இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து சந்திராயன் 3 என்ற விண்கலத்தை நிலவை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தினர். இந்த சந்திராயன் 3 விண்கலமானது புவியின் சுற்றுவட்டப்பாதை மற்றும் நிலவின் சுற்றுவட்டப்பாதையை கடந்து வெற்றிகரமாக கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டு தற்பொழுதுவரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நிலவை ஆராய சந்திராயன் 3 விண்கலம் அனுப்பட்டதை போல கடந்த மாதம் 2 ஆம் தேதி சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி.சி 57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை 125 நாட்கள் பயணம் செய்து லாக்ராஞ்சியன் புள்ளி 1 என்ற இடத்தை சென்றடையும் எனவும் இந்த புள்ளியில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது.
Also Read : ரூ.30000 இழப்பீடு கேட்டு கோரிக்கை! விவசாயிகளுக்கு செவி சாய்க்குமா அரசு?
அதன்படி, ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெற்றிகரமாக விலகி லாக்ராஞ்சியன் புள்ளி 1 யை நோக்கி சென்று கொண்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில், “ஆதித்யா விண்கலத்தை ஹாலோ சுற்றுப்பாதை நோக்கி செலுத்துவதற்கான பணிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. ஹாலோ பாதைக்கு விண்கலத்தை மாற்றம் செய்வதற்கான பணிகள் கடந்த 6 ஆம் தேதி 16 விநாடிகள் வெற்றிகரமாக நடந்தன. ஆதித்யா எல் 1 விண்கலத்தின் செயல்பாடு நன்றாகவும் சரியான பாதையிலும் சென்று கொண்டிருக்கிறது. சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல் 1 விண்கலம் திட்டமிட்டப்படி பயணிக்கிறது. ஆதித்யா-எல்1 தொடர்ந்து முன்னோக்கி நகர்வதால், காந்த புலமையை அளவிடும் கருவி சில நாட்களுக்குள் மீண்டும் இயக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in