குஜராத்தில் மதுவிலக்கு தளர்வு – எங்கே? யார்யாரெல்லாம் மது அருந்தலாம்?

குஜராத்தில் மதுவிலக்கு தளர்வு - எங்கே? யார்யாரெல்லாம் மது அருந்தலாம்?

குஜராத்தில் மதுவிலக்கு தளர்வு

பட மூலாதாரம், Getty Images

சமீபத்தில் குஜராத் மாநில அரசின் போதைப்பொருள் மற்றும் கலால் துறை பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் காந்திநகர் கிஃப்ட் சிட்டியில் (Gandhinagar Gift City) பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ‘அதிகாரப்பூர்வ விருந்தினர்களுக்கு’ மதுவிலக்கில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கிஃப்ட் சிட்டியில் பணிபுரியும் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு மதுபானம் பயன்படுத்தும் அனுமதிகள் வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் மதுபானங்கள் விற்கும் ஹோட்டல்கள், உணவகங்கள், கிளப்புகள் போன்ற இடங்களில் மதுபானங்களை எடுத்துக் கொள்ள முடியும்.

குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் டெக் சிட்டியை (கிஃப்ட் சிட்டி) கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கு தளர்வு – எங்கே? யார்யார் மது அருந்தலாம்?

கிஃப்ட் சிட்டியில் உள்ள சர்வதேச மற்றும் தேசிய அளவிலான நிறுவனங்களுக்கு உலகளாவிய வணிக சூழல் அமைப்பை வழங்கும் நோக்கில், கிஃப்ட் சிட்டி பகுதி முழுவதற்கும் ‘ஒயின் மற்றும் டைன்’ வசதிகளை வழங்க குஜராத் அரசு ஏற்கனவே உள்ள தடை விதிகளில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக பத்திரிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, மது மற்றும் உணவு வசதிகளை வழங்கும் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கிளப்களில் மது அருந்தலாம். அதை தாண்டி ‘அங்கீகரிக்கப்பட்ட விருந்தினர்களை’ கொண்டுள்ள நிறுவனங்கள் தற்காலிக அனுமதியின் மூலம் அவரவர் நிறுவன இடங்களில் அவர்கள் மது பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கலாம்.

இதற்கு ஒரே நிபந்தனை என்னவென்றால், வருகை தந்துள்ள விருந்தினர் மது அருந்தும் போது நிறுவனத்தின் நிரந்தர ஊழியர் ஒருவரும் அவருடன் இருப்பது அவசியம்.

பத்திரிகை அறிவிப்பின்படி, கிஃப்ட் சிட்டி பகுதிக்கு இனி புதிதாக வரும் ஹோட்டல்கள், உணவகங்கள் அல்லது கிளப்புகள் மது மற்றும் உணவு வசதிகளை வழங்க விருப்பப்பட்டால் FL3 உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

அதே சமயம், ஒயின் மற்றும் டைன் வசதியை வழங்கும் நிறுவனங்கள் மதுபானங்களை விற்க முடியாது என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

விதிகளில் புது தளர்வு செய்யப்பட்டாலும், கிஃப்ட் சிட்டி பகுதியில் அமைந்துள்ள FL3 உரிமம் பெற்றுள்ள உணவு நிறுவனங்களின் செயல்பாடுகளை போதைப்பொருள் மற்றும் கலால் துறை தொடர்ந்து கண்காணிக்கும். இந்த கண்காணிப்பில் மது இறக்குமதி, சேமிப்பு மற்றும் எவ்வளவு மதுபானம் வழங்கப்படுகிறது போன்ற அனைத்து விஷயங்களும் மேற்பார்வை செய்யப்படும்.

மகாத்மா காந்தியின் மாநிலம் குஜராத் கிஃப்ட் சிட்டியில் மதுவிலக்கு ரத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

குஜராத்தில் உள்ள பல குடும்பங்களும் மதுவால் அழிந்துள்ளன

“காந்தியின் குஜராத்தில் மதுவுக்கு அனுமதியா?” – எதிர்க்கட்சிகள்

கிஃப்ட் சிட்டியில் மதுவை அனுமதிப்பதற்கான அரசின் முடிவை கண்டித்துள்ள குஜராத் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனிஷ் தோஷி இது குறித்து பேசும்போது, “குஜராத்தில் உள்ள பல குடும்பங்களும் மதுவால் அழிந்துள்ளன. இது குறித்த அனைத்து உண்மைகளும் அரசுக்கும் தெரியும். இந்த விஷயம் குறித்து மிக நீண்ட நாட்களாகவே யோசித்து வருகிறது அரசு. அதன் முடிவின்படி மது வந்தால் மட்டுமே இங்கு தொழில் வளர்ச்சி ஏற்படும் என்று அது நினைக்கிறது. வளர்ச்சி என்ற பெயரால் லட்சக்கணக்கான குடும்பங்களை மதுவுக்கு அடிமையாக்க பார்க்கிறது இந்த அரசு” என்று கூறியுள்ளார்.

“இங்கு கேள்வியே அரசாங்கத்தின் கொள்கை மற்றும் விதிகள் குறித்துதான். வளர்ச்சி என்ற பெயரில் மதுவிலக்கை கொஞ்சம் கொஞ்சமாக நீக்க முயற்சிக்கிறது இந்த அரசு. அரசுக்கு கொஞ்சமாவது வெட்கம் இருந்தால், என்சிஆர்பி தரவுகளைப் பார்க்கட்டும், குஜராத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சூழலில், இந்த அரசு குஜராத் மக்கள் மீது கொஞ்சமாவது கருணை கொண்டிருந்தால், வளர்ச்சி என்ற பெயரில் நடத்தப்படும் இதுபோன்ற விளையாட்டுகளை நிறுத்த வேண்டும். அப்போது தான் குஜராத்தின் அடுத்த தலைமுறையினர் போதைக்கு அடிமையாவதிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.”

அரசின் இந்த முடிவுக்கு குஜராத் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் இசுதான் கத்வியும் எதிர்வினை ஆற்றியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “காந்தியின் குஜராத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு காந்திஜியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த குஜராத் மக்களையும் அவமதித்துள்ளது. குஜராத்தில் மகாத்மா காந்தியே மதுவிலக்கை பரிந்துரைத்தார், அன்றிலிருந்து குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது, ஆனால் பாஜகவோ படிப்படியாக மதுவிலக்கை தளர்த்த திட்டமிட்டுள்ளது. .”

“முதல்வர் பங்களாவில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கிஃப்ட் சிட்டியில் மது அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஊழியர்கள், பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் இங்கு சென்று குடிக்கலாம், அங்கிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள அகமதாபாத்திற்கு மீண்டும் திரும்பி வரும்போது குடித்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்படலாம்.” என்று அவர் கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியின் மாநிலம் குஜராத் கிஃப்ட் சிட்டியில் மதுவிலக்கு ரத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ரூ. 215 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

குஜராத்தில் கைப்பற்றப்பட்டுள்ள மதுபானம் எவ்வளவு?

குஜராத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள மதுபானம் குறித்து பந்திஷ் சோபர்கர் என்ற வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமை(RTI) சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு, குஜராத்தில் 2011-12 முதல் 2017-18 வரை உள்ள காலகட்டத்தில் 3.85 லட்சம் லிட்டர் மதுபானம் விற்பனை செய்யப் பட்டுள்ளதாக குஜராத் மாநில போதைப்பொருள் மற்றும் கலால் துறை பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில், 3.65 லட்சம் லிட்டர் மதுபானம் உரிமம் பெற்றவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் வெறும் 52,000 குஜராத்திகள் மட்டுமே உரிமம் பெற்றவர்கள். இதர 3.13 லட்சம் உரிமங்களை பெற்றவர்கள் குஜராத்துக்கு வெளியே இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் தொழில்ரீதியான பிரதிநிதிகள் ஆவர்.

உரிமம் பெற்ற கடைகளின் மது விற்பனையில் அகமதாபாத், வதோதரா மற்றும் கட்ச் ஆகியவற்றை தொடர்ந்து சூரத் முன்னணியில் உள்ளது.

‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ அறிக்கையின்படி ஏப்ரல் 2019 முதல் டிசம்பர் 2020 வரையில் ரூ. 215 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 15 கோடியே 58 லட்சம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபாட்டில்களும், 34 லட்சத்து 72 ஆயிரம் லிட்டர் நாட்டு மதுபானங்களும், 41 லட்சத்து 23 ஆயிரம் பீர் பாட்டில்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இரண்டரை மாத பொதுமுடக்கம் மற்றும் கொரோனா காலமும் உள்ளடக்கிய இந்த காலகட்டத்தில், கோவிட் நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் காவல்துறை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருந்தன. இந்த சமயத்தில் கிட்டத்தட்ட மதுவிலக்கு தொடர்பான வழக்குகளில் 4500 பேர் மீது வழக்கு போடப்பட்டதாகவும் அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

குஜராத்தில் மதுவுக்கு அனுமதியா?

பட மூலாதாரம், Getty Images

காந்தியின் குஜராத்தில் மதுவிலக்கு

1960 ஆம் ஆண்டில் பம்பாய் மாநிலம் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட போது, குஜராத்தி பேசும் மக்களுக்காக குஜராத் உருவாக்கப்பட்டது.

புதிய மாநிலத்தை உருவாக்கும் இயக்கத்தில் ரவி ஷங்கர் மகாராஜ், இந்துலால் யாக்னிக் உள்ளிட்ட பல காந்தியவாதிகள் முக்கிய பங்கு வகித்தனர்.

குஜராத் தோன்றியதிலிருந்தே, ‘காந்தியின் குஜராத்தில்’ மதுவிலக்கு கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அமலில் இருந்து வருகிறது.

இருப்பினும், முந்தைய காலத்தில் குஜராத்தில் சில சமூகங்கள் தங்கள் வழக்கமான உணவுப்பழக்கத்தின் ஒரு பகுதியாக மதுவை காய்ச்சுதல் , அருந்துதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இது குறித்து பிபிசி குஜராத்தியிடம் பேசியுள்ள சமூகவியலாளர் வித்யுத் ஜோஷி “ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே குஜராத்தில் மதுவிலக்குக் கொள்கை அமலில் உள்ளது. அதற்கு முன்பு தெற்கு குஜராத் மக்கள் கள் மற்றும் அரிசியிலிருந்து மதுபானத்தை உற்பத்தி செய்து வந்தனர். பழங்குடியினர் பகுதிகளில் மஹுடோவில் இருந்து மது தயாரிக்கப்பட்டது.” என்று கூறுகிறார்.

“ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்தபோது, ​​தாங்கள் வருமானம் ஈட்டுவதற்காக மதுபான உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க முயற்சி செய்தனர். அரசு மதுபானக் கடைகளில் மட்டுமே மதுபானம் கிடைக்கும் முறையை உருவாக்க அவர்கள் முயன்றனர்.” என்று அவர் தெரிவித்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *