
பட மூலாதாரம், Getty Images
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் எதிர்காலத் தேவைகளின் அடிப்படையில் படைகளை ஒரே தலைமையின் கீழ் கொண்டு வருவது அவசியத் தேவை என்று விவாதிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய ராணுவத்தின் பலத்தைச் சரியாகப் பயன்படுத்தவேண்டுமானால், முப்படைகளுக்குமான ஒரு ஒருங்கிணைந்த படைத் தளபதி தேவை என்ற கருத்து வலுப்பெற்றுவருகிறது.
கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லையில் தொடர்ச்சியான பிரச்னைகளை எதிர்கொண்டுவரும் இந்தியா, தனது ராணுவத் திறனை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகிறது.
இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளையும் இணைத்து ‘ஒருங்கிணைந்த படைத் தளபதி’ ஒன்றை உருவாக்குவது இந்த முயற்சிகளில் ஒன்றாகும்.
இந்த பணி விரைவில் முடிவடையும் என்று மீண்டும் ஒரு எண்ணம் உருவாகியுள்ளது.
அண்மைய பத்திரிகை செய்திகளின் படி, முப்படைகளும் ‘ஒருங்கிணைந்த’ அல்லது ‘ஒருங்கிணைந்த படைத் தளபதியை’ உருவாக்குவதற்கான இறுதி வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஒருங்கிணைந்த அதிகார மையத்தின் அமைப்பை உருவாக்க அரசின் ஒப்புதல் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒருங்கிணைந்த படைத் தளபதி என்றால் என்ன? அதை உருவாக்க கடந்த சில ஆண்டுகளாக ஏன் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன? அவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்வோம்.

பட மூலாதாரம், Getty Images
ஒரே படைத் தளபதியின் கீழ் முப்படைகளும் பணியாற்றும் போது நாட்டின் எந்தப் பகுதியிலும் அனைத்து ராணுவ வளங்களையும் விரைவாக ஒன்று சேர்க்கமுடியும் என கருதப்படுகிறது.
ஒருங்கிணைந்த படைத் தளபதி என்றால் என்ன?
ஒருங்கிணைந்த படைத் தளபதி அல்லது இன்டகிரேட்டட் கமாண்ட் என்பது ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை என முப்படைகளும் ஒன்றிணைந்து செயல்படும் ஒரு முறையாகும்.
இதனால் ஆபத்து காலங்களில், முப்படைகளும் தேவைக்கு ஏற்ப ஒருவருக்கொருவர் திறமையாக ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.
இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டால் ஒவ்வொரு நிலையிலும் செயல்படும் ஒருங்ணைந்த படைத் தளபதியிடம் ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்படும். அந்தப் பகுதியின் பாதுகாப்பை அந்தத் தலைமை பொறுப்பெடுத்து உறுதி செய்யவேண்டும்.
ஒரு ஒருங்கிணைந்த படைத் தளபதியை உருவாக்குவதன் பின்னணியில் உள்ள யோசனை என்னவென்றால், முப்படைகளின் திறன்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டால், போர் சூழ்நிலையில் அவற்றின் செயல்திறன் பல மடங்கு சிறப்பாக இருக்கும் என்பதே ஆகும்.
தற்போது இந்தியாவில் இது போல் மூன்று முதல் நான்கு படைத் தளபதிகளை உருவாக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு, ஒவ்வொரு அதிகார அமைப்பின் தலைமைப் பொறுப்பையும் மூன்று நட்சத்திர அதிகாரியிடம் ஒப்படைப்பது குறித்து பேசப்படுகிறது.
மூன்று நட்சத்திர அதிகாரிகள் ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரல், விமானப்படையில் ஏர் மார்ஷல் மற்றும் கடற்படையில் வைஸ் அட்மிரல் ஆகிய பதவிகளை வகிக்கின்றனர்.
இந்த புதிய திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஒருங்கிணைந்த அதிகார அமைப்புக்கும் முப்படைகளின் ஒட்டுமொத்த பலமும் இருக்கும் என்பதால், அவற்றைப் பயன்படுத்த இந்த ஒருங்கிணைந்த தலைமைக்கு அதிகாரம் அளிக்கப்படும்.
அனைத்து ஒருங்கிணைந்த படைத் தளபதிகளின் கட்டுப்பாடும் இறுதியில் முப்படைத் தலைமைத் தளபதியிடம் ஒப்படைக்கப்படும் என்றும், படைகளின் தலைவர்கள் தங்கள் படைகளை நிர்வகிப்பதற்கும், பயிற்சியளிப்பதற்கும், பராமரிப்பதற்கும் முதன்மையான பொறுப்பைக் கொண்டிருப்பார்கள் என்றும் பேசப்படுகிறது.
அதே நேரம், இந்த ஒருங்கிணைந்த அதிகாரத்தைப் பெறும் கமாண்டர் தேசிய பாதுகாப்புக் குழுவின் கீழ் செயல்படுவார் என்றும் இந்த குழுவுக்கு பாதுகாப்பு அமைச்சர் தலைமை தாங்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஒருங்கிணைந்த படைத் தளபதியின் தேவை குறித்த கருத்தை பிரதமர் மோதி தனது உரைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆரம்பம் முதல் இன்று வரையிலான முன்னேற்றங்கள்
1999 ஆம் ஆண்டில், கார்கில் போருக்குப் பிறகு அமைக்கப்பட்ட மறுஆய்வுக் குழு மற்றும் பல்வேறு குழுக்கள் எதிர்காலத்தில் ராணுவம் சந்திக்கும் சவால்களைக் கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த படைத் தளபதியை உருவாக்குவது பற்றி இந்திய ராணுவம் சிந்திக்க வேண்டும் என்று கூறின.
கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் ஒரு ஒருங்கிணைந்த படைத் தளபதியை உருவாக்குவது பற்றி பேசப்பட்டுவருகிறது, ஆனால் ஜனவரி 2020 இல் ஜெனரல் பிபின் ராவத் பாதுகாப்புப் படைகளின் தலைவராக (சிடிஎஸ்) நியமிக்கப்பட்ட போது அந்த முயற்சிகள் வேகம் பெற்றன.
ஆகஸ்ட் 15, 2019 அன்று செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, ‘‘தற்காலத்தில் போர்களின் நோக்கமும், வடிவமும் மாறி வருகின்றன. இது போன்ற ஒரு சூழ்நிலையில், தொழில்நுட்பத்தின் பங்கை அதிகரிக்கும் விதத்தில், புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
இந்தியாவின் ராணுவ பலம் தற்போது தனித்தனியாகப் பிரிந்துகிடக்கிறது. நன்றாகச் சிந்தித்து நாட்டின் முழு ராணுவ சக்தியும் ஒன்றிணைந்து ஒன்றாக முன்னேற வேண்டும்,” என்று பேசினார்.
இதே உரையில், இது போன்ற ஒரு அமைப்பு உருவாக்கப்படும் போது, முப்படைகளில் ஒன்று முன்னாலும், மற்றொன்று இரண்டடி பின்தங்கிய நிலையிலும், மூன்றாவது படை மூன்றடி பின்தங்கிய நிலையிலும் இருக்கும் நிலை ஏற்படாது என்று பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.
உலகில் மாறிவரும் போர் மற்றும் பாதுகாப்பு சூழலுக்கு ஏற்ப முப்படைகளும் இணைந்து ஒரே விதத்தில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அவைகளிடையே நல்ல ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஒருங்கிணைந்த படைத் தளபதியை உருவாக்கும் விதத்தில் மிகவும் தீவிரமாக பணியாற்றி வந்தார்.
ஆனால் அவர் டிசம்பர் 2021 இல் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். இதற்குப் பிறகு, ஒரு ஒருங்கிணைந்த படைத் தளபதியை உருவாக்கும் பணியின் வேகம் குறைந்தது.
ஜெனரல் பிபின் ராவத் மறைந்த பிறகு, அவருடைய பதவி பல மாதங்கள் காலியாக இருந்தது. அடுத்த தளபதியாக அனில் சவுகான் செப்டம்பர் 2022 இல் மட்டுமே நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்திற்கான பணிகள் மீண்டும் தீவிரமாகத் தொடங்கின என்று நம்பப்படுகிறது.
மத்திய அரசு இந்த ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் 2023-ம் ஆண்டுக்கான சேவை அமைப்புகள் (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம்) மசோதா, 2023-ஐ சமர்ப்பித்தபோது, இந்தப் பிரச்னையில் அரசு தீவிரமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி தெரிந்தது.
சில மாதங்களுக்கு முன்பு, மேஜர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பதவியில் உள்ள 102 அதிகாரிகளுக்கு (ராணுவம் 40, விமானப்படை 32 மற்றும் கடற்படை 30) “கிராஸ்- போஸ்ட்” வழங்கப்பட்டது.

பட மூலாதாரம், ANI
விமானப் படைக்குத் தேவையான வளங்கள் குறைவாக இருப்பதால் ஒருங்கிணைந்த ராணுவ படைத் தளபதி என்ற கருத்தை ஏற்பதில் விமானப் படை அதிக ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
ராணுவத்தின் திட்டம் என்ன?
மூன்று ஒருங்கிணைந்த படைத் தளபதியகங்களில் முதலாவது ஜெய்ப்பூரில் உருவாக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இந்த அதிகார அமைப்பின் கவனம் முக்கியமாக பாகிஸ்தான் நாட்டுடனான மேற்கு எல்லையில் இருக்கும்.
சீனாவுடனான எல்லைகளைக் கண்காணிக்க லக்னோவில் ஒரு படைத் தளபதி உருவாக்கப்படும் என்பதற்கான அறிகுறிகளும் உள்ளன.
இதேபோல், இந்தியாவின் கடல் மற்றும் கடலோர நலன்களைக் கவனிக்க, கர்நாடகாவின் கார்வாரில் கடல்சார் கண்காணிப்புக்கான ஒருங்கிணைந்த படைத் தளபதி பொறுப்பு உருவாக்கப்படும். கார்வார் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கோவாவுக்கு அருகே அமைந்துள்ளது.
தற்போது இந்தியாவில் மொத்தம் 17 ராணுவ அதிகாரத் தலைமை அமைப்புகள் உள்ளன. இதில், ராணுவம் மற்றும் விமானப்படைக்கு தலா ஏழு தலைமையகங்களும், கடற்படைக்கு மூன்று தலைமையகங்களும் உள்ளன. ‘முப்படைகளுக்குமான’ அதிகாரத் தலைமையகங்கள் இரண்டு உள்ளன.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அதிகாரத் தலைமையகம் முப்படைகளின் அதிகாரிகளால் வழிநடத்தப்படுகிறது. இன்னொன்று இந்தியாவின் அணுசக்தி நிலையங்களுக்குப் பொறுப்பான உத்தி ரீதியிலான முப்படைகளின் அதிகாரத் தலைமையகம்.
ஒருங்கிணைந்த படைத் தளபதியகத்தின் முன்மொழிவு மீதான விவாதம் தொடங்கியபோது, முதல் கட்டத்தில் வான் பாதுகாப்புக்கு இப்படி ஒரு அதிகாரத் தலைமையகத்தை உருவாக்குவதற்கான பரிந்துரைகள் இருந்தன.
முப்படைகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளை விமானப் படையின் அதிகாரத் தலைமை கட்டுப்படுத்தும் என்றும், வான்வழி எதிரிகளிடமிருந்து ராணுவ சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் இத்தலைமை பொறுப்பாகச் செயல்படும் என்றும் கூறப்பட்டது.
ஏற்கெனவே வெளியாகியுள்ள விவரங்களின் படி, இந்திய விமானப்படை தனது ஆட்சேபனையை தெரிவித்ததையடுத்து, இந்த படைத் தளபதிக்கான பரிந்துரை ரத்து செய்யப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஒருங்கிணைந்த படைத் தளபதியின் முக்கிய நன்மை, முப்படைகளின் வளங்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்துவதற்கு படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.பி. அஸ்தானா பாதுகாப்பு மற்றும் வியூக விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர்.
ஒருங்கிணைந்த படைத் தளபதி ஏன் அவசியம் என்று அவர் கூறிய போது, “எதிர்காலத்தில், ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கைகள் நடைபெற உள்ளன. இக்காலகட்டங்களில் ராணுவ பலத்தை ஒருங்கிணைக்க, வெவ்வேறு ராணுவ வீரர்களை ஒரே அதிகாரியின் கீழ் கொண்டு வருவது அவசியம்.
ஒரு ஒருங்கிணைந்த படைத் தளபதி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். மேலும், ஒரு பகுதியில் ராணுவ நடவடிக்கைகளின் போது, இந்த படைத் தளபதி தனக்குத் தேவையான அனைத்து வளங்களையும் ஒருசேர வைத்திருக்க வேண்டும். இப்படி இருக்கும் போது, அந்தத் தலைமை வேறு இடங்களில் உதவிகளைத் தேட வேண்டியதில்லை,” என்றார்.
ஒருங்கிணைந்த படைத் தளபதி தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோது, இந்திய விமானப்படை இந்த முன்மொழிவில் பெரும் ஆர்வம் காட்டவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது.
அஸ்தானாவின் கூற்றுப்படி, பெரும் அளவிலான ராணுவ பலம் பிரிந்து கிடப்பதுதான் பிரச்னையாக உள்ளது.
இது குறித்து அவர் பேசிய போது, “முதல் பெரிய பிரச்னை விமானப் படைக்குச் சொந்தமான சொத்துகளின் எண்ணிக்கை. இந்திய விமானப்படைக்கு 42 படைப்பிரிவுகள் தேவை. ஆனால் 32 படைப்பிரிவுகள் மட்டுமே உள்ளன.
போர் விமானங்கள் பற்றாக்குறையால், இந்திய விமானப்படை அதன் போர் விமானங்களை பிற படைகளுடன் பகிர்ந்துகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஒருங்கிணைந்த ஒரு படைத் தளபதியை உருவாக்குவதில் ஒரு பின்னடைவு ஏற்பட்டது,” என்றார்.
முதலில் வளங்களையும், பலத்தையும் அதிகரிக்க வேண்டும், பிறகு ஒருங்கிணைந்த படைத் தளபதியகத்தை உருவாக்க வேண்டும் என்று ஒரு சித்தாந்தம் இருப்பதாக அஸ்தானா கூறுகிறார்.
“படைகளின் பலத்தை அதிகரிப்பதற்கு முன்னரே அவற்றை வினியோகிக்க விரும்புவது போல் உள்ளது,” என்று அவர் கூறுகிறார், “இந்திய விமானப்படைக்கு தேவையான விமானங்களைப் பெற சில ஆண்டுகள் ஆகும் என்பதால் ஒருங்கிணைந்த படைத் தளபதியை ஏற்க படைகள் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.”
இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்ற ஏர் கமாண்டர் பிரசாந்த் தீட்சித் அளித்த தகவலின்படி , ஒருங்கிணைந்த படைத் தளபதியை உருவாக்கினால் ஏற்படவிருக்கும் செலவுகள் மற்றும் நன்மைகள் குறித்து மிகவும் கவனமாக ஆய்வு செய்து அந்தத் தரவுகளைக் கையில் வைத்திருக்க வேண்டும் எனத்தெரியவருகிறது.
இது குறித்து அவர் பேசிய போது, “அமெரிக்கா போன்ற வல்லரசுகளுக்கு, அவை பசிபிக் மற்றும் அட்லாண்டிக் முழுவதும் பரவியுள்ளதால் அந்நாடுகளின் ராணுவ அமைப்புகளும் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன.
அதனால் அந்நாடுகள் ராணுவத்தின் ஒருங்கிணைந்த படைத் தளபதியைக் கொண்டிருக்கின்றன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
நமது பலம் மற்றும் வளங்கள் மிகவும் குறைவாக இருக்கும் போது, அவை நாடு முழுவதும் பல பகுதிகளில் செயல்பட்டு கொண்டிருக்கும் போது நமக்கு ஏன் அதுபோன்ற ஒருங்கிணைந்த படைத் தளபதி தேவை என்ற கேள்வி எழுகிறது.
மேலும், அனைத்து ராணுவப் படைகளுடனும் பகிர்ந்துகொள்ளுமளவுக்கு இந்திய விமானப்படையிடம் போதிய வளங்கள் இல்லை,” என விளக்கினார்
இது போன்ற விவாரங்கள் நீண்ட நாட்களாக தொடர்ந்து வருவதால் ஒருங்கிணைந்த படைத் தளபதி தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்ட பிறகே இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்