சந்தேஷ்காலி : திரிணாமூல் கட்சி அலுவலகத்தில் சமைப்பதற்காக அழைத்து தொடர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண்கள் குற்றச்சாட்டு – பிபிசி கள ஆய்வு

சந்தேஷ்காலி : திரிணாமூல் கட்சி அலுவலகத்தில் சமைப்பதற்காக அழைத்து தொடர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண்கள் குற்றச்சாட்டு - பிபிசி கள ஆய்வு

சந்தேஷ்காலி வன்முறை

பட மூலாதாரம், SHIB SHANKAR CHATTERJEE / BBC

  • எழுதியவர், அமிதாப் பட்டாசாலி
  • பதவி, பிபிசி நியூஸ்

மேற்கு வங்கத்தில், சுந்தர்பன் பகுதியில் உள்ள சந்தேஷ்காலி தீவை அடைய ஒருவர் கலிந்தி ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த ஆறு தான் வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கான பாதை.

ஆற்றின் மறுகரையில், தமகாலி படித்துறையிலிருந்து படகு மூலம் சந்தேஷ்காலிக்கு செல்ல வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஊடுருவியதாக குற்றம் சாட்டப்பட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (பி.எஸ்.எஃப்) கைது செய்யப்பட்ட சில ஆண்கள் மற்றும் பெண்களுடன் பேசினேன்.

அன்று மாலை, எல்லையை தாண்டி மூன்று படகுகளில் வந்த 150 க்கும் மேற்பட்ட வங்கதேச மக்களை பி.எஸ்.எஃப் பிடித்தது. தமகாலியின் அந்தக் கரையிலிருந்து பார்த்தால் ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த சந்தேஷ்காலி தெரிந்தது.

சமீப காலம் வரை அமைதியாக இருந்த இந்த தீவு தற்போது இந்திய அரசியலின் தலைப்புச் செய்தியாக உள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் அந்த தீவில் பெண்கள் நடத்திய பெரிய ஆர்ப்பாட்டங்கள் அதை தேசிய அரசியலின் மையத்திற்கு கொண்டு வந்துள்ளன.

பெண்கள் கைகளில் தடிகளுடனும், துடைப்பங்களுடனும் வீதிகளில் இறங்கினர். ஷாஜகான் ஷேக், ஷிபு ஹஸ்ரா மற்றும் உத்தம் சர்தார் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினார்கள். மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸின் இந்த மூன்று தலைவர்களும் அவர்களின் கூட்டாளிகளும் நீண்ட காலமாக இப்பகுதி மக்களை சித்திரவதை செய்து வருவதாக பெண்கள் குற்றம் சாட்டினர்.

பாலியல் துன்புறுத்தல் மற்றும் விவசாய நிலத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஷிபு ஹஸ்ரா மற்றும் உத்தம் சர்தார் ஆகியோர் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். அதேசமயம் ஷாஜகான் ஷேக் தலைமறைவாக உள்ளார். எனவே இந்த குற்றச்சாட்டுகள் அவரது கருத்தை பெற முடியவில்லை.

சந்தேஷ்காலி வன்முறை

பட மூலாதாரம், SHIB SHANKAR CHATTERJEE / BBC

சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கூறி அழைக்கப்பட்ட பெண்கள்

இந்த குற்றச்சாட்டுகளை முன் வைப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள் என அப்பகுதியில் உள்ள கடைக்காரர் ஒருவரிடம் கேட்ட போது, “சந்தேஷ்காலியில் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு நபரும் இந்த குற்றச்சாட்டை முன் வைக்கிறார். எந்த பகுதிக்கு சென்றாலும், கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் என்ன அட்டூழியம் செய்தனர் என்பதை மக்கள் கூற கேட்க முடியும். ” என்றார்.

பேட்டரியில் இயங்கும் ரிக்ஷாவில் சென்ற நாங்கள், சற்று தொலைவில், சில ஆண்களும் பெண்களும் சாலையோரத்தில் மூங்கில் வெட்டுவதைக் காண முடிந்தது. ஆனால் அவர்கள் கேமராவைப் பார்த்ததும் பேசத் தயாராக இல்லை. ஒரு பெண், “எங்கள் முகங்கள் ஊடகங்களில் தோன்றினால் எங்களை தாக்கக் கூடும். இதற்கு முன்னர் ஊடகங்களுடன் பேசியவர்கள் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.” என்றார்.

ஆனால் சிறிது நேரம் கழித்து, ஒரு பெண் வாயை மறைத்துக் கொண்டு பேச ஒப்புக்கொண்டார்.

“பிதா-புலி (அரிசி மாவில் கோயாவை நிரப்பி தயாரிக்கப்படும் வங்காளத்தின் சிறப்பு உணவு) தயாரிக்க பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் வீடுகளில் தாய், சகோதரிகள் இல்லையா? பிதா-புலி செய்பவர்கள் யாருமில்லையா? அழகான அம்மா, சகோதரிகள் ஏன் பிதா-புலி செய்ய அழைத்துச் செல்லப்பட்டனர்? சில நேரங்களில் பிதா-புலி என்ற பெயரிலும், சில நேரங்களில் இறைச்சி மற்றும் அரிசி உணவு என்ற பெயரிலும், சில நேரம் சுற்றுலா என்ற பெயரிலும், சில நேரங்களில் கட்சிக் கூட்டம் என்ற பெயரிலும் அவர்கள் அழைக்கப்பட்டனர். இந்த அழைப்புகள் எந்த நேரத்திலும் வரலாம்” என்றார்.

சிறிது நேரம் கழித்து, மற்றொரு பெண் பேச தொடங்கினார். “அவர்கள் இரவு 7 மணி, இரவு 9 மணி, இரவு 11 மணிக்கு கூட அழைப்பார்கள். கூட்டத்திற்கு அழைக்கப்பட்டால் திரிணாமூல் காங்கிரஸ் அலுவலகத்திற்கு செல்வது கட்டாயமாக இருந்தது. அப்படி செல்லவில்லை என்றால், அவர்கள் குடும்பத்தின் ஆண்கள் அடுத்த நாள் தாக்கப்பட்டனர்.” என்றார்.

மற்றொருவர் கேமராவிலிருந்து விலகி நின்று, “எப்போது கூட்டம் நடைபெறுகிறதோ, அன்று திரிணாமூல் காங்கிரஸ் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அழகான, இளம்பெண்கள், சிறுமிகள் என தேர்ந்தெடுத்து உள்ளே அழைத்துச் செல்வது வழக்கம். குழந்தைகள் மற்றும் முதியவர்களை வெளியே உட்கார வைப்பார்கள். அவர்களை உள்ளே அழைத்துச் சென்று கதவுகளை மூடிவிடுவார்கள். உள்ளே என்ன நடந்தது என்று சொல்ல முடியாது.” என்றார்.

உள்ளே இருந்த பெண்களுக்கு உண்மையில் என்ன நடந்தது? இந்த கேள்வியை உள்ளே சென்று வந்த பெண்களிடம் கேட்டால், இந்த வெட்கக்கேடான விஷயத்தை எப்படி சொல்வது என்று பெண்கள் கூறுவதாக கிட்டத்தட்ட அனைவரும் கூறுகிறார்கள்.

மற்றொரு பெண், “அங்கு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்தக் கொடுமைகளைப் பற்றி எந்தப் பெண்ணாவது சிறுமியாவது பேச முடியுமா? போலீசாரிடம் சென்றபோது, அந்த தலைவர்களிடம் சென்றால் மட்டுமே தகராறை முடிவுக்கு கொண்டு முடியும் என அறிவுறுத்தினார். எங்கள் தலைக்கு மேலே தண்ணீர் சென்ற பின்னரே நாங்கள் சாலையில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.” என்றார்.

சந்தேஷ்காலியின் பல்வேறு கிராமங்களுக்குச் சென்றபோதும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான எந்தவொரு பெண்ணையும் காணமுடியவில்லை.

சந்தேஷ்காலி வன்முறை

பட மூலாதாரம், SHIB SHANKAR CHATTERJEE / BBC

கூட்டு பாலியல் பலாத்கார புகார் அளித்த பெண்கள்

ஆரம்பத்தில் இந்த குற்றச்சாட்டுகளின் உண்மை குறித்து பலருக்கு சந்தேகம் இருந்தது. சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும் இந்த காலத்தில் பெண்கள் மீதான கொடுமைகள் இவ்வளவு காலமாக நடந்து வரும் போதிலும், இந்த பிரச்னை ஏன் வெளியே வரவில்லை என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

சந்தேஷ்காலியில் சலசலப்பு தொடங்கிய பின்னர், முதல்வர் மம்தா பானர்ஜி சட்டமன்றத்தில் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) கோட்டை அது எனக் கூறியிருந்தார்.

அப்போது பேசிய முதல்வர், “அந்த பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உள்ளது. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு கலவரங்கள் நடந்தன. அந்த பகுதி எப்போது வேண்டுமானாலும் கலவரம் ஏற்படலாம் என்ற தன்மைக் கொண்டதாகும். சரஸ்வதி பூஜை நாளில் நாங்கள் நிலைமையை கடுமையாக கட்டுப்படுத்தியிருந்தோம். ஆனால் திட்டம் வேறு மாதிரியாக இருந்துள்ளது” என்றார்.

முதலமைச்சரின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஜிஷ்ணு பாசு, “எங்கள் அமைப்பு அங்கு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்திருந்தால், யாராவது இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயலைச் செய்திருக்க முடியுமா?” என்று எதிர்மறையான கேள்வியைக் கேட்கிறார்.

இறுதியாக, போராட்டம் தொடங்கி சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இரண்டு பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளனர்.

தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா சந்தேஷ்காலியை பார்வையிட்டார். குறைந்தது இரண்டு பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரே கூறியுள்ளார். இது குறித்து அவர் புகாரும் அளித்துள்ளார்.

“சந்தேஷ்காலியில் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். நானே இரண்டு முறை பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறித்து புகார்களை பெற்றுள்ளேன்” என்று ரேகா சர்மா கூறுகிறார்.

முன்னதாக, மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்ட ரகசிய வாக்குமூலத்தில் மற்றொரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

சந்தேஷ்காலி வன்முறை

பட மூலாதாரம், SHIB SHANKAR CHATTERJEE / BBC

குற்றம் சாட்டப்படும் மூவர் யார்?

ஷாஜகான் ஷேக் மற்றும் சிவ பிரசாத் ஹஸ்ரா இருவரும் வடக்கு 24-பர்கானாஸ் மாவட்ட கவுன்சிலின் உறுப்பினர்கள். ஷேக் ஜில்லா பரிஷத்தின் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் தலைவராக உள்ளார். இவர்கள் இருவரும் சந்தேஷ்காலியின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸின் தொகுதித் தலைவர்கள். இவரது கூட்டாளி உத்தம் சர்தார்.

ஆனால் ஷாஜஹான் ஷேக் மட்டுமே இப்பகுதியின் ஒரே தலைவர். ஒரு காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர். ஆனால் இடது முன்னணி ஆட்சியின் கடைசி நாட்களில், அவர் திரிணாமூல் காங்கிரஸ் பக்கம் சாயத் தொடங்கினார், இறுதியாக அவர் முறையாக கட்சியில் சேர்ந்தார்.

ஒரு காலத்தில் மீன் வளர்ப்பு குளத்தில் தொழிலாளியாக , ரிக்ஷா ஓட்டுநராக பணியாற்றிய ஷாஜகான் ஷேக், தற்போது அரண்மனை போன்ற மூன்று வீடுகள், 17 வாகனங்கள், பல மீன் குளங்கள் மற்றும் இரண்டு செங்கல் சூளைகள் உட்பட ஏராளமான சொத்துக்களை வைத்திருக்கிறார் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

அவரது பெயர் கடந்த ஜனவரியில் முதல் முறையாக ஊடகங்களில் வெளிவந்தது.

ரேஷன் முறைகேடு தொடர்பாக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஜோதிபிரியா மாலிக் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்லிக்குடன் நெருக்கமாக இருந்ததால், அமலாக்க இயக்குநரக குழு ஜனவரி 5 ஆம் தேதி ஷாஜகான் ஷேக்கின் வீட்டில் சோதனை நடத்தியது. அன்றைய தினம் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் இருந்த பத்திரிகையாளர்களை அடித்து விரட்டியடித்தனர்.

இப்போது ஷாஜகான் ஷேக் தலைமறைவாக உள்ளார். இதையடுத்து, யாருடைய விவசாய நிலங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டதோ அவர்கள் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்து வருகின்றனர்.

ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது நெருங்கிய திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் பொது மக்களிடமிருந்து பெரும்பாலான சொத்துக்களை பறித்து வாங்கியுள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நிலத்தை அபகரிக்க வயல்களில் உப்பு நீர் தெளித்தவர்கள்

சந்தேஷ்காலி மக்கள் நிலத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்ததாக குற்றம் சாட்டி ஒரு கூட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

நாங்கள் ஒரு வட்டாரத்தில் ஒரு அரசாங்கக் குழுவைச் சந்தித்தோம். பலர் தங்கள் நில ஆவணங்களுடன் அங்கு சென்றிருந்தனர்.

அவர்களில் ஊர்மிளா தாஸ் என்ற பெண்ணும் ஒருவர். அவர் , “எனது வயலில் வருடத்திற்கு மூன்று முறை நெல் உற்பத்தி செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஷிபு ஹஸ்ரா அதில் உப்பு நீரை செலுத்தினார். தற்போது அங்கு மீன் வளர்ப்புக்காக குளம் அமைக்கப்பட்டுள்ளது. குத்தகைக்கு பதிலாக ஒரு வருடத்திற்கு கொஞ்சம் பணம் கொடுத்திருந்தார். அதன் பிறகு எதுவும் கொடுக்கப்படவில்லை. எனக்கு அவ்வளவு நிலம் மட்டுமே இருந்தது. இப்போது நான் ஒரு தொழிலாளியாக வேலை செய்து என் வாழ்க்கையை நடத்த வேண்டும். நான் பணம் கேட்கச் சென்றபோது, அவர்கள் என்னை அவமானப்படுத்தினர். எனது நிலத்தை திருப்பித் தர வேண்டும் என்பதே அரசாங்கத்திடம் எனது வேண்டுகோள். நாங்கள் அங்கு தான் இருக்கிறோம், மீண்டும் விவசாயம் செய்வோம்.” என்றார்.

கலிந்தி ஆற்றின் கரையில் கட்டப்பட்ட அணையைக் கடந்து செல்லும்போது, கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், “ஷிபு ஹஸ்ரா ஆற்றின் உப்பு நீரை இங்கிருந்து விவசாய நிலங்களுக்குள் நுழைய அனுமதிப்பார். கிராமத்தில் உள்ள கால்பந்து மைதானத்தையும் அவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.” என்றார்.

சந்தேஷ்காலி வன்முறை

பட மூலாதாரம், ANI

திரிணாமூல் காங்கிரஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

திரிணாமூல் காங்கிரஸ் நல்ல கட்டமைப்பு கொண்ட கட்சியாகும். கீழ் மட்டம் வரை ஆட்கள் இருப்பதால், எந்த தகவலும் கட்சியின் தலைமையை சென்றடையும். மறுபுறம், அரசின் காவல் மற்றும் உளவுத்துறைகள் உள்ளன.

திரிணாமூல் காங்கிரஸின் சில தலைவர்கள் நீண்ட காலமாக சந்தேஷ்காலி மக்களை சித்திரவதை செய்து வருவதாகக் கூறப்படுகிறது, அந்த தகவல் ஏன் உயர்மட்ட தலைமையை அடையவில்லை? அப்படி இருந்திருந்தால், கட்சி ஏன் முன்னதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?

இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் அருப் சக்ரவர்த்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “இந்த அட்டூழியம் 10 ஆண்டுகளாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் யாரும் ஃபேஸ்புக்கில் எந்த பதிவையும் எழுதவில்லை, புகார் அளிக்கவும் இல்லை. பத்து ஆண்டுகளாக எம்.எல்.ஏ.க்களாக இருந்த சந்தேஷ்காலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நிராபடா சர்தார் மற்றும் பாஜக தலைவர் விகாஸ் சிங் ஆகியோர் நினைத்திருந்தால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கலாம். ஆனால் அப்படி இந்த குற்றச்சாட்டுகள் ஏன் இதுவரை வெளிவரவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

“இதுபோன்ற ஏதேனும் ஒரு சம்பவம் விதிவிலக்காக நடந்திருந்தால், ஒருவரின் நிலம் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், அதைப் பற்றி புகார் செய்யும் வசதி உள்ளது. அப்படிச் செய்தால் சம்பந்தப்பட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள். திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதில் இருந்தே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை முடிகிறது” என்றார்.

மேலும் அவர், “மக்களவைத் தேர்தல் நெருங்கும்போது, வகுப்புவாத சக்திகள் அமைதியை குலைக்க முயற்சிக்கும். மேற்கு வங்கத்தை இழிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இது ஒவ்வொரு முறையும் தேர்தல் காலத்தில் நடைபெறுகிறது. இதுதான் பாஜகவின் குணம்” என்கிறார்.

அதே நேரத்தில், சந்தேஷ்காலி மக்கள் தாங்கள் திரிணாமூல் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மட்டுமே என்றும், மம்தா பானர்ஜியின் கட்சிக்கு மட்டுமே வாக்களிப்பதாகவும் கூறுகிறார்கள்.

சந்தேஷ்காலி வன்முறை

பட மூலாதாரம், SHIB SHANKAR CHATTERJEE / BBC

சந்தேஷ்காலியில் கால் ஊன்றி வரும் பாஜக

தற்போது சந்தேஷ்காலி முழுவதும் காவிக் கொடிகள் பறக்கின்றன. அதைப் பார்த்தால் அவை சமீபத்தில் நிறுவப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. சில வீடுகளில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று எழுதப்பட்டிருப்பதையும் காணலாம். ஆனால், கொடிகளிலும், சுவர்களிலும் பா.ஜ.க, மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் பெயர் இல்லை.

சந்தேஷ்காலி விவகாரத்தை பாஜக தேசிய அளவில் கொண்டு சென்றுள்ளது. இது குறித்த செய்தியை பாஜக தலைவர்கள் ஒவ்வொரு நாளும் வெளியிட்டுக் கொண்டே உள்ளனர். அவர்களை போலீசார் விடவில்லை. இது தொடர்பாக பாஜக தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் போலீசார் இடையே தினமும் வாக்குவாதங்களும் மோதல்களும் நடந்து வருகின்றன. இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் நாடு முழுவதும் தொலைக்காட்சி சேனல்கள் மூலம் பரப்பப்பட்டு வருகின்றன.

பாஜக செய்தித் தொடர்பாளர் கேயா கோஷ் இந்த செய்தியை நாடு முழுவதும் கொண்டு செல்வது தேர்தல் நோக்கத்தில் அல்ல என்கிறார்.

“சந்தேஷ்காலியில் பெண்கள் ஒடுக்கப்படுவது குறித்த செய்தியை நாடு முழுவதும் பரப்புவதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற நாங்கள் விரும்பவில்லை. உள்ளூர் பெண்களின் அவல நிலையை நாட்டின் முன் எடுத்துரைக்க முயல்கிறோம். இதற்குக் காரணம், மேற்கு வங்கம் தனது சிறுமிகளை விரும்புகிறது என்று கூறும் முதலமைச்சர், வங்காள சிறுமிகளின் அவல நிலைக்கு முன்னுரிமை கொடுக்க மறுத்துவிட்டார்” என்றார்.

மேலும், “அந்தப் பெண்களே தாங்கள் திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்று கூறி வருகின்றனர். அப்படி இருக்கும்போது, பிதா தயாரிக்கிறோம் என்ற பெயரில், அவர்களை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து, பொழுதுபோக்குக்காக பயன்படுத்துகிறார்கள் என்றால், இதை விட வெட்கக்கேடு என்ன இருக்க முடியும்? ” என்கிறார்.

சந்தேஷ்காலி விவகாரம் தொடர்பாக தேசிய ஊடகங்களில் செய்தி வெளியிட்டதாலும், பாஜகவின் சக்திவாய்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவின் சமூக ஊடகங்களில் தொடர் பதிவுகள் காரணமாக இந்த பிரச்னை நாடு முழுவதும் பரவியுள்ளது.

சந்தேஷ்காலி வன்முறை

பட மூலாதாரம், SHIB SHANKAR CHATTERJEE / BBC

சவாலை சமாளிக்குமா திரிணாமூல் காங்கிரஸ்?

கடந்த இரண்டு ஆண்டுகளில், திரிணாமூல் காங்கிரஸின் பல தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அரசியல் ஆய்வாளர் விஸ்வஜோதி பட்டாச்சார்யா கூறுகிறார்.

“இதுபோன்ற ஒவ்வொரு வழக்கிலும், மத்திய நிறுவனங்களை தவறாக பயன்படுத்துவதாக பாஜக மீது கட்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. ஆனால் இந்த முறை சக்திவாய்ந்த உள்ளூர் தலைவர்கள் மீது உள்ளூர் மக்களாலேயே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனுடன், மத்திய ஆணைய குழுக்கள் தொடர்ந்து மாநிலத்திற்கு சென்று குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்கின்றன. திரிணாமூல் காங்கிரஸ் முதன்முறையாக இத்தகைய எதிர்ப்பையும் சவாலையும் எதிர்கொள்கிறது என்பது என் கருத்து” என்று தெரிவித்தார்.

கட்சியும் நிர்வாகமும் நிலைமையை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியுள்ளன. வடக்கு 24-பர்கானாஸின் இரண்டு முக்கிய அமைச்சர்கள் இப்பகுதிக்கு வந்துள்ளனர். ஒவ்வொரு பகுதியிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்சியின் சார்பாக ‘விளக்கம்’ அளிக்கப்படுகிறது.

நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க அரசு ஊழியர்கள் கிராமம் கிராமமாக அலைந்து வருகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறை தலைமை இயக்குநரும் கிராமத்தில் ஒரு இரவு தங்கி நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். பேட்டரியில் இயங்கும் ரிக்ஷாவில் தீவு முழுவதும் பயணம் செய்துள்ளார்.

வெள்ளிக்கிழமை சந்தேஷ்காலியில் ஏற்பட்ட புதிய சலசலப்பு மற்றும் திரிணாமூல் காங்கிரஸின் உள்ளூர் தலைவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, காவல்துறை இயக்குநர் ஜெனரல் மீண்டும் சம்பவ இடத்தை அடைந்தார்.

இந்நிலையில், இந்த அழுத்தத்தை திரிணாமூல் காங்கிரஸால் சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது சந்தேஷ்காலியின் தேர்தல் பலன் பாஜகவுக்கு கிடைக்குமா? இந்த கேள்விகளுக்கான பதில்கள் தேர்தலுக்குப் பிறகுதான் தெரியவரும்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *