
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. தேர்தல் நேரத்தில் கட்சிகள் வாக்குறுதி அளித்துள்ள போதிலும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப் போன்ற சில மாநிலங்கள் மட்டுமே அதைச் செய்து காட்டியது.
கர்நாடகாவில், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏன் அது சாத்தியமாகவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. 2004ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.
ஆனால் “இந்தத் திட்டம் ஊழியர்களுக்குப் பலனளிக்கவில்லை. எனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கை எழுந்தது. இதை நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் கோரி வருகின்றனர். தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்குவோம் என தேர்தல் நேரத்தில் திமுக வாக்குறுதி கொடுத்தது.
நம்பிக்கை மட்டும் தருகிறார்கள், எப்போதுதான் இந்தக் கோரிக்கை சாத்தியமாகும் என்று கேட்கிறார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைவரும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருமான அன்பரசு.
“தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முடியாது என்று கூறவில்லை. ஆனால், அமல்படுத்துவோம் என்று நம்பிக்கை மட்டும்தான் அளிக்கிறது. 2021ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக, மதுரையில் நடைபெற்ற, அரசு ஊழியர்களின் போராட்ட ஆயத்த மாநாட்டில் காணொளி மூலம் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கழக அரசு ஆட்சிக்கு வந்த பின், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
தேர்தல் வாக்குறுதியிலும் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது எங்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டதாகவே கருதுகிறோம்,” என்றார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி, பிப்ரவரி 15ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல் படிப்படியாக போராட்டத்தைத் தீவிரமாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் திரட்டவுள்ளோம் என்று கூறிய அன்பரசு, “பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை, திமுக கூட்டணிக் கட்சிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளோம். பிப்ரவரி 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவுள்ளோம்,” என்றார்.
பழைய ஓய்வூதிய திட்டம் ஏன்?

பட மூலாதாரம், Getty Images
பழைய ஓய்வூதிய திட்டம்தான் உண்மையான ஓய்வூதிய திட்டம் என்று விளக்குகிறார், தக்ஷின ரயில்வே பென்ஷனர்ஸ் யூனியன் சங்கத் தலைவர் ஆர். இளங்கோவன்.
“பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி ஒரு ஊழியர் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50% ஓய்வூதியமாகத் தரப்படும். உதாரணமாக ஒருவர் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று வந்திருந்தால், அவருக்கான ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் கிடைக்கும். அதில் 40% தொகை 12 ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட வட்டி சதவீதத்துடன் கணக்கிட்டு, ஊழியர்கள் ஓய்வு பெறும்போது ரொக்கத் தொகையாக வழங்கப்படும்.
எனவே 12 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் அவருக்கு 6 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மேலும், 10 ஆயிரம் ரூபாய் என்ற மொத்த ஓய்வூதியத்துக்கான அகவிலைப்படி, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வழங்கப்படும்.
மேலும், 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். ஒருவேளை ஓய்வூதியர் இறந்துவிட்டால், அவரது கணவர் அல்லது மனைவிக்கு, அல்லது அவரும் இறந்துவிட்டால், திருமணமாகாத, கணவரை இழந்த, விவாகரத்து ஆன அவர்களது மகள் அல்லது உடல்நிலை குன்றிய அவர்களது மகனுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்,” என்று அதன் பலன்களைப் பட்டியலிட்டார்.
‘தமிழ்நாட்டில் பழையதும் இல்லை, புதிதும் இல்லை’

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் அமலாவது ஓய்வூதிய திட்டமே இல்லை என்கிறார் அன்பரசு.
“தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contributory Pension Scheme, CPS) என்ற திட்டம் 2003ஆம் ஆண்டு முதல் அமலாகி வருகிறது. இந்தத் திட்டத்தில், ஊழியர் ஓய்வு பெறும்போது, ஒரு தொகை தரப்படும், அவ்வளவுதான்.
மாதந்தோறும் ஓய்வூதியம் என்பதே கிடையாது. ஊழியர் பணியில் இருக்கும்போது, அவரது சம்பளத்திலிருந்து 10%, அரசு பங்களிப்பாக 10%, மேலும் இந்தத் தொகைகளுக்கான வட்டி 7-8% என ஓய்வூதிய தொகையாகச் சேகரிக்கப்படும்.
அது அரசு கஜானாவிலும், காப்பீடு நிறுவனத்திலும் முதலீடு செய்யப்படும். ஊழியர் ஓய்வு பெறும்போது, இந்தத் தொகை அப்படியே திருப்பித் தரப்படும். இதுதான் தமிழ்நாட்டில் உள்ள திட்டம். இதுபோன்ற திட்டம் இந்தியாவில் எங்கும் இல்லை,” என்றார்.
மேலும் அவர் இந்தத் திட்டம் பணத்தை வீணடிக்கிறது என்கிறார் அன்பரசு. “அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்ற (அ) உயிரிழந்த சுமார் 36,000 பேரிடம் நடத்திய ஆய்வில், ரூ.78 ஆயிரம் சம்பளம் பெற்று வந்த ஒரு ஊழியருக்கு அடுத்த மாதம் முதல் ஒரு ரூபாய்கூடக் கிடைக்கவில்லை என்பது தெரிகிறது.
கடந்த 2003ஆம் ஆண்டு இந்தத் திட்டம் அமலானபோது வேலையில் இருந்தவர்கள் ஓய்வு பெறும் காலம் என்பது 2037ஆம் ஆண்டு முதல் 2050ஆம் ஆண்டு வரை ஆகும்.
இத்தனை ஆண்டு காலம், ஊழியர்களின் பணத்தைச் சேர்த்து வைத்து என்ன செய்யப் போகிறார்கள்? இப்படி பணத்தை எங்கும் முதலீடு செய்யாமல், ஓய்வூதியமும் தராமல் இருப்பதால், ஒவ்வோர் ஆண்டும், 1,200 கோடியை அரசு வீணாக்குகிறது என மத்திய தணிக்கை அறிக்கை கூறியுள்ளது,” என்றார் அன்பரசு.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
புதிய ஓய்வூதிய திட்டம் முதலீட்டை நோக்கமாகக் கொண்டது. ஆனாலும் அதனால் ஓய்வூதியத்திற்கு வாய்ப்பில்லை என்கிறார் இளங்கோவன்.
“புதிய ஓய்வூதிய திட்டத்தில், அடிப்படை சம்பளத்தில் 10% ஊழியர் பங்களிப்பு, 10% அரசு பங்களிப்பு மற்றும் அதற்கான வட்டி ஆகியவை சேர்த்து பென்ஷன் வெல்த் என்ற பெயரில் சேகரிக்கப்படும். இந்தத் தொகையில் 15% இக்விட்டி பங்குகளிலும், 55% அரசு பத்திரங்களிலும், 25% தனியார் பத்திரங்களிலும், 5% கடன் பத்திரங்களிலும் அரசு முதலீடு செய்கிறது.
ஆனால் சட்டப்படி, இந்த முதலீட்டின் மூலம் பணம் கிடைக்கும் என்ற எந்த நேர்முக அல்லது மறைமுக உத்தரவாதமும் இல்லை என்று கூறுகிறது. போட்ட முதல் பணம் உட்பட அனைத்து முதலீடுகளையும் இழக்கும் ஆபத்து உள்ளது என்றும் செபி அமைப்பு கூறுகிறது.
ஊழியர் ஒருவர் ஓய்வுபெறும்போது, இந்த பென்ஷன் வெல்த்-இல் சேர்ந்திருக்கும் தொகையில் 60% ரொக்கத் தொகையாகப் பெற்றுக் கொள்ளலாம். மீதம் 40% தொகையைக் கட்டாயமாக முதலீடு செய்ய வேண்டும்.
உதாரணமாக ஒருவர் ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறார் என்றால், அவருக்கு சுமார் ரூ.2,500 ஓய்வூதியமாக கிடைக்கும். இந்தத் தொகைக்கு அகவிலைப்படி உயர்வு கிடையாது. ஓய்வூதியர் உயிரிழந்தால், கணவர் அல்லது மனைவிக்கு மட்டுமே ஓய்வூதியம், பிள்ளைகளுக்குக் கிடையாது,” என்று அதன் பிரச்னைகளை அடுக்கினார்.
தமிழ்நாடு அரசாங்கம் பழைய ஓய்வூதிய திட்டத்திற்குத் திரும்ப நிதிநிலை அனுமதிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டது. சட்டமன்றத்தில் முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இதை தெரிவித்தார். எனினும் முதலமைச்சர் அந்தக் கருத்தை வலியுறுத்தவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் ஆகியவை திரும்பி விட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு அரசாங்கமும் பழைய ஓய்வூதிய திட்டத்தைத் திரும்ப முடியும் என்கிறார் இளங்கோவன், ” புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும் தொகையை மாநில அரசுகள் மத்திய அரசின் கீழ் PFRDA (Pension Fund Regulatory and Development Authority) ஓய்வூதிய நிதி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
அப்படி ஒப்படைத்த மாநிலங்கள், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற வேண்டும் என்று நினைத்தால், ஒப்படைத்த பணத்தைத் திருப்பி தர முடியாது என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், தமிழ்நாடு அந்தத் திட்டத்தில் கையெழுத்திடவில்லை.
எனவே அந்தத் தொகை தமிழக அரசிடமேதான் உள்ளது. அதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் தமிழ்நாட்டுக்கு அது போன்ற சிக்கல் இல்லை. ஆந்திர பிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு இணையான திட்டத்தை மாநில அரசே நடத்தி வருகிறது. அப்படியும் செய்ய முடியும்,” என்றார்.
அதிமுகவால் முடியவில்லை என வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டோம் திமுக செய்யலாமே என்று கேட்கிறார் முன்னாள் நிதியமைச்சர் ஜெயக்குமார்
“பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதில் இருக்கும் ஒரே சிக்கல் நிதிதான். அதிமுக ஆட்சியில் இருந்தபோது, அரசு ஊழியர்களிடம் எங்கள் நிலையை தெளிவுப்படுத்திவிட்டோம். அரசின் அதிக செலவினம் காரணமாக வளர்ச்சி திட்டங்களுக்கு குறைவாக தான் செலவு செய்ய முடிந்தது. மத்திய அரசும் நிதி தராத நிலையில், உலக வங்கியிடம் கடன் பாக்கி இருந்த நிலையில், இப்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த முடியாது என்று கூறியிருந்தோம். ஆனால், திமுக மாயை செய்து அதை அமல்படுத்துவோம் என்று கூறியதே. அதை செய்ய வேண்டியது தானே?” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், 2035-2037ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தால், அரசின் செலவுகள் கணிசமாக உயரக்கூடும் என்றார்.
“பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாறினால் அரசின் வருவாய் செலவினங்கள் அதிகரிக்கும். ஜிஎஸ்டி மற்றும் பிற சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாநிலங்கள் தங்கள் வருவாயை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்பு குறைந்துட்டது. ஏற்கெனவே அரசு திருப்பிச் செலுத்த வேண்டிய கடனும், அரசின் தொடர் செலவுகளும் சுமையாக உள்ளன, ” என்று கூறினார்.
புதிய ஓய்வூதிய திட்டமும் சிக்கலானதே என்கிறார் அவர். “ஓய்வூதியதாரர்களுக்க பணத்தை திருப்பிச் செலுத்துவதில் மத்திய அரசின் பங்கு என்ன என்பதில் தெளிவு இல்லை” என்று அவர் கூறினார். மேலும், கர்நாடகா அறிவித்துள்ள திட்டமும் தெளிவாக இல்லை என்றார்.
“இந்த விவகாரத்தில் 2024 மக்களவைத் தேர்தலுக்குள் ஓய்வூதிய பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் ஒரு புதிய திட்டத்தை மத்திய அரசே விரைவில் கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் டி.வி.சோமநாதன் கமிட்டி ஓய்வூதிய விவகாரங்களைக் கவனித்து வருவதாகவும், பிரதமர் அலுவலகம் இதைட்ப தொடர்ந்து கவனித்து வருவதாகவும் டெல்லியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தில் வழங்கப்பட்டது போல, கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50% என்பதற்குப் பதிலாக, 40% அல்லது அதற்கும் குறைவாக என்று முடிவு செய்யக்கூடும்,” என்றார்.
தமிழ்நாட்டில் தேர்தலின்போது அளித்த வாக்குறுதி என்னவாயிற்று என்று கேட்டபோது, அது ஆளும் கட்சியின் விருப்பம் என்று அந்த அதிகாரி கூறினார். “தற்போதுள்ள நிதி சுமைகளைப் பார்க்கும்போது, பழைய திட்டத்திற்குத் திரும்புவது இப்போது சாத்தியமற்றதாகத் தெரிகிறது,” என்று அவர் கூறினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்