ஒரே நாடு ஒரே தேர்தல்: இந்திரா காந்தி நிராகரித்ததை மோதி செய்ய துடிப்பது ஏன்? பா.ஜ.க. வியூகம் என்ன?

ஒரே நாடு ஒரே தேர்தல்: இந்திரா காந்தி நிராகரித்ததை மோதி செய்ய துடிப்பது ஏன்? பா.ஜ.க. வியூகம் என்ன?

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

மும்பையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் மூன்றாவது கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது, அதே நாளில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது.

இதற்கு ஒரு நாள் முன்னதாக, செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதாக மத்திய அரசு அறிவித்தது, ஆனால் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்து அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசின் இந்த அறிவிப்புகள் குறித்தும், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசியல் வட்டாரத்தில் எழுந்த யூகங்கள் குறித்தும், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் கூறும்போது, “இது அரசியல் சட்ட திருத்தம் மட்டுமல்ல, இதற்கு மாநிலங்களின் ஒப்புதலும் தேவைப்படும். பாஜக ஆளும் ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சட்டப்பேரவையை இப்படி கலைக்கலாம். ஆனால், பிற மாநிலங்களில் சட்டப்பேரவையில் காலத்தை இப்படி குறைக்க முடியாது” என்றார்.

மறுபுறம் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “ தற்போது குழுதான் அமைக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாகவே இப்படி பதற்றம் அடைய வேண்டிய அவசியம் என்ன? குழு அமைக்கப்பட்டுள்ளது, பின்னர் அவர்களின் அறிக்கை தாக்கல் செய்யப்படும். நாளைக்கே இதை செய்துவிடுவோம் என்று நாங்கள் கூறவில்லையே” என இந்த விவகாரம் தொடர்பாக குறிப்பிட்டார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம், ANI

மத்திய அரசின் நோக்கம் என்ன?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், திடீரென நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஏன் கூட்டப்படுகிறது என்ற ஆச்சரியம் எழுந்துள்ளது. மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது, அதன்பிறகு அடுத்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில், இப்போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற பிரச்சினை ஏன் எழுப்பப்படுகிறது?

5 நாட்கள் நடைபெறும் சிறப்பு அமர்வில் சில முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம், மகளிர் இடஒதுக்கீடு மசோதா போன்ற பிரச்னைகளும் இருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஆனால், மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான வினோத் சர்மா, இது ஒருவகையான ‘திசை திருப்பல்’ என்று நம்புகிறார்.

“பாஜக தன் மீது கவனத்தை திருப்ப முயல்கிறது”

சிறப்பு கூட்டத்தொடரின் ஐந்து நாள் அமர்வு குறித்து வினோத் ஷர்மா பிபிசி நிருபர் மான்சி டாஷிடம், “பொதுமக்களை வசீகரிப்பதற்காக இத்தகைய அரசியல் செய்யப்படுகிறது. புல்லட் ரயிலாகட்டும், பெரிய திட்டங்களின் அறிவிப்பாகட்டும் அல்லது உலகின் மிகப்பெரிய சிலையாகட்டும் அரசின் அறிவிப்பு பெரிதாக இருக்கும். ஆனால் அவற்றின் இலக்கு மிக குறுகியது.

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பதை செயல்படுத்த அரசியல் சட்டத்தை நிறைய மாற்ற வேண்டிவரும். மேலும், இது கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல், எனவே, இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்லும். இதை தவிர்த்து இதன் பின்னணியில் பெரிய உள்நோக்கம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.” என குறிப்பிட்டார்.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான பாஜகவின் வியூகம் குறித்து வினோத் சர்மா கூறும்போது, “எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சந்திப்பில் ஈடுபட்டு இருப்பதைக் கண்டு பாஜக அசௌகரியமாகி, தன்மீது கவனத்தை திருப்ப முயல்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சந்திப்பு நடத்தும்போது, சிறப்பு கூட்டத்தொடர் பற்றி அறிவிக்கிறது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பற்றி பேசுகிறார்கள். ஆனால் அதன் பிறகு அமைதி நிலவுகிறது. சபாநாயகர் கூட அமைதியாக இருக்கிறார்” என தெரிவித்தார்.

மேலும், தற்போதைய அரசு அரசியலமைப்பு நடைமுறைகளை தனக்கு ஏற்ற வழியில் பயன்படுத்துவதில் விருப்பமாக இருக்கிறது. அதே நேரத்தில், தனக்கு இருக்கும் பொறுப்புக்கூறலைத் தவிர்த்து வருகிறது. அப்படி இல்லையெனில் சிறப்பு அமர்வின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பதை அரசு சொல்லியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

செயல்முறைகள் எப்படி இருக்கும்?

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்றும் மூத்த பத்திரிகையாளர் வினோத் சர்மா கூறுகிறார். அரசியலமைப்பில் பல திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். மாநிலங்களவை ஒப்புதல் பெறப்பட்டு, மாநில சட்டபேரவைகளை கலைக்க வேண்டும் என்கிறார் அவர்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பிபிசியிடம் பேசும்போது, “இந்தப் பிரச்னை முன்பு எழுப்பப்பட்டது, அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டால் இது சாத்தியமாகும்” என்று கூறினார்.

அதே நேரத்தில், மூத்த பத்திரிகையாளர் பிரதீப் சிங், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியம் என்றும், இதற்காக அனைத்து மாநில சட்டபேரவைகளையும் கலைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நம்புகிறார்.

இது அவர் கூறுகையில், “அரசியலமைப்பை திருத்துவதற்கு, இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும். மக்களவையில் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது, மேலும் மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற அரசாங்கம் முயற்சி செய்யலாம். ஜிஎஸ்டி விவகாரத்தில் செய்ததுபோல்” என குறிப்பிட்டார்.

ஆனால் அரசியலமைப்புத் திருத்தத்தைத் தவிர, குறைந்தபட்சம் பாதி மாநிலங்களின் சட்டப்பேரவைகளிலும் இந்த திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும்.

“ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த 14 மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படும், பாஜகவுக்கு இது கடினமானது அல்ல. 12 மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இரண்டு மூன்று மாநிலங்கள் ஆதரிக்க தயாராக இருக்கின்றன. ஒடிசாவிற்கும் ஆந்திராவிற்கும் இதில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால், மாநிலங்களவையில் தான் சிக்கல் ஏற்படும்” என்று பிரதீப் சிங் கூறுகிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

“காங்கிரஸ் ஆதரிக்காவிட்டால், மாநிலங்களவையில் இதனை நிறைவேற்றுவது கடினம். அதேநேரம், இந்த மசோதாவைக் கைவிட்டு, தேர்தலை சந்திப்பது என்பது காங்கிரசுக்கு கடினம்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இதையெல்லாம் அரசு சமாளித்தாலும் மாநில சட்டப்பேரவைகள் கலைக்கப்படுமா என்ற கேள்வியும் எழும்.

இது குறித்து பிரதீப் சிங் கூறும்போது, “முன்னதாக இது தொடர்பாக இரண்டு திட்டங்கள் இருந்தன. ஒன்று, இரண்டு கட்டங்களாகச் செய்யப்பட வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பும் பின்பும் நடைபெற வேண்டிய சட்டப்பேரவை தேர்தல்களை ஒன்றாக நடத்துவது. இரண்டாவது, பாஜக மற்றும் அதன் கூட்டணி அரசுகள் மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றிவிட்டு பின்னர் ஆட்சியை கலைத்துக்கொள்ள வேண்டும், மீதமுள்ள மாநிலங்களின் அரசாங்கங்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆனால், இதில் மீண்டும் ஒரு சட்டரீதியான சிக்கல் உள்ளது. ”

ஒரே நேரத்தில் மத்தியிலும் மாநிலங்களிலும் தேர்தலை நடத்த வேண்டும் என்றால், அதற்கு தேவையான வளங்களை எப்படி பயன்படுத்துவது என்பதும் சவாலானது. ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு அதிகமாக மின்னணு வாங்கு இயந்திரங்கள், வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் தேவைப்படும்.

நாட்டின் பல பகுதிகள் மிகவும் பதற்றமானவை, அங்கு தேர்தலை நடத்தும்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்படும். எனவே, ஒரே நாடு ஒரே தேர்தலை முன்னெடுத்து செல்வதற்கு முன்பு இந்த கேள்விகளுக்கெல்லாம் அரசு விடை தேட வேண்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் யாருக்கு லாபம்?

“’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது இப்போது தொடங்கிய விஷயம் அல்ல. அதற்காக முயற்சிகள் 1983 ஆம் ஆண்டிலிருந்தே தொடங்கப்பட்டன, எனினும், இந்திரா காந்தி அதை நிராகரித்தார்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பிரதீப் சிங்

ஆனால், நரேந்திர மோதி பிரதமராக பதவியேற்றதில் இருந்தே இந்தப் பிரச்னை மீண்டும் எழுந்துள்ளது. பாஜகவின் 2014 தேர்தல் அறிக்கையிலும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

“தேர்தல்களில் கறுப்புப் பணம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், அது கணிசமாகக் குறையும். தேர்தல் நிதி திரட்டுவது என்பது கட்சிகளுக்கு மிகப்பெரிய சுமை. இதுபோன்ற சூழ்நிலையில் சிறிய கட்சிகள் பலன் பெறலாம், ஏனெனில் அவை சட்டபேரவை மற்றும் மக்களவை தேர்தல்களுக்கு தனித்தனியாக பிரசாரம் செய்ய வேண்டியதில்லை” என்று பிரதீப் சிங் கூறுகிறார்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் பாஜக, காங்கிரஸ் போன்ற பெரிய தேசிய கட்சிகள் இறுதியில் அதிக பலன் அடையும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் பல மாநிலங்களில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்களில் ஒரே நேரத்தில் ஈடுபடுவது சிறிய கட்சிகளுக்கு கடினமாக இருக்கலாம்.

“ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைக்கும் நன்மை என்னவென்றால், பிரதமருக்கு பிரச்சாரம் செய்ய நேரம் கிடைக்கும், மேலும் பிரசாரத்தில் அதிகம் கவனம் செலுத்த முடியும். பிரதமர் இன்னும் பிரபலமான முகமாக இருக்கிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் அவர்கள் ஒவ்வொரு 6 முதல் 8 மாதங்களுக்கு ஒருமுறை வேர்வை சிந்தி பிரசாரம் செய்ய வேண்டியது இல்லை ” என்று பிரதீப் சிங் கூறுகிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

ஒரே நாடு ஒரே தேர்தல் – கோரிக்கை எப்போது தொடங்கியது?

சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் ஒரே நேரத்தில் மக்களவைக்கும் சட்டப்பேரவைகளும் தேர்தல் நடத்தப்பட்டது. இதற்குப் பிறகு, 1957, 1962 மற்றும் 1967 ஆகிய ஆண்டுகளில் மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.

1983 ஆம் ஆண்டு, இந்திய தேர்தல் ஆணையம், அப்போதைய இந்திரா காந்தி அரசிடம் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை முன்வைத்தது.

இது தொடர்பாக பிரதீப் சிங் கூறும்போது, “1999ல், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, சட்ட கமிஷன் பரிந்துரைத்தது. 2014ல், பா.ஜ., தனது தேர்தல் அறிக்கையில், அதற்கான வழியை கண்டுபிடிப்பதாக கூறியிருந்தது. அதன் பின், 2016ல், பிரதமர் மோதி, இரே நேரத்தில் தேர்தலை நடத்துவது குறித்து உரக்க எழுப்பினார். அடுத்த ஆண்டு, நிதி ஆயோக் இதற்கான திட்டத்தை வகுத்தது. 2018 சட்ட ஆணையம், முழு தயாரிப்புக்குப் பிறகு, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறியது. 2019-இல் மோதி மீண்டும் வெற்றி பெற்றபோது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அவர் கூட்டினார். இதனை காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன” என்றார்.

“2022 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது. 2022 டிசம்பரில், சட்ட ஆணையம் அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோசித்து அவர்களின் கருத்தை கேட்டது. உண்மையில், அரசாங்கம் இதற்காக நீண்ட நாட்களாக தயாராகி வருகிறது” என்றும் அவர் கூறுகிறார்.

எந்தெந்த நாடுகளில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது?

உலகில் பொதுத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்படும் நாடுகள் மிகக் குறைவு.

ஐரோப்பாவில் பெல்ஜியம், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தலும் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்படுகிறது. தென்னாப்பிரிக்காவிலும் இது நடைமுறையில் உள்ளது. ஆனால் மக்கள்தொகை அடிப்படையில் இவை இந்தியாவை விட மிகச் சிறிய நாடுகள்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நோக்கில் இந்தியா முன்னேறினால், இந்த குழுவில் இணையும் உலகின் நான்காவது நாடாக நமது நாடு இருக்கும்.

இவை தவிர இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திய அனுபவத்தை கொண்டுள்ளது. அங்கு, 2015 இல் புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட போது, ஆகஸ்ட் 2017 இல் ஒரே நேரத்தில் பொது தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *