இந்தியா – கனடா பிரச்னை என்ன? விசா சேவை மீண்டும் எப்போது தொடங்கும்? அமைச்சர் புது விளக்கம்

இந்தியா - கனடா பிரச்னை என்ன? விசா சேவை மீண்டும் எப்போது தொடங்கும்? அமைச்சர் புது விளக்கம்

அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா – கனடா இடையேயான இராஜதந்திர உறவு உடன்பாட்டிற்கு வரமுடியாத நிலையில் உள்ளது.

இந்தியாவில் பணியமர்த்தப்பட்ட 41 தூதர்களை திரும்பப் பெற்றுள்ளதாக கனடா சமீபத்தில் தெரிவித்திருந்தது. இது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்தது.

தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தியாவின் ‘உள் விவகாரங்களில்’ கனேடிய தூதர்களின் ‘தொடர்ச்சியான தலையீடு’ காரணமாக, இந்தியா ராஜ தந்திர உறவுகளில் சமத்துவத்தை கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

இருப்பினும், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மிகவும் ‘கடினமான காலங்களை’ கடந்து வருவதாகவும், மிக விரைவில் கனேடியர்களுக்கான விசா சேவை மீண்டும் தொடங்கும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விசா சேவையை இந்தியா நிறுத்தியுள்ளதாக விமர்சித்திருந்தார்.

இது கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு பிரச்னைகளை உருவாக்கும் என்றும், பயணம் மற்றும் வணிகம் தொடர்பான விஷயங்களிலும் பிரச்னைகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

‘கனடாவிலும் இந்தியாவிலும் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாக்கியுள்ளது’ என்றும் அவர் கூறியிருந்தார்.

இது இராஜ தந்திரத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் வியன்னா ஒப்பந்தத்தின் மீறல் என்றும் அவர் கூறினார்.

அதே சமயம், கனடா அரசியலில் பிரதமர் ட்ரூடோவின் முக்கிய போட்டியாளரும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருமான பைரீ பொய்லிவ் (Pierre Poiliev) ட்ரூடோவை விமர்சித்துள்ளார். இந்தியாவுடன் தொழில்முறை உறவுகள் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜெய்சங்கர் என்ன சொன்னார்?

அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

பட மூலாதாரம், Getty Images

ஞாயிற்றுக்கிழமை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கௌடில்யா எகனாமிக் என்கிளேவில் இந்தியா-கனடா உறவுகள் குறித்து பேசினார்.

அப்போது அவர், “இந்த முழுப் பிரச்னையும் ஒரு நாட்டில் எத்தனை தூதர்கள் இருக்க வேண்டும், மற்றொரு நாட்டில் எத்தனை தூதர்கள் இருக்க வேண்டும் என்பதில் உள்ள சமத்துவம் பற்றியது.

வியன்னா மாநாடு சர்வதேச சட்டத்தின் கீழ் பொருத்தமான சீரான தன்மையை வழங்குகிறது. ஆனால், கனேடிய ஊழியர்களின் தொடர்ச்சியான குறுக்கீடு குறித்து நாங்கள் கவலைப்பட்டதால், எங்கள் விஷயத்தில் நாங்கள் சமநிலையை பராமரிக்க முயன்றோம்.

இதை நாங்கள் அதிகம் பகிரங்கப்படுத்தவில்லை. காலப் போக்கில், இன்னும் பல விஷயங்கள் வெளிவரும் என்று நான் நினைக்கிறேன். எங்களுக்கு என்ன வகையான அசௌகரியம் இருந்தது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்,”எனப் பேசினார்.

“உறவுகள் இப்போது மிகவும் கடினமான நேரத்தை கடந்து செல்கின்றன, ஆனால் கனேடிய அரசியலின் சில பகுதிகளிலும் அதன் கொள்கைகளிலும் எங்களுக்கு சிக்கல் உள்ளது என்று நான் கூற விரும்புகிறேன்.” என்றார்.

விசா சேவைகளை மீண்டும் வழங்குவது குறித்து பேசிய ஜெய்சங்கர், “அங்கு முன்னேற்றம் காணப்பட்டால், விசா தொடர்பான சிக்கல்களை களைய விரும்புகிறேன்.

அது போன்ற ஒன்று மிக விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன். சில வாரங்களுக்கு முன்னர் நாங்கள் கனடாவிற்கு விசா வழங்குவதை நிறுத்தினோம், ஏனெனில் எங்கள் இராஜ தந்திரிகள் விசா வழங்கும் வேலைக்குச் செல்வது பாதுகாப்பானது அல்ல. எனவே, அவர்களின் பாதுகாப்பு தான் நாங்கள் விசா வழங்குவதை நிறுத்துவதற்கான முதல் காரணம்.

சூழ்நிலைகள் நன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் வியன்னா மாநாட்டின் அடிப்படை அம்சம் இராஜ தந்திரிகளின் பாதுகாப்பு என்பது உங்களுக்குத் தெரியும்.” என்றார்.

ராஜ தந்திரிகளின் பாதுகாப்பில் முன்னேற்றம் ஏற்பட்டால், விசா சேவையை இந்தியா தொடங்கும் என்று ஜெய்சங்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.

விரிசலுக்கான காரணம் என்ன?

காலிஸ்தானி தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் 18 அன்று கனடாவில் படுகொலை செய்யப்பட்டார்.

செப்டம்பர் 8 அன்று, கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தக் கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்தியாவின் உயர்மட்ட இராஜ தந்திரியை கனடா வெளியேற்றியது, அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமாக தொடங்கியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கனடாவின் உயர்மட்ட தூதரை ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இந்தியாவும் உத்தரவிட்டது.

நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்தது. இருப்பினும், இந்தியா எந்த ‘குறிப்பிட்ட’ விசாரணைக்கும் ஒத்துழைக்க தயாராக உள்ளது.

ட்ரூடோவை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்

பியர் பொய்லிவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் ஏற்பட்டுள்ள விரிசலுக்காக ட்ரூடோவை பியர் கடுமையாக விமர்சித்தார்.

கனடாவில் நடத்தப்பட்ட சமீபத்திய கருத்துக் கணிப்புகளில், கன்சர்வேடிவ் கட்சி 2025 பொதுத் தேர்தலில் வெற்றியை நெருங்கிவிட்டதாகவும், அதன் தலைவர் பியர் பொய்லிவ் பிரதமராவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் ஏற்பட்டுள்ள விரிசலுக்காக ட்ரூடோவை பியர் கடுமையாக விமர்சித்தார். தனது அரசு அமைந்தால், இந்தியாவுடன் தொழில் ரீதியிலான உறவை ஏற்படுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.

நேபாள ஊடகமான நமஸ்தே வானொலி டொராண்டோவுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜஸ்டின் ட்ரூடோ எப்படி மதிப்பற்றவராக மாறினார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அவர்கள் உள்நாட்டில் கனேடியர்களை ஒருவரையொருவர் எதிர்க்கிறார்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள எங்கள் உறவுகளை சேதப்படுத்தியுள்ளனர்.

அவர் திறமையற்றவர் மற்றும் தொழில்ரீதியாக செயல்படும் திறனற்றவர். இதன் காரணமாக இந்தியா உட்பட உலகின் ஒவ்வொரு பெரிய சக்தியுடனும் நாங்கள் தற்போது பெரும் பிரச்னைகளில் சிக்கியுள்ளோம்.

இந்திய அரசாங்கத்துடன் நாம் தொழில்முறை உறவுகளை உருவாக்க வேண்டும். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, அவர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பரவாயில்லை, அனைவருக்கும் பொறுப்புக் கூற வேண்டும். அதனால், நாங்கள் தொழில் ரீதியாக உறவு கொள்ள வேண்டும், நான் நாட்டின் பிரதமரானவுடன் இதை மீண்டும் செயல்படுத்துவேன்,” என்றார் பியர் பொய்லிவ்.

இது தவிர ட்ரூடோவின் வெளியுறவுக் கொள்கையையும் பியர் விமர்சித்தார். சீனா தனது நாட்டில் தலையிடுவதாகவும், கனேடிய பிரதமர் அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சுற்றியே வருவதாகவும் அவர் கூறினார்.

“ட்ரூடோவின் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, எங்கள் நற்பெயர் ஆபத்தில் உள்ளது,” என்று அவர் கூறினார்.

“பெய்ஜிங் நம் நாட்டில் தலையிடுகிறது, கனடாவில் காவல் நிலையங்களைத் திறந்து நம் மக்களை மோசமாக நடத்துகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஜஸ்டின் ட்ரூடோ கேலிக்குரியவராக கருதப்படுகிறார். அமெரிக்க அதிபர் பைடன் எப்போதும் ட்ரூடோவை தவறாக நடத்துகிறார்,” என்றும் பியர் கூறினார்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் நுழைவு

கனடாவின் வெளியுறவு அமைச்சர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

அமெரிக்கா மற்றும் பிரிட்டன், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான பிரச்னையில் கருத்து தெரிவித்துள்ளன

கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலோனி ஜோலி, அதன் தூதர்களில் 41 பேர் இந்தியாவை விட்டு வெளியேறியதாக கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

21 இராஜ தந்திரிகளைத் தவிர மற்ற அனைவரின் தூதாண்மை பாதுகாப்பு உத்தரவாதம் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் ரத்து செய்யப்படும் என்று இந்தியா கூறியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

21 கனேடிய தூதர்கள் இன்னும் இந்தியாவில் உள்ளனர். ஆனால் மீதமுள்ளவர்கள் திரும்ப அழைக்கப்படுவதால் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இராஜ தந்திர பாதுகாப்பை திரும்பப் பெறுவது முன்னெப்போதும் இல்லாதது மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று கனடாவின் வெளியுறவு அமைச்சர் விவரித்திருந்தார்.

கனடாவின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, வியன்னா ஒப்பந்தத்தை இந்தியா எந்த வகையிலும் மீறவில்லை என்றும், இந்தியாவில் கனேடிய தூதர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறியது.

இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை, அமெரிக்கா மற்றும் பிரிட்டன், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான பிரச்னையில் கருத்து தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், இந்தியா மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து கனடா தீவிரம் காட்டி வருகிறது என்றார்.

​​வியன்னா உடன்படிக்கையை மேற்கோள் காட்டிய அமெரிக்க செய்தித் தொடர்பாளர் மேத்யூ, கனடாவின் இராஜதந்திர தூதரக உறுப்பினர்களுக்கு இந்தியா பாதுகாப்பை வழங்கும் என்று நம்புவதாகக் கூறியிருந்தார்.

அதேநேரத்தில், வியன்னா ஒப்பந்தத்தை இரு நாட்டினரும் பின்பற்றுவார்கள் என்று பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

வியன்னா மாநாடு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

இந்திய வெளியுறவு அமைச்சகம், சமத்துவத்தை அமல்படுத்த முற்படும் தூதரக உறவுகளுக்கான வியன்னா மாநாட்டின் பிரிவு 11.1 இன் கீழ் இந்த நடவடிக்கை உள்ளது என்று கூறுகிறது.

வியன்னா ஒப்பந்தம் என்றால் என்ன?

வியன்னா ஒப்பந்தம் அல்லது வியன்னா மாநாடு இப்போது இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே நடந்து வரும் இராஜதந்திர சிக்கலில் மேற்கோள் காட்டப்படுகிறது.

கனடாவில் இந்தியாவுக்கு 20 இராஜ தந்திரிகள் உள்ளனர், அதே எண்ணிக்கையிலான இராஜதந்திரிகள் இங்கும் இருக்க வேண்டும் என்று இந்தியா கூறுகிறது.

இந்திய வெளியுறவு அமைச்சகம், சமத்துவத்தை அமல்படுத்த முற்படும் தூதரக உறவுகளுக்கான வியன்னா மாநாட்டின் பிரிவு 11.1 இன் கீழ் இந்த நடவடிக்கை உள்ளது என்று கூறுகிறது.

1961 இராஜ தந்திர உறவுகளுக்கான வியன்னா மாநாடு என்பது ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தமாகும். இது நாடுகள் ஒருவருக்கொருவர் தூதரக பிரதிநிதிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான சில பொதுவான கொள்கைகள் மற்றும் விதிகளை நிறுவுகிறது. இதன் கீழ், இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்தவும், உரையாடல் வழியை ஏற்படுத்தவும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கைகளில் மிக முக்கியமான உதாரணம் இராஜ தந்திரிகளின் பாதுகாப்பு. இதன் கீழ், தூதரக அதிகாரி எந்த ஆபத்தும், அச்சம் அல்லது மிரட்டல் இன்றி பணிபுரியும் வகையில், அவர் பணியமர்த்தப்படும் நாட்டின் சட்டங்கள் மற்றும் வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஏப்ரல் 1964 இல் பணிகள் தொடங்கப்பட்டு இன்று 192 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 1965-ம் ஆண்டில் இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

வியன்னா ஒப்பந்தம் இராஜ தந்திரிகளுக்கு மட்டுமல்ல, மற்றொரு நாட்டின் இராஜ தந்திர பணிகளில் பணியமர்த்தப்பட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் ராணுவத் துறையின் பொது ஊழியர்களுக்கும் பொருந்தும்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *