
பட மூலாதாரம், Getty Images
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர், இலங்கையில் தற்போது நடைபெற்று வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி லீக் போட்டிகள் தொடங்கி நடைபெற்றன. இந்த சுற்றின் முடிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இதையடுத்து தற்போது சூப்பர் 4 சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றுக்கு முன்னேறிய இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் தற்போது மோதி வருகின்றன.
இதில், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, கொழும்பு பிரேமததா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தொடங்கியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கீட்டது. மழை விட்டதும் சிறிது நேரத்திற்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் விடாமல் மழை பெய்ததால், ஆட்டம் திங்கள்கிழமைக்கு (ரிசர்வ் டே) ஒத்திவைக்கப்பட்டது. இன்று பிற்பகலும் கொழும்பில் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுமா என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இருப்பினும் ஒரு வழியாக மாலை 4:30 மணியளவில் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சூப்பர் 4 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வெற்றி கொண்டது. இந்தியாவுடனான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால், அந்த அணி இறுதிச் சுற்றுக்கு எளிதில் தகுதி பெற்றுவிடும்.
இலங்கை அணியும் இந்த சுற்றில் ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் தனது வெற்றிக் கணக்கை இன்னும் தொடங்கவில்லை.
இந்த நிலையில், கொழும்பில் நிலவும் வானிலை நிலவரம் தெரிந்தும் அங்கு கிரிக்கெட் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டது சரியா?
இதுகுறித்து பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விளக்குகிறார் கிரிக்கெட் விமர்சகர் அப்துல் ரகுமான்.
“இப்படி மழைப் பெய்தால் கிரிக்கெட் போட்டி நடத்த முடியாது. நீச்சல் போட்டிதான் நடத்த முடியும். இலங்கையில் பருவமழைக் காலமான செப்டம்பரில் விளையாட்டு போட்டிகளை நடத்த ஒருபோதும் ஏற்பாடு செய்யமாட்டார்கள். அப்படி இருக்கும்போது, உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை தற்போது இங்கு நடத்துவது மிகப்பெரிய மடத்தனம்” என்று அப்துல் ரகுமான் விமர்சித்துள்ளார்.
போட்டிகள் தொடங்குவதற்கு முன் இந்த தொடரில் பங்கேற்கும் ஆசிய அணிகளைச் சேர்ந்த கிரிக்கெட் வாரியங்கள் போட்டி ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொண்டிருந்திருப்பார்கள் எனவும் ரகுமான் கூறியுள்ளார்.
தமக்கு தெரிந்த தகவலின்படி, அந்த ஆலோசனைகளின்போது செப்டம்பர் மாதத்தில் மழைப் பெய்யும் என்று இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்படி இருந்தும் கொழும்பில் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மிகவும் வேடிக்கையான விஷயம் என்றும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
இலங்கையில் போட்டிகளை நடத்துவதில் தவறில்லை. ஆனால் அவற்றை கொழும்புக்கு பதிலாக வறட்சி நிறைந்த பகுதிகளில் நடத்த ஏற்பாடு செய்திருக்கலாம் எனவும் அப்துல் ரகுமான் யோசனை தெரிவித்துள்ளார்.
மழை காரணமாக இந்தியா ஃபைனலுக்கு செல்வது சவாலாக மாறுமா?

பட மூலாதாரம், Getty Images
கொழும்பில் இன்றும், நாளையும் (செப்டம்பர் 12) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டமும், இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியும் ஒருவேளை கைவிடப்பட்டால், இறுதிப் போட்டிக்கு செல்வதில் இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்துமா என்று அப்துல் ரகுமானிடம் பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது.
அதற்கு அவர், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானும், இலங்கையும ஏற்கனவே தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, இரண்டு அணிகளும் இரண்டு புள்ளிகளை பெற்றுள்ளன.
இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ரிசர்வ் டேயான இன்று, நேற்றைய போட்டியை தொடர்ந்து விளையாடி வருகின்றன.
இந்த போட்டி மீண்டும் மழையால் தடைபட்டால், ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். அப்போது மூன்று புள்ளிகளுடன் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்துக்கு முன்னேறும்.
இதேபோன்று, நாளை நடைபெறவுள்ள இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியிலும் ஒருவேளை மழை குறுக்கீட்டால், இப்போட்டிக்கு ரிசர்வ் டே இல்லை என்பதால், இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்படும்.
அப்படியொரு சூழல் ஏற்பட்டால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்வது நிச்சயம் சவாலாகதான் அமையும் என்கிறார் கிரிக்கெட் விமர்சகர் அப்துல் ரகுமான்.
மாறாக, எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளில், பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் இலங்கை அணியும், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியும் வெற்றி பெற்றுவதாக வைத்துக் கொள்வோம்.
அப்படியொரு நிலை ஏற்பட்டால், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய மூன்று அணிகளில் எந்த இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதில் ‘நெட் ரன்ரேட்’ முக்கியப் பங்கு வகிக்கும்.
எனவே, இலங்கையுடனான நாளைய போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால், நெட் ரன்ரேட் காரணமாக இறுதி போட்டிக்கு செல்வது இந்தியாவுக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கும் என்று கணித்துள்ளார் கிரிக்கெட் விமர்சகர் அப்துல் ரகுமான்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்