தமிழ்நாடு வந்து ‘தோடர்’ பழங்குடி மொழி, சடங்குகளை இந்த பஞ்சாபி மருத்துவர் கற்றது எப்படி? ஏன்?

தமிழ்நாடு வந்து 'தோடர்' பழங்குடி மொழி, சடங்குகளை இந்த பஞ்சாபி மருத்துவர் கற்றது எப்படி? ஏன்?

 'தோடர்' மொழி, சடங்கு கற்ற பஞ்சாபி
படக்குறிப்பு,

தருண் சாப்ரா

நீலகிரி மலையில் வாழும் தோடர் இன பழங்குடி மக்களின் எண்ணிக்கை குறைந்துவரும் நேரத்தில், அவர்களின் பேச்சு மொழியான ‘ஆல்வாஷ்’ என்ற மொழியின் பயன்பாடு அருகிவருகிறது. தோடர் இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாமல் மற்றவர்கள் கற்றுக்கொள்ள மிகவும் கடினமான மொழியாக கருதப்படும் ‘ஆல்வாஷ்’ மொழியை விருப்பத்தின் பேரில், கற்றுக்கொண்டு, அந்த பழங்குடி மக்களின் கலாசாரம் மற்றும் சடங்குகளை நுட்பமாக ஆவணப்படுத்தியுள்ளார் தருண் சாப்ரா(59).

பஞ்சாபில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் தருண் சாப்ரா. சப்ராவின் தந்தை திரிலோக் சாப்ரா இந்திய ராணுவத்தில் மருத்துவராக பணியாற்ற, நீலகிரியில் உள்ள குன்னூர் பகுதியில் 1970ல் குடியேறினார். இதனை அடுத்து, நீலகிரியில் பிறந்து வளர்ந்த சாப்ரா, இளமை காலத்தில் தோடர் மக்களின் வாழ்வியல் பற்றிய புத்தகம் ஒன்றை படித்த பின்னர், தன்னை தோடர் இனத்தோடு இணைத்துக்கொண்டு, அவர்களின் மொழியை தனது 20 வயதில் இருந்து கற்றுக்கொள்ள தொடங்கினார். சில ஆண்டுகளில் சரளமாக பேசத்தொடங்கினார்.

எழுத்து வடிவம் இல்லாமல் பேச்சு மொழியாக மட்டும் இருக்கும் ‘ஆல்வாஷ்’ மொழியில் பல உவமைகளும், இயற்கை சார்ந்த சொல்லாடல்களும் நிறைந்துள்ளன என கூறும் சாப்ரா, அந்த மொழியின் தாக்கத்தால் தனது வாழ்வியலை வெகுவாக மாற்றிக்கொண்டதாக சொல்கிறார்.

”தோடர்களின் கலாசாரம் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் அவர்களுடன் பழகினேன். தற்போது போல, 30 ஆண்டுகளுக்கு முன்னர் தோடர் மக்களில் பலரும் தமிழ் மொழியை அவ்வளவாக பேசமாட்டார்கள். என் தாய்மொழி பஞ்சாபி, நான் ஆங்கிலமும் தமிழும் பேசுவேன். ஆனால் இந்த மூன்று மொழிகளிலும் அவர்களுடன் பேசமுடியாது என்பதால் தோடர் மொழியை கற்றுக்கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது. என் விருப்பத்தின் பெயரில் அதனை கற்றுக்கொண்டதால், அது எனக்கு ஒரு சுமையாக தெரியவில்லை. அவர்களின் கலாசாரத்தை நான் உள்வாங்கிகொண்டு என் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டேன்,” என்கிறார் சாப்ரா.

தோடர் இன மக்கள் சைவ உணவை மட்டுமே உண்பவர்கள். உருவ வழிபாடுகளை பின்பற்றுவதில்லை. இயற்கை மட்டுமே அவர்களின் தெய்வமாக கருதுபவர்கள். இதுபோன்ற கொள்கைகளை தன் வாழ்வில் புகுத்திக்கொண்ட சாப்ரா, பல முதிய தோடர் மக்களுடன் நேரம் செலவிட்டு, அவர்களின் பாடல்களை தொகுத்துள்ளார்.

 'தோடர்' மொழி, சடங்கு கற்ற பஞ்சாபி
படக்குறிப்பு,

அரசாங்க புள்ளி விவரங்களின் படி தோடர் இனத்தைச் சேர்ந்தவர்கள் 2,000 பேர் மட்டுமே உள்ளனர்.

இயற்கை சார்ந்த மொழி

தொழில் ரீதியாக பல் மருத்துவராக இருந்தாலும், தோடர்களின் மொழி மீதான பற்று காரணமாக சுற்றுச்சூழல் குறித்த அறிவை தருண் வளர்த்துக்கொண்டார்.

‘ஆல்வாஷ்’ மொழியை பேசி பழகியது குறித்து சாப்ராவிடம் கேட்டோம். முதலில் ஐந்து வார்த்தைகள், 10 வார்த்தைகள் என தொடங்கி, தனக்கென ஒரு பட்டியலை தயாரித்திருக்கிறார் சாப்ரா. தொடக்கத்தில் தான் எழுதி வைத்திருந்த வார்த்தைகளை பயன்படுத்தி பேச முயன்றுள்ளதாக சொல்கிறார்.

”நான் ஒரு பல் மருத்துவர் என்பதால், என்னிடம் வரும் தோடர் இன மக்களுடன் ஒரு வரியாவது பேசிவிட வேண்டும் என முயற்சித்தேன். ஆரம்பத்தில் குழந்தைகள் பேசுவது போல தத்திதத்தி பேசினேன். ஆனால் தோடர் இன பெரியவர்கள் என்னை ஊக்குவித்தனர். குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரிடமும் பேசி கற்றுக்கொண்டேன்,” என விவரிக்கிறார் சாப்ரா.

தோடர்களின் கலாசார நிகழ்வுகள் குறித்து தொகுத்துள்ளது பற்றி கேட்டபோது ஒரு சுவாரசியமான தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ”பல ஆண்டுகள் நான் தொடர்ந்து தோடர்கள் சமூகத்துடன் பழகி வந்ததால், அவர்களின் பண்புகளை அறிந்திருந்தேன். ஒரு முறை அவர்களின் பாடல்களை தொகுக்க முற்பட்டபோது, ஏற்கனவே பல ஆங்கிலேயர்கள் இவர்களை பற்றிய புத்தகங்களை எழுதியுள்ளனர் என்பதைத் தெரிந்துகொண்டேன். இதில் உள்ள குறிப்புகள் பலவும் முற்றுபெறவில்லை. இதை விசாரித்தபோது, முதியவர்கள் என்னிடம், ஒரு சில பாடல்களை தோடர் சமூகத்தை தாண்டி பிறரிடம் சொல்வதில்லை என்பதால் பல பதிவுகள் முழுமையாக சொல்லப்படவில்லை என்றார்கள். ஆனால் அவர்கள் என்னிடம் முழுமையாக பகிர்ந்துகொண்டார்கள். என்னை அவர்கள் எவ்வளவு நெருக்கமாக உணர்ந்தார்கள் என்பதை அந்த சம்பவம் எனக்கு புரியவைத்தது,” என்றார் அவர்.

‘ஆல்வாஷ்’ மொழியின் சிறப்புகள் குறித்து பேசிய சாப்ரா, பல எடுத்துக்காட்டுகளை கூறி நமக்கு விளக்கம் தந்தார். நீலகிரி மலையை ஒரே ஒரு மலையாக பலரும் பார்க்கிறோம். ஆனால் அதில் 200 மலைகள் இருப்பதாக தோடர்கள் சொல்கிறார்கள். அந்த 200 மலைகளுக்கும் வெவ்வேறு பெயர்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்கிறார் சாப்ரா.

பஞ்சாபி மருத்துவர்
படக்குறிப்பு,

தருண் சாப்ரா தமிழ் ஆங்கிலத்தைத் தவிர தோடர் மொழியையும் சரளமாகப் பேசுகிறார்.

”தோடர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒவ்வொரு நீரோடை, பூ, மரம், செடிகள் ஆகியவற்றிக்கு சிறப்பு பெயர்கள் இருக்கின்றன என்கிறார். ”’ஆல்வாஷ்’ மொழி இயற்கையில் உள்ள அழகை வர்ணிக்கும் சொற்கள் நிறைய இருக்கின்றன. அதாவது, சிவப்பு என்ற நிறத்தை சொல்வதற்கு போஹுட் என்பார்கள். இதற்கு ரத்தத்தை போன்ற நிறம் என்ற பொருள் கிடைக்கிறது. கருப்பு என்ற நிறத்தை சொல்வதற்கு கரடியின் நிறத்தை போன்ற கருப்பு என்பதை குறிக்கும் சொல்லான காட்குடி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர்,” என்கிறார் அவர்.

சாப்ராவை சந்திக்க நாம் அவருடைய சிகிச்சை மையத்திற்கு சென்றிருந்த நேரத்தில், அவரிடம் சிகிச்சை பெற இரண்டு தோடர் இன பெண்கள் வந்திருந்தனர். மிகவும் நெருங்கிய உறவினரிடம் உரையாடுவது போல அந்த இரண்டு பெண்களிடம் சாப்ரா’ஆல்வாஷ்’ மொழியில் பேசியதைப் பார்க்கமுடிந்தது.

தோடர்களின் மொழி மற்றும் சடங்குகள் மீதான மரியாதை

சிகிச்சைக்கு வந்த நிர்மலாவிடம் ‘ஆல்வாஷ்’ மொழியை சாப்ரா பேசுவது குறித்து கேட்டபோது, ”எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து சாப்ரா சார் எங்களிடம் ‘ஆல்வாஷ்’ மொழியில்தான் பேசுவார். மற்ற மருத்துவர்களிடம் நாங்கள் தயங்கி பேசுவோம். சாப்ரா சார் எங்களிடம் தெளிவாக எங்கள் மொழியில் பேசுவதால், எங்களுக்கு நெருக்கமாக உணர்கிறோம். வயதானவர்கள் கூட தங்களின் உடல்நலம் குறித்து இவரிடம் இரண்டு முறை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்வார்கள். எங்கள் சமூகத்தில் பெரியவர்கள் பலரும் மொழியை கற்றுக்கொள்வதற்கு இவரை எடுத்துக்காட்டாக சொல்வார்கள்,” என்கிறார் நிர்மலா.

மற்றொரு பெண் மகாலட்சுமி சாப்ரா தோடர்களின் திருவிழாக்களில் முக்கிய நபராக சாப்ரா கருதப்படுகிறார் என்றார். ”எங்கள் குழந்தைகள் பலருக்கும் சாப்ராவை தெரியும். எங்கள் கோயில் விழா ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த சமயத்தில், இவர் எங்கள் உறவினர்கள் பலரிடமும் இயல்பாக பேசுவார். எங்கள் கலாசாரம் குறித்த பல பதிவுகளை அவர் படமாக எடுத்துள்ளார். அதேநேரம், ஒரு சில சடங்குகளை படம் எடுக்ககூடாது என்று உணர்ந்து, அங்கிருந்து விலகிவிடுவார். எங்கள் மொழி மீதுள்ள பற்று போல, எங்கள் சடங்குகள் மீதும் அவர் மரியாதை வைத்துள்ளார்,” என்கிறார் மகாலட்சுமி.

பஞ்சாபி மருத்துவர்
படக்குறிப்பு,

தோடர்களின் மொழி மற்றும் சடங்குகள் மீதான மரியாதை வைத்திருப்பதாக மருத்துவர் தருண் சாப்ரா கூறுகிறார்.

தோடர்கள் உரிமை செயற்பாட்டாளர் மற்றும் தோடர் மொழியை பாதுகாக்கும் நோக்கில் தொகுப்பு பணிகளை செய்துவரும் வாசமல்லியைச் சந்தித்தோம். தற்கால இளைஞர்கள் பலரும் தோடர்களின் பாரம்பரிய தொழிலான மேய்ச்சல் தொழிலில் இருந்து நீங்கிவிட்டதால், பல வார்த்தைகளின் பயன்பாடு குறைந்துவிட்டது என்று குறிப்பிட்டார்.

”அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, தோடர் மக்களின் எண்ணிக்கை சுமார் 2,000ஆக உள்ளது என்றும் அதில் ஆல்வாஷ் மொழியை பேசுபவர்கள் அதிகபட்சமாக 1,500 நபர்கள்தான் இருப்பார்கள். சாப்ரா போன்றவர்கள் எங்கள் மொழியை பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சிதான். காலமாற்றத்தின் காரணமாக தமிழ் கலந்து சில இளைஞர்கள் பேசுகிறார்கள். எங்கள் வாழ்வியலை புரிந்துகொண்டால் தான் எங்கள் மொழியை புரிந்துகொண்டு அதை பேசமுடியும், ரசிக்க முடியும்,”என்கிறார் வாசமல்லி.

சாப்ராவின் சிகிச்சை மையத்தில் உள்ள அறைகளின் ஜன்னல்களை தோடர் மக்களின் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் கொண்ட சால்வை அலங்கரித்திருந்தது. அந்த எம்பிராய்டரி வேலைப்பாடுகளுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்கு தீவிர பணியாற்றியவர்களில் சாப்ராவும் ஒருவர் என்று தோடர் இன முதியவர்கள் நம்மிடம் உறுதிப்படுத்தினர். தோடர்களின் மேய்ச்சல் தொழிலுக்கு தேவையான புல் வகைகளை தற்போது சாப்ரா வளர்த்துவருகிறார் என்பது கூடுதல் தகவலாக நமக்குக் கிடைத்துள்ளது.

நாம் தருண் சாப்ராவிடம் இருந்து விடைபெறுகையில், அவரது ஈமெயில் முகவரியை கேட்டபோது, ஒரு வார்த்தையை எழுதி தந்தார். அந்த வார்த்தை ஆல்வாஷ் மொழியில் கடவுளை குறிக்கும் அர்த்தம் கொண்ட சொல் என்று அவரிடம் தெரிந்துகொண்டோம். நாம் வெளியேறும்போது, ‘தோணோன்மோ, தர்மோமோ’ என்று கூறி கையசைத்தார். அதாவது ஆல்வாஷ் மொழியில், உங்களுக்கு அமைதி கிடைக்கட்டும், தர்மம் சேரட்டும் என்று பொருள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *