தீபாவளி போனஸை திட்டமிட்டு செலவு செய்வது எப்படி? முதலீட்டிற்கு சிறந்த வழி எது?

தீபாவளி போனஸை திட்டமிட்டு செலவு செய்வது எப்படி? முதலீட்டிற்கு சிறந்த வழி எது?

தீபாவளி போனஸ் செலவு எப்படி?

பட மூலாதாரம், Getty Images

பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டாலே ஜவுளிக்கடைகள் தொடங்கி மளிகைக்கடைகள் வரை அனைவரும் சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வாரி வழங்குவார்கள். அதிலும், தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம்.

முன்பெல்லாம் துண்டறிக்கை மூலமாகவும், கூம்பு வடிவ ஒலிபெருக்கி மூலமாகவும் குடியிருப்புகள் இருக்கும் தெருக்களில் விளம்பரப்படுத்துவார்கள்.

ஆனால், தற்போது அதிகரித்துள்ள மின் வணிக காலத்தில், ஷூக்கடைகள் முதல் பழக்கடைகள் வரை அனைவரும் நமது செல்போனுக்கே குறுஞ்செய்தியாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் பண்டிகைக்காக தாங்கள் அறிவித்துள்ள சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை நமக்கு தெரியப்படுத்துகிறார்கள்.

இதனால், தீபாவளியை முன்னிட்டு போனஸ் வாங்கிய மற்றும் வாங்கவிருக்கும் நடுத்தர வர்க்கத்தினர், அதிகம் செலவு செய்யும் வாய்ப்புகள் உள்ளன. திட்டமிட்டே செலவு செய்தாலும் கூட, சில நேரங்களில் எதிர்பார்த்தை விட அதிகமாக செலவு செய்ய நேரலாம். அது கடன் சுமையாக மாறும் வாய்ப்பு உள்ளது.

இப்படியான சூழலில் பண்டிகை காலத்தில் எப்படி சிக்கனமாக செலவு செய்வது என பொருளாதார நிபுணர்கள் சில அறிவுரைகளை கூறுகின்றனர்.

தீபாவளி போனஸ் செலவை திட்டமிடுவது எப்படி?

சிக்கனமாக செலவு செய்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

குறைந்த அளவு பணத்தை எடுத்து வைத்துவிட்டு, மீதிப் பணத்தைதான் சேமிப்புக்காக எடுத்து வைக்க வேண்டும்,

பண்டிகை காலத்தில் பணத்தை சேமிப்பது குறித்து பிபிசியிடம் பேசிய பொருளாதார நிபுணர் சோம வள்ளியப்பன், தேவையை அறிந்து செலவு செய்ய வேண்டும் என்கிறார்.

“பணத்தின் தேவை அனைவருக்கும் இருக்கிறது. அதேபோல, அந்த பணமும் அனைவருக்கும் கிடைக்கிறது. இதில், சிக்கலே, எப்போது தேவை இருக்கிறது, எப்போது பணம் கிடைக்கிறது என்பதில் தான்.

ஒருவருக்கு மாதம் ரூ 10,000 வருவாய் வருகிறது, ஆனால், அவருக்கு மாதச் செலவு ரூ11,000 ஆக இருக்கும்போது, ஒரு 10 மாதங்கள் கழித்து அவருக்கு ரூ 40,000 பண்டிகைக்காக போனசாக கிடைத்தால், அவர் இந்த 10 மாதங்களாக சமாளித்து வந்த மாதம் ஆயிரம் ரூபாயை ஈடு செய்த பின், அவரிடம் ரூ 30,000 இருக்கும். அதில், அவர் பாதிக்கு மேல் எடுத்து வைத்துவிட்டு தான் தனது செலவை திட்டமிட வேண்டும்,” என்றார்.

ஏன் பாதிக்கும் மேல் எடுத்து வைக்க வேண்டும் என்பதை விளக்கிய சோமவள்ளியப்பன், “ஒன்று, அடுத்த அடுத்த மாதங்களிலும் அவரது வருமானத்திற்கும் செலவிற்கும் இடையில் ஆயிரம் ரூபாய் பற்றாக்குறை இருக்கும். அதனால், அவர் எடுத்து வைக்கும் பணத்தை வைத்து, அடுத்த அடுத்த மாதங்களின் செலவை ஈடு செய்ய முடியும்,”என்றார்.

இப்படி பணத்தை எடுத்து வைப்பதால், பண்டிகை காலங்களில் கொண்டாட்டமே கூடாது என்று பொருள் இல்லை என்றார் சோமவள்ளியப்பன்.

“தேவைக்கான செலவை நிச்சயம் செய்ய வேண்டும். குறைந்த அளவு பணத்தை செலவுக்கு எடுத்து வைத்துவிட்டு, மீதிப் பணத்தைதான் சேமிப்புக்காக எடுத்து வைக்க வேண்டும்,”என்றார் சோமவள்ளியப்பன்.

போனஸை எதிர்நோக்கியிருக்கும் போது என்ன செய்ய வேண்டும்?

சிக்கனமாக செலவு செய்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சிக்கனம் என்ற பெயரில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை தவிர்க்கவோ, தள்ளிப்போடவோ கூடாது

இதேபோல, பொருளாதார நிபுணர் நாகப்பனும், பண்டிகை காலங்களில் மக்கள் தங்களின் செலவுகளை குறைப்பதற்கு தாங்கள் வாங்க வேண்டிய பாெருட்களை முன்னதாகவே பட்டியலிட வேண்டும் என்றார்.

“தீபாவளி போனசை எதிர்நோக்கியிருக்கும் நபர்கள், அந்தப் பணத்தில் தாங்கள் வாங்க வேண்டிய பொருட்களை முன்பே திட்டமிட்டு பட்டியல் இட வேண்டும். இப்படி பட்டியலிடும்போது, நாம் தேவையான பொருட்களைத்தான் வாங்குவோமே தவிர, அந்த நேரத்தில் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்க மாட்டோம்.

மேலும், நாம் இப்படி பட்டியலிட்டால், சில நேரங்களில் நம் கைக்கு பணம் வந்த பிறகு, அந்தப் பட்டியலில் உள்ள பொருட்களில் சில நமக்கு தேவை இல்லை என்றும் கூட தோன்றும்,” என்றார் நாகப்பன்.

அதேநேரத்தில், சிக்கனம் என்ற பெயரில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை தவிர்க்கவோ, தள்ளிப்போடவோ கூடாது என்றும் எச்சரித்தார் நாகப்பன்.

“நாம் சில பொருட்களை வாங்கினால், நமது செயல் திறன் அதிகரிக்கும் என்றால், யோசிக்காமல் அந்த பொருளை வாங்க விட வேண்டும்,” என்றார் நாகப்பன்

சிக்கனப்படுத்திய பணத்தை சேமிப்பது எப்படி?

சிக்கனமாக செலவு செய்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

வாங்கியிருக்கும் கடனின் வட்டி சதவீதம் 10% மேல் இருந்தால், அந்தக்கடனை திரும்பச் செலுத்துவது தான் சிறந்தது

இதற்கு பொருளாதார நிபுணர்கள் சோமவள்ளியப்பன், மற்றும் நாகப்பன், இருவருமே தங்கத்தில் முதலீடு செய்வதே முதலீட்டு அபாயம் இல்லாமல் பணத்தை சேமிப்பதற்கான சிறந்த வழி என்றனர்.

“முதல் தேர்வு தங்கம் தான். அதற்கு பின் குறைந்த அபாயத்தில் பரஸ்பர நிதி(Mutual Fund) முதலீட்டில் பணத்தை முதலீடு செய்யலாம். ஒருவேளை கடன் இருந்தால், முதலீடு செய்வதற்கு முன்பு கடனை அடைப்பது நல்லது,”என்றார் சோமவள்ளியப்பன்.

கடன்களிலேயே, வீட்டுக்கடன் மற்றும் தனிநபர் கடன் இருந்தால், இரண்டில், தனி நபர் கடனை முதலில் திரும்பச் செலுத்துவது தான் சிறந்தது என்றார் சோமவள்ளியப்பன்.

“ஏனென்றால், தனி நபர் கடனால் பணம்தான் விரயமாகும். ஆனால், குறைந்தது வீட்டுக்கடனுக்காவது வருமானவரி விலக்கு உண்டு. அதனால், இப்படி கடனை திரும்பச் செலுத்துவதும் ஒரு வகையில் சேமிப்புதான்,” என்றார்.

சேமிப்பு குறித்து பேசிய நாகப்பன், “தங்கத்தையும், பரஸ்பர நிதி முதலீட்டையும் தாண்டி, தங்கம், ரியல் எஸ்டேட், கடன் பத்திரம் மற்றும் பங்குச்சந்தை ஆகியவற்றைக் கொண்ட பண்முக முதலீட்டிலும் முதலீடு செய்யலாம். இதில், முதலீட்டு அபாயம் குறைவு, அதே நேரத்திலம் பணத்தையும் சேமிக்கலாம்,” என்றார்.

அதேபோல, வாங்கியிருக்கும் கடன்களை திரும்பச் செலுத்துவது குறித்து பேசிய நாகப்பன்,“வாங்கியிருக்கும் கடனின் வட்டி சதவீதம் 10% மேல் இருந்தால், அந்தக் கடனை திரும்பச் செலுத்துவது தான் சிறந்தது.

ஒருவேளை அந்த கடனின் வட்டி சதவீதம் 10% அல்லது அதற்கு குறைவாக இருந்தால், கடனை திரும்பச் செலுத்துவதற்கு பதிலாக அதனை வைப்பு நிதியில் முதலீடு செய்யலாம்,”என்றார்.

“ஆயிரம் அழைப்புகள் வந்தாலும், குறுஞ்செய்திகள் வந்தாலும், உங்களை நீங்கள் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்,” என இறுதியாக எச்சரித்தார் நாகப்பன்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *