவர் கூறினார்.

“எல்லா புலனாய்வு அமைப்புகளும் வெளிப்படையாக பொது மக்களிடம் வந்த என்ன நடந்தது என்பதை கூற வேண்டிய அவசியம் இல்லை. சில அமைப்புகள் ரகசியமாகத்தான் செயல்பட வேண்டும்.

“அப்படிப்பட அமைப்புகளில், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவும் ஒன்று. இதுநாள் வரை, வெகுஜன மக்களுக்கு இப்படி ஒரு அமைப்பு இருப்பதே தெரியாமல் இருந்திருக்கும். இப்போது, ஜாபர் சாதிக் விஷயத்தில் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அதில் இருக்கும் அதிகாரிகளையும் தெரிந்துவிட்டது. இது ஒரு தவறான முன் உதாரணம்,” என்றார்.

சட்டம் மற்றும் ஒழுக்கு போலீசார் மட்டும் பொது மக்களிடம் ஒரு வழக்கு குறித்து என்ன நடந்தது என்று பேசுவதற்கான தேவை உள்ளதாகக் குறிப்பிட்ட முன்னாள் டிஜிபி, “அது பொது மக்கள் அச்சமின்றி இருக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ததாக உத்தரவாதம் அளிப்பதற்கும் செய்யும் செயல். ஆனால், அனைத்து விசாரணை அமைப்புகளும் அப்படி இருக்க வேண்டியதில்லை,” என்றார்.

ஜாபர் சாதிக்

பட மூலாதாரம், ANI

திமுக என்ன சொல்கிறது?

இந்த வழக்கில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக திமுக குற்றம்சாட்டியது. மேலும், திமுக மற்றும் திமுக தலைவர் மீது போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புப்படுத்தி ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தால், குற்றவியல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக எம்.பி வில்சனும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறினர்.

“வழக்கு விசாரணையில் இருக்கும்போதே வழக்கு தொடர்பான தகவல்களை ஊடகங்கள் முன் வெளியிட்டது பாஜக அரசியல் ஆதாயம் அடைவதற்காகத்தான்,” என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டினார்.

மேலும், ஜாபர் சாதிக் திமுக,வில் பொறுப்பில் இருந்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, கட்சியில் உள்ள இரண்டு கோடி உறுப்பினர்களின் பின்புலன்களை சரி பார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது, என்றார்.

இதேபோல, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக் குறித்து விரிவான விசாரணை நடத்தக்கோரி அதிமுக சார்பில் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இதற்கிடையில், வழக்கு தொடர்பான தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலிடம் கேட்டபோது, வழக்கு தொடர்பாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எதுவும் கேட்கவில்லை என்றும், கேட்டால், அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு காவல்துறை தர தயாராக உள்ளோம், என்றார்.

“காவல்துறை தர தயாராக உள்ளோம். மத்திய ஏஜென்சிகள் போதைப் பொருட்கள் பறிமுதலை விட, தமிழ்நாடு காவல்துறை பறிமுதல் செய்த எண்ணிக்கை அதிகம். மொத்தம் ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் உள்ளன. அதில் 2 வழக்கு சென்னையில் உள்ளது. முதல் வழக்கு 2013ஆம் ஆண்டு எம்.கே.பி. நகர், ஆர்.கே.நகரில் உள்ளது,” என்றார்.

மேலும், ரூ.2,000 கோடி அளவில் போதைப் பொருட்கள் பறிமுதல் குறித்து கேட்டபோது, வழக்கு தொடர்பாக பேச மறுத்த சங்கர் ஜிவால், இந்த போதைப் பொருள் எடை மற்றும் அவற்றின் மதிப்பை கணக்கிடுவதில் தவறிருப்பதாகக் கூறினார்.

“பிடிபட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.2,000 கோடியாக இருக்க வாய்ப்பில்லை. அதேபோல, கடத்திய பொருட்களின் மதிப்பும் ரூ.2,000 கோடியாக இருக்க வாய்ப்பில்லை. இங்கிருந்து கடத்திய மூலப்பொருட்களைக் கொண்டு, வேறு நாட்டில் தயாரித்து விற்பனை செய்யப்படும் பொருளின் மதிப்புதான் ரூ.2,000 கோடியாக இருக்கும். அந்த மதிப்பை கணக்கிடுவதில்தான் தவறு உள்ளது,” என்றார் சங்கர் ஜிவால்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *