தமிழ்நாடு வீரர் ஒருவர் கூட இந்திய அணியில் இடம் பெறாதது ஏன்? கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம்

தமிழ்நாடு வீரர் ஒருவர் கூட இந்திய அணியில் இடம் பெறாதது ஏன்? கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம்

உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு

பட மூலாதாரம், BCCI

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அணி கோப்பையை வெல்லும் அளவுக்கு வலிமையாக இருக்கிறதா? ரசிகர்களுக்கு திருப்தி தருகிறதா? கிரிக்கெட் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்?

கிரிக்கெட் உலகின் உச்சக்கட்ட கொண்டாட்டமான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எப்போது?

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத இந்தப் போட்டியை நேரில் காண ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது.

இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே முடிந்துவிட்டது. முன்கூட்டியே தயாராக இருந்து ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கியதே அதற்குக் காரணம். கிரிக்கெட் வாரியம் சார்பாக விற்கப்படும் டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டாலும் கூட வெளி சந்தையில் டிக்கெட்டுகள் பல மடங்கு விலை வைத்து விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நேரில் காண ஒரு டிக்கெட் அதிகபட்சமாக 19.5 லட்ச ரூபாய் வரை விற்கப்படுவதாக நெட்டிசன்கள் அங்கலாய்க்கின்றனர். கூடுதலாக ஒருசில லட்சங்கள் இருந்தாலும் ஒரு ஐ.பி.எல். வீரரையே விலைக்கு வாங்கி விடுவேன் என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு

பட மூலாதாரம், TWITTER/PIYUSH SINGH

இதென்ன பகல் கொள்ளையாக இருக்கிறது? ஒரு டிக்கெட் 65 ஆயிரம் ரூபாயில் இருந்து 4.5 லட்சம் வரை விற்கப்படுகிறதே? என்ன நடக்கிறது ஜெய் ஷா? என்று மற்றொரு நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு

பட மூலாதாரம், TWITTER/VASUDEVAN K S

இந்திய அணி அறிவிப்பு

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கும் வேளையில் அதில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான அணியில் ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த திலக் வர்மா, சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவரும் நீக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15 வீரர்கள் உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு

பட மூலாதாரம், BCCI

இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் ஒருவர் கூட இல்லை

உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு வீரர் கூட தேர்வாகவில்லை. அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், நடராஜன் என சர்வதேச கிரிக்கெட் அனுபவம் பெற்ற வீரர்கள் இருந்த போதிலும் ஒருவருக்குக் கூட இடம் கிடைக்கவில்லை. இது தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களைப் பொருத்தவரை ஏமாற்றம்தான்.

இதுகுறித்து கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி.ராமனிடம் பேசிய போது, “இதில் ஏமாற்றம் கொள்ள ஏதுமில்லை. இந்திய கிரிக்கெட் அணியில் தமிழ்நாடு வீரர்கள் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் இல்லை. அஸ்வின் கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாகவே குறுகிய வடிவ கிரிக்கெட்டிற்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார். இந்திய அணியில்ஒருவேளை குல்தீப் யாதவ் இடம் பெறாமல் போயிருந்தால் கூட யுஸ்வேந்திர சாஹலின் பெயர்தான் பரிசீலிக்கப்பட்டிருக்குமே தவிர, அப்போதும் கூட அஸ்வின் இடம் பெற்றிருக்க மாட்டார்.

உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு

பட மூலாதாரம், FACEBOOK/SUMANT C.RAMAN

வாஷிங்டன் சுந்தர் மட்டுமே இந்திய அணிக்கு தேர்வாகக் கூடிய வாய்ப்பு இருந்ததாக கருதப்பட்டது. ஆனாலும், ஐ.பி.எல். தொடரில் காயமடைந்த அவர், அதன் பிறகு அதிக அளவில் கிரிக்கெட் ஆடவில்லை. செயல்பாட்டை மதிப்பிடும் அளவுக்கு போதிய காலம் அவர் விளையாடவில்லை. ஆகவே, இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் இடம் பெறவில்லை என்பது குறித்து ஏமாற்றம் இல்லை.” என்றார்.

ஐ.பி.எல். மற்றும் அறிமுக சர்வதேச தொடர்களில் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால், இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து கேட்ட போது, “சர்வதேச போட்டிக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்ததே லோகேஷ் ராகுல் போன்ற வீரர்கள் ஆட முடியாமல் போனதால்தான். தற்போது அவர்கள் அணிக்குத் திரும்பியதால் ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்காமல் போய்விட்டது. இளைஞரான அவர் தனது திறமையை நிரூபித்து அணியில் இடம்பெற இன்னும் நிறைய அவகாசம் இருக்கிறது” என்று சுமந்த் சி.ராமன் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *