காஸா மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல்: 500 பேர் பலி – காரணம் இஸ்ரேலா? ஹமாஸா?

காஸா மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல்: 500 பேர் பலி - காரணம் இஸ்ரேலா? ஹமாஸா?

காஸா, இஸ்ரேல், ஹமாஸ்

பட மூலாதாரம், Getty Images

காஸா நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக அங்கிருக்கும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோயாளிகளால் நிரம்பியிருந்த அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவத்துக்குக் காரணம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் என்று பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இஸ்ரேலிய ராணுவம், இச்சம்பவத்துக்குக் காரணம் பாலத்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் நடத்திய ஒரு ராக்கெட் ஏவுதல் தவறாகிப் போனதுதான் என்று கூறுகிறது. இந்ட்க் குற்றச்சாட்டை அந்த அமைப்பு நிராகரித்திருக்கிறது.

மருத்துவமனையில் இருந்த ஒரு மருத்துவர், இந்தச் சம்பவத்தை ‘படுகொலை’ என்று வர்ணித்து அதைக் கண்டித்தார். மற்றொரு மருத்துவர் அந்த இடமே ஒரு பேரழிவின் காட்சியாகத் தோன்றியதாகக் கூறினார்.

சிகிச்சையின்போது இடிந்து விழுந்த மேற்கூரை

செவ்வாய் இரவு (அக்டோபர் 17) அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் இருந்து வெளிவந்த படங்கள் பெரும் குழப்பத்தின் காட்சிகளைக் காட்டுகின்றன. ரத்தம் தோய்ந்த, உடல் சேதமான மக்கள் இருளில் ஸ்ட்ரெச்சர்களில் கொண்டு செல்லப்படுகின்றனர். இடிபாடுகள் நிறைந்த தெருவில் உடல்களும் சிதைந்த வாகனங்களும் கிடக்கின்றன.

ஏவுகணை ஒன்று அப்பகுதியைத் தாக்குவதையும் அதைத்தொடர்ந்து அங்கு குண்டுவெடிப்பு நடப்பதையும் ஒரு வீடியோ காட்டுகிறது.

‘எல்லை கடந்த மருத்துவர்கள்’ என்ற மனிதாபிமான உதவி நிறுவனத்தைச் சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் காசன் அபு-சித்தா, இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கூறுகையில், “தாம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது, ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது என்றும், அறுவை சிகிச்சை அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது என்றும் கூறினார்.

இந்தச் சம்பவத்தை “ஒரு படுகொலை” என்று அவர் விவரித்தார்.

‘மொத்தம் 1,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம்’

காஸா, இஸ்ரேல், ஹமாஸ்
படக்குறிப்பு,

ஒரு வீடியோ, ஏவுகணை ஒன்று மருத்துவமனையைத் தாக்குவதையும் அதைத் தொடர்ந்து அங்கு குண்டுவெடிப்பு நடப்பதையும் காட்டுகிறது.

அங்கிருந்த மற்றொரு மருத்துவர் பிபிசியிடம் கூறுகையில், மருத்துவமனையில் இருந்த 80% சேவைகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாகச் சொன்னார். மேலும் அவரது மதிப்பீட்டின்படி, 1,000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர் அல்லது காயமடைந்துள்ளனர்.

அஹ்லி அல்-அரபு மருத்துவமனை செயல்படுவதற்கு ஆங்கிலிகன் தேவாலயம் முழுமையாக நிதியளிக்கிறது. அந்த தேவாலயம், இந்த மருத்துவமனை காஸாவில் உள்ள எந்த அரசியல் பிரிவுகளையும் சாராதது என்று கூறுகிறது.

ஜெருசலேமில் உள்ள புனித ஜார்ஜ் கல்லூரியின் தலைவரும், அந்நகரில் உள்ள தேவாலயத்தின் முக்கிய நபர்களில் ஒருவருமான கேனான் ரிச்சர்ட் செவெல், இச்சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய நம்பகமான தகவல்களைப் பெறுவது மிகவும் கடினம் என்றார்.

ஆனால், மருத்துவமனை தாக்கப்பட்டதை உறுதிப்படுத்த முடியும் என்றும் இதில் ‘அதிர்ச்சியளிக்கும் அளவுக்கு அதிக எண்ணிகையில் மக்கள் இறந்திருக்கின்றனர்’ என்றும் கூறினார்.

காஸா, இஸ்ரேல், ஹமாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

குண்டுவெடிப்பு நடந்தபோது சுமார் 600 நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஊழியர்கள் மருத்துவமனைக்குள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் இருந்த 1000 நோயாளிகள், முதியவர்கள்

மேலும் பேசிய கேனான் ரிச்சர்ட் செவெல், கடந்த வார இறுதியில் சுமார் 6,000 இடம்பெயர்ந்த மக்கள் இந்த மருத்துவமனை முற்றத்தில் தஞ்சமடைந்து இருந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று (அக்டோபர் 14) இஸ்ரேல் இந்த மருத்துவமனை மீது நடத்திய விமானத் தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்தனர் என்று அவர் கூறினார். “அதைத்தொடர்ந்து 5,000 பேர் மருத்துவமனை முற்றத்தை விட்டு வெளியேறினர். ஆனால் சுமார் 1,000 பேர் அங்கேயே தங்கினர், அவர்களில் பலர் ஊனமுற்றோர் அல்லது வயதானவர்கள்,” என்றும் அவர் கூறினார்.

தற்போது வெடிப்பு நடந்தபோது சுமார் 600 நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஊழியர்கள் மருத்துவமனைக்குள் இருந்ததாகவும், ஆனால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் மருத்துவமனைக்கு வெளியில் இருந்ததாக தான் நம்புவதாகவும் செவெல் கூறினார்.

“இந்தத் தாக்குதல் விபத்தாகவோ, திட்டமிடப்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் இந்த வகையான தாக்குதலை நியாயப்படுத்த முடியாது,” என்று அவர் கூறினார்.

காஸா, இஸ்ரேல், ஹமாஸ்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

இந்தச் சம்பவத்தில் 500 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘தாக்குதலை நேரில் பார்த்தேன்’

சம்பவத்தின்போது அருகில் இருந்த பிரிட்டிஷ்-பாலத்தீனிய கட்டுமானப் பொறியாளரும் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஜாஹர் குஹைல் பிபிசியிடம் கூறுகையில், தான் கண்டது ‘கற்பனைக்கு அப்பாற்பட்ட பயங்கரம்’ என்றார்.

“எஃப்-16 அல்லது எஃப்-35 ரக போர் விமானங்களில் இருந்து வந்த இரண்டு ராக்கெட்டுகள் மக்களை இரக்கமின்றி கொன்றதைப் பார்த்தேன்,” என்று அவர் கூறினார்.

வெடிப்பில் ஏற்பட்ட தீயினால் பலர் உயிரிழந்ததாகவும், முதலில் வந்த மீட்புப் பணியளர்களிடம் உயிர் பிழைத்தவர்களை மீட்பதற்குத் தேவையான உபகரணங்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

காஸா, இஸ்ரேல், ஹமாஸ்
படக்குறிப்பு,

மருத்துவமனையில் இருந்து வெளிவந்த படங்கள் அங்கு நிலவிய பெரும் குழப்பத்தின் காட்சிகளைக் காட்டுகின்றன.

அதிகார மட்டங்கள் கூறுவது என்ன?

இந்தச் சம்பவத்தில் 500 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பு இந்தச் சம்பவத்துக்கு இஸ்ரேலை குற்றம்சாட்டி, இதை ஒரு ‘கொடூரமான படுகொலை’ என்று வர்ணித்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இருக்கும் பாலத்தீனிய அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர், இஸ்ரேலை குற்றம்சாட்டி, இச்சம்பவத்தை ‘கொடூரமான குற்றம்’ என்றார்.

ஆனால், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், தாம் மருத்துவமனைகளைக் குறிவைக்கவில்லை, இவை ‘சரிபார்க்கப்படாத கூற்றுகள்’ என்று கூறியிருக்கின்றன.

இஸ்ரேல் பதுகாப்புப் படைகளின் தலைமை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி ஒரு வீடியோ அறிக்கையில், ‘செயல்பாட்டு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் கூடுதல் ஆய்வு மற்றும் குறுக்கு விசாரணையில், காஸாவில் உள்ள மருத்துவமனையை இஸ்ரேலிய படைகள் தாக்கவில்லை என்பது தெளிவானதாகக் கூறினார்.

அவர் மேலும், “இஸ்லாமிய ஜிகாத் அமைப்பால் ஏவப்பட்ட ராக்கெட் தோல்வியடைந்ததன் விளைவாக மருத்துவமனை தாக்கப்பட்டது,” என்று தெரிவித்தார்.

சிக்கலாகும் மனிதாபிமானப் பிரச்னை

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலத்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,300 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் காஸா மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தின.

காஸா மீது இஸ்ரேல் நடத்தியத் தாக்குதல்களில் 3,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், காஸா மருத்துவமனையில் தற்போது நடந்திருக்கும் குண்டுவெடிப்பு, மனிதாபிமான நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகளுக்குத் தடங்கல் விளைவித்திருக்கிறது.

இன்று (புதன்கிழமை, அக்டோபர் 18) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பாலத்தீனிய மற்றும் எகிப்திய தலைவர்களுக்கு இடையே திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பை ஜோர்டான் ரத்து செய்திருக்கிறது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *