
பட மூலாதாரம், Alamy
பிரிட்டனில் 1930-களில் மிகவும் புகழ் வாய்ந்த, பார்வையாளர்களை கவருகின்ற மாயாஜால கலைஞராக வலம் வந்தவர் ஜேஸ்பர் மேக்லைன். 1931-ஆம் ஆண்டில் லண்டன் பலேடியம் அரங்கில் நடைபெற்ற மேஜிக் நிகழ்ச்சிக்காக, ’இங்கிலாந்தின் மிகச்சிறந்த மாயாஜால கலைஞர்” என அவர் குறித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
மெல்லிய பென்சில் மீசை மற்றும் மற்றவர்களை ஊடுருவக் கூடிய கண்களுடன் ஆஸ்திரேலிய நடிகர் எரல் ஃப்ளின்-ஐ விட கம்பீரமாக இருப்பார் மேக்லைன். 1937-ஆம் ஆண்டில் டஜன்கணக்கான பிளேடுகளை விழுங்குவது போன்று அவர் திரையில் தோன்றியிருக்கிறார். ”இவை (பிளேடுகள்) புதிதாக இருக்கும்போது நன்றாகவே இருக்கின்றன” என, நயமாக அவர் கேமரா முன்பு கூறினார்.
1949-ஆம் ஆண்டில் ’மேஜிக்: டாப் சீக்ரெட்’ எனும் தன்னுடைய நினைவுக்குறிப்பில், மிகவும் வித்தியாசமான அரங்கில், அதாவது இரண்டாம் உலகப்போரின் போது கெய்ரோவுக்கு அருகில் உள்ள ஒரு பாலைவனத்தில், ”ஒட்ட வெட்டிய தலைமுடியை கொண்டிருந்த அச்சு நாடுகளின் (இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளை எதிர்த்த நாடுகள் ஆகும். ஜெர்மனி, இத்தாலி, மற்றும் ஜப்பான் ஆகியவை முதன்மையான அச்சு நாடுகள் ஆகும்.) படைத்தளபதிகளை தவறாக வழிநடத்தும் வகையில் பல சூழ்ச்சிகள் செய்தும் அவர்களை திகைக்கும் விதத்திலான கருவிகளையும் கொண்டிருந்த பெரும் குழுவை வழிநடத்தியதாக” விவரித்துள்ளார்.

பட மூலாதாரம், IWM
“ஆபரேஷன் பெர்ட்ராம்” என அழைக்கப்படும் 1942-ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் அல்-அலமைன் சண்டைக்கான (இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை) ஏமாற்றுத் திட்டத்தில் ஜேஸ்பர் மேக்லைனும் அவருடைய குழுவினரும் எதிரணியினரை திசை திருப்ப கையாண்ட ஏமாற்று வித்தைகள் இன்றுவரை ராணுவத்தினரால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. மேலும், பெனடிக்ட் கியூம்பர்பேட்ச் நடிக்கும் ஜேஸ்பர் மேக்லைனின் கதையை கூறும் திரைப்படமும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
முதலாம் உலகப்போரிலிருந்து இன்று வரை நெருக்கடி சூழல்களில் கையாளப்பட்ட ஏமாற்று வித்தைகள், திசைதிருப்புவதற்கான உத்திகள் குறித்து, லண்டன் இம்பீரியல் போர் அருங்காட்சியகத்தில் நடத்தப்பட்டு வரும் ’ஸ்பைஸ், லைஸ் அண்ட் டிசப்ஷன்’ (Spies, lies and deception) எனும் கண்காட்சியில் மேக்லைன் கையாண்ட முறைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், IWM
“போர்க்களம் மட்டுமே முக்கியம் அல்ல”
இந்த கண்காட்சியில் சாதனங்கள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள், திரைப்படச் சுருள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சுக்கு அனுப்பப்பட்ட முதல் பெண் வானொலி இயக்குநர் நூர் இனாயத் கான் உட்பட அதிகம் அறியப்படாத மற்றும் பலராலும் அறியப்பட்ட கதைகளையும் வெளிக்கொண்டு வருகிறது இந்த கண்காட்சி.
“போர் என்பது போர்க்களங்களிலும் அது திட்டமிடப்படும் அறைகளில் மட்டுமே சண்டையிட்டு வெற்றிபெறுவது அல்ல, மாறாக திரைமறைவிலும் நிறைய நடக்கின்றன என்பதை காட்டுவதே இக்கண்காட்சியின் நோக்கம்,” என அருங்காட்சியகத்தின் இணை-காப்பாளர் மிஷெல் கிர்பி தெரிவித்தார்.
மேக்லைன் தன்னுடைய நினைவுக்குறிப்பை பிரசுரித்துள்ளதால், அவர் தன்னுடைய தனிப்பட்ட பங்களிப்பை மிகைப்படுத்திக் காட்டியுள்ளதாக தொடர்ந்து விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதனால், மேக்லைனின் போர் வித்தைகளை நிரூபிப்பது மிகவும் கடினமாகவே இருக்கிறது.
“மற்றவர்களை கவரும் விதத்தில் இருந்தாலும், இத்தகைய சிக்கலான விஷயங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டும்,” என்று கூறும் கிர்பி, “ராணுவத்தில் ஏமாற்று வித்தைகளுக்குப் பின்னால் உள்ளவர்களின் குறிப்பிட்ட ஈடுபாட்டின் உண்மையை உறுதிப்படுத்துவது பெரும்பாலும் கடினமானது,” என கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
மேக்லைன் தன் தொழிலை மாற்றியது எப்படி?
போர் அறிவிக்கப்பட்ட போது மேக்லைனுக்கு வயது 37. காற்றில் ஒருவரை மிதக்கச் செய்யும் வித்தையை கண்டுபிடித்தவரும் போலி ஆன்மிகவாதிகளை வெளிக்கொண்டு வந்தவருமான நீவல் மேக்லைனின் வழித்தோன்றலான ஜேஸ்பர் மேக்லைன், பிரிட்டிஷ் ராணுவத்தின் பொறியியல் பிரிவில் சேருவதற்கு தாமாகவே முன்வந்தார்.
பிரபலமான மாயாஜால நுட்பங்கள் உருமறைப்புக்குப் பயன்படுத்தப்படலாம் என்பதை தேம்ஸ் நதியில் ஜெர்மன் போர்க்கப்பலை ஒரு அட்டை மாதிரி மற்றும் கண்ணாடியை கொண்டு கற்பனையாக செய்து மாயாஜாலங்களில் சந்தேகங்கள் கொண்ட ராணுவ அதிகாரிகளுக்கு நிரூபித்தார்.
அதன்பிறகு, பிரிட்டன் ராணுவ அதிகாரி டட்லி க்ளர்க், மேக்லைனை அணுகினார். எதிர் அணியினரை ஏமாற்றுவதை முதன்மை திட்டமாக கொண்ட உளவுத்துறையின் சிறப்புப் பிரிவின் ஒரு பகுதியாக ‘எம்19’-இல் சேருவதை மேக்லைன் பரிசீலித்தாரா?
அந்த பிரிவின் நோக்கம், “எதிரிகளை அழிப்பதைவிட பாதுகாப்பதுதான்” என்று பிரசுரிக்கப்படாத நினைவுக்குறிப்பில் டட்லி க்ளர்க் குறிப்பிட்டுள்ளார். எதிரிகளை வெறுமனே ஏமாற்றுவது மட்டும் அல்ல இதன் நோக்கம். மாறாக, நேச நாட்டுத் திட்டங்களுக்கு உதவுவதற்காக அவர்களை ஏமாற்றுவதுதான் இதன் வெற்றியில் இன்றியமையாதது.
“உருமறைப்பு சோதனை முயற்சி” எனும் பிரிவின் தலைவராக க்ளர்க் தன்னை நியமித்ததாக மேக்லைன் குறிப்பிட்டுள்ளார். இந்த பிரிவுக்கு “தி மேஜிக் கேங்” என்ற பட்டப்பெயரும் உண்டு. இந்த குழுவில் எலெக்ட்ரீஷியன், வேதியியல் நிபுணர், மேடை காட்சிகளை உருவாக்குபவர், ஓவியர், தச்சர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

பட மூலாதாரம், ROLI BOOKS
வின்ஸ்டன் சர்ச்சில்
நகரத்தையே மறைத்தது எப்படி?
அவர்கள் ஜெர்மானிய படையினரிடமிருந்து அலெக்ஸாண்ட்ரியா நகரம் முழுவதையும் ஒட்டுமொத்தமாக மறைத்ததாக மேக்லைன் குறிப்பிட்டிருக்கிறார். இதனை நிகழ்த்த அவர்கள் மூன்று மைல் தொலைவில் உள்ள கடல் பரப்பில் போலி கட்டடங்கள், கலங்கரை விளக்கம் மற்றும் போர் விமான எதிர்ப்பு பேட்டரிகளை போலியாக தயாரித்ததாகவும், ஜெர்மானிய போர் விமானங்கள் பறக்கும்போது போலி கட்டடங்களை வெடித்துத் தகர்க்க செய்ததாகவும் இதன்மூலம் விமானிகள் தங்கள் இலக்குகளை வெற்றிகரமாக தாக்கிவிட்டதாக நம்பிவிடுவர் என்றும் கூற்றுகள் நிலவுகின்றன.
“இத்தகைய ஏமாற்று வித்தைகள் போர்களை போன்றே பழமையானவை” என கிர்பி என்னிடம் தெரிவித்தார். ”அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது மரத்துண்டுகள், குவிந்துகிடக்கும் துப்பாக்கிகளை போன்று இருக்கும் புகைப்படங்கள் உள்ளன” என அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், GETTY IMAGES
மேக்லைனின் குறிப்பிடத்தக்க தருணம்
’பெர்ட்ரம்’ சண்டையில் நட்பு நாடுகளின் பீல்ட் மார்ஷல் பெர்னார்ட் மாண்ட்கோமெரி வடக்கிலிருந்து தாக்குதலை தொடுக்க முனைந்தபோது, ஜெர்மானிய ராணுவத்தின் பீல்ட் மார்ஷல் எர்வின் ரோமெல் நட்பு நாடுகளின் தாக்குதல் தெற்கிலிருந்து வருவதாக போலியாக நம்பவைத்ததை தன்னுடைய சிறப்பான பங்களிப்பு என மேக்லைன் தன் நினைவுக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ஓவியம் வரைவதற்கு பயன்படுத்தப்படும் கெட்டியான துணி, பிளைவுட் மூலம் 1,000 டேங்க்குகளை டிரக்குகள் போன்று உருவாக்கி வடக்கிலும், 2,000 டேங்க்குகள், ரயில்வே வழித்தடம், தண்ணீர் குழாய், ரேடியோ உரையாடல்கள், தெற்கில் கட்டுமானங்களை எழுப்பும் சத்தங்கள் உள்ளிட்ட அனைத்தையும் போலியாக உருவாக்கியதாக கூறப்படுகிறது. அந்த டேங்க்குகள் தங்களுக்கென குறிப்பிட்ட நுட்பங்களையும் கொண்டிருந்தன.
உண்மையில் நேச நாடுகளின் படையினர் தங்கள் டேங்க்குகளின் போலிகளை அகற்றி போரில் இறங்கியபோது நாஜிக்கள் எவ்வித கவசங்களும் இன்றி பிடிபட்டனர். “அல்-அலமைன் சண்டைக்கு முன்பு எங்களுக்கு எப்போதும் வெற்றி கிட்டாது என நினைத்திருந்தோம். ஆனால், அதற்கு பின்பு எங்களுக்கு தோல்வியே இல்லை” என வின்ஸ்டன் சர்ச்சில் கூறும் அளவுக்கு போரின் போக்கையே நேச நாடுகள் மாற்றிவிட்டன.
1943-ஆம் ஆண்டில் ஹெர்ட்ஃபோர்ட்ஷையரின் ஹாட்ஃபீல்டில் உள்ள டி ஹவில்லேண்ட் விமானத் தொழிற்சாலையின் போலி நாசவேலைக்குப் பின்னால் மேக்லைனின் திறமைகள் இருப்பதாக நம்பப்பட்ட நிலையில், மேக்லைனின் மேஜிக் குழு கலைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொழிற்சாலைக்குள் வெடிகுண்டு வெடித்ததாக ஜெர்மன் உளவுத்துறையை நம்ப வைக்க, அவர் மர மின்மாற்றிகள், வெடிகுண்டு வெடித்தால் ஏற்படும் பள்ளங்கள் மற்றும் அதனால் உருவாகும் குப்பைகள் உள்ளிட்டவற்றை போலியாக உருவாக்கியதாக கூறப்படுகிறது.
ஜிக்ஜாக் என்று அழைக்கப்படும் எடி சாப்மேன் எனும் பிரிட்டிஷ் இரட்டை முகவர், வெற்றியை ஜெர்மானியர்களுக்கு தெரிவிக்க பயன்படுத்தப்பட்டார். பதிலுக்கு அவர் பெற்ற இரும்பு சிலுவை பதக்கமும் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், GETTY IMAGES
”நிரூபிப்பது கடினம்”
மேக்லைன் தனது போர்ப் பணிகளுக்கு அதிகாரப்பூர்வமாக எவ்வித அங்கீகாரத்தையும் பெறவில்லை. இந்த புறக்கணிப்பால் ஏற்பட்ட கோபம் காரணமாக, அவர் ‘மேஜிக்: டாப் சீக்ரெட்’ எனும் தன் நினைவுக்குறிப்பை பிரசுரிக்க ஊக்குவிக்கப்பட்டிருக்கலாம். அதில், தான் சுரண்டப்பட்டதாக எவ்வித பெருமையும் இன்றி குறிப்பிடுகிறார். ஹிட்லரின் தனிப்பட்ட தேடப்படும் நபர்களின் பட்டியலிலும் தான் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இதனை உறுதிப்படுத்தவில்லை” என்று கூறும் கிர்பி, “என்றாலும் போரின் நிழல்களில் என்ன நடந்தன என்பதன் உண்மையை உறுதிப்படுத்துவது இன்றும் கடினமாக உள்ளது. அவர் தரப்பு கதையில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை நாம் கண்டுபிடிக்க வாய்ப்பில்லை,” என்றார்.
இந்த கண்காட்சி லண்டன் இம்பெரியல் போர் அருங்காட்சியகத்தில் ஏப்ரல் 14, 2024 வரை நடைபெறும். iwm.org.uk
நன்றி
Publisher: பிபிசிதமிழ்