
பட மூலாதாரம், Facebook
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துகிறது.
பிகார் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வந்த பிறகு, நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால், முதலில் மாநில அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பல அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் கோரிவருகின்றன.
மாநில அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த தி.மு.க. தயங்குகிறதா?
கடந்த ஏப்ரல் மாதத்தில் அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் இணைய வழி மாநாட்டில், மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும்போது சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என பல அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினார்கள். ஆனால், அந்தத் தருணத்தில் இதுவொரு வழக்கமான முழக்கமாக, கோரிக்கையாக பெரிய விவாதங்கள் இன்றிக் கடந்து செல்லப்பட்டது.
ஆனால் பிகார் மாநிலம், தான் மேற்கொண்ட சாதிவாரிக் கணக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட்ட பிறகு இந்தக் கோரிக்கை நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, ஒவ்வொரு அரசியல் கட்சியும் இந்த விவகாரம் குறித்த தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கிறது.
பிகார் மாநில அரசு தாங்கள் மேற்கொண்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வெளியிட்டது.
அதன்படி அந்த மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 63 சதவீதம் இருப்பதாகவும் அரசு கூறியிருந்தது. இந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு திருத்தப்படும் என்றும் அம்மாநில அரசின் கூட்டணிக் கட்சியான ஆர்.ஜே.டி. தெரிவித்தது.
இந்த விவகாரம் பிகார் மாநில அரசில் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென மத்திய அரசுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார்.

நிதிஷ் குமார் தலைமையிலான பிகார் அரசு, மாநில அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என இந்தியா கூட்டணியில் உள்ள பல கட்சிகள் கோரிக்கை வைக்கின்றன.
மத்திய அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தும்போது சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறமிருக்க, மாநில மட்டத்தில் இதுபோன்ற கணக்கெடுப்பை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு மாநிலங்களிலும் வலுத்து வருகிறது.
இதன்படி நவம்பர் 15ஆம் தேதி முதல் தங்களது மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தப் போவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்திருக்கிறது. இது போன்ற கணக்கெடுப்பை தெலுங்கானாவிலும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அந்த மாநிலத்திலும் வலுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட காலமாகக் கோரி வருகிறது. கடந்த சில நாட்களில் மாநில அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் இதற்கு முன்பாக மாநில அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும் முயற்சிகளை தி.மு.க. அரசு தடுத்ததாகவும் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார்.
சமீபத்தில் மாநில அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரி நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “மாநில அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள பி.வி. வேங்கடகிருஷ்ணன் ஆணையம் 1988 டிசம்பர் 12ஆம் தேதி அமைக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளே சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதிதாக ஆட்சியமைத்த தி.மு.க., 1989 ஜனவரியில் அந்த ஆணையத்தைக் கலைத்தது.
கடந்த 2010 அக்டோபரில் 45 சமுதாயத் தலைவர்கள் சேர்ந்து அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதியை சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினோம்.
அப்போது தானும் அதே எண்ணத்தில் இருப்பதாகத் தெரிவித்த மு. கருணாநிதி, அப்போதைய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் எம்.எஸ். ஜெனார்த்தனத்தை வைத்து இது குறித்து பரிசீலிக்கச் சொல்வதாகச் சொன்னார். அதற்குப் பிறகு பல மாதங்கள் ஆட்சியிலிருந்த அவர் எதுவுமே செய்யவில்லை,” என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், RAMADOSS
தமிழ்நாடு அரசு மாநில அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பை ஏன் நடத்த மறுக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்புகிறார்.
மேலும், “அ.தி.மு.க அரசு 2020ஆம் ஆண்டு டிசம்பரில், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. குலசேகரன் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. அதற்குப் பிறகு வந்த தி.மு.க. அரசு அந்த ஆணையத்தின் காலக்கெடுவை நீட்டிக்காததால், ஆணையம் கலைக்கப்பட்டது. இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் தி.மு.கவே சாதிவாரிக் கணக்கெடுப்பை தடுத்தது,” எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசியல் செய்வதாக குற்றம் சாட்டுகிறார் பா.ம.கவின் வழக்கறிஞர் பாலு.
“சாதிவாரிக் கணக்கெடுப்பை தேசிய அளவில் எடுக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துவோம். ஆனால், அதற்கு முன்பாக மாநில மட்டத்தில் எடுப்பதில் என்ன பிரச்னை. இப்போது கிட்டத்தட்ட எல்லாப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு இருக்கிறது. ஆகவே, எந்த சாதியினர் எவ்வளவு இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பு தேவை.
கர்நாடக மாநிலத்தில் 2018லேயே சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்தார்கள். ஆனால், முடிவுகள் வெளியிடப்படவில்லை. பிகாரில் வெளியிட்டுவிட்டார்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டுமென தி.மு.க. கூறி வருகிறது. அதற்கு 1948ஆம் ஆண்டின் சென்சஸ் சட்டத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆனால், பிகார் சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க முடிவு செய்தவுடன் அதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம் மாநில அரசு கணக்கெடுப்பு நடத்த உரிமை உள்ளது எனத் தீர்ப்பளித்தது.
சாதி அடிப்படையில் பின்தங்கியவர்களைக் கண்டறிந்து, அவர்களை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசமைப்பு சட்டம் மாநில அரசுகளுக்கும் அனுமதி அளிக்கிறது. ஒருவரது பின்தங்கிய நிலையைக் கணக்கீடு செய்ய சாதிதான் அடிப்படை ஆதாரமாக இருக்கிறது. ஆகவே மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் தவறில்லை என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டது உயர் நீதிமன்றம்,” என்று கூறினார்.

மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உள்ளது என பாமக வழக்கறிஞர் பாலு தெரிவிக்கிறார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற போது இடைக்காலத் தடை விதிக்கவே உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. புள்ளிவிவரங்களை வெளியிட தடை விதிக்க கோரினார்கள். அதற்கும் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதைச் செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தி.மு.க. திரும்பத் திரும்ப 1948ஆம் ஆண்டின் சட்டத்தை மேற்கோள் காட்டுகிறது. ஆனால், 2008ஆம் ஆண்டின் புள்ளிவிவர சேகரிப்பு சட்டம் ஒரு மாநில அரசு தனக்குத் தேவையான எந்தத் தரவையும் சேகரிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது.
இதன் அடிப்படையில் சாதி ரீதியான கணக்கெடுப்பையும் ஒவ்வொரு சாதியிலும் கல்வி ரீதியான புள்ளிவிவரங்கள், அவர்களது பணி நிலைமை ஆகியவற்றையும் சேகரிக்க வேண்டும். 2008ஆம் ஆண்டின் சட்டப்படி, மாநில அரசு இதுபோன்ற பணியைத் துவங்கினால், அந்தக் காலகட்டத்தில் மத்திய அரசு அதே போன்ற பணியை நடத்தக்கூடாது என்ற அளவுக்கு அதிகாரம் அளிக்கிறது. ஆகவே நிச்சயமாக மாநில அரசு கணக்கெடுப்பை நடத்தலாம்,” என்கிறார் பாலு.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் சாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்தாவிட்டால், 69 சதவீத இட ஒதுக்கீடே பறிபோகலாம் என்கிறார் அவர்.
“இட ஒதுக்கீடு தொடர்பாக 2010இல் வெளியான ஒரு தீர்ப்பில், தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டும் என்றால் விவரங்களைச் சேகரித்து, உரிய இட ஒதுக்கீடு தரலாம் என்று கூறப்பட்டது. இதற்கு ஒரு வருட கால அவகாசம் அளிக்கப்பட்டது.
ஆனால், புதிதாக சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தாமல் 1931ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள், சட்டநாதன் ஆணைய அறிக்கை, அம்பாசங்கர் ஆணையத்தின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் புள்ளிவிவரங்களை அளித்து, தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டைப் பெற வேண்டியவர்கள் 69 சதவீதத்திற்கு மேல் இருப்பதாக தமிழ்நாடு அரசு கூறியது.
இப்போது வன்னியர்களுக்கு 10.5 உள் ஒதுக்கீடு தருவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், பழைய புள்ளி விவரங்களை ஏற்க முடியாது என்றது நீதிமன்றம். ஆகவே, பழைய புள்ளி விவரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக யாராவது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால், அது ஏற்கப்படும் அபாயம் உண்டு. ஆகவே, உடனடியாக சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்,” என்கிறார் பாலு.

பட மூலாதாரம், Getty Images
பிகார் அரசு தாம் மேற்கொண்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை இந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியிட்டது.
ஆனால், மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டிய வேலை மத்திய அரசுடையது; மாநில அரசு அதைச் செய்தால், அதற்கு எந்த சட்ட அங்கீகாரமும் கிடையாது என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன்.
“மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்பது என்பது மத்திய அரசின் பணி. அதைத் தாண்டி மாநில அரசு செய்ய வேண்டுமென்றால், அதற்கு மத்திய அரசின் அனுமதி வேண்டும். அப்படியில்லை என்றால், நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டும். இது எதுவும் கிடைக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை.
பிகாரை பொறுத்தவரை தங்கள் மாநிலத்தில் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் எத்தனை எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற விவரத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இதை வைத்து எதுவும் செய்ய முடியாது. இதன் அடிப்படையில் எந்த அரசாணையையும் மாநில அரசு பிறப்பிக்க முடியாது. ஆகவே, இம்மாதிரி ஒரு கணக்கெடுப்பை நடத்துவதில் என்ன பயன் இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்புகிறார் கான்ஸ்டைன்டீன்.
கடந்த 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட சாதிரீதியான விவரங்களையாவது இப்போதுள்ள மத்திய அரசு வெளியிட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தலாம் என்கிறார் கான்ஸ்டைன்டீன்.
ஆனால், “2008ஆம் ஆண்டின் புள்ளிவிவரச் சட்டப்படி சாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்தி விவரங்களை வெளியிடுவதில் என்ன பிரச்னை? ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் இம்மாதிரி கணக்கெடுப்பை நடத்தி வெளியிடுவதில் என்ன ஆகப் போகிறது? அதற்கு சட்ட அங்கீகாரம் உண்டா?
அதன் அடிப்படையில் எதையும் செய்ய முடியாது என்ற நிலையில், அதற்காக அவ்வளவு செலவழித்து ஒரு நடவடிக்கையை தமிழ்நாடு அரசு ஏன் மேற்கொள்ள வேண்டும்? இது மத்திய அரசின் வேலை. அதைச் செய்ய அவர்களை வலியுறுத்த வேண்டும்,” என்கிறார் அவர்.
மாநில அரசு நடத்தி வெளியிடும் சாதிக் கணக்கெடுப்பு விவரங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லாவிட்டாலும், அதை மேற்கொண்டு புள்ளிவிவரங்களை வெளியிடலாமே என்ற கேள்விக்கு, “எந்தக் குறிக்கோளுக்காக ஒரு வேலை செய்யப்படுகிறதோ, அந்த நோக்கம் நிறைவேறாது என்றால், அதைச் செய்வதில் என்ன பயன்?” என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

பட மூலாதாரம், Facebook
மாநில அரசின் கணக்கெடுப்புக்கு சட்ட அங்கீகாரம் இல்லாதபோது, மாநில அரசு ஏன் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டைன்டீன் கேள்வி எழுப்புகிறார்.
ஆனால், இந்த விவகாரத்தில் தி.மு.க. முழுக்க முழுக்க அரசியல் செய்கிறது. அதற்கு சாதிரீதியான கணக்கெடுப்பில் எந்த ஆர்வமும் இல்லை என்கிறது பா.ம.க.
இதற்கு முன்பாக பிற்படுத்தப்பட்டோர் நிலை குறித்து ஆராய்வதற்காக, இரண்டு முறை ஆணையங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 1969ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த ஆணையம் ஓராண்டு காலத்தில் தனது அறிக்கையை அளித்தது. பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கைக்கு, இந்த ஆணையம் 1931ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களையே பயன்படுத்திக்கொண்டது.
இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜே.ஏ. அம்பாசங்கர் தலைமையில் 1982 டிசம்பரில் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 1985இல் தனது பரிந்துரைகளை அளித்தது. இந்த ஆணையம், மாதிரி கணக்கீடு முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி பரிந்துரைகளை அளித்தது.
இதற்குப் பிறகு, 1993இல் வழங்கப்பட்ட ஒரு உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நிரந்தரமாக அமைக்கப்பட்டு, உறுப்பினர்கள், தலைவர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்