இந்தியா, பாகிஸ்தான் இரு கிரிக்கெட் அணிகளிலும் ஆடிய இவர்களை பற்றி தெரியுமா?

இந்தியா, பாகிஸ்தான் இரு கிரிக்கெட் அணிகளிலும் ஆடிய இவர்களை பற்றி தெரியுமா?

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், Getty Images/PCB

டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் 1952ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி நடைபெற்ற ஆட்டம் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.

அந்த நாளில் பாகிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாட ஆயத்தமாகி இருந்தது. எதிரில் இருந்தது இந்திய கிரிக்கெட் அணி. இந்த ஆட்டத்தில் இன்னொரு சுவாரஸ்யமும் உள்ளது. அப்துல் ஹபீஸ் கர்தார், ஆமீர் இலாஹி, குல் முகமது ஆகிய வீரர்கள் களத்தில் இருந்தனர். இந்த வீரர்கள் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்காகவும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவர்கள் .

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியிலும் இந்த மூன்று வீரர்களும் களத்தில் இருந்தனர். அப்துல் ஹபீஸ் கர்தார், அமீர் இலாஹி ஆகியோர் பாகிஸ்தானுக்காக விளையாடினர். குல் முகமது இந்தியா சார்பில் விளையாடினார்.

அப்துல் ஹபீஸ் கர்தார்- பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தந்தை

ஆரம்ப நாட்களில் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு புதிய பாதையை காட்டிய கிரிக்கெட் வீரராக அப்துல் ஹபீஸ் கர்தார் கருதப்படுகிறார். பாகிஸ்தானுக்கான விளையாடிய தனது முதல் போட்டியில் கேப்டனாக அப்துல் ஹபீஸ் கர்தார் அணியை வழிநடத்தினார்.

மேலும், அப்துல் ஹபீஸ் கர்தாரை பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தந்தை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அப்துல் ஹபீஸ் கர்தார்

1952 முதல் 1958 வரை பாகிஸ்தானுக்காக மொத்தம் 23 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடினார். இந்த அனைத்து போட்டிகளிலும் கர்தார் பாகிஸ்தானின் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தினார்.

1925ஆம் ஆண்டு லாகூரில் அப்துல் ஹபீஸ் கர்தார் பிறந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1925ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி அவர் பிறந்ததாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோவின் தரவுகள் கூறுகின்றன.

அந்த காலத்தில் மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்பட்ட லாகூரில் உள்ள இஸ்லாமியா கல்லூரியில் கர்தார் கல்லூரி படிப்பை படித்தார். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே கர்தாரிடம் கிரிக்கெட் திறன் வெளிப்பட்டுள்ளது.

1947ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு இஸ்லாமியா கல்லூரி பஞ்சாப்பில் உள்ள டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு பயிற்சி பெறும் இடமாக இருந்தது.

கர்தார் பல்வேறு அணிகளுக்காக கிர்க்கெட் விளையாடியுள்ளார். 174 முதல்தர போட்டிகளில் விளையாடிய அவர் 8 சதங்களுடன் 6,832 ரன்களை சேர்த்துள்ளார். பந்துவீச்சாளராக 344 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், Getty Images

முதலில் விளையாடியது இந்தியாவிற்காக..

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தந்தையாக அழைக்கப்படும் அப்துல் ஹபீஸ் கர்தார் தனது முதல் ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் அணிக்காக 1946ஆம் ஆண்டு விளையாடினார். இங்கிலாந்து பயணத்துக்கு தேர்வான இந்திய கிரிக்கெட் அணியில் அவரும் இடம்பெற்றிருந்தார். இந்தியாவுக்காக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கர்தார் 80 ரன்களை சேர்ந்தார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் வரை அவர் அப்துல் ஹபீஸ் என்ற பெயரில் விளையாடியதாகவும் அதன் பின்னர் தனது குடும்ப பெயரான கர்தாரை தன் பெயரோடு சேர்த்துகொண்டதாகவும் இஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்துக்கு பின்னர் இங்கிலாந்திலேயே தங்கிய கர்தார் வார்விக்‌ஷா கவுண்டிக்காக விளையாடி வந்தார்.

இடக்கை ஆட்டக்காரரான ஹபீஸ் தனது அதிரடியான ஆட்டத்துக்கு பெயர் பெற்றவர். எவ்வளவு பெரிய பந்துவீச்சாளராக இருந்தாலும் எப்படிப்பட்ட இக்கட்டான சூழலாக இருந்தாலும் கிரீஸிலிருந்து வெளியே வந்து பந்துவீச்சாளரின் தலைக்கு மேலாக பந்துகளை அடித்து விளையாடும் அவரது ஆட்டம் மிகவும் பிரபலமானது. அவர் இங்கிலாந்திலிருந்து திரும்பிய நேரத்தில், பாகிஸ்தான் ஒரு நாடாக மாறியிருந்தது. எனவே, புதிய நாட்டின் முதல் கேப்டனாக கர்தார் பொறுப்பேற்றார்.

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் கிரிக்கெட்டை உயர்த்திய கர்தார்

1951-இல் கர்தாரின் தலைமையின் கீழ் பாகிஸ்தான் டெஸ்ட் விளையாடும் நாடாக அங்கீகாரம் பெற்றது. ஒரு வருடம் கழித்து, கர்தாரின் தலைமையின் கீழ் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்தது. தென் ஆப்ரிக்காவை தவிர்த்து, அந்த நேரத்தில் டெஸ்ட் போட்டிகளை விளையாடி வந்த ஐந்து அணிகளை கர்தாரின் தலைமையின் கீழ் பாகிஸ்தான் வென்றுள்ளது.

இந்த வெற்றிகள் அனைத்தும் ஒவ்வொரு அணிக்கும் எதிரான முதல் தொடரிலேயே சாத்தியமானது.

கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், கர்தார் கிரிக்கெட் உடன் தொடர்ந்து பயணித்தார். 1972-1977 வரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பாகிஸ்தானின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்று அப்போது அழைக்கப்பட்டது) தலைவராக அவர் பதவி வகித்தார். அவர் பதவியில் இருந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டை நவீனமயமாக்க நிறைய வேலைகள் செய்யப்பட்டன.

இதற்கு மத்தியில் அரசியலில் அவர் தடம் பதித்தார். 1970ல், பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராக கர்தார் வெற்றிபெற்றார். பின்னர், சுவிட்சர்லாந்திற்கான பாகிஸ்தான் தூதராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், PAKISTAN CRICKET BOAR/TWITTER

படக்குறிப்பு,

குல் முகமது

குல் முகமது

வதோதராவில் ஹோல்கர், பரோடா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பையின் இறுதிப்போட்டி மார்ச் 8, 1947 அன்று நடந்துகொண்டிருந்தது. பரோடா அணி 91 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்துகொண்டிருந்தபோது களம் புகுந்த குல் முகமது இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான விஜய் ஹசாரேவுடன் இணைந்து 4வது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 577 ரன்களை சேர்த்தார். கிட்டத்தட்ட 9 மணி நேரம் களத்தில் இருந்த குல் முகமது 319 ரன்களை சேர்த்திருந்தார்.

லாகூரில் 1921ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி பிறந்த குல் முகமது, இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியை விளையாடிய சில வீரர்களில் ஒருவர் என்ற சிறப்புக்குரியவர். அவர் இந்தியாவுக்காக 8 போட்டிகளிலும், பாகிஸ்தானுக்காக ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடியுள்ளார்.

இடக்கை ஆட்டக்காரரான குல் முகமது ஃபீல்டிங்கில் முத்திரை பதித்தவர். அவரின் ஃபீல்டிங் பற்றி குறிப்பிடும்போது மீன் கூட அவரின் கைகளில் இருந்து எளிதில் நழுவிவிட முடியாது என ஒப்பிட்டு கூறுவார்கள்.

அப்துல் ஹபீஸ் கர்தாரை போலவே குல் முகமதுவும் இஸ்லாமியா கல்லூரி மாணவர்தான். 1938-39ஆம் ஆண்டில் தனது 17 வயதில் முதல் ரஞ்சி போட்டியில் குல் முகமது விளையாடியுள்ளார். உள்நாட்டு போட்டிகளில் அவரது செயல்பாடு சிறப்பாக இருக்கவே 1946ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு அவர் அணியில் இடம்பெற்றார். எனினும் முதல் டெஸ்ட் போட்டியில் அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், Getty Images

இந்தியா சுதந்திரமடைந்த பின்னர், 1947-1948 இல் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற லாலா அமர்நாத் தலைமையிலான இந்திய அணியில் குல் முகமது இடம்பெற்றிருந்தார்.

இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய விதம் மிகவும் மோசமாக இருந்தது. 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய குல் முகமதுவும் 130 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஆனால், தனது சிறப்பான ஃபீல்டிங்கால் அவர் அனைவரையும் கவர்ந்தார்.

இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். அதன் பிறகு பாகிஸ்தானுக்கு சென்று குடியேறினார். 1956-1957ஆம் ஆண்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தேர்வான குல் முகமது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கராச்சியில் நடந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 39 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த அவர் பல வெற்றிகளையும் பெற்றுள்ளார்.

நோய்வாய்ப்பட்டிருந்த குல் முகமது 1992ல் லாகூரில் உயிர் இழந்தார்.

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஆமிர் இலாஹி (இடதுபுறம்)

ஆமிர் இலாஹி

லாகூரில் பிறந்த ஆமிர் இலாஹிக்கு இரண்டு சிறப்புகள் உள்ளன. முதலாவது, இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்காகவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியவர் என்பது. இரண்டாவது, உலகின் மிகவும் வயதான 20 கிரிக்கெட் வீரர்களில் ஆமிரும் ஒருவராக இருந்தார்.

செப்டம்பர் 1, 1908 இல் பிறந்த ஆமிர் இலாஹி இந்தியாவுக்காக ஒருமுறையும் பாகிஸ்தான் அணிக்காக ஐந்து முறையும் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

1952-53ல் இந்தியாவில் நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் சார்பில் பங்கேற்று விளையாடினார். கொல்கத்தாவில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது ஆமிரின் வயது 44.

டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பாக எதுவும் செய்யவில்லை என்றாலும் ரஞ்சி போட்டியில் அவரது சாதனை சிறப்பானதாக இருந்தது. 24.72 சராசரியில் 194 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

பாகிஸ்தான் குடிமகனாக ஆவதற்கு முன்பு ரஞ்சி கோப்பையில் பரோடா அணி வெற்றி பெறுவதற்கு ஆமிரின் ஆட்டம் முக்கிய பங்காற்றியது.

மெட்ராஸில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சுல்ஃபிகர் அகமது உடன் இணைந்து 10வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்டர்ஷிப்பை ஆமீர் ஏற்படுத்தினார். இதில் அவரின் பங்களிப்பு 47 ரன்கள் ஆகும்.

1980ல் தனது 70வது வயதில் கராச்சியில் ஆமிர் மரணமடைந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *