
பட மூலாதாரம், Getty Images
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் அளிக்குமாறு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா திங்கட்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது.
இந்தச் செயல்முறை ‘மிகவும் நேரத்தை எடுத்துக்கொள்ளும்’ பணி என்று கூறிய எஸ்பிஐ கால அவகாசத்தை நாடியது. ஆனால் ஜூன் 30ஆம் தேதிக்குள் நாட்டில் மக்களவை தேர்தல் முடிந்துவிடும்.
தேர்தல் பத்திரம் அரசமைப்பிற்கு விரோதமானது என்று கூறி உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பிரிவு கடந்த மாதம் அதை ரத்து செய்தது. ஏப்ரல் 12, 2019 முதல் அன்று வரையில் விற்கப்பட்ட பத்திரங்களின் விவரத்தை 2024 மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்குமாறு தேர்தல் பத்திரங்களை விற்க அங்கீகரிக்கப்பட்ட ஒரே வங்கியான பாரத ஸ்டேட் வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேர்தல் பத்திரங்களைப் பெயர் குறிப்பிடாமல் வைத்திருப்பது தகவல் அறியும் உரிமை மற்றும் பிரிவு 19 (1) (ஏ) ஆகியவற்றை மீறுவதாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் வேறு சில ஏற்பாடுகளைச் செய்யும் முறையை ஊக்குவிக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அப்போது கூறியிருந்தார்.
பத்திரங்கள் பற்றிய தகவலைத் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் மார்ச் 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறை.
இது ஒரு உறுதிமொழிப் பத்திரம் போன்றது. இதை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து வாங்கலாம். தாங்கள் விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தனது பெயரைக் குறிப்பிடாமல் நன்கொடை அளிக்கலாம்.
மோதி அரசு 2017இல் தேர்தல் பத்திர திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டம் 2018 ஜனவரி 29ஆம் தேதி அரசால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
எஸ்பிஐ என்ன சொன்னது?
’ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’ இது தொடர்பாக திங்கள்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது.
நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடிக்க விரும்புவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும் தரவுகளை டிகோடிங் செய்வது மற்றும் அதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் அதைப் பூர்த்தி செய்வதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. தேர்தல் பத்திரங்களை வாங்குபவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்கக் கடுமையான வழிகள் பின்பற்றப்பட்டுள்ளன. இப்போது நன்கொடையாளர்கள் பற்றிய தகவல்களையும் அவர்கள் எவ்வளவு தொகைக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கினார்கள் என்ற தகவலையும் பொருத்திப் பார்ப்பது ஒரு சிக்கலான செயல்முறை என்று அது குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிக்கை 2018 ஜனவரி 2ஆம் தேதி வெளியிடப்பட்டது என்று வங்கி தெரிவித்துள்ளது. இந்த அறிவிக்கை 2018ஆம் ஆண்டு மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டம் தொடர்பானது.
அங்கீகரிக்கப்பட்ட வங்கி, எல்லா சூழ்நிலைகளிலும் தேர்தல் பத்திரம் வாங்குபவரின் தகவல்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று அதன் விதி 7 (4)இல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றம் இந்தத் தகவலைக் கேட்டாலோ அல்லது குற்றவியல் வழக்கில் புலனாய்வு அமைப்புகள் இந்தத் தகவலைக் கேட்டாலோ மட்டுமே வாங்குபவரின் அடையாளத்தைப் பகிர முடியும்.
“தேர்தல் பத்திரம் வாங்குபவர்களின் அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்கும் வகையில் பத்திரங்களின் விற்பனை மற்றும் அதைப் பணமாக்குவது தொடர்பான விரிவான நடைமுறையை வங்கி தயாரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் இவை பின்பற்றப்படுகின்றன,” என்று வங்கி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
“எங்கள் எஸ்ஓபியின் பிரிவு 7.1.2இல் தேர்தல் பத்திரத்தை வாங்கும் நபரின் கேஒய்சி தகவல்களை சிபிஎஸ் (கோர் பேங்கிங் சிஸ்டம்) இல் உள்ளிடக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில் கிளையில் விற்கப்படும் தேர்தல் பத்திரங்களின் மைய தரவு ஒரே இடத்தில் இல்லை. அதாவது வாங்கியவரின் பெயர், பத்திரத்தை வாங்கிய தேதி, வழங்கப்பட்ட கிளை, பத்திரத்தின் விலை மற்றும் பத்திரத்தின் எண் போன்ற விவரங்கள். இந்தத் தரவு எந்த மைய அமைப்பிலும் இல்லை,” என்று வங்கி தெரிவித்தது.
“பத்திரம் வாங்குபவர்களின் அடையாளம் ரகசியமாக இருப்பதை உறுதி செய்வதற்காக, பத்திர வழங்கல் தரவு மற்றும் பத்திரத்தைப் பணமாக்கிய தரவு ஆகிய இரண்டும் தனித்தனி இடங்களில் பராமரிக்கப்படுகின்றன மற்றும் எந்த மைய தரவுத்தளமும் பராமரிக்கப்படவில்லை.”
”தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்ட கிளைகளில் அதை வாங்கியவர்களின் தகவல்கள் சீல் செய்யப்பட்ட கவரில் வைக்கப்படும். பின்னர் இந்த சீல் செய்யப்பட்ட கவர்கள் மும்பையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் பிரதான கிளைக்குக் கொடுக்கப்படும்.”
மைய தரவு இல்லை

பட மூலாதாரம், Getty Images
“ஒவ்வொரு அரசியல் கட்சியும் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் ஏதேனும் ஒன்றில் கணக்கு வைத்திருக்க வேண்டும். இந்தக் கணக்கில் மட்டுமே அந்தக் கட்சி பெற்ற தேர்தல் பத்திரங்களை டெபாசிட் செய்து பணமாக்க முடியும். பணமாக்கலின்போது, அசல் பத்திரம், பே-இன் ஸ்லிப் ஆகியவை சீல் செய்யப்பட்ட கவரில் மும்பையில் உள்ள எஸ்பிஐ கிளைக்கு அனுப்பப்படும்,” என்று வங்கி குறிப்பிட்டது.
“அத்தகைய சூழ்நிலையில், இரண்டு தகவல் தொகுப்புகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியாகச் சேமிக்கப்பட்டன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது அவற்றைப் பொருத்துவது, அதிக நேரம் தேவைப்படும் பணியாக இருக்கும். பத்திரங்களை யார் வாங்கினார்கள் என்பது பற்றிய தகவலை வழங்க ஒவ்வொரு பத்திரத்தின் வெளியீட்டு தேதியுடன் நன்கொடையாளர் வாங்கிய தேதியைப் பொருத்த வேண்டும்”.
”இது ஓரிடத்தின் தகவலாக இருக்கும். அதாவது பத்திரம் வழங்கப்பட்டதா, யார் வாங்கினார்கள் என்ற தகவல் இருக்கும். இரண்டாவது தகவல் தொகுப்பு பின்னர் வரும். அதாவது இந்தப் பத்திரங்களை அரசியல் கட்சி அதன் அங்கீகரிக்கப்பட்ட கணக்கில் பணமாக்கியிருப்பது தொடர்பான தகவல்கள். பின்னர் வாங்கப்பட்ட பத்திரங்கள் பற்றிய தகவலை பணமாக்கப்பட்ட பத்திரங்கள் பற்றிய தகவலுடன் நாங்கள் பொருத்த வேண்டும்.”
கால அவகாசத்தை நீட்டிப்பதற்கு ஆதரவாக வாதிட்ட எஸ்பிஐ, “எல்லா இடங்களில் இருந்தும் தகவல்களைப் பெறுவது மற்றும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தில் உள்ள தகவல்களைப் பொருத்துவது என்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயலாக இருக்கும். தகவல்கள் வெவ்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளன,” என்று கூறியது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2019ஆம் ஆண்டில், தேர்தல் பத்திரத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள்.
“பத்திர எண் போன்ற சில தகவல்கள் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வாங்குபவரின் பெயர், கேஒய்சி போன்ற பிற விவரங்கள் ஆவண வடிவில் சேமிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் பத்திரங்களை வாங்குபவர்களின் அடையாளம் எந்த வகையிலும் வெளிப்படுத்தப்படக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்.”
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. “ஒவ்வொரு கட்டத்தின் முடிவிலும், பணமாக்கப்பட்ட பத்திரங்கள் சீல் செய்யப்பட்ட உறைகளில் வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கிளைகளால் மும்பை பிரதான கிளையிடம் ஒப்படைக்கப்படும். இரண்டு வெவ்வேறு தரவுத் தொகுப்புகள் இருப்பதால் நாங்கள் 44,434 செட் தகவல்களை டிகோட் செய்ய வேண்டும், பொருத்திப் பார்த்து அவற்றை ஒப்பிட வேண்டும்,” என்று வங்கி கூறியது.
“எனவே பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பில் நிர்ணயம் செய்யப்பட்ட மூன்று வார கால அவகாசம், முழு செயல்முறையையும் முடிக்கப் போதுமானதாக இருக்காது. மேலும் உத்தரவைக் கடைப்பிடிக்க எங்களுக்குக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் வரை கால அவகாசம் கேட்டு எஸ்பிஐ தாக்கல் செய்த மனுவை சிலர் விமர்சித்து வருகின்றனர். நாட்டில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு இவ்வாறு செய்யப்படுகிறது என்பது அவர்களது வாதம்.
‘தேர்தலுக்கு முன் ஊழலை மறைக்க முயற்சி’

பட மூலாதாரம், Getty Images
“பத்திரங்கள் வாங்கப்பட்டது மற்றும் அதைப் பணமாக்கியது ஆகிய இரண்டு தகவ்ல்களுமே சீல் செய்யப்பட்ட உறைகளில் மும்பை கிளையில் உள்ளன. இந்த விவரம் வங்கி சமர்ப்பித்துள்ள வாக்குமூலத்தில் உள்ளது. எனவே வங்கி உடனே இந்தத் தகவல்களை ஏன் வெளியிட முடியாது?” என்று ஆர்டிஐ ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ், ’எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், “22,217 பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்களை, பணமாக்கல் விவரங்களுடன் பொருத்த நான்கு மாத கால அவகாசம் தேவை என்று வங்கி கூறுவது முட்டாள்தனமானது,” என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நன்கொடையாளர்களின் தகவல்களைத் தெரிவிக்க எஸ்பிஐ, தேர்தலுக்குப் பிறகு வரை கால அவகாசம் கேட்பது, ’தேர்தலுக்கு முன்பு வரை மோதியின் உண்மையான முகத்தை மறைக்கும் கடைசி முயற்சி’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பட மூலாதாரம், SCREENGRAB
“நன்கொடை வியாபாரத்தை மறைக்க நரேந்திர மோதி தனது முழு பலத்தையும் பயன்படுத்தியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் குறித்த உண்மையைத் தெரிந்து கொள்வது நாட்டு மக்களின் உரிமை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில் இந்தத் தகவலை தேர்தலுக்கு முன் பகிரங்கப்படுத்தக் கூடாது என்று எஸ்பிஐ ஏன் விரும்புகிறது?” என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரே கிளிக்கில் பெறக்கூடிய தகவல்களுக்காக ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் கேட்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் இருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு சுதந்திர அமைப்பும் ‘மோதானி குடும்பமாக’ மாறி அவரது ஊழலை மறைக்க முயல்கின்றன. தேர்தலுக்கு முன் மோதியின் ’உண்மையான முகத்தை’ மறைக்க இது ‘கடைசி முயற்சி’ என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்பிஐயின் மனு குறித்து அதிருப்தி தெரிவித்த சிபிஐஎம் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி “இது நீதியைக் கேலி செய்வதாகும். மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வையும் மோதியையும் காப்பாற்றவே எஸ்.பி.ஐ கூடுதல் காலஅவகாசம் கேட்கிறதா?” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் குறித்துப் பல செய்தியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் எஸ்பிஐயின் இந்தத் தேர்தல் பத்திரங்களில் ஒரு ரகசிய எண் இருப்பதாகவும், அதன் மூலம் அவற்றை அடையாளம் காண முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த அறிக்கையின் இணைப்பைப் பகிர்ந்த சீதாராம் யெச்சூரி, “இப்படி இருக்கும் பட்சத்தில் எஸ்பிஐ ஏன் கூடுதல் அவகாசம் கோருகிறது. இது ஆளும் பாஜகவை பாதுகாப்பதற்கான தெளிவான முயற்சியாகத் தெரிகிறது,” என்று எழுதியுள்ளார்.
“எதிர்பார்த்தபடியே மோதி அரசு எஸ்பிஐ மூலம் மனு தாக்கல் செய்து தேர்தல் பத்திரம் வாங்குவோர் குறித்த தகவல்களை வெளியிட தேர்தல் முடியும் வரை அவகாசம் கோரியுள்ளது. இந்தத் தகவல் இப்போது வெளிவந்தால் லஞ்சம் கொடுத்த பலர் பற்றியும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளின் விவரங்களும் அம்பலமாகும்” என்றார் உச்ச நீதிமன்றத்தின் பிரபல மற்றும் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண்.
ஓய்வு பெற்ற கமடோர் லோகேஷ் பத்ரா ஒரு நன்கு அறியப்பட்ட ஆர்டிஐ ஆர்வலர். அவர் தேர்தல் பத்திரங்களின் வெளிப்படைத்தன்மைக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
“கடந்த 2017-2018ஆம் ஆண்டில், பத்திரங்களின் விற்பனை மற்றும் பணமாக்கல் நடவடிக்கையை நிர்வகிக்கத் தனிப்பயனாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை எஸ்பிஐ நிறுவியது. 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரை மொத்தம் 22217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டன.
விற்கப்பட்ட 22,217 பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்குவது எஸ்பிஐக்கு கடினமாக இருக்கக்கூடாது,” என்று வங்கியின் மனு குறித்து அவர் தனது ’எகஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்