
பட மூலாதாரம், VIRAJ
விராஜ்
“எனக்கு பதினான்கு வயதாக இருந்தபோது, வகுப்பில் உடன் படிக்கும் பெண்கள் மீது மட்டுமில்லாமல் ஆண்கள் மீதும் ஈர்ப்பு ஏற்பட தொடங்கியது. நான் யார்? உண்மையில் என் பாலினம் என்ன? ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவதால் நான் தன்பாலின ஈர்ப்பாளரா? ஆனால், எனக்கு பெண்கள் மீதும் ஈர்ப்பு ஏற்படுகிறதே. அப்படி என்றால் நான் யார்?இந்த கேள்விகள் அப்போது என் மனதில் தீவிரமாக எழுந்தன.”
“மராத்வாடாவில் உள்ள ஒரு கிராமத்தில், இந்தக் கேள்விகளுக்கு உண்மையான பதில்களைத் தரக்கூடிய யாரும் என்னைச் சுற்றி இருக்கவில்லை.”
“நான் நிறைய புத்தகங்களைப் படித்தேன், நிறைய வீடியோக்களைப் பார்த்தேன். LGBTQIA+ சமூகத்தைப் பற்றி, பால் புதுமையினர் பற்றி , தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றி நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால், என் உடல் குறித்தும் ஆண்கள் மற்றும் பெண்கள் மீது ஏன் எனக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது என்பதற்கு என்னிடம் பதில்கள் இல்லை. நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், குழப்பத்தில் மூழ்கினேன்…”
புனேவில் வசிக்கும் 27 வயதான விராஜ், இன்று தன்னை ‘இருபால் ஈர்ப்பாளர்’ என்று மிகுந்த நம்பிக்கையுடன் அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ஆண்களிடமும் பெண்களிடமும் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் ஈர்க்கப்படுவதை அவர் ஏற்றுக்கொள்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஐ.பி.எஸ்.ஓ.எஸ் என்ற சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவில் சுமார் 9 சதவீதம் பேர் இருபால் ஈர்ப்பாளர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது கண்டறியப்பட்டுள்ளது.
இது ஒரு தனியார் அமைப்பின் அறிக்கை என்றாலும், நமது சமூகத்தில் இருபாலின நபர்களின் எண்ணிக்கையை குறிப்பிட இந்த புள்ளிவிவரங்களே போதுமானவை.
இருபால் ஈர்ப்பாளர்களுக்கு ஆண், பெண் ஆகிய இருபாலினத்தவர்கள் மீதும் பாலியல் மற்றும் உணர்வுப்பூர்வ ஈர்ப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
பெரும்பாலும் அவர்களின் ஈர்ப்பு ஆண் அல்லது பெண் என்ற இரு பாலினங்களோடு நிற்பதில்லை. பிற பாலினத்தவர்களிடமும் அவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படக்கூடும். இதன் காரணமாக, அவர்கள் பெரும்பாலும் தங்களை அனைத்துப் பாலீர்ப்பினர் (pansexual) என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
ஒருநபர் தனது பாலினம் இதுதான் என்று கூறும்போது அந்த அடையாளத்தை ஏற்றுக்கொள்வதும், மதிப்பதும் மிகவும் அவசியம்.
இருபால் ஈர்ப்பாளர் என்ற அடையாளத்தை சரியாகப் புரிந்துகொள்ள விராஜின் கதை உதவும்.

பட மூலாதாரம், VIRAJ
பள்ளியில், ‘நான் யார்?’ என்பது குறித்த கேள்வி இருந்தது…
தான் இருபால் ஈர்ப்பாளர் என்பது எப்போது, எப்படி தெரியவந்தது என்பது குறித்து விராஜ் பேசுகையில், “நான் கிராமப்புறப் பள்ளியில் படித்தேன். பதினான்கு வயது இருக்கும்போதே பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்படும். சில நேரங்களில் இந்த ஈர்ப்பு ஆண்கள் மீதும் ஏற்படும்.
என் பாலின அடையாளத்தைக் கண்டறிய நிறைய புத்தகங்களைப் படித்தேன், வீடியோக்களைப் பார்த்தேன். முதலில் நான் தன்பாலின ஈர்ப்பாளராக இருப்பேனோ என்ற குழப்பம் ஏற்பட்டது.” என்றார்.
இதனால் மருத்துவரை சந்தித்ததாகவும் தான் கூறவருவதை அவர் சரியாக புரிந்துகொண்டதாகவும் குறிப்பிட்ட விராஜ், “என் உணர்வுகள், என் கேள்விகள், குழப்பம் என அனைத்தையும் புரிந்து கொண்டு முதன்முறையாக இருபால் ஈர்ப்பைப் பற்றிச் சொன்னார், நீங்கள் உணரும் ஈர்ப்பு மிகவும் சாதாரணமானது என்றும் கூறினார். என்னைப்போல் பலரும் இந்த உலகில் இருப்பதாக கூறிய அவர் சில புத்தகங்களையும் பரிந்துரைத்தார். அந்த வயதில்தான் என் பாலின அடையாளத்தை கண்டுகொண்டேன்” என்கிறார்.
‘என் 24-ஆவது பிறந்தநாளில் அடையாளத்தை வெளிப்படுத்தினேன்…’
பின்னர் கல்வி கற்பதற்காக புனே போன்ற பெரிய நகருக்கு விராஜ் இடம்பெயர்ந்தார். அங்கு, LGBTQIA+ சமூகத்தைப் பற்றி அவர் அறிந்துகொண்டார்.
ஆண் மற்றும் பெண் என்பதை தாண்டி பிற பாலினங்களைக் கொண்டவர்களும் அவரது வாழ்க்கையில் வந்தனர், விராஜும் தனது பாலின அடையாளம் குறித்து வெளிப்படையாக இருந்தார்.
“என் வயது ஏறஏற எனக்குள் இருந்த கொந்தளிப்பு அதிகரித்தது. என் பாலின அடையாளம் என்ன என்பதை குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் வெளிப்படுத்தாமல் இருந்தேன். என் உண்மையான பாலினத்தை வெளிப்படுத்தாமல் சமூகம் முன்பு முகமுடி அணிந்து ஒரு போலியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தது என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, 24-ஆவது பிறந்தநாளில் எனது உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன்” என்று விராஜ் கூறினார்.

பட மூலாதாரம், விராஜ்
இதுபற்றி அவர் கூறுகையில், “ 2020 ஏப்ரல் 6 அன்று எனது 24ஆவது பிறந்தநாள். அன்று நான் ஒரு ‘இருபாலின ஈர்ப்பாளர்’, எனக்கு ஆண், பெண் இருவரையும் பிடிக்கும் என்று வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தேன்.
என் பாலின அடையாளத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால், இன்று மாலை என் வீட்டிற்கு வாருங்கள். எனது பிறந்தநாள் மற்றும் பாலின அடையாளத்தை சேர்த்து கொண்டாடுவோம். என் அடையாளத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்னை பிளாக் செய்துவிடுங்கள் என குறிப்பிட்டிருந்தேன் ” என்றார்.
இதை பார்த்து அவரது நண்பர்கள் பலரும் விராஜின் பாலின அடையாளத்தை ஏற்றுக்கொண்டனர். பலர் அவரது பாலினத்தைத் தாண்டி அவரை ஒரு நண்பராக, மனிதனாக ஏற்றுக்கொண்டனர்.
“ஆனால், பலர் என்னை பிளாக் செய்தனர். எனது உயிர் நண்பர்கள் என்று நான் கருதியவர்கள் கூட என்னை அவர்களின் வாழ்க்கையில் இருந்து தூக்கிவீசினர்” என்று கூறும் விராஜ், அப்போதுதான் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றி சமூகத்தில் நிலவும் பயத்தை முதன்முறையாகப் பார்த்ததாக தெரிவித்தார்.

பட மூலாதாரம், VIRAJ
இருபால் ஈர்ப்பாளர்களை யாரும் நம்புவதில்லை..
தனது இருபாலின ஈர்ப்பு குறித்து பேசிய விராஜ், “நான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளருடன் ஓராண்டு தொடர்பில் இருந்தேன். எங்களுக்கு இடையேயான உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. அது எங்களின் பாலியல் மற்றும் உணர்வுப்பூர்வ தேவைகளை நிறைவு செய்தது
விராஜ் தனது சொந்த உறவுகளைப் பற்றி பேசுகையில், “நான் ஓரினச்சேர்க்கையாளருடன் ஒரு வருடமாக உறவில் இருந்தேன். அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் உறவில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். அது எங்கள் உணர்ச்சி மற்றும் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்தது” என்றார்.
சில காரணங்களால் தாங்கள் பிரிந்துசெல்ல வேண்டியதாயிற்று என்று கூறும் அவர் , “ இருபாலினத்தவர்கள் குறித்து தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. தன்பாலின ஈர்ப்பாளர்களுடன் வெறும் கேளிக்கைக்காகவே நாங்கள் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வதாகவும் பெண்களுடன் தொடர்பு கிடைத்த பின்னர் தன்பாலின ஈர்ப்பாளர்களை நாங்கள் விட்டுசெல்வதாகவும் கருதுகின்றனர்” என வேதனையுடன் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக இருபாலின ஈர்ப்பாளர்களை யாரும் நம்புவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“யாரிடம் வேண்டுமானாலும் எங்களுக்கு ஈர்ப்பு ஏற்படும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால், ஒரு உறவுக்கு தேவையான நம்பிக்கையையும் அர்ப்பணிப்பையும் நாங்களுக்கு தருகிறோம் ”என்கிறார் விராஜ்
“ஒவ்வொரு உறவின் அடித்தளமும் நம்பிக்கைதான், அதுவே இல்லையென்றால், ஏன் எங்களுடன் பழகுகிறார்கள். நாளைக்கு நான் ஒரு பையனை விரும்பினால், அந்த உறவில் 100 சதவீதம் நேர்மையாக இருப்பேன். ஆனால் நான் என்ன செய்தாலும் பலருக்கு இருக்கும் அச்சம் போகாது.” என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், NITIN NAGARKAR/BBC
LGBTQIA+ சமூகத்தின் உரிமைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அணிவகுப்புகளிலும் விராஜ் பங்கேற்றுள்ளார்.
இந்த சமூகத்துடனான தனது அனுபவத்தை விவரிக்கும் அவர், “LGBTQIA+ சமூகத்தினருக்கு ஆதரவான அணிவகுப்பில் நான் கலந்துகொண்டேன். நான் ஒரு அணிவகுப்புக்குச் சென்றேன், பின்னர் அவர்களின் வாட்ஸ் அப் குழுவில் நான் சேர்க்கப்பட்டேன். இருபாலின ஈர்ப்பாளர் என்ற எனது அடையாளத்தை நான் வெளிப்படுத்திய இரண்டு நாட்களில் என்னை குழுவில் இருந்து நீக்கிவிட்டனர். இருபாலின ஈர்ப்பாளர்களை நம்ப முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர்” என்றார்.
இருபால் ஈர்ப்பாளர் என்பதால் தகுதி இருந்தும் ஒரு நிறுவனத்தில் தனக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது என்றும் அவர் கூறுகிறார்.
தகுதி இருந்தும், விராஜ் இருபாலினராக இருந்ததால் ஒரு நிறுவனத்தில் அவருக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
இருபால் ஈர்ப்பாளர்களுக்கு ஆண்கள் மீது 50 சதவீதமும் பெண்கள் மீது 50 சதவீதமும் ஈர்ப்பு இருக்கும் என்று பொதுவாக கூறப்படுகிறது.
அவர்கள் ஆண்களையும் பெண்களையும் சமமாக நேசிக்கின்றனர்.

இது குறித்து விராஜ் கூறும்போது, “காதலை அளவிட முடியாது. நிச்சயமாக அது நபருக்கு நபர் மாறுபடும். இருபால் ஈர்ப்பாளர்களுக்கு ஒரு பாலினத்தவர் மீது அதிக ஈர்ப்பும் மற்ற பாலினத்தவர் மீது குறைவான ஈர்ப்பும் ஏற்படலாம். அனைவருக்கும் ஆண்களையும் பெண்களையும் சம அளவில் பிடிக்கும் என்று சொல்வது சரியாக இருக்காது. நாங்களும் மனிதர்கள்தான். இருபால் ஈர்ப்பாளராக இருப்பது இயல்பானதுதான். காதலுக்கு பாலினம் கிடையாது. ”என்றார்.
ஒருசிலர் தங்கள் பாலின அடையாளத்தை வெளிப்படுத்தாமல், குடும்பம் மற்றும் சமூகத்தின் அழுத்தத்தின் காரணமாக திருமணம் செய்துகொள்கின்றனர். பின்னர் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபடுகின்றனர்.
இதுபற்றி விராஜ் கூறும்போது, “ஒரு ஆண் தன்பாலின ஈர்ப்பாளர் அல்லது இருபாலின ஈர்ப்பாளர் என்று வைத்துக் கொள்வோம், பின்னர் அவர் சமூக அழுத்தத்திற்கு அடிபணிந்து ஒரு பெண்ணை மணந்து, திருமணத்திற்குப் பிறகு தனது பாலின அடையாளமுள்ள ஆணுடன் உடலுறவு கொள்கிறார். அவ்வாறு செய்வது மிகவும் தவறானது, இது குறிப்பிட்ட மூன்று பேருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு இருபாலின ஈர்ப்பாளர்கள் சமூகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது.” என்று குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், MADHURIMA DATAR
மதுரிமா
“கவனத்தை ஈர்ப்பதற்காக கூறுவதாக என் அம்மா நினைத்தார்கள்”
புனேவில் வசிக்கும் இருபது வயதான மதுரிமா, தன்னை இருபால் ஈர்ப்பாளராக அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
அவர் கூறும்போது, “புனே போன்ற ஒரு நகரத்தில், நீங்கள் இருபாலின ஈர்ப்பாளராக இருந்தாலும், நீங்கள் பலரின் எதிர்ப்பையும், பலரின் கேலிகளையும் சகிக்க வேண்டும். , உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் அடையாளத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆண், பெண் இருவரையும் பிடிக்கும், பின்னாளில் இதைப் பற்றி நிறையப் படித்து, ஆராய்ந்து, என் குடும்பத்தாரிடம் நான் இருபாலின ஈர்ப்பாளர் என்பதை வெளிப்படுத்தினேன்.
என் மூத்த சகோதரி அதை ஏற்றுக்கொண்டாள், ஆனால் நான் கவனத்தை ஈர்க்க அல்லது நான் ஏதோ ‘தனித்துவம்’ வாய்ந்தவள் என்பதைக் காட்ட நான் இதைச் சொல்கிறேன் என்று அம்மா நினைத்தார்” என தெரிவித்தார்.
நாட்கள் செல்லச் செல்ல அவரின் அம்மாவும் மதுரிமாவின் அடையாளத்தை ஏற்றுக்கொண்டார்.
“LGBTQIA சமூகத்தில் உள்ள மற்றவர்கள் எதிர்கொள்ளும் அதே போராட்டங்களை நான் அனுபவிக்கவில்லை என்ற வகையில் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். மற்றவர்களை விட எனது அடையாளத்தை வெளிப்படுத்துவது எனக்கு எளிதாக இருந்தது. ஆனால், பாலின அடையாளத்தின் காரணமாக பலருக்கு பாலியல் வன்புணர்வு, கொலை மிரட்டல் வந்துள்ளது.”
“எங்களையும் மற்றவர்களைப் போல் ஏற்றுக்கொள்ள ஒருநாள் வரும் என்று நான் நம்புகிறேன். எங்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் இருக்காது. நாங்கள் எவ்வித பயமும் இன்றி நிம்மதியாக இருப்போம்” என்று மதுரிமா நம்பிக்கையோடு கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்