
பட மூலாதாரம், Getty Images
‘வாட் எ ஃபினிஷ்’ என்று வர்ணனையாளர் ஓங்கி எழுப்பிய குரலைக் கொண்டே ஆடுகளத்தில் நின்ற விராட் கோலி எத்தகைய ஆட்டத்தை ஆடியிருப்பார் என்பதைக் புரிந்துகொள்ள முடியும்.
கடைசி ஓவரை கச்சிதமாக வீசத் தொடங்கிய ஃபஹீம் அஷ்ரஃபின் கடைசி மூன்று பந்துகளும் விராட் கோலியின் மாயாஜால மட்டையில் சிக்கி எல்லைக் கோட்டுக்கு வெளியே பறந்தன.
அதிலும் கடைசி பந்தில் அவர் அடித்த சிக்சரை கண்டவர்கள், ஒரு முழு கிரிக்கெட் வீரருக்கு உரிய அனைத்து வகையான உடல் தகுதியுடன் அவர் இன்னும் இருப்பதாக சமூக ஊடகங்களில் புகழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டியில், இந்திய அணி 32 ஓவர்களில் 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 122 ரன்களை எடுத்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
விராட் கோலிக்கு இப்போது 35 வயது நிறைவடையப் போகிறது. இந்த வயதைக் கொண்டு கிரிக்கெட் வீரர்களின் சராசரி ஓய்வுக் காலத்தை அவர் நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று கூறலாம்.
ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான அவரது நேர்த்தியான ஆட்டம், அவர் இப்போதைக்கு கிரிக்கெட் களத்தில் இருந்து வெளியேறும் எண்ணத்திலேயே இல்லை என்பதைக் காட்டுகின்றன.
விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் சில ஆண்டுகள் மிகவும் கொடூரமான விமர்சனங்களுடன் கடந்து சென்றன. பல சர்ச்சைகளிலும் அவர் சிக்கினார்.
ஆனால் உலகக் கோப்பை டி20 தொடரில் இதே பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் அவர் மீண்டு வந்தார். இப்போது மீண்டும் தனது கிரிக்கெட் ஃபிட்னெஸை அவர் நிரூபித்திருக்கிறார் என்று விமர்சகர்கள் கணிக்கிறார்கள்.
அவர் 94 பந்துகளுக்கு 122 ரன்களை அடித்ததன் மூலம் மீண்டும் ஒருமுறை சச்சின் டெண்டுல்கரை நினைவுபடுத்தியிருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்த சச்சினின் சாதனையைத் தொடுவதற்கு கோலிக்கு இன்னும் இரண்டு சதங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
உலகக் கோப்பை போட்டிகள் நெருங்கி வரும் வேளையில் சச்சினை முந்துவதற்கு விராட் கோலிக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவே அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், ஒருநாள் போட்டிகளிலேயே அதிவேகமாக 13 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்ஸ்களில் 13 ஆயிரம் ரன்களை முடித்தார், விராட் இந்த சாதனையை 267 இன்னிங்ஸ்களில் எட்டினார்.
விராட் இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் தனது 1,000 ரன்களையும் பூர்த்தி செய்தார்.
விராட், 77 சர்வதேச சதங்களை மிகக் குறைந்த போட்டிகளில் எடுத்தவர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் 47 சதங்களை விரவாக எடுத்தவர் என்ற பெருமையும் விராட் கோலிக்கே சொந்தமாகி இருக்கிறது.
இந்தச் சாதனைகளைக் கொண்டு பார்க்கும்போது, விராட் கோலி உலகக் கோப்பைக்கு மிக வலிமையாகவே தயாராகி இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியின் சாதனைகள்
ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் தனது 50வது அரைசதத்தை அடித்தார். ஒருநாள் போட்டிகளில் அரைசதம் அடித்த 30வது பேட்ஸ்மேன் ஆனார்.
இந்தியாவின் டாப் ஆர்டரின் நான்கு பேட்ஸ்மேன்கள் அரை சதம் அல்லது அதற்கு மேல் அடித்தது இது நான்காவது முறை.
இதற்கு முன், கடைசியாக 2017இல் பர்மிங்காமில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்திருந்தனர்.
முதலில் ரோஹித் மற்றும் கில் இடையே ஒரு சதம் பார்ட்னர்ஷிப் இருந்தது, பின்னர் ராகுல் மற்றும் கோலி இடையே இருந்தது. இதன் மூலம் இந்திய அணி 47வது முறையாக ஒரே ஒருநாள் போட்டியில் 2 சத பார்ட்னர்ஷிப்களை குவித்து சாதனை படைத்தது.
கே.எல்.ராகுல் ஒருநாள் போட்டியில் தனது ஆறாவது சதத்தையும் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் சதத்தையும் அடித்தார்.
ரோஹித் சர்மா என்ன சொன்னார்?

பட மூலாதாரம், Getty Images
ஆட்டத்திற்குப் பிறகு பேசிய ரோஹித் சர்மா, டாஸ் போடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பே கே.எல்.ராகுல் ஆடும் 11இல் சேர்க்கப்பட்டதாகச் சொன்னார். காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ராகுல் விளையாடினார்.
கே.எல்.ராகுலை பாராட்டிய ரோஹித் சர்மா, “ராகுலுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடைசி நிமிடத்தில் அணியில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. காயத்தில் இருந்து மீள்வது எளிதல்ல.
டாஸ் போடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு அவரை விளையாடச் சொன்னோம். அந்த நிலைமையில் செயல்படுவது எளிதானது அல்ல,” என்றார்.
பும்ராவின் பந்துவீச்சு குறித்துப் பேசிய, ரோஹித், “காயத்தில் இருந்து திரும்பிய பிறகு அவர் பந்துவீசிய விதத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அவர் தன்னை நிரூபித்துள்ளார். அவர் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்தார். கடந்த மாதங்களில் அவர் அதற்காக கடினமாக உழைத்தார்,” என்றார்.
கோலி ராகுலிடம் என்ன சொன்னார்?

பட மூலாதாரம், Getty Images
ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கோலியுடன் இணைந்து கே.எல்.ராகுலும் சதம் அடித்தார்.
பின்னர் போட்டியின்போது கே.எல்.ராகுலிடம் என்ன சொன்னார் என்று கோலி கூறினார்.
“நாங்கள் இருவரும் பாரம்பரியமான கிரிக்கெட் விளையாடுகிறோம். நாங்கள் மிகவும் ஆடம்பரமான ஷாட்களை அடிப்பதில்லை. இருவரும் பார்ட்னர்ஷிப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை.
தொடர்ந்து பேட்டிங் செய்ய வேண்டும் என்று நான் கூறினேன். இது மறக்க முடியாத பார்ட்னர்ஷிப். ராகுல் திரும்பி வந்திருப்பது எங்களுக்கு நல்லது,” என்றார்.
போட்டியில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்களை குவித்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக் கிழமை (செப்டம்பெர் 10) தொடங்கிய போட்டி மழையால் தடைப்பட்ட நிலையில் நேற்று, திங்கள் (செப்டம்பர் 11) மாலை 4.30 மணியளவில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
இந்தப் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு 356 ரன்களை சேர்த்தனர்.
விராட் கோலி 122 ரன்களும், கே. எல். ராகுல் 111 ரன்களையும் குவித்து இருவரும் சேர்ந்து 233 ரன்களை எடுத்துள்ளனர். ஆசியக் கோப்பையில் ஒரு ஜோடி சேர்த்த அதிபட்ச ரன்கள் இதுவாகும்.
இது விராட் கோலியின் 47ஆவது சதம். கே எல் ராகுல் ஒரு சிறப்பான கம்பேக் கொடுத்து தனது ஏழாவது சதத்தை எட்டினார்.
முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் ஷுப்மேன் கில் ஆகிய இருவரும் முறையே 49 பந்துகளுக்கு 56 ரன்களும், 52 பந்துகளுக்கு 58 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் அணியில் ஷதாப் மற்றும் ஷஹீன் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. மழை விட்டதும் சிறிது நேரத்திற்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் விடாமல் மழை பெய்ததால், ஆட்டம் திங்கள்கிழமைக்கு (ரிசர்வ் டே) ஒத்தி வைக்கப்பட்டது. இன்று பிற்பகலும் கொழும்பில் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுமா என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இருப்பினும் ஒரு வழியாக திங்கள் மாலை 4:30 மணியளவில் போட்டி தொடங்கி நடைபெற்றது.
இதன்மூலம் 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. ஆனால் 8 விக்கெட்டுகள் வரை அந்த அணியால் 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி இரு வீரர்கள் களத்துக்குள் இறங்காததால், இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்